பொதுக்காலம் ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எசாயா: 6:1-8
1 கொரிந்தியர் 15:1-11
லூக்கா 5:1-11
திருப்பலி முன்னுரை:
இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் ஐந்தாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம். ஆம்! இன்றைய வாசகங்கள் இறைவன் நம்மை அழைக்கின்றார் என்ற செய்திகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. நாம் எத்தகையராக இருந்தாலும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி இறைவார்த்தைகளை அறிவிக்கப் பயன்படுத்துவார். அவரின் அழைப்பை ஏற்று நம்மை அவருக்கு முழுவதுமாக அர்ப்பணிக்கும்போது நாம் அவரில் வளர்கிறோம்.
இன்று அழைக்கப்பட்டவர்கள் மூவரும் சாதாரணமானவர்ளே! இந்த மூவரும் அழைக்கப்பட்டபோது தன் இயலாமையை உணர்ந்திருந்தார். அந்த இயலாமையில் இறைஆற்றலைக் கண்டுணர்ந்தார்கள். மீனவரான பேதுரு திருச்சபையின் தலைவராக நியமனம் பெறுகிறார். ஏசாயா அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கை உரைக்க முடியும் என்று அஞ்சியபோது, இறைவன் அவரது உதடுகளைத் தூய்மைப்படுத்தி "நான் என்றும் உன்னோடு" என்று அனுப்பிவைக்கிறார். தடுத்து ஆட்கொள்ளப்பட்ட பவுலடியார் புறவினத்தாரின் திருத்தூதராக மாறுகிறார். இப்படி நம்மையும் தன் பணிக்காக அழைக்கும் இறைவனின் குரலுக்கு இதோ உமது அடிமை நானிருக்கிறேன் என்று உறுதியளித்து நமது இயலாமையை இறைவனின் ஆற்றலாக மாற்ற இறையருளை வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.
வாசகமுன்னுரை:
முதல் வாசகமுன்னுரை:
இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவை இறைவாக்கு அளிக்க அழைத்தபோது தன் அசுத்த உதடுகள் கொண்டவன். அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கு உரைக்க முடியும் எனத் திகைத்த நின்ற வேளையில், இறைவன் அவரின் உதடுகளைத் தூய்மைப்படுத்தித் "துணிந்துச் செல், தயக்கம் வேண்டாம். நான் உன்னோடு இருக்கிறேன்" என்று ஆறுதலும் தேற்றுதலும் தந்து அனுப்பி நிகழ்வுகளைக் கவனமுடன் கேட்டு நம் மனதின் ஆழத்தில் பதிவு செய்வோம்.
இரண்டாம் வாசகமுன்னுரை:
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தான் கிறிஸ்துவர்களைத் துன்புறுத்தியதையும், இயேசு அவரைத் தடுத்து ஆட்கொண்டதையும், திருத்தூதர்களில் கடைசியானவராக இருந்தாலும் அவரை ஆட்கொண்ட இறையருளே அவரை இறைவாக்கு உரைக்கத் துணிச்சலையும் ஆற்றலையும் அளித்தது என்று தம்மையே தாழ்த்திக்கூறும் இந்த உண்மைகளை மனதின் ஆழத்தில் பதிவு செய்து இறைவனின்அழைத்தலை ஏற்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 138: 1-2. 2-3. 4-5. 7-8
பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர. என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! -பல்லவி
உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “இதோ நானிருக்கிறேன்; அடியேனை அனுப்பும்” என்று முன்வந்த இறைவாக்கினர் எசாயா போன்று, உம் பணிக்கெனத் தங்களையே கையளித்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும், இறையன்பில் நிலைத்திருந்து, பொது நிலையினராகிய எங்களை அருள்வாழ்வில் வழிநடத்தி, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக எம்மோடு பயணிக்க அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. பாலர் தினமாகிய இன்று எம்குழந்தைகளை நீர் சிறப்பாக ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என முதல் வாசகத்தின் வழியாக நீர் கேட்பதையும், 'என் பின்னே வாருங்கள்' என நற்செய்தியில் நீர் அழைப்பதையும் கேட்டு, எம் இளையோரில் பலர், இறைசேவைக்கும், மக்கள்பணிக்கும், தம்மையே தர முன்வரவும், ஏற்கனவே குருமடங்களிலும், கன்னியர் மற்றும் துறவற மடங்களிலும் பயிற்சி பெறுவோர் உறுதியுடன் உம்மைப் பின்தொடரவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர்களிடையே மிகக் கடையவனாக, தன்னைக் குறிப்பிடும் பவுலடியார், ‘அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை’ எனவும் கூற முடிந்தது போல, நாங்கள் ஒவ்வொருவரும், எங்கள் நிலைக்கு ஏற்றவாறு, இறை அருளை வீணாக்காமல், எம்திறமைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி, நாங்களும், எங்கள் வீடும் நாடும் நலமாயிருக்க, ஆர்வமுடன் உழைக்கும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கப்பெறாத பேதுருவும் அவரது தோழர்களும், உமது சொற்படியே வலைகளைப்போட்டு, பெருந்திரளான மீன்களைப் பிடித்த நற்செய்தியை கேட்ட நாங்களும், எங்கள் உழைப்பை மட்டுமே நம்பியிராது, உம் சொற்படி எங்கள் பணியையும் வாழ்வையும் மேற்கொண்டு, நிறைந்த பலன் பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.