Wednesday, February 26, 2025

பொதுக்காலம் ஆண்டின் எட்டாம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் எட்டாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சீராக் ஞானம் 27-4-7
1கொரிந்தியர் 15: 54-58
லூக்கா 6: 39-45

திருப்பலி முன்னுரை

பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உவமையின் வாயிலாகப் பல அறிவுரைகளை நம் மனதில் பதிவு செய்கின்றார். நாம் அடிக்கடிப் பிறருடைய குற்றங்களை மிகைப்படுத்தி அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமையில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. ஏனெனில் நம்மிடத்தில் கணக்கற்ற குற்றங்கள் உள்ளன. முதலில் நம் கண்ணில் உள்ள மரக்கட்டயை எடுத்துவிட்டு அதன்பின் மற்றவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க முன்வர வேண்டும். தனது நிலையை அறியாமல் அடுத்தவர்களைக் குறைகூறும் மனிதர்கள் ஒரு விதத்தில் மனநோயாளிகள் எனலாம்.

தன்னையே முழுவதும் அறிவதுதான் வாழ்க்கையின் முதற்படி. தன்னை முழுமையாகப் புரிந்தவன் பிறரையும் புரிந்துக் கொள்வான். ஒருவன் தன்னையே நன்கு புரிந்து கொண்டால் தான்  நிறை, குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். தான் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவன் தான் பிறருக்கு வழிகாட்ட முடியும். இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவதே மேல் என்பதை உணர வேண்டும்.

தன்னிடம் இருக்கும் தவற்றை அறியாது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று அதிகம்.முதலில் நாம் திருந்துவோம்; பிறகு மற்றவர்கள் திருந்த அறிவுரைகள் சொல்வோம், வழிக் காட்டுவோம். இத்திருப்பலியில் உளமாறக் கலந்து மாற்றம் காண்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

மனிதனுடைய வார்த்தைகள் தான் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. "சல்லடையில் சலிக்கின்றபோது உமி தங்கிவிடுவது போல, மனிதரின் பேச்சில் மாசு படிந்து விடுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கின் ஞான நூல் நாம் பேசுவதற்கு முன்னால் நம்மையே நாம் சோதித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. இதனைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி
அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;  `ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுலடியார் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வழியாக அவர்களுக்குச் சாவைப் பற்றி ஏற்பட்ட அச்சத்தை நீக்குகிறார். எப்படியொரு விதையானது மண்ணில் மடிந்து மீண்டும் உயிர் பெற்று எழுகிறதோ அதைப் போல் நாமும் கிறிஸ்துவில் மரித்து இறுதிநாளில் சாவை வெற்றிக் கொண்டு அவரைப் போல உயிர்த்தெழுவோம் என்று நம்பிக்கைத் தரும் அவரின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ‘ஆண்டவருக்காக உழைப்பது வீண் போகாது’ என்கிற பவுலடியாரின் வார்த்தைகள் மெய்யாகும் வண்ணம், திருஅவைக்காக உழைப்போர் அனைவரும், அனைத்து ஆசீரும் பெற்று வாழவும், குறிப்பாக உடல் நலம் குன்றி, சிகிச்சை பெற்றுவரும் எம்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூரண சுகம் பெற்று, நல்ல உடலுள்ள வலிமையோடு, இறைமக்களாகிய எங்களை வழிநடத்த, அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றிகூற’ நமக்கு அழைப்புவிடுத்த இன்றைய இரண்டாம் வாசகத்தை மனதில் கொண்டவர்களாய், உலகை ஆளும் தலைவர்களுக்காகவும், நம் நாட்டை ஆள்கின்ற தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம். அவர்களது திட்டங்களாலும் செயல்பாடுகளாலும், அமைதியும், நீதியும், சமத்துவமும் செழித்தோங்கி, அனைவரும் வாழ்வு பெற வேண்டும் என்கிற இறைத்திட்டம் வெற்றிபெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர். அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்” என்கிற பதிலுரைப்பாடல் வரிகளின்படி, இறைவனை நம்பி வாழும் அனைவரும், சிறியோர் முதல் பெரியோர்வரை, கனிதரும் வாழ்வு வாழவேண்டுமென்றும், இளையோரும் குடும்பங்களும் முதியோரை மதித்து, அவர்கள் மகிழும் வண்ணம், சீரிய வாழ்வினை மேற்கொள்ளவேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே குழுமியுள்ள நாங்கள் அனைவரும் “உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர்” என்கிற நற்செய்தியை வாழ்வில் பின்பற்றி, எம்சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நல்லதையே தெரிவுசெய்து, நற்பண்புள்ள ஒரு தலைமுறைக்கு வித்திடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

www.anbinmadal.org


Print Friendly and PDF


Tuesday, February 18, 2025

பொதுக்காலம் ஆண்டின் ஏழாம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் ஏழாம் ஞாயிறு  


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23
1கொரிந்தியர் 15: 45-49
லூக்கா 6: 27-38

திருப்பலி முன்னுரை

பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் நம் மனதில் அன்பை விதைக்கின்றன. இறைமகன் இயேசுவின் விழுமியமாகிய அன்பைத் தம் வாழ்வில் நிலைநாட்டி, அவரே நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரின் முக்கியக் கட்டளையாகிய உன்னைப் போல் உன் அயலானை நேசி. அவர் உமது எதிரியாக இருந்தாலும் அன்புச் செய். அவருக்காய் இறைவனிடம் மன்றாடு என்பதே! அதற்கான நம் வாழ்நாள் முன்னோடித் தான் மக்களின் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். தன்னைச் சுட்டவனை மன்னித்துத் தன் நண்பனாக ஏற்றுக்கொண்ட அவர், அலி அஃகாவைச் சிறையில் சந்தித்து இறைமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தினார்.

நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்று இறைவன் அழைக்கின்றார். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது. தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? சிந்திப்போம். இத்திருப்பலியில் இயேசுவின் அன்புடன் கலந்து விடைக் காணச் செபிப்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

தன்னுயிரைக் கொல்லத் தன்னைத் துரத்தி வந்த சவுல் அரசனைக் கொன்றுப் பழித் தீர்த்துக் கொள்வதற்கு நல்ல சந்தர்பப்பம் தாவீதுக்குக் கிடைத்தது. ஆனால் ஆண்டவர் அருள்பொழிவுப் பெற்றவர்மேல் கை வைக்கக் கூடாது என்று அவருக்கு ஒரு தீங்கும் செய்யாமல் மன்னித்துவிட்ட தாவீதின் பெருந்தன்மையயாகச் செயலை எடுத்துக்கூறும் இன்றைய முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம். பகைவனுக்கு அன்பு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ` பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

மண்ணகத்தைச் சார்ந்த நாம் விண்ணகலிருந்து வந்த இயேசுவின் சாயலை நாம் அணிந்து கொள்ள வேண்டும். அஃதாவது இயேசு சிலுவையில் தொங்கும்போது கூடத் தன் பகைவரை மன்னித்து அவர்களுக்காகச் செபித்துபோல நாமும் பகைவரை மன்னித்து வாழ அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பவுலடியார் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வழியாக. இதனைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், இறைமக்களை நிறைவாழ்வில் வழிநடத்த தேவையான அருளினை, உம்மிடமிருந்து பெற்றிடவும், அருள்பொழிவு பெற்ற அவர்களை, பொதுநிலையினர் யாவரும், தாவீதைப் போல, மிகுந்த மரியாதையோடு நடத்தி, பணிந்து வாழ்கிற பண்பினைப் பெற்றிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மண்ணைச் சார்ந்த மனிதர் வாழ்வினில் எதிர்நோக்கை விதைத்திட, விண்ணைச் சார்ந்தவராம் இயேசுவையே தாரை வார்த்த தந்தையின் பரிவுள்ளத்தை, இவ்வுலகு மற்றும் நாட்டை ஆள்கிறவர்கள் ஓரளவாவது பெற்று, அமைதியிலும் நீதியிலும் வழிநடத்த வேண்டுமென்றும், மண்ணக விண்ணக விதிகளின்படி ஆட்சிபுரிய வேண்டுமென்றும், எம்தேசமும், பரந்த இப்பாருலகும் நலம்பெற வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்” என்கிற திருப்பாடல் வரிகளின்படி, மாந்தர் அனைவரும், குறிப்பாக எம்பங்கில் வாழ்கிற அனைவரும், உமது பேரன்பையும் இரக்கத்தையும் சுவைத்து, நோய்கள் அனைத்தும் நீங்கப்பெற்று, நலன்கள் அனைத்தாலும் நிரப்பப்பெற்று, நிறை வாழ்வு வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால் எங்களுக்கும் அளக்கப்படும்” என்கிற நற்செய்தி தரும் பாடத்தைப் பயின்றவர்களாய், அடுத்திருப்போருக்கு ஆதரவு, இல்லாதோர்க்கு ஈகை, பகைவருக்குப் பரிவு, அனைவருக்கும் அன்புப் பொழிந்து, தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நாங்களும் இரக்கம் உள்ளவர்களாய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, February 11, 2025

பொதுக்காலம் ஆண்டின் ஆறாம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் ஆறாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 17: 5-8
1 கொரிந்தியர் 15: 12,16-20
லூக்கா 6: 17,20-26

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் ஆறாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய நற்செய்தியில், இறைமகன் இயேசு ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்குத் தெளிவாகச் சொல்கிறார். ஏழைகள் உயர்த்திப் பேசப்படுவதையும், செல்வர்கள் கடுமையாக வார்த்தைகளால் இடித்துரைக்கப்படுவதையும் விவிலியத்தில் பல இடங்களில் காண முடிகிறது.
கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை. இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு. 

