பொதுக்காலம் ஆண்டின் எட்டாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
சீராக் ஞானம் 27-4-7
1கொரிந்தியர் 15: 54-58
லூக்கா 6: 39-45
திருப்பலி முன்னுரை
பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உவமையின் வாயிலாகப் பல அறிவுரைகளை நம் மனதில் பதிவு செய்கின்றார். நாம் அடிக்கடிப் பிறருடைய குற்றங்களை மிகைப்படுத்தி அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமையில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. ஏனெனில் நம்மிடத்தில் கணக்கற்ற குற்றங்கள் உள்ளன. முதலில் நம் கண்ணில் உள்ள மரக்கட்டயை எடுத்துவிட்டு அதன்பின் மற்றவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க முன்வர வேண்டும். தனது நிலையை அறியாமல் அடுத்தவர்களைக் குறைகூறும் மனிதர்கள் ஒரு விதத்தில் மனநோயாளிகள் எனலாம்.
தன்னையே முழுவதும் அறிவதுதான் வாழ்க்கையின் முதற்படி. தன்னை முழுமையாகப் புரிந்தவன் பிறரையும் புரிந்துக் கொள்வான். ஒருவன் தன்னையே நன்கு புரிந்து கொண்டால் தான் நிறை, குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். தான் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவன் தான் பிறருக்கு வழிகாட்ட முடியும். இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவதே மேல் என்பதை உணர வேண்டும்.
தன்னிடம் இருக்கும் தவற்றை அறியாது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று அதிகம்.முதலில் நாம் திருந்துவோம்; பிறகு மற்றவர்கள் திருந்த அறிவுரைகள் சொல்வோம், வழிக் காட்டுவோம். இத்திருப்பலியில் உளமாறக் கலந்து மாற்றம் காண்போம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
மனிதனுடைய வார்த்தைகள் தான் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. "சல்லடையில் சலிக்கின்றபோது உமி தங்கிவிடுவது போல, மனிதரின் பேச்சில் மாசு படிந்து விடுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கின் ஞான நூல் நாம் பேசுவதற்கு முன்னால் நம்மையே நாம் சோதித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. இதனைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப்பாடல்
திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி
அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; `ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுலடியார் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வழியாக அவர்களுக்குச் சாவைப் பற்றி ஏற்பட்ட அச்சத்தை நீக்குகிறார். எப்படியொரு விதையானது மண்ணில் மடிந்து மீண்டும் உயிர் பெற்று எழுகிறதோ அதைப் போல் நாமும் கிறிஸ்துவில் மரித்து இறுதிநாளில் சாவை வெற்றிக் கொண்டு அவரைப் போல உயிர்த்தெழுவோம் என்று நம்பிக்கைத் தரும் அவரின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. ‘ஆண்டவருக்காக உழைப்பது வீண் போகாது’ என்கிற பவுலடியாரின் வார்த்தைகள் மெய்யாகும் வண்ணம், திருஅவைக்காக உழைப்போர் அனைவரும், அனைத்து ஆசீரும் பெற்று வாழவும், குறிப்பாக உடல் நலம் குன்றி, சிகிச்சை பெற்றுவரும் எம்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூரண சுகம் பெற்று, நல்ல உடலுள்ள வலிமையோடு, இறைமக்களாகிய எங்களை வழிநடத்த, அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ‘இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றிகூற’ நமக்கு அழைப்புவிடுத்த இன்றைய இரண்டாம் வாசகத்தை மனதில் கொண்டவர்களாய், உலகை ஆளும் தலைவர்களுக்காகவும், நம் நாட்டை ஆள்கின்ற தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம். அவர்களது திட்டங்களாலும் செயல்பாடுகளாலும், அமைதியும், நீதியும், சமத்துவமும் செழித்தோங்கி, அனைவரும் வாழ்வு பெற வேண்டும் என்கிற இறைத்திட்டம் வெற்றிபெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர். அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்” என்கிற பதிலுரைப்பாடல் வரிகளின்படி, இறைவனை நம்பி வாழும் அனைவரும், சிறியோர் முதல் பெரியோர்வரை, கனிதரும் வாழ்வு வாழவேண்டுமென்றும், இளையோரும் குடும்பங்களும் முதியோரை மதித்து, அவர்கள் மகிழும் வண்ணம், சீரிய வாழ்வினை மேற்கொள்ளவேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இங்கே குழுமியுள்ள நாங்கள் அனைவரும் “உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர்” என்கிற நற்செய்தியை வாழ்வில் பின்பற்றி, எம்சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நல்லதையே தெரிவுசெய்து, நற்பண்புள்ள ஒரு தலைமுறைக்கு வித்திடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Good 👍
ReplyDelete