Tuesday, October 16, 2018

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எசாயா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45



திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு. இறைவனின் திருவருள் நாடி ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை நம் அன்பு நாயகன் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்திப் பதவி மோகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயா ஆண்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றி எடுத்துரைக்கிறார். எசாயாவின் வார்த்தைகளைக் கொண்டே இயேசு தன் சீடர்களின் தவறான எண்ணங்களை மாற்றினார். இத்தகைய சவால் நிறைந்த கடுமையான வாழ்வை யாரால் வாழமுடியும்? இது சாத்தியமா? என்ற கேள்விக்குப் பதிலாக இரண்டாம் வாசகம் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

இயேசு தன் பாடுகளைப் பற்றி மூன்று முறை மாற்கு நற்செய்தியில் எடுத்துரைக்கின்றார். ஆனால் அவரின் சீடர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவருக்கு அருகில் யார் இருப்பது என்பதையே விவாதித்து வருகிறார்கள். ஆனால் மனுமகனோப் பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரியவே வந்தேன் என்றார்.

தன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னைப் போல் பாடுகள் படவேண்டுமென்றும், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராய் இருக்கட்டும் என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். பணிவிடைப் புரிவது என்பது மற்றவர்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்வதிலும், தாழ்ச்சிளோடு ஆறுதலாகத் தன் தோள் கொடுப்பதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நன்கு உணர்வோம். இதைச் செயல்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை நம் ஆண்டவரிடம் ஒப்படைப்போம் . அவரே நம்மை நல்வழிப்படுத்துவார். எனவே இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இயேசுவைத் துன்புரும் ஊழியனாக நமக்கு முன்னறிவிக்கின்றார். எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியனைப் பற்றி நான்கு இடங்களில் குறிப்பிடுகின்றார். அவர் சிறுமைப்படுத்தப்பட்டலும் வாயைத் திறவாதிருந்தார். அவர் தம் உயிரைக் குற்ற நீக்கப்பலியாகத் தந்தார். ஆண்டவர் திருவுளம் அவர் கையில் சிறப்புறும் என்ற இயேசுவின் பாடுகளைப்பற்றி முன்னுரைக்கின்றார். இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் நமது தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவுக் கூடிய அருளைக் கண்டையவும் அருள் நிறைந்த இறைஅரியணைத் துணிவுடன் அணுகிச் செல்வோம். இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 33: 4-5. 18-19. 20,22

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:



1. அருளும் இரக்கமும் கொண்ட எம் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள்,  அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் பணிவிடை ஏற்பதற்கு அன்று, பணிவிடைப் புரிவதில் தான் தலைமைப் பண்பு அடங்கியிருக்கின்றது என்ற இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய் கிறிஸ்துவின் சீடர்களாய்  இவ்வுலகில் வாழ வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம் பேரன்பால் பூவுலகை  நிறைந்துள்ள எம் இறைவா! சவால்கள் நிறைந்த எம் இல்லற வாழ்க்கையில்  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உம் மைந்தனைப்போல  பணிகளை செய்திடவும், சிலுவை இன்றி வெற்றி இல்லை என்ற இயேசுவின் மொழிகளை மனதில் பதிவு செய்து, ஆறுதல் தேடுவோருக்கு தோள் கொடுத்து தங்கிடவும் அருள் வரம் பொழிய வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3. உம் பேரன்பால் உறவுகளை பேணிக்காக்கும்  உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உமது விழுமியங்களை உணர்ந்து பணி செய்யவே என்ற உன்னத நோக்கத்தை வாழ்வில் கடைபிடித்து  மக்களின் நல்வாழ்வில் சுயநலமின்றி கவனம் செலுத்தவும், ஏழை எளியோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரின் நல்வாழ்விற்காக சேவைப் பரிந்திடவும் நல்மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உம் பேரன்பால் அனைவரையும் வழிநடத்தும் அன்புத்தந்தையே! மாறிவரும் இன்றைய நவீன உலகில் ஏற்படும் கருத்து மாற்றங்களாலும், சமூகத்திற்கு எதிரான தீய சிந்தனைகளாலும், இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளை பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.நேர்மையின் நாயகனான எம் இறைவா! என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா! தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர், அநாதைகள் ஆகியோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்திடவும், உடல் நலத்திலும் பொருள் வளத்திலும் ஏற்றம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  


www.anbinmadal.org


No comments:

Post a Comment