இவ்வுலகுக் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்றச் செல்வம் கிடைக்கலாம், ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் உணர முடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது. வலியோரை அல்ல எளியோரையே இறைவன் விரும்புகிறார். ஏனெனில் இவர்கள் நிலைவாழ்வில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். நாமும் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைப் பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்

வாசகமுன்னுரை:

முதல்‌ வாசக முன்னுரை:

இன்றைய முதல்‌ வாசகமானது இறைவாக்கினர்‌ எரேமியா நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம், புல்லென மடிந்து போகும்‌ மனிதரில்‌ நம்பிக்கை வைக்காமல்‌ ஆண்டவரில்‌ நம்பிக்கைக்‌ கொண்டு, நீர்‌ அருகில்‌ நடப்பட்ட மரம்போல் பசுமையாக வளர்ந்து கனி கொடுக்க அழைக்கும்‌ வார்த்தைகளைக்‌ கேட்டு ஆண்டவரில்‌ நம்பிக்கைக்‌ கொண்டு வாழும்‌ வரம்‌ கேட்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4-6 (பல்லவி: 40: 4a)
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை:

இயேசு கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு, இறந்த அனைவரும்‌ உயிருடன்‌ எழுப்பப்படுவதன்‌ முன்‌ அடையாளம்‌. இதுவே நம்‌ நம்பிக்கையும்‌. இயேசுவின்‌ உயிர்ப்பில்‌ நம்பிக்கை கொண்டு அவர்‌ வழியாக இறப்புக்கு பின்னும்‌ வாழ்வு உண்டு என்ற உண்மையில்‌ அசைக்க முடியாத நம்பிக்க கெண்டவர்களாய்‌ வாழப் புனித பவுல்‌ கொரிந்தியருக்கு எழுதிய முதல்‌ திருமுகத்திலிகுந்து வாசிக்கப்படும்‌ இரண்டாம்‌ வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 6: 23அ
அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1. யூபிலி ஆண்டைக் கொண்டாடும் திருஅவையானது, இன்றைய திருப்பாடல் வரிகளுக்கேற்ப, நீரோடையோரம் நடப்பட்ட மரம்போலவும், பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் மரம்போல் செழிக்கவும், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவருமே, வற்றாத எதிர்நோக்குடன் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர் மேகங்களும், கலவரச் சூழல்களும், பொருளாதாரப் பேதங்களும் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்கிற நாங்கள், ‘ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்’ என்கிற இறைவாக்கினர் எரேமியா கூற்றுப்படி, உம்மையே நம்பி வேண்டுகிறோம்; பரந்துபட்ட இவ்வுலகிலும், எம்பாரதத் தேசத்திலும், அமைதியும் நீதியும் செழித்தோங்கி, அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். இஃது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது” என, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் முன்னிறுத்தும் நம்பிக்கையை எமதாக்கி, எம்குடும்பங்களில் மரித்த அனைவருக்காகவும், இவ்வுலகைவிட்டு மறைந்துபோன அத்தனை ஆண்மக்களுக்காவும் மன்றாடுகிறோம். “விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்” என்கிற நற்செய்தி, அவர்களிலே நிறைவடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இப்போது ஏழைகளாய் இருப்போரும், பட்டினியாய் இருப்போரும், அழுதுகொண்டிருப்போரும் பேறுபெற்றோர் என்கிற நற்செய்தியை, நீர் உரைக்கக்கேட்ட நாங்கள், எங்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி இன்பம் பிறக்கும், நோய்கள் நீங்கி நலம் கிட்டும், பசியும், பிணியும், இல்லாமையும், ஏழ்மையும் மறைந்து, நாங்களும், மற்ற எல்லோரும் நிறைவு பெறுவோம் என்கிற எதிர்நோக்குடன் உழைக்கவும், உமை நம்பி வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

>Print Friendly and PDF


Tuesday, February 4, 2025

பொதுக்காலம் ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா: 6:1-8
1 கொரிந்தியர் 15:1-11
லூக்கா 5:1-11

