Tuesday, August 12, 2025

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 38:4-6, 8-10
எபிரேயர் 12:1-4
லூக்கா  12:49-53

திருப்பலி முன்னுரை:

படைகளின் ஆண்டவரின் உறைவிடத்தில் அமர்ந்தும் ஆற்றுப்படுத்திக் கொள்ள இந்தப் பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.

'மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்!' என்று தான் வந்ததை அறிவிக்கும் இயேசு தன் வருகை அமைதியை அல்ல பிளவையே உண்டாக்கும் என்று சொல்வதோடு, தான் பெற வேண்டிய இரத்தத் திருமுழுக்கே அந்தப் பிளவின் முதற்கனி என்கின்றார். இறையரசு பற்றிய செய்தி அதை அறிவிப்பவருக்கு அழிவாக முடிகிறது. பிளவு, துன்பம், அறிவிப்பவரின் அழிவு - இந்த மூன்றும்தான் இறையரசின் தாக்கங்கள்.

இயேசுவை அல்லது இறையரசைத் தேர்ந்து கொண்டால் நாம் மற்றதை விட்டுவிடுதல் அவசியம். இதற்குத் தேவை மனத்திடம். தனக்குத் துன்பம் வந்தாலும் தான் தேர்ந்துகொண்ட 'சாய்ஸ்' இதுதான் என்று நிலைத்து நிற்கிறார்கள் எரேமியாவும், இயேசுவும். 'அவரின்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம்' என்று சொல்லி எபிரேயர் திருமடலின் ஆசிரியரும் தன் மக்களை அழைக்கிறார். அவரின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நம் கண்கள் கசங்கலாம். ஆனால், இறுதியில் நம் பார்வைத் தெளிவாகும்! தெளிவானப் பார்வைப் பெற்றிடத் திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

எரேமியா இறைவாக்கினர் தன் சொந்த மக்களாலும் அரசனாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்றார். அவரின் இறைவாக்கும், செய்தியும் மக்களுக்கு அச்சம் தருவதாலும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தாததாலும் இவ்வாறு செய்கின்றனர் மக்கள். இருந்தாலும் எத்தியோப்பியன் ஒருவன் அரசனிடம் முறையிட அரசனும் எரேமியாவை விடுவிக்க ஆணையிடுகின்றான். இவ்வாறாக, ஒரே நகரில் சிலர் எரேமியாவுக்கு சார்பாகவும், பலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். ஆக, இறைவனின் செய்தி அல்லது இறைவாக்கு கொண்டு வரும் நிகழ்வு மக்களிடையே பிளவு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.

திருப்பாடல்40: 1. 2. 3. 17

1. நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி

2. அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி

3. புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி

4. நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்றால் என்ன என்று வரையறை செய்துவிட்டு, தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சிம்சோன் என முதல் ஏற்பாட்டு குலமுதுவர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வேரூன்றியிருந்த விதத்தை எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்துத் தொடர்ந்து ஓடுவோம் என்றும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்வோம் என்றும் அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன ... அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.” என்கிற நற்செய்தி வாழ்த்தொலிக்கு ஏற்ப, இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் தாயாம் திருஅவையை வழிநடத்தி வருகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரில், நல்லாயனாம் உம்மைக்கண்டு, உம் குரலுக்குச் செவிசாய்த்து பின்தொடர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மண்ணுலகில் நீர்மூட்டவந்த அன்பெனும் நெருப்பையும், நீதியின் சுடரையும் அணைத்துவிட்டு, பகைமையின் பாதையில் பயணிக்கும் இவ்வுலகையும், உலகின் தலைவர்களையும், எம்நாட்டின் தலைவர்களையும், சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், சமாதானம் ஆகிய விழுமியங்களின்படி, வாழுகிற மற்றும் ஆளுகிற, நல்லோராய் நீர் உருமாற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “நானோ எளியவன்; நீரே என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்” என்கிற திருப்பாடல் வரிகளையே, எங்கள் வேண்டுதலாக உம்முன் எழுப்பி, இன்னல்கள் நிறைந்த எம்வாழ்வில், மனம் சோர்ந்து, தளர்ந்து போகாமல், நம்பிக்கையோடு பயணிக்கவும், குறிப்பாக இளையோர் மற்றும் வலுவற்றோர், உம்மையே தங்கள் துணைவகராகக் கொண்டு, துணிவோடு முன்னேற அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிச் செல்லவும், எங்கள் தனிப்பட்ட அழைத்தல் மற்றும் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப, எங்களுக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில், மன உறுதியோடு ஓடிடத் தேவையான, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், மனவுறுதியோடு பங்கேற்று, எங்களைப் பற்றிகொண்டிருக்கிற எல்லா சுமைகளையும், பாவநாட்டங்களையும் உதறித் தள்ளிவிட்டு, உம் சார்பாகவும், உமது அரசுக்கு ஏற்றவர்களாகவும் வாழ்ந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  


https://anbinmadal.org

Print Friendly and PDF

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

இன்றைய வாசகங்கள்:-

திருவெளிப்பாடு. 11:19, 12:1-6,10
1கொரிந்தியர். 15:20-26
லூக்கா. 1:39-56

திருப்பலி முன்னுரை:-

இன்று நாம் அன்னை மரியா விண்ணேற்றம் அடைந்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நமது நாடு அடைந்த சுதந்திரத்தையும் நினைத்து ஒரு விழா எடுக்கின்றோம். மேற்கூறிய இரண்டு விழாக்களும் சாத்தியமான தன் காரணம் நம்பிக்கை! 

அன்னை மரியாவுக்கு இறைவனது பராமரிப்பின் மீது நம்பிக்கை இருந்ததனால் தான் அவர் இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றார். மங்கள வார்த்தை அவருக்குச் சொல்லப்பட்டபோது இறைவனின் வாக்கில் நம்பிக்கை வைத்து 'ஆம்' என்று சொன்னார். இறைவனின் தாயானதால் அவரை இறைவன் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார் என்று திரு அவை நம்புகிறது.

ஒரு நாள் நாம் சுதந்திரம் பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால்தான் நம் முன்னோர்கள் தங்கள் உயிரையே தியாகம் வைத்து, சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்.

எபிரேயருக்கு எழுதிய நூலில் இது விளக்கிக் கூறப்படுகின்றது: "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்றுப் பெற்றனர்" (எபிரேயர் 11:1-2).

மரியன்னையின் மீது அன்பு வைத்திற்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்குத் தக்க உதவிகளைச் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ள முடியும்.

ஆகவே, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான இன்று மரியன்னைக்கு மகிமைச் செலுத்துவோம், அதே நேரங்களில் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஒரு பெண்ணால் (முதல் ஏவாள்) இழந்த விண்ணக வாழ்வும், மகிழ்வும் மற்றொரு பெண்ணால் (மரியாவின் வழியாக) மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் அன்னை மரியா. அவருக்கு ஏற்ற மாட்சியையும், துன்பங்களையும் அதன் வழியாக நாம் கண்ட மீட்பையும் எடுத்துக் கூறும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

\திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)

பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! பல்லவி 

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி 

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். இந்த நிகழ்வு அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது மரியாளின் விண்ணேற்பு வழியாக. சாவே கடைசி பகைவன். அதுவும் அழிக்கப்படும் என்று இயேசுவின் இரண்டாம் வருகையை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்...

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும், உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும், ஏழைகளின் மகிழ்ச்சியில் இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மகிழ்ச்சியும், எம்புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா! உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து, நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும். மரியாளைப் போலத் தாழ்ச்சியிலும், இறைநம்பிக்கையிலும் சிறந்து விளங்க அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா! நாங்கள் உம் ஞானத்தையும், இரக்கத்தையும், உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய், நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும், நீர் எமக்குக் கொடுத்த சுதந்திரக்காற்றை  அனுபவிக்கவும் தேவையான வரங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 4. முன்னேற்றப் பாதையில் வழி நடத்தும் எம் இறைவா, எமக்காய் நீர் தந்த அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் சகிப்புத்தன்மை இல்லாமையால் அமைதி இல்லா ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இவ்வேளை உம் அன்பின் போதனைகளால் அனைத்தையும் மறந்து மக்களுக்காகத் தொண்டாற்ற வேண்டிய வரத்தைத் தர உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.  


