Wednesday, October 31, 2018

பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு

 

இன்றைய வாசகங்கள்

திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேர் அன்பு. உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர் அன்புதான். இந்த அன்பு முப்பரிமாணம் கொண்டது. இந்த முப்பரிமாண அன்பைப்பற்றி இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு இம்மூன்றுக் கட்டளைகளைக் கூறுகிறார்.

இறைவனை அன்புச் செய்! தன்னையும் அன்புச் செய்! பிறரையும் செய்!

மூன்று கட்டளைகளா என்று நாம் ஆச்சரியப்படலாம். இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், ஈர் அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்பு கொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்புக் கூர்வதுபோல் அடுத்தவர் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

எனவே இன்றைய வாசகங்களைக் கவனமுடன் கேட்டு இறைவனை அன்புச் செய்யவும், தன்னே அன்புச் செய்யவும், பிறரையும் அன்புச் செய்யவும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் அன்புக் கட்டளையை யூதர்கள் தங்களது கதவு நிலைகளில் மட்டுமல்ல தங்கள் இதயத்திலும் இல்லத்திலும் தாங்கி வாழ்ந்தனர். இக்கட்டளைகளில் கடவுளை மனிதர்கள் முழு இதயத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும் என்று அழைக்கின்றது. கலைமான் நீரோடைக்காக ஏங்கித் தவிப்பதுபோல உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டு அவரைத் தேடி அன்பு செய்ய மோசேயின் வார்த்தைகள் வழியாகக் கடவுள் நம்மை அழைப்பதைக் கவனமுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை


மனிதர்கள் சாவுக்கு ஆளாவதால் தங்கள் குருத்துவப் பணியில் நிலையாய் இருக்கமுடியவில்லை. ஆனால் இயேசுவோ என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; நம் தலைமைக் குருவும் அவரே! தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி நம்மை மீட்டுள்ளார். என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். என்று இயேசுவின் குருத்துவ மேன்மையை எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 18:1-2, 2-3. 46,50

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.


என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். -பல்லவி

என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண், போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். -பல்லவி

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அன்பின் இருப்பிடமான எம் இறைவா, உம் அன்புத் திருஅவையைக் காத்து வழிநடத்தி இறந்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், அனைவரும் உம் இரக்கமும் அருளையும் பொழிந்து உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.விண்ணகவீட்டில் நிறைவாழ்வுத் தரும் எம் இறைவா, எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களைப் போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவுச் செய்யும் தந்தையே! எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்குக் குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா! யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகச் சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்தப் பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனைக் குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா! மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

No comments:

Post a Comment