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் ஐந்தாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம். ஆம்! இன்றைய வாசகங்கள் இறைவன் நம்மை அழைக்கின்றார் என்ற செய்திகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. நாம் எத்தகையராக இருந்தாலும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி இறைவார்த்தைகளை அறிவிக்கப் பயன்படுத்துவார். அவரின் அழைப்பை ஏற்று நம்மை அவருக்கு முழுவதுமாக அர்ப்பணிக்கும்போது நாம் அவரில் வளர்கிறோம்.
இன்று அழைக்கப்பட்டவர்கள் மூவரும் சாதாரணமானவர்ளே! இந்த மூவரும் அழைக்கப்பட்டபோது தன் இயலாமையை உணர்ந்திருந்தார். அந்த இயலாமையில் இறைஆற்றலைக் கண்டுணர்ந்தார்கள். மீனவரான பேதுரு திருச்சபையின் தலைவராக நியமனம் பெறுகிறார். ஏசாயா அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கை உரைக்க முடியும் என்று அஞ்சியபோது, இறைவன் அவரது உதடுகளைத் தூய்மைப்படுத்தி "நான் என்றும் உன்னோடு" என்று அனுப்பிவைக்கிறார். தடுத்து ஆட்கொள்ளப்பட்ட பவுலடியார் புறவினத்தாரின் திருத்தூதராக மாறுகிறார். இப்படி நம்மையும் தன் பணிக்காக அழைக்கும் இறைவனின் குரலுக்கு இதோ உமது அடிமை நானிருக்கிறேன் என்று உறுதியளித்து நமது இயலாமையை இறைவனின் ஆற்றலாக மாற்ற இறையருளை வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

 வாசகமுன்னுரை:

முதல் வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவை இறைவாக்கு அளிக்க அழைத்தபோது தன் அசுத்த உதடுகள் கொண்டவன். அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கு உரைக்க முடியும் எனத் திகைத்த நின்ற வேளையில், இறைவன் அவரின் உதடுகளைத் தூய்மைப்படுத்தித் "துணிந்துச் செல், தயக்கம் வேண்டாம். நான் உன்னோடு இருக்கிறேன்" என்று ஆறுதலும் தேற்றுதலும் தந்து அனுப்பி நிகழ்வுகளைக் கவனமுடன் கேட்டு நம் மனதின் ஆழத்தில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசகமுன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தான் கிறிஸ்துவர்களைத் துன்புறுத்தியதையும், இயேசு அவரைத் தடுத்து ஆட்கொண்டதையும், திருத்தூதர்களில் கடைசியானவராக இருந்தாலும் அவரை ஆட்கொண்ட இறையருளே அவரை இறைவாக்கு உரைக்கத் துணிச்சலையும் ஆற்றலையும் அளித்தது என்று தம்மையே தாழ்த்திக்கூறும் இந்த உண்மைகளை மனதின் ஆழத்தில் பதிவு செய்து இறைவனின்அழைத்தலை ஏற்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2. 2-3. 4-5. 7-8
பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர. என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! -பல்லவி
உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “இதோ நானிருக்கிறேன்; அடியேனை அனுப்பும்” என்று முன்வந்த இறைவாக்கினர் எசாயா போன்று, உம் பணிக்கெனத் தங்களையே கையளித்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும், இறையன்பில் நிலைத்திருந்து, பொது நிலையினராகிய எங்களை அருள்வாழ்வில் வழிநடத்தி, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக எம்மோடு பயணிக்க அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பாலர் தினமாகிய இன்று எம்குழந்தைகளை நீர் சிறப்பாக ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என முதல் வாசகத்தின் வழியாக நீர் கேட்பதையும், 'என் பின்னே வாருங்கள்' என நற்செய்தியில் நீர் அழைப்பதையும் கேட்டு, எம் இளையோரில் பலர், இறைசேவைக்கும், மக்கள்பணிக்கும், தம்மையே தர முன்வரவும், ஏற்கனவே குருமடங்களிலும், கன்னியர் மற்றும் துறவற மடங்களிலும் பயிற்சி பெறுவோர் உறுதியுடன் உம்மைப் பின்தொடரவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர்களிடையே மிகக் கடையவனாக, தன்னைக் குறிப்பிடும் பவுலடியார், ‘அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை’ எனவும் கூற முடிந்தது போல, நாங்கள் ஒவ்வொருவரும், எங்கள் நிலைக்கு ஏற்றவாறு, இறை அருளை வீணாக்காமல், எம்திறமைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி, நாங்களும், எங்கள் வீடும் நாடும் நலமாயிருக்க, ஆர்வமுடன் உழைக்கும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கப்பெறாத பேதுருவும் அவரது தோழர்களும், உமது சொற்படியே வலைகளைப்போட்டு, பெருந்திரளான மீன்களைப் பிடித்த நற்செய்தியை கேட்ட நாங்களும், எங்கள் உழைப்பை மட்டுமே நம்பியிராது, உம் சொற்படி எங்கள் பணியையும் வாழ்வையும் மேற்கொண்டு, நிறைந்த பலன் பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF