Monday, July 22, 2024

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்.

2 அரசர்கள். 4:42-44
எபேசியர் 4:1-6
யோவான் 6:1-15

திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று நாம் ஆண்டின் 17ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். பகிர்ந்து வாழும் பண்பை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இல்லாதவர்களோடு இருப்பவர் பகிர்ந்துகொண்டால் இருப்பவர், இல்லாதவர் என்ற நிலைமாறும். இதைத்தான் ஆதிகிறிஸ்தவர்கள் செய்து, இல்லாதவர் இருப்பவர் என்ற நிலையை மாற்றினார்கள். பகிர்ந்து வாழும் பண்பை மக்கள் மனத்தில் உருவாகி ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய சாதனை நம் ஆண்டவர் இயேசு ஒருவருக்கு மட்டும் தான் உண்டு.

அப்பம் பலுகுதல் நிகழ்வைத் திருப்பலியோடு ஒப்பிடுகின்றார்கள் மறைநூல் ஆராய்ச்சியாளர்கள். இயேசுவைப் போல நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற பண்பை ஒவ்வொரு திருப்பலியும் நமக்குத் தருகிறது. ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் பகிர்வு மனப்பான்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே இயேசுவின் திருவிருந்தில் பங்கு கொள்ளும் நாம் பகிர்வு வாழ அதற்குத் தடையானவற்றை நம்மிடமிருந்து அகற்றி நம்மைப் புனிதர்களாக மாற்ற வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம். இந்தப் பகிர்வில்புத்துணர்வு பெற்றவர்களாக மாறிடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

முதல் வாசகத்தில் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பகிர்வால் எதுவும் குறையா. மாறாக அவை பலுகிப்பெறுகும் என்ற உறுதியினைப் பகிர்ந்தளிக்கத் தயங்கி மனிதருக்கு எலியா மூலம் எடுத்துரைக்கிறார் நம் கடவுள். அந்த மனிதர் பகிர்ந்தளித்த பின் மீதியிருப்பதையும் கண்டார். இதனை அரசர்கள் இரண்டாம் நூலிருந்து வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

பதிலுரைப்பாடல்: திபா. 145: 10-11, 15-16, 17-18
பல்லவி:  ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.  பல்லவி

பல்லவி எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.  பல்லவி

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர் தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.  பல்லவி

இரண்டாம்வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பை ஏற்று வாழ அன்பை மையமாகக் கொண்டு பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் தங்களை அணி செய்ய வேண்டும் என்று புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்கக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!  நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

பகிர்ந்தளிக்க எம்மை அழைக்கும்; இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் ஓரே உடல்: ஓரே தூயஆவியானவர்: ஓரே கடவுள்: ஓரே நம்பிக்கை என்ற உயரிய பண்பில் தங்களின் அழைப்பை உணர்ந்து வாழ்ந்திடவும், பணியாற்றிடவும் வேண்டிய வரத்திற்காக இறைவா உமை மன்றாடுகிறோம்.

உம் படைப்புகளைப் பலுகிப் பெருகச் செய்யும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் அவலங்களால் பசி, பட்டினி, நோய்கள், குடிபோதை என்று பாதிக்கப்பட்டு அவதியுறும் எம் ஏழைஏளிய மக்களைப் பாரும். அவர்கள் வாழ்க்கை நிலை மேலோங்கி எல்லாரும் நலம் வாழப் பகிர்ந்தளிக்கு நல்ல மனதினை தரவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

பண்பாளரே எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்துப் பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப் போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.

எங்கள் அன்பு தந்தையே இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம்பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.

அன்புத்தந்தையே எம் இறைவா!  வயது முதிர்ந்த எங்களின் பெற்றோரின் பெற்றோர்களை உம்மிடம் ஓப்படைக்கின்றோம். அவர்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட எல்லா நன்மைகளுக்கும் நன்றி கூறுகின்றோம். அவர்கள் மூப்பின் காரணமாகச் சந்திக்கும் நோய்களிலிருந்தும், தனிமையால் ஏற்படும் மன வருத்தங்களிலிருந்தும் விடுதலையையும் கொடுத்தருளும். அவர்களை அன்புடன் அரவணைக்கும் நல்மனதினை எங்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


No comments:

Post a Comment