Wednesday, August 5, 2020

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 
1அரசர்கள் 19:9,11-13
உரோமையர் 9:1-5
மத்தேயு14: 22-33

 திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு. இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அவர் தம் கரம்பிடித்து, நிலைவாழ்வை நோக்கி நம்பிக்கைக் கடலில் நடந்திட உற்சாகமாக வந்து குழுமியிருக்கும் இறைமக்களே உங்கள் வரவு நல்வரவாகுக.
இன்றைய நற்செய்தியில், இயேசு தந்தையாம் கடவுளோடு அமர்ந்துச் செபித்த பின்பு, இயேசு அதே அனுபவத்தோடு, அவர் தண்ணிரில் நடந்தார். இயேசு அடிக்கடித் தனிச் செபத்தில் நீண்டநேரம் செலவழிப்பவர். ஏன் மத்தேயு இங்கே இதனைக் குறிப்பிடுகிறார் ? இந்தச் செபத்திற்கு அப்படி என்ன முக்கியத்துவம்?
நமது ஆற்றலைப் புதுப்பிக்க, அடிக்கடிச் செபத்தில் நமது நேரத்தைச் செலவிட்டு, இறைவனைப் பற்றி இன்னும் அறிந்து, அவர் எப்படி நம்மை வழி நடத்துகிறார்? என அறிந்து, நம்மை நாமே மாற்றிகொள்வது நல்லது. நமக்கு என்ன நடந்தாலும், அதனை எதிர்கொள்ளச் செபம் நமக்குப் பெரிதும் உதவுகிறது. இது தொற்று நோய்காலத்தில் பலரது அனுபவமாக இருக்கும் என்று நம்பலாம்.
நாம் தனியாக இறைவனிடம் செபிக்கும் வேளையில், அவரிடமிருந்து நாம் பெறும் ஆசியும், அருளும், நமக்கான அன்பளிப்பாகும். அந்த அன்பளிப்பின் மூலம், பிறருக்கு நாம் உதவ முடியும். இது நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்கும். எப்படித் துன்பம் என்னும் கடலில் நடப்பது என நமக்குக் கற்றுக் கொடுக்கும்.
இன்றைய திருப்பலியில் இயேசுவைப்போல் நாமும் தந்தையாம் இறைவனிடம் ஒருமனப்பட்டுச் செபிக்கவும், அவருக்காய் நாம் செய்யும் பணிகள் வெற்றிப் பெறவும், தொற்றுநோயை வென்றிடவும் இறையருள் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் தன் உயிருக்கு ஆபத்து வந்தபோது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எலியா ஓடுகின்றார். தான் அழைத்த குரலுக்குச் செவிமெடுத்த இறைவன், இத்துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கமாட்டாரா? என்ற நம்பிக்கைகூட இறைவாக்கினரிடம், இல்லாமல்போய்விட்டது. ஆனாலும் இறைவன் ஒரேப் மலையில் மெல்லிய ஓசையாக, இனியதென்றலாகத் தம்மை எலியாவுக்கு வெளிப்படுத்தியதை இன்றைய முதல் வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


இறைவன் அன்று இஸ்ரயேல் மக்களை அவருடைய மக்களாக்கிக் கொண்டு, அவரின் மாட்சிமையை அவர்கள் நடுவே விளங்கச்செய்தார். ஆனால் இஸ்ரவேல் மக்கள் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்களை மீட்கத் தன் மகனையே அனுப்பினார். இனத்தாலும், உறவுகளாலும் ஒன்றான இஸ்ரயேல் மக்களுக்காகப் பெரிதும் கவலைக் கொள்ளும் திருத்தூதர் பவுலடியார் கூறுவதை எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அல்லேலூயா!


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

 
1. அருளிரக்கத்தின் நாயகரே எம் இறைவா! எம் திருஅவையை இந்நாள் வரை எல்லாவித இக்கட்டுக்கள், இடையூறுகள், பிரச்சினைகள், கட்சி மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட்டு உம் விண்ணக வாழ்வைச் சொந்தமாக்கிக் கொள்ளத் திரு அவையின் நல்மேய்ப்பர்களுக்கும், தூயஆவியின் துணையால் தொடர்ந்து உம் இறைபணி ஆற்றிடத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. கொடைவள்ளலே எம் இறைவா, எம் தமிழகத்தில் குறிப்பாக தொற்றுநோயின் தாக்கத்தால் அனைத்து மாவட்டங்களிலும் பயத்தில் தவிக்கும் உம் மக்களை உமது அருளால் நிரப்பி தாக்கத்தைப் போக்கி நலம், வளம் பெறுகவும், நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றிப் பெறவும் மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. ஆதரித்தாளும் எம் இறைவா, எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீடுகளை அறிந்துக் கடவுளின் பார்வையில் மாசற்றதுமானச் சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடித் தம்மைக் காத்துக் கொள்ளவும், ஐயம் நீங்கி உம்மில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைத் தேட வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

5.அஞ்சாதீர்கள் என்று எம்மை அழைக்கும் இறைவா! இன்றைய நாட்களில் நாங்கள் சந்திக்கும் அல்லல்களிலிருந்து விடுபடவும், அதற்கு எதுவாக உலகச்சூழல்கள் மாறவும், ஆட்சியாளர்கள் தன்னலமாற உழைப்பை நல்கவும், மருத்துவத்துறையினர் பாதுகாக்கப்படவும், சிறப்புடன் பணியாறிடவும் வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.. 



www.anbinmadal.org

No comments:

Post a Comment