Tuesday, June 28, 2022

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - ஆண்டு 3

 பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - ஆண்டு 3
03/07/2022


இன்றைய வாசகங்கள் :

எசாயா 52: 7-10
எபேசியர் 2: 19-22
யோவான் 20: 24-29

திருப்பலி முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு. நம் இந்திய திருநாட்டின் பாதுகாவலர் திருதூதர்  தோமையாரின் பெருவிழா. இவ்விழாவைச் சிறப்பிக்க  ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
மிகவும்‌ அன்பு செலுத்திய தம்‌ தலைவரை, நண்பராகப்‌ பாவித்த இறைமகனை இழந்த சோகத்திலிருந்த சீடர்கள்‌ இயேசுவை உயிருடன்‌ கண்டதால்‌ பேருவகை கொண்டு இருந்திருக்க வேண்டும்‌. அந்நேரத்தில்‌ அங்கில்லாத தோமையார் வந்ததும்‌ “ஆண்டவரைக்‌ காணோம்‌” என்ற வார்த்தை தோமையாரின் உள்ளத்தில்‌ ஆவலை தாகத்தை ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்‌.  
“தழும்பைப்‌ பார்த்து, அதில்‌ விரலை இட்டு, விலாவில்‌ என் கைகளை இட்டாலன்றி” என்ற வார்த்தைகள்‌ இயேசுவைப்‌ பார்க்க வேண்டும்‌ அவரைத்‌ தொட வேண்டும்‌ என்ற தோமையாரின்‌ ஏக்கத்தையும்‌ தாக்கத்தையும்‌ வெளிப்படுத்துகின்றது. ஆனால் தோமையார் தான் கேள்வியின் மூலம் முக்காலத்திற்கும் விடை தேடுகின்றார். இதனை உணர்த்தியவரும் தந்தையே ஆவார்.
தாகமுள்ளவர்களைத்‌ தேடி வருகின்ற நம்‌ இயேசு மீண்டும்‌ சீடர்களுக்குத்‌ தோன்றி தோமையாரின்‌ விருப்பத்தை நிறைவேற்றுகின்றார்‌. அப்போது தோமையார் கூறிய “நீரே என்‌ ஆண்டவர்‌! நீரே என்‌ கடவுள்‌” என்ற வார்த்தை நம்பிக்கையின்‌ உறுதியை பறைசாற்றுகிறது. தோமையார் நம்பிக்கையின்‌ அடையாளமாகிறார்‌. ஆம் சகோதரர்களே! இன்று நாம் கண்ணுக்கு புலபடாத இறைவனை கண்டோம், கேட்டோம், அவரில் மகிந்தோம் என்பவை நமது உள்ளங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மகிழ்ச்சியான நிறைவோடு இத்திருப்பலியில் நம் நம்பிக்கையை உறுதிபடுத்துவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளை காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்க வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதை காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1,2 (பல்லவி: மாற் 16: 15)
பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1.பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி

2.ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் அன்னியர் அல்ல. கடவுளால் கட்டப்பட்ட மாபெரும் குடும்பம். இயேசுவே இதன் மூலைக்கல்லாகக் திகழ்கிறார். இயேசுவுடன் இணைந்து தூயஆவியாரின் வழியாக நம் கட்டப்படுகிறோம் என்பதனை எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலடிகளாரின் வார்த்தைக்கு கவனமுடன் செவிமெடுப்போம். அதனையே நம் வாழ்வாக்குவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும், இறைசார்பு தன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும், துன்பங்களை வெல்லும் உறுதியும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி, எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளில் நிலைத்து நின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய், இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.எல்லாம் வல்ல இறைவா! புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைத்துள்ள எம் பிள்ளைகளை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்குச் சாலமோன் ஞானத்தையும், தாவீதின் தைரியத்தையும், தூயஆவியாரின் கொடைகளையும் கொடுத்துத் தாங்கள் எதிர்நோக்கும் எல்லாவற்றையும் வென்றிடத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment