Tuesday, November 25, 2025

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

  திருவருகைக் காலம் முதல் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 2:1-5
உரோமையர் 13:11-14
மத்தேயு 24:37-44

திருப்பலி முன்னுரை:-

திருவழிப்பாட்டின் புதிய ஆண்டைத் தொடங்கும் இவ்வேளையில் திருவருகைக்கால முதல்ஞாயிறு ஆன இன்று இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள்.

கிறிஸ்துவின் முதல் வருகையைக் கொண்டாடத் தயாராகும் நாம் அவரின் இரண்டாம் வருகைக்கு நம்மை நாமே தயாரிக்க வேண்டியநிலையில் உள்ளோம். இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகைக்காக இறைமக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். இறைமகனின் வருகையை எதிர்நோக்கி வாழ வேண்டும் என்ற கருத்துகளை வலிறுத்திக் கூறுகின்றன. நற்செய்தி வாசகம் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து, விழிப்பாய் இருக்க அழைப்பு விடுக்கின்றது.

இன்று ஏற்றப்படும் திருவருகைக் கால முதல் மெழுகுவர்த்தி நம்பிக்கையைக் குறிக்கின்றது. கிறிஸ்துவின்‌ வருகைக்காகத் தயாரிக்கும் நாம்‌ ஒளியின்‌ மக்களாக வாழ வேண்டும்‌ எனத் திருத்தூதர் பவுல்‌ நமக்கு அழைப்பு விடுக்கிறார்‌. இதை உணர்ந்து எதிர்நோக்கு என்கின்ற முதல்‌ திரியை ஏற்றி இயேசுவின்‌ வருகைக்கு ஆயத்தமாவோம்‌.

முதல்‌ வாசக முன்னுரை: 

யாக்கோபின் குடும்பத்தாரே, ஆண்டவரின்‌ ஒளியில்‌ நடக்க அனைத்து மக்களும்‌ ஒன்றுகூடி ஆண்டவரின்‌ கோவில்‌ அமைந்துள்ள மலைக்கு வருவார்கள்‌. இதனை இறைவாக்கினர்‌ எசாயா இறைவனின்‌ மீட்பு அனைவருக்கும்‌ உரியது என்ற வார்த்தைகளால்‌ முன்னறிவிப்பதை முதல்‌ வாசகம்‌ வழியாகக்‌ கேட்போம்‌.

பதிலுரைப்‌ பாடல்‌: திபா 122:1-2, 4-5, 6-7, 8-9

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப்‌ போவோம்‌.

1. ‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

2. ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

3. எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

4. “உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி 

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

உரோமை நகரக் கிறிஸ்தவச் சபைக்குப் எழுதிய கடிதத்தில் பவுல் 'இறுதிக்காலம்' பற்றிப் பேசுகின்றார். இயேசு கிறிஸ்து மனிதராக நம்மிடையே வந்து 'இறுதிக்காலத்தை' ஏற்கெனவே தொடங்கிவைத்தார். அவருடைய வருகையால் உலகில் கடவுளின் உடனிருப்பு ஒரு சிறப்பான நிலையை எய்தியது. உலகில் ஒரு புதிய விடியல் தோன்றியது. கிறிஸ்துவை அணிந்து கொள்ளவும்‌ பாவத்தைத்‌ தவிர்க்கவும்‌ அழைப்பு விடுக்கும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி:

அல்லேலூயா, ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக்‌ காட்டியருளும்‌; உமது மீட்பையும்‌ எங்களுக்குத்‌ தந்தருளும்‌. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு ஆகிய இன்று, தாயாம் திரு அவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய நமக்காகவும் மன்றாடுவோம். இயேசுவின் முதல் வருகையாகிய வரலாற்றுப் பிறப்பை கொண்டாடுகிற கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்காக மட்டுமல்லாது, அவரது இரண்டாம் வருகைக்காகவும், ‘ஆயத்தமாய் இருங்கள்’ என்கிற நற்செய்தி அறிவுறுத்தலின்படி, விழிப்பாயிருந்து, தகுந்த முறையில் எம்மைத் தயாரிக்க, அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருவருகைக் கால தயாரிப்பு வளையத்தின் முதல் மெழுகுதிரியை ‘எதிர்நோக்கின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்த நாளில், யூபிலி ஆண்டினை கொண்டாடுகிற நாங்கள் அனைவரும், இவ்வுலகிலும், எம்நாட்டிலும், நாங்கள் வாழுகிற சமுதாயத்திலும், எங்கள் தனிப்பட்ட வாழ்விலும் எவ்வளவுதான் துன்பங்கள் நிலவினாலும், ‘கடவுள் நம்மோடு’ என்கிற நம்பிக்கையுடன், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்க அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. போர்களும், வன்முறைச்செயல்களும், தீவீரவாதமும் தலைதூக்கியுள்ள இன்றைய காலக்கட்டத்தில், “ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்” என்கிற முதல் வாசக இறைவாக்கு நிறைவேற வேண்டுமென்றும், உலகையும், எம்நாட்டையும் ஆளும் தலைவர்களும், மாந்தர் அனைவருமே, அமைதியை நாடுபவர்களாய், ஆண்டவரின் ஒளியில் நடந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நவம்பர் மாத இறுதி நாளாகிய இன்று, இறந்த அடியாளர்கள் அனைவரும், குறிப்பாக எங்கள் குடும்பங்களிலே மரித்தவர்கள், எங்கள் உறவு மற்றும் நட்புச் சூழல்களில் மரித்தவர்கள், தங்களுக்காக ஜெபிக்க யாருமே இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் ‘உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் வந்துவிட்டது, மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது’ என்கிற பவுலடியாரின் நம்பிக்கையைத் தமதாக்கி, நிலைவாழ்வில் பங்குபெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
    
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு ஆகிய இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை ஏந்தியவர்களாய், பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து, இயேசு கிறிஸ்துவை அணிந்து கொண்ட ஒரு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, November 17, 2025

கிறிஸ்து அரசர் பெருவிழா

 கிறிஸ்து அரசர் பெருவிழா

இன்றைய வாசகங்கள்

2 சாமுவேல் 5:1-3
கொலோசையர் 1:12-20
மத்தேயு 1:18-24

திருப்பலி முன்னுரை

அன்பானவர்களே ! திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை 'இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' என்ற பெருவிழாவாகத் தாய் திருஅவை கொண்டாடுகிறது.
இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர்தான். ஆனால் அவரின் அரசாட்சி இவ்வுலக அரசர்களின் ஆட்சி போன்றதல்ல. இவ்வுலக அரசர்களின் ஆட்சி அதிகாரத்தையும் பணத்தையும் மையமாகக் கொண்டது. கிறிஸ்துவின் அரசாட்சியோ அன்பு, தியாகம், இரக்கம், உண்மை, நீதி, சகோதரத்துவம், அமைதி போன்றவைகளை மையமாகக் கொண்டது.

இஸ்ரயேல் மக்கள் தாவீதைப் போன்று போர் புரிகின்ற ஓர் அரசனை எதிர்பார்த்துக் காத்து இருந்தார்கள். உரோமை ஆட்சியினரின் பிடியிலிருந்து விடுவிக்க ஓர் அரசியல் நெறி சார்ந்த அரசரை எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ இவ்வுலக அரசியல் தலைவர்களைப் போன்று இல்லாமல், அடிமையின் நிலை ஏற்று வந்தார். அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் போதித்தார். தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி துன்பத்தைக் கண்டு தப்பி ஓடவில்லை. மாறாக, சிலுவையை ஏற்றுக் கொண்டு, பகைவரை மன்னித்து, இறைவனின் ஆட்சியை மண்ணுலகில் விதைத்தார். எந்த ஓர் அரசரும் தர முடியாத விடுதலையை பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் நமக்குத் தந்தார். 

அவர் விட்டுச் சென்ற இறையாட்சிப் பணியை இன்றைய திரு அவை இலட்சியப் பயணமாக ஏற்றுப் பயணிக்கிறது. இயேசு கிறிஸ்துவே நம் குடும்பங்களின் அரசர், இறையாட்சியே நம் இலட்சியக் கனவு என்ற சிந்தனைகளோடு இப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை: 

இஸ்ரயேலின் அரசராகச் சவுலுக்குப் பின் தாவீதை இறைவன் திருப்பொழிவு செய்கிறார். தாவீது அரசர் இஸ்ரயேல் மக்களை ஒன்றிணைத்து, உடன்படிக்கைப் பேழையை மீண்டும் எருசலேமுக்கு கொண்டு வருகிறார் என்பதைப் பறைசாற்றும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்: திபா 122:1-2, 4-5

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1. “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி
2. ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

கிறிஸ்து நம்மைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, உலகம் முழுவதையும் தந்தையாம் கடவுளோடு ஒப்புரவு ஆக்கினார். இவ்வுலகப் படைப்பு அனைத்திற்கும் கிறிஸ்துவே அரசர். அவர்  வழியாகவே, அவருக்காக, அனைத்தும் படைக்கப்பட்டிருக்கின்றன எனக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் எனும் பெருவிழவை கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திருவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலைத் தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம். “திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமுமான கிறிஸ்துவே எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு” எங்கள் வாழ்க்கை அமைய   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்” என்கிற பவுலடியாரின் உண்மை கூற்றின்படி, உலகாளும் அதிபர்களும், நாடாளும் தலைவர்களும், இறையாட்சியின் விழுமியங்களுக்கு ஏற்றபடி தம் ஆளுமை அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டுமென்றும், அமைதி, சமத்துவம், நல்லிணக்கம், மனிதமாண்பு ஆகியவை பேணப்படுகிற  பூமியாக இந்நாநிலத்தை மாற்றிட, மாந்தர் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. திருவழிபாட்டு ஆண்டின் நிறைவு வாரத்தில் இருக்கும் நாங்கள் அனைவரும், மரித்த விசுவாசிகளுக்காகச் சிறப்பாக ஜெபிக்கும் இந்த நவம்பர் மாதத்தில், மண்ணுலக வாழ்வின் நிலையாத்தன்மையை உணர்ந்தவர்களாய், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என இறைவேண்டல் செய்வதோடு, நேரிய வழியில் எம்வாழ்க்கையை கட்டியெழுப்பவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இறந்த அடியாளர்கள் அனைவரும், குறிப்பாக எங்கள் குடும்பங்களிலே மரித்தவர்கள், எங்கள் உறவு மற்றும் நட்புச் சூழல்களில் மரித்தவர்கள், நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள் மற்றும் மறந்துபோனவர்கள், தங்களுக்காக ஜெபிக்க யாருமே இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் “என்னோடு பேரின்ப வீட்டில் இன்று நீர் இருப்பீர்” என்கிற அருள்வாக்கை கேட்கிற நற்பேறு பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      
 
5. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும், தம்மோடு ஒப்புரவாக்க திருவுளம் கொண்ட, கடவுளின் திருமகனது வருகையை எதிர்நோக்கியிருக்கும் நாங்கள் அனைவரும், சிறப்பாக  இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பகைமை உணர்வுகளை மறந்து, ஒன்றிப்பு, உடனிருப்பு, பங்கேற்பு, ஆகிய பண்புகளை வளர்த்து, ஒப்புரவின் மக்களாகவும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகவும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, November 10, 2025

பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

பொதுக்காலம்  33ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள் 

மலாக்கி 4: 1-2
2தெசலோனிக்கர் 3: 7-12
லூக்கா 21: 5-19

திருப்பலி முன்னுரை 

இறைமகன் இயேசுவின் அன்பில் மலர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் வரவு நல்வரவு ஆகுக…

இறைவாக்கு வழிபாடு இன்று நம் முன்வைக்கும் கருத்துகள் யாதெனில் இறைவனில் மனௌறுதியடன் கடைசிவரை இருந்தால் நிலைவாழ்வு என்னும் வெற்றியைப் பெற முடியும் என்பதே…

இதையே மலாக்கி இறைவாக்கினர் கூறுகிறார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கையில் நலம் தரும் மருந்து இருக்கும். என்றும் உழைத்து உண்ணப் பவுலடியார் கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிடுகிறார்.

எருசலேம் ஆலயத்திற்கு வரவிருக்கும் பேரழிவை எடுத்துரைக்குக் கிறிஸ்து, அவரின் முன்னிட்டு நமக்கு வரும் நிந்தனைகளைப் பற்றியும், அதை எப்படி எதிர்க்கொள்வது எனபதைப் பற்றியும் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். அதேவேளையில் அவர் நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும் தந்துப் பலப்படுத்துவதைப் பற்றி எடுத்துரைக்கும் அவர் நாம் மன உறுதியோடு இருந்து நம் வாழ்வைக் காத்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவரில் மன உறுதியுடன் இருந்து நிலைவாழ்வைக் காத்துக் கொள்ள இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து இறைஇயேசுவின் ஆசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

முதல்‌ வாசக முன்னுரை: 

இறுதித்‌ தீர்ப்பு நாளைக்‌ குறித்த எச்சரிக்கையையும்‌ அதே வேளையில்‌, எதிர்நோக்கையும்‌ தருவதே இன்றைய முதல்‌ வாசகம்‌. கடவுளுக்கு அஞ்சி நடக்காத ஆணவக்காரர்களுக்கு, எரியும்‌ தீச்சூளையும்‌, அவருக்கு அஞ்சு நடப்பவருக்கோ நலம்‌ தரும்‌ கதிரவன்‌ எழுவானெனக் கூறும்‌ வாசகத்துக்குச்‌ செவிமடுப்போம்‌. 

பதிலுரைப்பாடல் 

திருப்பாடல் 98: 5-6, 7-8, 9
பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார். 

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கிக் கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி
 

கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி
 

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி 

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

இயேசுவின்‌ இரண்டாம்‌ வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருக்க நம்மை அழைக்கிறது இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌. கிறிஸ்துவ வாழ்க்கையின்‌ கடமையையும்‌ பொறுப்பையும்‌ உணர்ந்து உழைத்து வாழ அழைக்கும்‌ இந்த வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கட்டப்படும் ஆலயங்கள் அழியலாம். ஆனால் கிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாகிய திருஅவை, காலத்தால் அழிவுறாதது. கிறிஸ்துவின் பிரதிநிதியாய் இருந்து அதனை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை 14 ஆம் லியோ, மற்றும் ஆயர்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரும், பொதுநிலையினராகிய நாங்களும், அழிந்துபோகும் உலக இயல்பின்படி வாழாமல், நிலை வாழ்வுக்குரிய இயல்பை அணிந்தவர்களாய் வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் தொடுக்கின்ற போர்களும், பல இடங்களில் ஏற்பட்டு வருகிற நிலநடுக்கங்களும், வெள்ளங்களும், பஞ்சமும், கொள்ளை நோயும், அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும், இனப்படுகொலைகள், மதக்கலவரங்கள் மற்றும் துப்புறுத்தல்கள் ஆகியவை குறைந்தொழியா இக்காலத்தில், நீர்தாமே நீதியின் கதிரவனை எழச்செய்து, அமைதியெனும் நலம் தரும் மருந்தினைத் தந்து, தலைவர்களையும், குடிமக்களையும் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” என்கிற நற்செய்தி வாழ்த்தொலியால் நம்பிக்கை ஊட்டப்பெறும் நாங்கள், இறந்த அடியார்களை நினைவுகூரும் இந்த நவம்பர் மாதத்தில், எங்கள் குடும்பங்கள், அன்பியங்கள் மற்றும் பங்கில் மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும், நாங்கள் நன்றியோடு நினைவுகூர்ந்து ஜெபிக்க கடமைப்பட்டுள்ள அனைத்து நல்லோருக்காகவும் மன்றாடுகிறோம். நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்கிற பவுலடியாரின் போதனைக்கேற்ப, நாங்கள் அனைவரும் கடின உழைப்பாளிகளாகவும், பொறுப்புள்ள மனிதர்களாகவும் விளங்கிட வேண்டுமென்றும், எம் இளையோர்க்கும், வேலையின்றி தவிக்கும் அனைவருக்கும், அவரவர் தகுதிக்கேற்ப நல்ல பணி கிடைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
    
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டோ, தவறான போதனைகளால் ஈர்க்கப்பட்டோ ஏமாந்து போகாமலும், எமக்கெதிராக இழைக்கப்படும் துன்பங்கள், புறக்கணிப்புகள், துரோகங்கள் ஆகியவற்ற்றைக்கண்டு கலங்காமலும், மன உறுதியோடு இருந்து, எங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, November 3, 2025

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசேக்கியேல்  47: 1-2, 8-9, 12
கொரிந்தியர்    3: 9b-11, 16-17
யோவான்         2: 13-22

திருப்பலி முன்னுரை 

இனியவர்களே ! இவ்வுலகில்‌ உள்ள அனைத்துக்‌ கோவில்களுக்கும்‌ தாயான லாத்தரன்‌ பெருங்கோவிலின்‌ நேர்ந்தளிப்பு நாளை இன்று தாய்‌ திரு அவை கொண்டாடுகிறது. நம்‌ உடல்‌ இறைவன்‌ வாழ்கின்ற கோவில்‌. இக்கோவிலின்‌ மாண்பினை அறிந்து, இறைவன்‌ என்றென்றைக்கும்‌ தங்கும்‌ கோவிலாக நாம்‌ மாற இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கின்றது. 

“உள்ளம்‌ பெருங்கோயில்‌ ஊன்‌ உடம்பு ஆலயம்‌” என்கிறார்‌ திருமூலர்‌. உடலும்‌ உள்ளமும்‌ ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத அளவுக்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளம்‌ இல்லாமல்‌ உடலும்‌, உடல்‌ இல்லாமல்‌ உள்ளமும்‌ வாழ்வின்‌ அர்த்தத்தைக்‌ கொடுப்பதில்லை. உள்ளத்தில்‌ உறைகின்ற இறைவனுக்கு உடலே கோவிலாக அமைகின்றது. இறைவனும்‌ மனிதனும்‌ இணையும்‌ இடந்தான்‌ கோவில்‌. கோவிலில்‌ தான்‌ பலிகள்‌ ஒப்புக்கொடுக்கப்பீநிகின்றன. இறைமனித உறவை ஒப்புரவாக்க வந்த இயேசு, எருசலேம்‌ கோவிலைத்‌ தூய்மைப்படுத்துவதை இன்று யோவான்‌ நற்செய்தியில்‌ வாசிக்கிறோம்‌. தூய ஆவியாரின்‌ ஆற்றலால்‌ தந்தையின்‌ திருவுளத்தை நிறைவேற்ற வந்த இயேசுவே அந்தக் கோவில் என்பதை யூதர்கள்‌ புரிந்து கொள்ளவில்லை.

கற்களால்‌ ஆனது ம்ட்டும்தான்‌ கோவில்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. “கடவுளின்‌ ஆவியார்‌ உங்களுள்‌ குடிகொண்டிருக்கிறார்‌ நீங்களே அக்கோவில்‌” என்று திருத்தூதர்‌ பவுல்‌ இரண்டாம்‌ வாசகத்தில்‌ குறிப்பிடுகிறார்‌. இக்கோவிலிலிருந்து செல்லும்‌ ஆற்றல்‌ தீமை அனைத்தையும்‌ நன்மையாக மாற்றுகிறது என்று இறைவாக்கினர்‌ எசேக்கியல்‌ நூலிலிருந்து முதல்‌ வாசகத்தில்‌ வாசிக்கின்றோம்‌. இறைவன்‌ வாழுகின்ற கோவிலாக நாம்‌ மாற அருள்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ மன்றாடுவோம்‌.