                                                                 https://anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, August 5, 2025

பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

 பொதுக்காலம்  19ஆம் ஞாயிறு 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானம் 18:6-9
எபிரேயர் 11:1-2,8-19
லூக்கா 12: 32-48

திருப்பலி முன்னுரை:

தெய்வத்தின் திருப்பாதங்களில் அமர்ந்து பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு திருவழிப்பாட்டில் கலந்துக்கொள்ள வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.

கிறிஸ்துவ வாழ்வின் மையமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை தான் ஆபிரகாமை கடவுளோடு ஒன்றிணைத்தது. அதே நம்பிக்கைதான் நோய்களைக் குணமாக்கியது. பாவிகள் மன்னிப்புப் பெற்றதும், இறந்தவர் உயிர் பெற்றதும் இந்த நம்பிக்கையில்தான்...

இன்றைய காலக்கட்டத்தில் உலக அரங்கில், திருச்சபையின் அமைப்பு ரீதியைப் பார்க்கின்றபோது நம்பிக்கையற்ற நிலை பலரது மனதில் எழலாம். ஆனால் இந்த அவல நிலைமாறத் தான் எங்கிருந்தோ ஒரு ஒளி நம்மீது வீசுகிறது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை நடசத்திரமாக இயேசு தோன்றுகிறார். ”சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம் உங்கள் பரம தந்தையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அழைக்கின்றார்.

நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதியான நம்பிக்கையில் விழிப்போடு செயல்படும் பணியாளர்களாக மாறவும் உயிரேட்டம் நிறைந்த செயல்பாடுள்ள வாழ்வு வாழ்வதற்காக வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்…  வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இறைவனின் நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு அவரின் வாக்குப்பிறழாமை. அஃதாவது, அவரின் சொல்லுக்கும், செயலுக்கும் முரண் இருக்காது. அவரின் வாக்குப்பிறழாமைக்கு ஓர் உதாரணம் தருகின்றது இன்றைய முதல் வாசகம்.  கடவுளின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கடவுளின் முன்னிலையில் பெருமைப்படுத்தப்படுவார்கள். அவர்களும் இறைவனைப் புகழ்ந்துப் பாடுவர் என்று சாலமோனின் ஞானம் கூறுவதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 33: 1,12. 18-19. 20,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

1. நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். - பல்லவி

2. தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.  அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

3. நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை' என்று நம்பிக்கையை வரையறுக்கிறது இன்றைய இரண்டாம் வாசகம். நம்பிக்கைக்கு வரையறைத் தருகின்ற திருத்தூதர் பவுல் தொடர்ந்து, ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கைப் பற்றி எழுதுகின்றார். நிலையற்றவைகளை நிலையற்றவைகள் என ஏற்றுக்கொள்ளும், இறைவனின் நம்பகத்தன்மை உணர்ந்து கொள்ளும் ஒருவரால் மட்டுமே நம்பிக்கைக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்கிற நற்செய்தி வரிகளால் திடம் பெற்று, தாயாம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். எமது திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரோடு இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், தந்தையின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாகவே வாழுகிற வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும்” ஏற்றுக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் தந்தையரிடமிருந்து பாடம் பயின்றவர்களாய், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், தற்காலிக லாபங்களுக்காக, நிலையான அமைதியையும், அனைவருக்குமான நல வாழ்வையும் அடகு வைக்காமல், நீதியின் பாதையில் எமை ஆளவும், குடிமக்கள் அனைவரும், தம் கடமை உணர்ந்து செயலாற்றவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்” என்கிற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம்முடைய கடைக்கண் பார்வையால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றும், ஆண்டவர் தமது உரிமை சொத்தாகத் தெரிந்தெடுத்த, பேறுபெற்ற மக்களாக, அல்லல்கள் யாவும் நீங்கப்பெற்று, அருள்வரங்கள் அனைத்தும் நிரம்பப்பெற்றவர்களாக வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், அசையாத அடித்தளமுள்ள, சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிற, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக விளங்கவும், அதற்குரிய விழுமியங்களோடு வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ‘நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்’ என்கிற உண்மையை உணர்ந்தும், ‘மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்’ என்கிற அளவுகோலை அறிந்தும், எம்கிறித்தவ அழைப்புக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொண்டு, விழிப்பாகவும், ஆயத்தமாகவும் இருந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF