Tuesday, May 3, 2022

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

  பாஸ்கா காலத்தின்  நான்காம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 13: 14,43-52
திருவெளிப்பாடு 7: 9,14b-17
யோவான் 10: 27-30

திருப்பலி முன்னுரை:


பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறுக் கொண்டாடங்களில் கலந்து வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! ரையும் அன்புடன் வரவேற்கிறோம். இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்கும் அனைவரும் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்ற கருத்தை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. நல்லாயனாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதோடு மட்டுமல்ல, அதைச் செயலில் வாழ்ந்துக் காட்டுகின்ற மக்களாக இருக்க வேண்டும். வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டும் இருந்தால் அஃது ஒன்றுக்கும் உதவாது என்ற கருத்தை இன்றைய இரண்டாம் வாசகம் நம் முன்வைக்கிறது.

நான் தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாக நான் தான் உங்களைத் தேர்ந்துக்கொண்டேன் என்ற இயேசுவின் வார்த்தையைச் சிந்தித்துப் பார்த்தால் இறையழைத்தலின் மகிமையை நன்கு உணரலாம். இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:


தாங்கள் அறிவித்த நற்செய்திக்கு யூதர்கள் 'செவிமடுக்காததால்', தங்கள் நற்செய்தியை புறவினத்தாரிடம் கொண்டு செல்கின்றனர் பவுலும் பர்னபாவும். புறவினத்தார் இந்தப் புதிய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். புறவினத்தாரின் மகிழ்ச்சி, யூதர்களின் பொறாமையாக உருவெடுக்கிறது. ஆண்டவரை அறிதல் மனிதர்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துகிறது  இதை கூறும் இன்றைய முதல் வாசகமான திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்க கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5

பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் தன் ஆடுகளை அறிந்த இயேசு தானே ஆட்டுக்குட்டியாகத் தன்னை பலியாக்குகின்றார். இவரின் குரலுக்குச் செவிமடுத்து இவரைப் பின்பற்றியவர்களின் ஆடைகளை இவர் தன் இரத்தத்தால் தூய்மையாக்குகின்றார். பலியான ஆட்டுக்குட்டியே அவர்களை மேய்க்கின்றார். அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுகிறார்' என்று நமக்கு தெளிவுப்படுத்தும் வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


 1. எம் நல்ல மேய்ப்பனாம் எம் இறைவா! திருஅவை இறையழைத்தல் ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில் உம் திருஅவையின் பணியாளர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்து அவர் காட்டிய பாதையில் இனிதே பயணிக்கத் தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றுமே மாறாத அன்பு கொண்ட எம் இறைவா, இன்றைய சூழலில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் நல்ல தலைவர்களாகவும், சமுதாயத்தில் நல்ல வழிகாட்டிகளாகவும், தடுமாறுகிறவர்களுக்குப் புதிய பாதையாகவும், வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வாகவும் எம் ஆயனாம் இயேசுவின் பாதையில் தடம் மாறாதுப் பயணம் செல்லத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அறுவடையே அதிகம் ஆட்களோ குறைவு என்று உம் பணிக்கு எம்மை அழைத்த இறைவா! தேவ அழைத்தல் எந்த நிலையிலும் உண்டு என்பதை உணர்ந்து, உமது பணிச் செவ்வனே செய்யவும், எம் தாய்நாட்டிலிருந்து உம் சேவைக்காய் வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் ஆயனின் பணிகளைச் சிறப்புடன் செய்திட நல்ல மனதையும், உடல்நலத்தையும், உம்மேல் உறுதியான நம்பிக்கையுடன் அருட்பணிகள் செய்திட வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. 'அன்பு தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும், நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்து தீவிரவாதத்தை கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழ தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் முன்னோருக்கு வழிகாட்டி நடத்திய தெய்வமே! எம் இறைவா! கல்வியாண்டு இறுதிதேர்வை எழுதி வரும் எம் அன்பு பிள்ளைகளுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். படிப்பதற்கு நல்வழிகாட்டி, அவற்றை மறக்காமல் சரியான விடைகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, சமூகத்தில் உயர் நிலைக்கு வர தேவையான ஞானத்தையும், உம்மில் நம்பிக்கைப் பெற்றவும் உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

www.anbinmadal.org


Print Friendly and PDF

1 comment:

  1. தவற்றை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete