Tuesday, June 24, 2025

புனிதர்கள் பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா

 புனிதர்கள் பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா
பொதுக் காலம் 13ஆம் ஞாயிறு - 29.06.2025


இன்றைய வாசகங்கள்:

திருத்தூதர் பணி 12:1-11
2 திமொத்தேயு 4:6-8
மத்தேயு16: 13-19

திருப்பலி முன்னுரை

புனிதர்களான பேதுருவும் பவுலும் திரு அவையின் தூண்களாகத் திருவிவிலியத்தால் எடுத்துக்காட்டப்படுகின்றனர். திரு அவையின் முதல் திருத்தந்தையான புனித பேதுரு ஆளுமைத் திறனோடு எளிய மனமும் ஏழைகளின் மீது மிகுந்த கனிவும் கொண்ட மிகச் சாதாரண மனிதர். திருத்தூதரான புனித பவுல் இளமை துடிப்பும் படைப்புத்திறனும் உயர்ந்த அறிவாற்றலும் கொண்ட அசாதாரண மனிதர். இருவரின் பண்புகளும் குண நலன்களும் இரு வேறு துருவங்களாக இருந்த போதும் இயேசுவின் பொருட்டு இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொண்டவர்கள். முதியோருக்கு உதாரணமாகப் புனித பேதுருவையும் இளையோருக்கு எடுத்துக்காட்டாகப் புனித பவுலையும் கூற முடியும். அந்த அளவிற்கு இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதும் தங்களுடைய வல்லமைமிக்க வாழ்க்கை சாட்சியத்தால் திரு அவையை வளர்த்து எடுத்தனர். 

இன்று நம் தாய் திருநாட்டில் நிலவுகின்ற எதிரும் புதிருமான சூழல்கள் நம்மைப் புனித பேதுருவின் கனிவையும் புனித பவுலின் துணிவையும் கொண்டு வாழ அழைப்பு விடுக்கின்றது. எந்நிலையில் இருந்தாலும் அந்நிலையில் பணிவும் துணிவும் நம்மிடம் இருக்குமானால் நமது வாழ்வும் சான்று வாழ்வாக அமையும் என்ற உணர்வோடு இன்றைய திருப்பலி கொண்டாட்டத்தில் குடும்பமாய் இணைவோம்.

வாசக முன்னுரை : 

முதல் வாசக முன்னுரை : 

துன்புற்ற வேளையில் தூக்கிப் பிடிப்பேன் என்ற இறைவனின் கரம் எவ்வாறு வல்லமையோடு திருத்தூதர் பேதுருவோடு செயலாற்றியது என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துக் கூறுகிறது. ஆண்டவரின் தூதர் முன்செல்ல, கட்டப்பட்ட அத்தனை விலங்குகளும் உடைய, பேதுரு தன் உணர்வு பெற்றவராய் சிறையிலிருந்து வெளிவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை எடுத்துக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி
2 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
3 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பேதுருவின் நற்செய்தி சாட்சியத்திற்குச் சற்றும் சளைத்தவர் அல்ல புனித பவுல். நல்லதொரு போராட்டத்தில் ஓடுகிறேன் என எப்போதும் நற்செய்தியைப் பற்றிக் கொள்வதிலே பற்றி நின்று, நற்செய்தி அறிவிக்காவிடில் தனக்கு ஐயோ கேடு என நற்செய்தியின் சாட்சியாக வாழ்ந்தவர் புனித பவுல்.கடவுள் பேதுரு சிறையிலிருந்து விடுவித்தது போல எவ்வாறு தன்னையும் சிங்கத்தின் பிடியிலிருந்து விடுவித்தாரெனப் புனித பவுல் எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின் மேல் என் திரு அவையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா” என்றுரைத்து திருஅவையை நிறுவிய இறைவா, பேதுருவின் வழிமரபில் எம்மை வழிநடத்த, நீர் தெரிந்தெடுத்துள்ள திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மேய்ப்புப்பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அளவு கடந்த அன்புடனும் மேற்கொள்ள, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அடைபட்டுக் கிடந்த சிறையின் அறை ஒளிமயமாகி, விலங்குகள் உடைபட, இரும்பு வாயில் தானாகத் திறந்து வழிவிட, விடுதலையின் அனுபவத்தைப் புனித பேதுருவுக்கு அளித்த இறைவா, போர் மேகங்களால் இருளடைந்து, அதிகரித்துவரும் யுத்தச்சூழல்களால் நிலைகுலைந்து, அழிவின் விளிம்பில் அல்லலுறும் அவனிக்கு, அமைதியை அருளவேண்டுமென்றும், உலகாளும் தலைவர்கள், சமாதானத்தின் பாதைக்குத் திரும்பவேண்டுமென்றும், உண்மையான விடுதலையை, எங்கள் தேசம் சமத்துவதில் சுவைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றுரைத்து, மன்னிக்கும் அதிகாரத்தினை, திருஅவைக்கும் திருப்பணியாளர்களுக்கும் அருளிய இறைவா, உம்மோடு ஒப்புரவாக நீர் தந்திருக்கும் ஒப்பற்ற கருவியாகிய, பாவசங்கீர்தனம் எனப்படும் ஒப்புரவு அருட்சாதனத்தை, நாங்கள் போற்றிப்பயன்படுத்தவும், மன்னிப்பு என்னும் திறவுகோலால், மனித உறவுகளைப் பேணி, நல்லுறவுடன் வாழவும் வரமருள  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புனிதர்கள் பேதுரு, பவுல், ஆகியோரது பெருவிழாவின், ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், சீமோன் பேதுருவைப் போல “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என நம்பிக்கை அறிக்கையிடவும்; பவுலடியாரைப் போல “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” எனச்சொல்லும்படியான, பிரமாணிக்கம் நிறைந்த சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்றும், அதற்கான நிறையருளை, நீரே தந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

2 comments: