தவக்காலம் முதல் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
தொடக்கநூல் 2:7-9,3:1-7
உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவை தான் நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையும், ஆணிவேரும் ஆகும். இவற்றைத் தான் நாம் நாள்தோறும் திருப்பலியில் நினைவுகூர்ந்து கொண்டாடினாலும் ஆண்டுக்கு ஒரு முறை சிந்தித்த சீர்தூக்கிப் பார்க்க நம்மைத் திருச்சபை அழைக்கிறது தவக்காலத்தின் வழியாக...
இவ்வாண்டின் முதல் தவக்கால ஞாயிறைச் சிறப்பிக்க இத்திருப்பலியில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தவக்காலம் என்றவுடன் ஏதோ கவலையோடும், வருத்தத்தோடும் காட்சி கொடுப்பது என்பதல்ல. மாறான இதுவே நம்பிக்கையின் காலம். இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சியின் காலம். ஒப்புரவின் நல்ல காலம். நிலைவாழ்வுக்கு உரமிடும் காலம். மனித வாழ்வில் சோதனை என்பது ஒரு தொடர்கதை. மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது மானிடரின் உள்ளத்தை வருடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அந்தச் சோதனைகளையும் வென்று சாதனை படைத்த நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி. இயேசு செய்த அரும்பெரும் சாதனை. ஆதிப்பெற்றோரின் அடிமைத்தனத்தால் பாவ வாழ்வில் நாமும் பாவநிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றோம். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் வருகையில் பாவநிலையிலிருந்து வெற்றிப் பெற்ற புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம். இறைவார்த்தை இயேசுவுக்குச் சோதனைகளை வெல்ல உறுதுணையாக இருந்தது. எனவே நாமும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இல்லையேல் “உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது” என்ற பரிசேயர்களைப் பார்த்துச் சொன்ன இயேசு நம்மையும் பார்த்துச் சொல்லுமுன் விழிப்புடன் செயல்படுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறாகிய இன்று தொடக்கநூல் வாசகம் மனிதனின் படைப்பு, அவனது வீழ்ச்சிபற்றிக் கூறுகிறது. தவக்காலத்தின் குறிக்கோள் மனிதன் தன் பாவ வாழ்க்கையை உணர்ந்து மனம் திரும்பி, இறைவனின் புதுப் படைப்பு என்ற நிலைக்குத் திரும்பி வருதலேயாகும். இந்நிலைக்கு வர வேண்டுமாயின் அவன் முந்திய நிலையை உணர வேண்டும் என்ற கருத்திலே இன்றைய வாசகம் பொருந்தி அமைகிறது. இவ்வாசகத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கும் இறைவனின் வார்த்தைகளைக் கவனமுடன் மனதில் பதிவு செய்வோம்.
பதிலுரைப் பாடல்
பல்லவி : ஆண்டவரே! இரக்கமாயிரும்: ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல்கள்: 51: 1-4. 10-12,15
கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற் கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். பல்லவி
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார் வையில் தீயது செய்தேன். பல்லவி
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னி லையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து. எடுத்துவிடாதேயும். பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும். அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
முதல் மனிதன் ஆதாம் செய்தப் பாவத்தால் சாவைக் கொணர்ந்தான். ஆயினும் கடவுளின் கட்டளைகளை மீறிப் பாவம் செய்யாதவரும் சாவுக்குள்ளானார்கள். ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல் ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்படியாமையால் பலர் பாவிகளானது போல் ஒருவரின் கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். இவ்வாறு நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் பவுலடியார் அழைக்கின்றார். கேட்போம் கவனமுடன்...
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. திரு அவையின் ஆட்சிபீடத்தில் இருப்போர் முதல், கடைசி பொதுநிலையினர் வரை, அனைவருமே, “கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்வதுதான்’ தங்களுக்கான அழைத்தலும் கடமையும் என்பதை உணர்ந்து செயல்பட, அருளின் காலமாகிய இந்தத் தவக்காலம் பயன்பட வேண்டுமென்று, திருத்தந்தை லியோ, அனைத்து அருள் பணியாளர்கள் மற்றும் துறவியவருக்காகவும், எங்கள் ஒவ்வொருவருக்காகவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆசை, அகந்தை, அதிகார வேட்கை போன்ற அலகையின் வலைகளில் சிக்கி, அமைதியின் பாதையைத் துறந்து, அலங்கோலப்பட்டு நிற்கும் அவனிக்கு, மனந்திரும்புதலின் பதையில் பயணிக்கும் வரமருள வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், தீமையின் வழிகளைத் துறந்து நன்மையின் செயல்களில் ஈடுபடவும், மக்கள் அனைவரையும் அறவழியில் வழிநடத்தவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்பதற்குச் சுவையானதாகவும், கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும், அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருப்பதாகக் கருதி, கடவுளின் கட்டளையை மீறிய எம் ஆதிப்பெற்றோர் போலவே, இன்றைக்கும், உலகின் மாயக் கவர்ச்சிகளாலும், அறிவியல் வளர்ச்சி தருகிற அதீத சுகத்தாலும், வசதிகளாலும், நுகர்வுக் கலாச்சாரம் என்கிற நயவஞ்சக வலையில் சிக்குவதாலும், படைத்தவராம் கடவுளை மறந்து, படைப்புகளில் தன்னைத் தொலைத்துவிட்ட நவீன உலகின் மக்களாகிய நாங்கள், ஒறுத்தல், தவம், ஜெபம், புண்ணியம் போன்றவற்றின் மேன்மையை உணர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ‘ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள்’ ஆனதை, கிறிஸ்துவின் வழியாய் அனுபவிக்கும் நாங்கள், ‘அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் நாங்கள் வாழ்கிறோம்’ என்பதை உணர்ந்து, கடவுளின் கட்டளைகளுக்கும், சமூக நன்னெறிகளுக்கும் கீழ்ப்படிந்து வாழுகிற நல்லொழுக்கம் பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது” என்கிற பவுலடியாரின் கூற்றினால் திடம்பெற்று, எம்பாவங்களை உணர்ந்து, நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து, இறையருளை நிரம்பப் பெறுகிற காலமாக இந்தத் தவக்காலத்தை மாற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:
Post a Comment