முதல்‌ வாசக முன்னுரை: 

கோவிலிலிருந்து பாயும்‌ தண்ணீர்‌ உயிர்‌ அளிக்க வல்லது. தண்ணீர்‌ தொடுகின்ற இடமெல்லாம்‌ புத்துணர்வையும்‌, நற்குணத்தையும்‌ நல்ல உணவையும்‌ தந்து உதவுகின்றது எனக்‌ கூறும்‌ முதல்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 46: 1-2,3c. 4-5. 7-8 (பல்லவி: 4)
பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. - பல்லவி

ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. - பல்லவி

படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! 
- பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

நாம்‌ அனைவரும்‌ இறைவன்‌ கட்டுகின்ற கோவில்‌. இயேசுவே அதன்‌ அடித்தளம்‌. நம்‌ உடல்‌ தரய்‌ ஆவியார்‌ தங்கும்‌ கோவில்‌, அதைத்‌ தூய்மையாக வைத்திருப்பது நம்‌ ஒவ்வொருவரின்‌ பொறுப்பு என்று கூறும்‌ இரண்டாம்‌ வாசகத்துக்குச்‌ செவிசாய்ப்போம்‌. 

நற்செய்திக்கு முன்‌  வாழ்த்தொலி:

அல்லேலூயா, எனது பெயர்‌ என்றென்றும்‌ போற்றப்படுமாறு இக்கோவிலை நான்‌ தெரிந்தெடுத்துத்‌ திருநிலைப்படுத்தியுள்ளேன்‌, என்கிறார்‌ ஆண்டவர்‌. அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. உரோமை நகருக்கு மட்டுமல்லாமல், அனைத்துலகத் திரு அவைக்கும் தாய்த்தலமாகவும், தலைமை ஆலயமாகவும் விளங்குகிற லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவினை கொண்டாடுகிற இந்நாளில், திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரையும், பொதுநிலையினராகிய எங்களையும், நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருக்கோவிலிலிருந்து புறப்படுகிற ஆறு பாய்கிற இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும் என முன்னுரைக்கும் இறைவாக்கினர் எசேக்கியேலின் கூற்றுப்படி, இவ்வுலகும், உலகின் உயிரினங்கள் அனைத்தும், வாழ்வாங்கு வாழவும், துளிர்விட்டிருக்கும் அமைதிக்கான முயற்சிகள் நிறைவான பலன் தந்து, அமைதியும் சமாதானமும் செழிக்கும் பூமியாக இவ்வையகம் விளங்கவும், நாடுகளை ஆட்சி செய்கிற தலைவர்கள் மற்றும் மக்கள் யாவரும், நாளுமே உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே” என்கிற திருப்பாடல் வரிகளில் நம்பிக்கை கொண்டவர்களாய், எம்மை வாட்டி வதைக்கும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், சோதனைகள், வறுமை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடிகள், கடன் தொல்லைகள், இன்னும்பிற இன்னல்கள் ஆகியவற்றை, உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். நீர் தாமே எங்களுக்குத் துணையாகவும் அரணாகவும் இருந்து, கரைசேர்க்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தந்தையின் இல்லத்தின் மீதுள்ள ஆர்வத்தால் எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய இயேசுவின் அறச்சீற்றத்தை புரிந்தவர்களாய், நாங்களும், எங்கள் பங்குத் தந்தையரோடும் பங்குப்பேரவை, அன்பியங்கள், பக்த சபைகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களோடு இணைந்து, எங்கள் பங்குத்தளத்தைப் புனிதமிகு ஆலயமாகக் கட்டியெழுப்பத் தேவையான அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? என்கிற பவுலடியாரின் வினாவினை உள்வாங்கியவர்களாய், எங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், சமூக மற்றும் பங்கு வாழ்க்கையையும் தூயதாக அமைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF