தவக்காலம் இரண்டாம் ஞாயிறு 01.03.2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-
தொடக்கநூல் 12:1-4
திமோத்தேயு 1:8-10
மத்தேயு 17:1-9
திருப்பலி முன்னுரை: -
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). முதல் ஞாயிறன்று இயேசு பாலைவனத்தில் சோதனைகளை வென்றதைத் தியானித்தோம். இன்று, தாபோர் மலையில் இயேசுவின் மாட்சிமை பொருந்திய உருமாற்றத்தைத் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின் பாடுகளும் மரணமும் நெருங்கி வந்த வேளையில், தம் சீடர்கள் சோர்ந்து போகாமல் இருக்கவும், சிலுவைச் சாவிற்கு அப்பால் ஒரு மகிமையான உயிர்ப்பு உண்டு என்பதை உறுதிப்படுத்தவும் இயேசு உருமாறிக் காட்டினார். இந்தத் தவக்காலம் நம்முடைய வாழ்விலும் ஒரு 'உருமாற்றத்தை' ஏற்படுத்த வேண்டும். நம்முடைய பழைய பாவ இயல்புகளைத் தவிர்ந்து, கிறிஸ்துவின் ஒளியால் நிரப்பப்பட்ட புதிய மனிதர்களாக நாம் மாற வேண்டும் என்பதே இன்றைய வழிபாட்டின் அழைப்பு.
"இவர் என் அன்பார்ந்த மைந்தர், இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற தந்தையாம் இறைவனின் கட்டளைக்கு இணங்க, கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் வரத்தை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை :-
(தொடக்க நூல் 12:1-4)
ஆபிரகாமின் அழைப்பும் கீழ்ப்படிதலும். இன்றைய முதல் வாசகத்தில், விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமை இறைவன் அழைக்கும் நிகழ்வைச் செவிமடுக்கிறோம். தன் நாடு, இனம் மற்றும் தன் தந்தையின் வீட்டை விட்டுவிட்டு, இறைவன் காட்டும் நிலத்திற்குச் செல்ல ஆபிரகாம் துணிந்தார். அவருடைய அந்தப் பயணமும் கீழ்ப்படிதலுமே அவருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. நாமும் நம்முடைய வசதி மண்டலங்களை (Comfort Zone) விட்டு வெளியேறி, இறைவன் காட்டும் புனிதப் பாதையில் நடக்க இவ்வாசகம் நமக்கு ஊக்கமளிக்கிறது.
பதிலுரைப் பாடல்:-
பல்லவி : ஆண்டவரே! உமது பேரன்பு எங்கள் மீத இருப்பதாக!
திருப்பாடல்கள்: 33: 4-5, 18-19, 20, 22
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை :-
(2 திமொத்தேயு 1:8-10)
நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தை ஏறுங்கள். புனித பவுல் அடியார் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம், நாம் பெற்றுள்ள அழைப்பு நம்முடைய தகுதியினால் வந்ததல்ல, மாறாக இறைவனின் அருளினால் வந்தது என்பதை உணர்த்துகிறது. சாவினை அழித்து, நற்செய்தியின் வழியாக வாழ்வையும் அழியாமையையும் ஒளிரச் செய்த கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை ஏற்கத் தயங்க வேண்டாமென இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-
ஒளிரும் மேகத்தினின்று, தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு:-
1. தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திரு அவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், “நீயே ஆசியாக விளங்குவாய் … உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்கிற முதல் வாசக கூற்றின்படி, அனைவருக்கும் ஆசியாக விளங்கும் வண்ணம், எங்கள் வாழ்க்கையை, இந்தத் தவக்காலத்தில் உருமாற்றம் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒப்புரவின் காலமாகிய இந்தத் தவக்காலத்தில், மாந்தர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும், ஒப்புரவுடன் பயணிக்கவும், தலைமைப்பணியில் இருப்போர் அனைவரும், பகைமையின் பாதையைத் துறந்து, நீதியின் வழியிலும், சமாதானத்தின் திசையிலும் பயணிக்க வேண்டுமென்றும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அரசுத் தேர்வுகளையும், ஆண்டுத் தேர்வுகளையும் எழுதவிருக்கும் எம்பிள்ளைகளும், அனைத்து மாணவ மாணவியரும், முழு ஈடுபாட்டுடன் எல்லாப் பாடங்களையும் கற்று, தகுந்த முறையில் தங்களையே தயாரித்து, துணிவுடன் தேர்வுகளைச் சந்தித்து, சிறந்த வெற்றியினை சுவைக்க, நீர் தாமே அருள்புரிய வேண்டுமென்றும், தூய ஆவியாரின் ஆற்றலை அவர்களுக்குப் பொழிந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. சாவை அழித்து, அழியா வாழ்வை, நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்த கிறிஸ்து இயேசு வழியாக அளிக்கப்பட்ட அருளின்படி, மீட்கப்பட்ட நாங்கள் அனைவரும், எங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தூய அழைப்புக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொள்ளவும், “உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்” என ஆபிரகாமுக்கு நீர் வழங்கிய ஆசீரை உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆண்டவரின் தோற்றமாற்ற நிகழ்வின் உட்பொருளை உணர்ந்தவர்களாய், உன்னத இறை அனுபவங்களோடு வாழ்க்கை நிறைவுறுவதில்லை; துன்பங்கள் நிறைந்த சிலுவைப் பாதையின் வழியாகத்தான் உயிர்ப்பின் மாட்சி சாத்தியம் என்பதை உணர்ந்து, எங்களது ஜெப, தவ, அன்புச் செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி “இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என விண்ணகம் அறிக்கையிடும் வண்ணம், எங்கள் வாழ்க்கையை உருமாற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:
Post a Comment