Monday, September 18, 2023

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு 24.09.2023

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு  24.09.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 55: 6-9
பிலிப்பியர் 1: 20-24,27
மத்தேயு 20: 1-16

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,   
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் 25ஆம் ஞாயிறுத் திருப்பலியில் இறைவனின் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் அறிந்து இங்கு வந்துள்ள உங்களை அன்போடு வாழ்த்துகிறோம்.


இன்றைய வாசகங்களும், நற்செய்தியும் நாம் சிந்திக்கும்போது, நாம் பணிவுக்கு மற்றும் நம்பிக்கைக்கு அழைக்கப்படுகிறோம். கடவுளை ஆர்வத்துடன் தேடவும், நமது சுயநலக் கண்ணோட்டங்களை கைவிடவும் நாம் வலியுறுத்தப்படுகிறோம். கிருபையின் தெய்வீகப் பொருளாதாரம், நாம் எதிர்பார்க்கும் நீதி உணர்வை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக நமது படைப்பாளரின் எல்லையற்ற பெருந்தன்மையை ஏற்றுக்கொள்வதற்கு சவால் விடுகிறது. இன்றைய உவமை, தகுதி மற்றும் வெகுமதி பற்றிய வழக்கமான கருத்துகளுக்குச் சவால் விடும் வகையில், கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் என்பதை விளக்குகிறது.
கடவுள் தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது... இறுதியில் வந்தவர்களுக்கும் நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளைச் செய்யும்போது... நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?
இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராளக் குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவைகளைப் பற்றி நாம் எண்ணிப் பார்த்து இத்திருப்பலியில் இறைவனிடம் அவரது அன்பையும், இரக்கத்தையும் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம், இறைவன் அருகிலிருக்கும்போது அவரைத் தேடவும், நம்முடைய பொல்லாத வழிகளைக் கைவிடவும் நம்மை அழைக்கிறது. வானங்கள் பூமியை விட உயரமாக இருப்பதைப் போல, கடவுளின் எண்ணங்களும் வழிகளும் நம்முடைய எண்ணங்களையும் வழிகளையும் விட மேலானவை என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. இந்த வாசகத்தில் பணிவு மற்றும் தெய்வீக ஞானத்தின் முன் நமது வரையறுக்கப்பட்ட கண்ணோட்டத்தை அங்கீகரிக்க அழைப்பு விடுக்கும் எசாயாவின் ஆறுதலின் நூலிலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
திபா 145: 2-3. 8-9. 17-18


நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி

 
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

 
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாவது வாசகத்தில், திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் கிறிஸ்துவின் மீது ஆழ்ந்த பக்தியுடன் எதிரொலிக்கின்றன. வாழ்வின் மூலமாகவோ அல்லது மரணத்தின் மூலமாகவோ கிறிஸ்துவை மதிக்க வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தை அவர் வெளிப்படுத்துகிறார். பவுலின் மனப்பான்மை, விளைவு எதுவாக இருந்தாலும், கடவுளுடைய சித்தத்திற்கு அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. எனவே, தான் பவுலடியார், வாழ்வு என்பது கிறிஸ்துவேயெனக் கோடிட்டுக் காட்டும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும்…அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. பெரிதும் போற்றுதலுக்கு உரிய அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே! என்பதனைத் தங்கள் மனங்களில் நிலைநிறுத்தி, இயேசுவின் நற்செய்திக்கு ஏற்பப் பணிகள் செய்து தம் வாழ்வை உமக்காக அர்பணிக்கத் தேவையான அன்பு, நீதி, தாராளக் குணம் ஆகியவற்றை நிறைவாய் பெற்ற தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. இரக்கமும் கனிவும் நிறைந்த அன்புத் தந்தையே எம் இறைவா! எம்குடும்பங்களில் அனைவரும் “உமது எண்ணங்கள் வேறு! எங்கள் எண்ணங்கள் வேறு” என்பதைத் தெளிவாய் உணர்ந்து, உமது எதிராய் முணுமுணுக்காமல் உமது உயரிய அன்பையும், நீதியையும் உணர்ந்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.


3. எங்கள் வானகத்தந்தையே, எம் இறைவா! உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களாலும், பூமி அதிர்ச்சியலும் மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. அரசர்கெல்லாம் அரசரான எம் இறைவா எம்நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதாரச் சீர்கேடுகள் ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதல் இவற்றிலிருந்து வேறுபட்டுப் புதிய சிந்தனைகளும் தூய ஆவியின் வழி நடத்தப்பட்டு, நல்ல வழியில் அழைத்துச் செல்லும் தன்னலமற்ற தலைவர்களை உருவாக்கித் தந்திட வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment