Sunday, October 29, 2017

அனைத்துப் புனிதர்களின் பெருவிழா - 01-11-2017

அனைத்துப் புனிதர்களின் பெருவிழா


திருப்பலி முன்னுரை


    நமதாண்டவர் இயேசு நமக்கு அருட்பெருங்கொடைகளாக - பரிந்துரைக்கும் திருத்தாய் மரியாளையும், நம்மை ஞானத்தில்  பயிற்றுவிக்கும் ஒன்றாக, திருச்சபையையும் வழங்கியிருக்கின்றார். ‘புனிதர்களுடைய சமூக உறவை விசுவசிக்கின்றேன்” என்பது நம்மை வழிநடத்தும் திருச்சபையால் வரையறை செய்யப்பட்ட விசுவாச சத்தியங்களில் ஒன்று. இந்த விசுவாச சத்தியத்தை நாம் விழா எடுத்துச் சிறப்பிக்கும் நாளே இன்று.     ஆராதனையும், வழிபாடுகளும் ஆண்டவராம் கடவுளுக்கு மட்டுமே உரியன என்பதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.     புனிதர்களின் இணக்கமான தோழமையை நாம் நாடுவதற்கும், வணக்கத்துடன் கூடிய புகழ்ந்தேற்றலை அவர்களுக்கு புரிவதற்கும் அவர்களின் முன்மாதிரிகை மற்றும் நன்னெறி விட்டு விலகாத தூய வாழ்க்கையுமே காரணங்கள். மறைசாட்சிகளையும், மற்றுமுள்ள அனைத்துப் புனிதர்களையும் நாம் நினைவு கூர்ந்து கொண்டாடும் செயல், மனுக்குமாரன் இயேசுவின் மகத்துவத்தை மண்ணுலகு எங்கும் இன்னும் அதிகமாய், நற்செய்தியை பரப்பும் பணிக்கு தூண்டுகோல் ஆகிறது; துணை நிற்கின்றது; வலுச்சேர்க்கின்றது.

அன்று தங்களை உயர்ந்தவர்களாக நினைத்துக் கொண்டு வாழ்ந்திருந்த சதுசேயர் மற்றும் பரிசேயர் கும்பல்; மீட்பா; இயேசுவைப் பற்றி என்ன எண்ணங்களை கொண்டிருந்திருக்கும்?  சிலுவைச் சாவிற்கு கையளித்து, நசரேத்தூர் இயேசுவின் வாழ்வை முடித்துவிட்டோம்;    உயிருக்கு பயந்த சீடர்களை எங்கெங்கோ ஓடி ஒளிந்து கொள்ளச் செய்துவிட்டோம். செயல் வடிவம் பெறமுடியாது இயேசுவின் திட்டங்களை சிதைத்துப் போட்டுவிட்டோம் - இப்படித்தான் எண்ணியிருப்பார்கள்.     ஆனால் நிகழ்ந்திருப்பதென்ன?
    ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் அசைவுறாக் கோட்டையாய், விண் முகட்டை தொடும் உன்னத கோபுரமாய் தாய்த்திருச்சபை தனித்து ஒளிர்வதை அல்லவா இந்த உலகம் கண்டு வியக்கிறது!  இத்தகு மாற்றத்திற்கு கடவுளின் கருவிகளாக பயன்பட்டவர்கள் மறு கிறிஸ்துவாக வாழ்ந்து மரித்திருக்கும் மறைசாட்சிகளும், புனிதர்களுமே!  புவிதனில் வாழும் மனிதர் ஒவ்வொருவருக்குள்ளும் புனிதம் விதையாக புதையுண்டு தான் கிடக்கின்றது. அவ்விதைக்கு அன்பு நீர்ப்பாய்ச்சி, அறச்செயல்களால் உரமிட்டு, விசுவாச வேலி அடைத்துக் காத்து நிற்போம் எனின் இம்மையிலும், மறுமையிலும் மேன்மையை காண்போம். புனிதர் என்ற நிலைக்கு புவியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உயர்த்தப்படுவது சாத்தியமா?
    விடை இதோ!  
அன்று இயேசு மார்த்தாவிற்கு கூறிய அறிவுரையை கடைபிடித்தும், மரியா அன்று கடைபிடித்த வாழ்க்கையை பின்பற்றியும் வாழ்வோர் புனிதராக உயர்த்தப்படுவது சாத்தியமே! காரியங்கள் பலவற்றைக் குறித்து கவலையும், உள்ளத்தில் கலக்கமும் கொள்ளாதிருக்க மார்த்தாவிற்கு கற்பிக்கின்றார் இயேசு.  இறைவார்த்தைகளை கருத்தாய்க் கேட்பதில் காலத்தை மரியா பயன்படுத்தியது இயேசுவால் பாராட்டப்படுகிறது. இறைவார்த்தைகளை சிந்தையில் இறுத்திச் செயலாற்றும் நல்ல பங்கினைத் தேர்ந்தவர்களாய் வாழ்ந்து சிறக்கும் வரம்வேண்டி, இத்திருப்பலியை ஒப்புக்கொடுத்து வேண்டுவோம்.


முதல் வாசக முன்னுரை (திருவெளிப்பாடு 7:2-4, 9-14)

கிறிஸ்தவ விசுவாசிகள் அச்சுறுத்தவும், துன்புறுத்தவும்பட்ட  வேதகலாப்பனை காலத்து நூலான திருவெளிப்பாட்டிலிருந்து நாம் முதல் வாசகம் கேட்கயிருக்கின்றோம்.  அன்றைய காலச்சூழல் கருத்தில் கொள்ளப்பட்டு அடையாளங்கள் மற்றும் காட்சிகள் மூலம் செய்திகள் தரப்பட்டுள்ளன. திருச்சபை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் என்ற எண் கொண்டும், கிறிஸ்து இயேசுவை ஆட்டுக்குட்டி என்றும், மறைசாட்சிகளை வெண்ணாடை அணிந்தவர்கள் என்றும் அடையாளப்படுத்தும் வாசகம் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (1 யோவான் 3:1-3)

இரண்டாம் வாசகமாக நாம் இப்போது கேட்க இருப்பது திருத்தூதர் புனித யோவானின் முதல் திருமுகத்திலிருந்து தரப்பட்டிருக்கிறது. இந்த திருமுகம் அன்புகூர்தலுக்கு முக்கியத்துவம் தருவதால் இதனை அன்புக் கடிதம் என்று அழைக்கின்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது. தம் மக்கள் என்று நம்மை அன்பொழுக இறை தந்தை அழைப்பதோடு, நாம் தூயவர்களாய் திகழவும், ஆவலாய் அவரை எதிர்நோக்கவும் அழைப்பு விடுகிறது வாசகம். அதனை செவியேற்கும் ஆர்வம் மேலோங்கட்டும் நமக்கு.


விசுவாசிகளின் மன்றாட்டு - 1

இனிய இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
நீரோடைகளை வாஞ்சித்து தேடும் கலைமான்களிலும் மேலாக உம்மை நேசித்ததாலும் - வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளை ஆழ்ந்து தியானிப்பதில் அகமகிழ்வு கொண்டதாலும் எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உமது அருளால் இறை ஞானத்திலும், இறையன்பிலும் நாங்கள் மென்மேலும் வளரும் வரம் வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.            

விசுவாசிகளின் மன்றாட்டு - 2

இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
தங்களுக்கு தரப்பட்டிருந்த தாலந்துகளை தக்க விதமாய் பயன்படுத்தியதாலும் - சிறிய பொறுப்புகளில் சிந்தையோடு செயல்பட்டு, நம்பிக்கைக்கு உரிய நல்ல ஊழியர்களாய் சிறந்ததாலும், எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உமது அருளால் எங்கள் வலுவின்மையில் உமது வல்லமை பரிபூரணமாக நிறைந்து பயனுள்ள ஊழியர்களாக நாங்கள் சிறக்கும் வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.

விசுவாசிகளின் மன்றாட்டு - 3

இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
இடுக்கமும், குறுகலுமான வாழ்வின் வழியை கண்டுபிடித்து, தொடர்ந்து அதில் நடக்கத் துணிந்ததாலும் -  எதிர்பட்ட இடையூறுகளை ஏற்க துணிந்ததோடு, வாட்டிய உடல் வருத்தங்களை சகித்து, தடைபடாது ஆற்றிய கடமையினாலும், எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உம் வழியாய் உள்ளே செல்லும், வெளியே வரும் மற்றும் மேய்ச்சல் நிலத்தை கண்டுபிடித்து நிறைவடையும் வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.

விசுவாசிகளின் மன்றாட்டு - 4
இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
புரிந்த பல நற்செயல்களால் மக்களிடையே சுடராக ஒளிரிந்ததாலும் - அதனால் மக்கள் இறைதந்தையைப் போற்றி அவரின் மனதை குளிர்வித்ததாலும் எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர் இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நற்செயல்கள் புரியும் அருங்குணத்தினை புனிதர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளவும், உலகின் ஒளியாகிய உம்மிடமிருந்து வாழ்விற்கு வழிகாட்டும் ஒளியை பெற்றுக் கொள்ளவும் வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.


நன்றி திரு MM.லூயிஸ் சாலிகிராமம் சென்னை

Thursday, October 26, 2017

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு 29.10.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


விடுதலைப் பயண நூல் 22: 21-27

1 தெசலோனிக்கர் 1:  5–10
மத்தேயு 22: 34-40

 *முன்னுரை*


அன்புடையீர்,
பொதுக்காலத்தின் 30ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்போடு வரவேற்கிறோம்.
நமக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் கேள்விகள் நம் அறிவை வளர்க்கும். இதற்கு மாறாக, பதில்களைத் தெரிந்துகொண்டு, அடுத்தவருக்கு நம்மைவிட குறைவாகத் தெரிகிறதென்பதை இடித்துச் சொல்வதற்காக கேள்விகள் கேட்கும்போது, நமது பெருமை கலந்த அறியாமை அங்கு பறைசாற்றப்படும். தனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இயேசுவை அணுகி கேள்வி கேட்ட ஓர் அறிஞரைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்
தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்டநூல் அறிஞரிடமிருந்து கேள்வி கேட்கப்பட்டாலும், அந்தக் கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் சொல்கிறார். என்ன ஒரு பதில் அது! இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதில்.. திருச்சட்டங்களின் அடிப்படை நியதிகளைப் பற்றி கேள்விகள் கேட்டு, அறிவுப்பூர்வமான பதில்களை அறிந்து கொள்வது முக்கியமல்ல அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் இறையன்பு, பிறரன்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதே முக்கியம் என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் நமது கடமைகளைப் பற்றி, நாம் ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இரக்கம் நிறைந்த அந்த இறைவனின் வார்த்தைகள் நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குமா? இயேசு சொன்னதுபோல், இறையன்பையும், பிறரன்பையும் நாம் வாழ்வில் செயல்படுத்த முடியுமா? முயன்றால் முடியும். அதற்கு தேவையான அருளை வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற மன்றாடுவோம்.வாரீர்!

வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரை ஒருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. இந்தக் கொலைவெறியால், அனாதைகளின்
எண்ணிக்கையும் , கைம்பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்கு கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு, ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கர்களை தன் மனதார பாராட்டி வாழ்த்துகிறார். எனெனில் அவர்கள் திருத்தூதரை இனிதே வரவேற்று, மகிழ்வோடு இறைவார்த்தைகளை ஏற்று கொண்டு, புனித வாழ்க்கை வாழ்வதையும், மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பதைப் பற்றியும், இயேசுவின் வருகைக்காய் காத்திருப்பதைப் பற்றியும் மகிழ்ந்து பாராட்டியதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.



 *பதிலுரைப்பாடல்*
பல்லவி: எனது ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்
பதிலுரைப்பாடல். திபா. 18: 1-2,2-3,46.50

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர். பல்லவி

என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன. என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப் பட்டேன். பல்லவி
ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக! தாம் ஏற் படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர், தாம் திருப் பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்”  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. என் ஆற்றலாகிய தந்தையே இறைவா! உமது திருச்சபையிலுள்ள திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரையுள்ள நாங்கள் அனைவரும், எம் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் எம் ஆண்டவராகிய உம்மையும், எம் அயலாரையும் அன்புச் செய்யவும், அன்பு, இரக்கம், நற்பண்புகள் ஆகியவற்றோடு வாழவும், வளரவும் வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2 போற்றுதலுகுரிய ஆண்டவரே எம் இறைவா! பல்வேறு கருவிகள் மூலம் தொடர்புகளை வலுப்படுத்தும் வர்த்தக உலகம், தொடர்புச் சாதன உலகம், எம்மைச் சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில் நாங்கள் எமக்கடுத்திருக்கும் ஏழை, எளியவர், கைவிடப்பட்டோர், அனாதைகள், விதவைகள் ஆகியோர் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவிடும் நல்மனதினைத் தர வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. ஒரே கடவுளும் எங்கள் அன்புத் தந்தையுமாகிய எம் இறைவா! உமது அன்புக்கட்டளையைக் கடைப்பிடிப்பதே எங்கள் வாழ்வுக்கு வழி என்பதை உணர்ந்து உமது கட்டளைகளைக் கடைபிடித்து வாழும் தாராளமான மனத்தை எங்கள் இளையோர்களுக்குத் தந்து அதன் மூலம் அவர்கள் வாழ்வுச் சிறப்புற, உமது அன்பின் சாட்சிகளாய் திகழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வானகக் கொடைகளை வழங்கிவரும் எம் இறைவா! எம் நாட்டில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலில் எம்மை ஆளும் தலைவர்கள் உமது அன்பின் கட்டளைகளை ஏற்று, எங்களின் அடிப்படை உரிமைகள், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் நாட்டையும், எங்கள் மக்களையும் வழி நடத்த தூயஆவியின் வழியாக ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


Wednesday, October 18, 2017

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 22.10.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

 

எசாயா 45:1,4-6
தெசலோனிக்கர் 1: 1-5அ
மத்தேயு 22:15-21



 *முன்னுரை*


அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான் உலகம் சிறிது சிறிதாக நரகமாக மாறி வருகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

“சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ் பெற்ற வரிகளை இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியத்தைத் தாண்டி, கிறிஸ்தவ மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய அந்தப் புகழ் மிக்கக் கூற்றையும், அவர் அப்படிச் சொன்ன சம்பவத்தின் பின்னணியையும், இன்றைய ஞாயிறு சிந்திக்க அழைக்கின்றது.

மதமும் அரசியலும் கலந்த அன்றைய வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன? அதற்கான பதிலை இன்றைய திருப்பலியில் தேடுவோம்.வாரீர்!



வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


தன் ஊழியன் யாக்கோபை முன்னிட்டு  சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்.   பெயர் சொல்லி அமைத்துள்ளார். என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்குவேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை என்று கடவுள் தம் இதயத்திற்கு இனிய இஸ்ரயேல் மக்களுக்கு தன் அன்பையும், அவரின் உடனிருப்பையும் அறிவித்ததை பற்றி இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*

கடவுளோடு மானிடன் கொண்டுள்ள உறவில் தான், நமது குறிக்கோளாகிய விண்ணரசில் நுழைய முடியும். இதைத் தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தூயஆவியின் துணையிருந்தால் ஒளியின் மக்களாக வாழ முடியும். அதற்கு  இறைவனின் உடனிருப்பு தேவை என்கிறார். இறைஅன்பில் மலரும் செபவாழ்வு, பிறர் அன்புப் பணிக்கு உறுதி தருகின்றது. பிறரன்பு இல்லாமல் இறையன்பு வாழ்வில் நிறைவு இருக்காது என்று கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

 *பதிலுரைப்பாடல்*

பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
பதிலுரைப்பாடல். திபா. 96: 1, 3-5, 7-10
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள். அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி
ஏனெனில், ஆண்டவர் மாட்சி மிக்கவர். பெரிதும் போற்றத் தக்கவர். தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். பல்லவி
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள். ஆண்டவரே ஆட்சி செய்கின்றார். அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி 



*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்  அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.உமது பேரன்பால் உலகை நிறைத்துள்ள எம் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் இறையச்சம், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளை தங்கள் பணிவாழ்வில் உள்ளடக்கி இறையன்பிலும், பிறரன்பிலும் சிறந்து விளங்கிட தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்திடவும், இயேசுவின் உடனிருப்பை மனதில் கொண்டு இறைபணிகளைச் செய்திட உமதருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. எங்கள் வாழ்நாளை எல்லாம் நலன்களால் நிறைவு செய்கின்ற எம் இறைவா! எம் குடும்பங்களில் இறையன்பும், பிறரன்பும் நிறைந்திடவும், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுப்பதால் இல்லங்களிலும், மனங்களிலும் அன்பும் அமைதியையும் நிறைவாய் பெற்றிடவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்கள் கற்பாறையும், மீட்பருமான ஆண்டவரே! எம் இறைவா! எம்மை ஆளும் தலைவர்கள் செலுத்தும் அன்பானது நீதி கலந்த அன்பாக , நீதியை நிலைநாட்டும் அன்பாக அமைந்திடவும், சமயம், சாதி, இனம் கடந்து அனைவருக்கும் அரசின் நீதியும், உதவியும் கிடைத்திடவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய எம் இறைவா! அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. இதனை உணர்ந்து எம் இளையோர்கள் இனிவரும் காலங்களில் தங்களின் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புடன் மாறி அமைத்திட தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.







Tuesday, October 10, 2017

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 15.10.2017


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

எசாயா 25: 6-10
பிலிப்பியர் 4: 12-14, 19-20
மத்தேயு 22: 1-14

 *முன்னுரை*


அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 28ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
வாழ்வில் நமக்கு வந்துள்ள அழைப்புக்கள், அந்த அழைப்புக்களுடன் நமக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் எத்தனை, எத்தனை... இந்த  அழைப்புக்களையும் வாய்ப்புக்களையும் ஏற்க மறுத்து, நாம் கூறிய சாக்கு போக்குகள் எத்தனை, எத்தனை... இவைகளைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இந்த அழைப்பை ஏற்போமா?
விருந்துண்ண அழைக்கும் இறைவன்/ அழைப்பை ஏற்க மறுக்கும் நாம் / ஆகியவை இன்றைய வாசகங்கள் வழியே நமக்குத் தரப்பட்டுள்ள மையக் கருத்துக்கள். “வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம்” என்று எசாயா குறிப்பிடும் இந்த ஒரு பானத்தை உருவாக்க நேரமும், கவனமும் தேவை. நல்ல சுவையான திராட்சை இரசத்தை விருந்து நேரத்தில் பரிமாறுவதே ஒரு பெருமை. இந்தப் பெருமை பறிபோய்விடுமோ என்ற கவலையில் அன்னை மரியா கானாவூர் திருமணத்தின்போது இயேசுவை அணுகிய அந்த சம்பவம் நமக்கு நினைவிற்கு வருகிறது அல்லவா!
இறைவன் தரும் இந்த அழைப்பைவிட நம் தனிப்பட்ட, தினசரி வாழ்வே பெரிது என்று எத்தனை முறை நாம் வாழ்ந்திருக்கிறோம்? அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை எத்தனை முறை கொன்று குழிதோண்டி புதைத்திருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றும், இனி வரும் நாட்களிலும் பதில்கள் தேடுவது நமக்கு மீட்பைத் தரும். அதற்காக சிறப்பாக இத் திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.

*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


இறைவாக்கினர் எசாயா இறைவன் தரும் இந்த விருந்தை விவரிக்கும்போது, முதலில் அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், இவை வெறும் உணவுப் பொருட்களின் பட்டியலைப் போல் தெரிகிறது. ஆனால், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்து வந்த அடிமை வாழ்வை நினைத்துப் பார்த்தால், இந்தப் பட்டியல் அவர்கள் ஏங்கித் தவித்த ஒரு விடுதலை வாழ்வின் அடையாளங்கள் என்பது புரியும். ஒவ்வொரு நாளும் ஒரு துண்டு ரொட்டிக்காக போராட வேண்டியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு  இறைவன் தரும் ஒரு விருந்தைப் பற்றி இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் பிலிப்பியர்க்கு எழுதிய கடைசி மடலை எழுதி முடிக்கும் முன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரைக் கூறுகிறார்.  வறுமையிலும் வளமையிலும் வாழ பழகிக் கொள்ள அழைக்கின்றார். இறைஆசீர் கூறி அவர் முடிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு நாம் வாழ்க்கை முறைகளை மாற்றிடுவோம்.

*பதிலுரைப்பாடல்*

திபா 23: 1-3. 3b-4. 5. 6
பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி
2. தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி
3 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி
4 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! . அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. எங்கள் திருஅவையின் நாயகனே! எம் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் நீர் தரும் விருந்திற்குத் தகுதியானவர்களாகத் தங்களேயே தயாரித்துக் கொள்ளவும், எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் நிலைமாறாது உமது சாட்சிகளாய் வாழ தூயஆவியின் கொடைகளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. எங்கள் குடும்பங்களின் நாயகனே! எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் வறுமையிலும், வளமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும் நேரிய வழியில் நடந்திவும், தன்னலம் துறந்துப் பிறர் நலம் காணும் நல்மனம் படைத்தவராய் வாழவும், என்றும் உமது உன்னதச் சீடர்களாய் உலகெங்கும் வலம் வரவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்கள் வளமையின் நாயகனே! எம் இறைவா! தமிழகம் எங்கும் மக்கள் டெங்கு காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்சுகத்தையும், போதிய மருத்துவ வசதிகள் பெறவும், நாங்கள் அனைவரும் நல்ல சமுதாய உணர்வுடன் சுற்றுசூழலைப் பேணிக்காக்கவும் எங்கள் ஆண்டவரும், மருத்துவருமானக் கிறிஸ்துவின் அருளால் நலமடைய அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் நாயகனே! எம் இறைவா! மன்னிப்பதால் மன்னிப்பைப் பெறுகிறோம், அன்புச் செய்வதால் அன்பு செய்யப்படுகிறோம் என்பதனை உணர்ந்து எம் அடுத்திருபவர்களை மன்னிப்பதிலும், நட்புப் பாராட்டுவதிலும் அசிசியாரைப்போல் அன்பின் சாட்சிகளாய் இவ்வுலகில் வாழ்ந்து நிலைவாழ்வைப் பெற்று கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Tuesday, October 3, 2017

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 08.10.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

எசாயா 5: 1-7
பிலிப்பியர் 4: 6-9
மத்தேயு 21: 33-43

 *முன்னுரை*


அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 27ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
"இறையாட்சிக்கு யார் அதிக கனிகளைக் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே இறையாட்சிக் கிடைக்கும்" என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் தன் தோட்டத்தை முழுமையாக நம்பிப் பணியாட்களிடம் ஒப்படைப்பது போல இறைவனும் நம்மீது முழுநம்பிக்கை வைத்து இறையரசுப் பணியை ஒப்படைத்துள்ளார். அவர்கள் வேலைச் செய்ய வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதுபோல இறையரசுப் பணியில் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நம் திறமைகளையும் படைப்புத் தன்மைகளையும் வெளிக்கொணர இறைவன் வாய்ப்புக் கொடுக்கிறார். அதை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? எனச் சிந்திக்க இயேசு இன்று நம்மை அழைக்கின்றார்.
கடவுள் தன் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார். மனிதனோ தனது சுயநலத்தால் பூமியைப் பாழ்படுத்தினான். உறவுகளில் பிளவு ஏற்படுத்தினான். மனிதத்தைச் சிதைத்தான். ஆனாலும் வாழ்வதற்குப் பல வாய்ப்புகள் கொடுத்தார். கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். எனவே கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி உறவில் நிலைத்து நன்று வாழவும் நற்கனித் தரும் மனிதர்களாய் வாழ வரமருள வேண்டி இத்திருப்பலியில் இறைவனை மன்றடுவோம்.

வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களைத் திராட்சைத் தோட்டத்திற்கு ஒப்பிடுகிறார் இறைவாக்கினர் எசாயா. எதிர்பார்த்துப் பலனைத் தராமல் கடவுளின் திட்டத்திற்கு எதிராக அநீதியும், இரத்தப்பழியும் விளைந்தது. இஸ்ரயேல் மக்களின் திட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டாலும் கடவுள் அவர்களைக் கைவிடவில்லை. அவர்களை மீட்க மெசியாவை அனுப்பினார். கடவுளின் பேரிரக்கத்தை எண்ணி இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கூறுவது போல் பயனுள்ளவர்களாய் மாற, உண்மை எதுவோ, நீதி எதுவோ, இனியது எதுவோ எதுவெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ அவற்றை மனதில் கொண்டு நன்றியோடு கூடிய இறைவேண்டல் செய்ய நமக்கு அறிவுத்துகின்ற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸரயேல் குடும்பத்தாரே.
பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9
எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.; பல்லவி
பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.பல்லவி

படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். . அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! எம் திருஅவையை இந்நாள் வரை எல்லாவித இக்கட்டுகள், இடையூறுகள், பிரச்சினைகள், கட்சி மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட்டு உம் விண்ணக வாழ்வைச் சொந்தமாக்கிக் கொள்ளத் திருஅவையின் அனைத்து நல்மேய்ப்பர்களுக்கும் தூயஆவியின் கொடைகளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் வார்த்தையால் மட்டுமல்ல, செயலாலும் உமது திருவுளத்தை நிறைவேற்றி வாழவும், சிறப்பாக, ஏழைகள் மீது அக்கறை கொண்டு, அவர்களது நல்வாழ்வுக்காக உழைக்கவும் இவ்வாறு எங்கள் வாழ்வு பிறர்க்கு எடுத்துக்காட்டாக அமையவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. அன்பின் ஊற்றாகிய எம் இறைவா! கிறிஸ்துவின் வார்த்தைகளைச் செவிக்கு உணவாக உட்கொண்ட நாங்கள் மேன்மேலும் அவராகவே மாறச் செய்தருளும். எங்கள் வாழ்வில் எல்லாச் சூழ்நிலைகளிலும், சிறப்பாக எங்களது குடும்ப வாழ்க்கையிலும், கிறிஸ்துவின் மனநிலையை நாங்கள் எமதாக்கிக் கொண்டு ஒருவரையொருவர் ஏற்று, ஒன்றிணைந்து உமதருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் ஊற்றாகிய எம் இறைவா! ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்த இயேசுவைப் போன்று எம் நாட்டுத் தலைவர்களும் எம் இளையோர்களும் ஏழை, எளியவர்கள், நோயாளிகள், கைவிடப்பட்டோருக்குத் தாராள உதவி செய்ய முன்வரவும் அவர்களின் வாழ்வாதாரங்கள் உணர்ந்திவும், நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.






www.anbinmadal.org

Thursday, September 28, 2017

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு 01.10.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

எசேக்கியேல் 18: 25-28
பிலிப்பியர் 2 :1-11
மத்தேயு 21: 28-32

 *முன்னுரை*


அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 26ஆம் ஞாயிறுத் திருப்பலியில் செயல்வீரராய் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
வாய்ச்சொல் வீரராக நாம் வாழாமல் நம் சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடின்றி வாழ வேண்டும். இதுதான் கடவுளுக்குப் பிடித்த வாழ்க்கை நெறிமுறை என நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க இன்றைய அருள்வாக்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவனின் இரக்கத்தின் மீத நம்பிக்கை வைக்கம் எந்தப் பாவியையும் இறைவன் புறக்கணிப்பதில்லை. இறைவன் ஒருபோதும் பாவி சாக வேண்டும் என்று விரும்புவதுமில்லை.
இயேசுவின் சீடர்களாக வாழ்வோம் என்ற முடிவு எடுத்துவிட்டோமென்றால் என்ன நிலை வந்தாலும் இறுதிவரை இயேசுவின் சீடராக வாழ்வதில் நிலைத்து நிற்க வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமேயொழிய வேற்றுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி கடவுள் இரக்கத்தின் கடவுளாகவே வெளிப்படுத்தப்படுகிறார். இந்த உண்மை நாம் மனம் திரும்பத் தூண்டுகோலாக அமைய வேண்டும்
தீய வாழ்வை விலக்கி, மனம் மாறி நல்வாழ்வு வாழ வந்த சக்கேயு, விபச்சாரப்பெண், ஊதாரி மகனைப் போல நாமும் மனம்மாறி இறையரசின் பிள்ளைகளாக வாழ இத்திருப்பலியில் இறைவனை மன்றடுவோம்.

வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


இன்றைய முதல் வாசகம் மனமாற்றத்தை எடுத்துரைக்கின்றது. இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு உண்மையாக இல்லாததால் அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்பட்டனர். தம் தூதுவர்களாகப் பல இறைவாக்கினர்களை அவர்களிடம் அனுப்பினார். யாவேயின் கட்டளைப்படி எசேக்கியேல் இறைவாக்கினர். இஸ்ரயேல் மக்களிடம் சென்று, அவர்கள் தங்கள் தவறான வழிகளை விட்டுவிட்டு இறைவனிடம் மனம் திரும்பி வரவேண்டும் என அறிவுறுத்துகிறார். இருப்பினும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுடைய வார்த்தைக் கேட்டு அவருடைய வழியில் செல்ல வில்லை. தமது வார்த்தைக் கேட்காத இஸ்ரயேல் மக்களைக் கடவுள் அழிக்கவில்லை; மாறாக, அவர்களிடம் மிகுந்த பொறுமையைக் காட்டினார் என்று மனமாற்றத்திற்கு அழைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


.

*இரண்டாம் வாசக முன்னுரை*

விண்ணிலிருந்து இம்மண்ணுக்கு வந்த மாபரன் இயேசு நம்மை மீட்க வந்தார். கடவுள் நிலையில் இருந்த அவர் மனுவுரு கொண்டு இம்மண்ணுக்கு வந்து மானிட பாவம் போக்க சிலுவை மரத்தில் உயிர் துறந்தார். இவையனைத்தையும் இயேசு பிரதிபலன் எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை. அவர் தொடக்கத்திலேயே கடவுள் தன்மையில் விளங்கியவர். எனவே தான் நாமும் நமது வாழ்வை, நமது பணியை எதையும் எதிர்பார்த்துச் செய்யக்கூடாது. நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும், மன மகிழ்ச்சியுடன் நான் கடவுளின் பிள்ளை, அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளை. எனவே, நான் என் பணியை எந்தவிதப் பலனையும் எதிர்பாராமல் செய்வேன் என்ற மனநிலை நம்மில் உருவாக வேண்டும் என இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது. கவனமுடன் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*


பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்
பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; பல்லவி
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. இரக்கத்தையும், பேரன்பையும் தன்னகத்தே கொண்ட எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் எதையும் எதிர்பார்க்காத இயேசுகிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டு தங்கள் வாழ்விலும், ஏற்றப் பணிகளிலும் சிறந்த விளங்க தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம் குற்றங்களையும், குறைகளையும் நினையாத எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் தத்தம் பணிகளை செவ்வனே செய்யவும், அதன்மூலம் தம் வாழ்வின் நிறைவை மகிழ்வாய் பெற்று உமது சாட்சிகளால் அனைவரையும் அன்புடனும் பாசத்துடனும் வாழ நடத்த தேவையான இரக்கத்தையும் பொறுமையையும் பெற்றிட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்பு கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! அனைத்துப் பணியாளர்களும் தங்களுக்குரிய மதிப்பையும், உரிமைகள் பாதுகாப்பையும் பெறும்படியாகவும், பணிவாய்ப்பு தேடுவோர் பொது நன்மைக்குத் தங்களது பங்களிப்பை வழங்கும் வாய்ப்புப் பெறும்படியாகவும் வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org

Wednesday, September 20, 2017

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு 24.09.2017

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு  24.09.2017





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

 

எசாயா 55 6-9
பிலிப்பியர் 1 20-24,27
மத்தேயு 20 1-6

 *முன்னுரை*


அன்புடையீர்,   
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் 24ம் ஞாயிறுத் திருப்பலியில் இறைவனின் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் அறிந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சியான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. பாரம்பரியம் என்ற பெயரில் சமுதாயம் கொண்டிருந்த தவறான எண்ணங்களைப் புரட்டிப் போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் ‘புரட்டிப் போடுதல்’ நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலைச் செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது.
அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அத்தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அனைவருக்கும் நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராளக் குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால்.
கடவுள் தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது... இறுதியில் வந்தவர்களுக்கும் நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளைச் செய்யும்போது... நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?
இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராளக் குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவைகளைப் பற்றி நாம் எண்ணிப் பார்த்து இத்திருப்பலியில் இறைவனிடம் அவரது அன்பையும் ,இரக்கத்தையும் மன்றாடுவோம்.


 

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


இன்றைய முதல் வாசகம் இறைவார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கின்றது. புற இனத்து அரசனின் ஆணையின்படி மக்கள் எருசலேமிற்குப் போவார்கள். எனவே, மக்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தப்பட்ட இறைவார்த்தைக்குச் செவிமடுக்க வேண்டும். கடவுளுடைய ஞானத்தையும், நோக்கத்தையும், மனிதப் புத்தியைக் கொண்டு வரையறுக்க முடியாது. எனவே, நாடு கடத்தப்பட்ட மக்கள் இறைவனின் தாராள மனப்பான்மையைக் குறித்துக் கேள்வி கேட்கக்கூடாது. கடவுள் யாருக்கு என்ன ஆசீர்வாதம் கொடுக்க வேண்டுமோ அதை அவர்தான் முடிவு எடுப்பார். எனவே, கடவளின் வழிகள் மனிதப் புத்தியால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. எசாயாவின் ஆறுதலின் நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.



.

*இரண்டாம் வாசக முன்னுரை*


தூய பவுல் பிலிப்பியர் சமூகத்திற்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்துவில் மகிழ்ச்சியுற வலியுறுத்துகின்றார். தான் எவ்வாறு கிறிஸ்துவைப் பின்பற்றினாரோ, அதேபோல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்ப முன் வர வேண்டும். கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பதே நமது வாழ்வின் சட்டமாகக் கொள்ள வேண்டும். தனது நற்செய்திப் பரப்புதலின் வழியாக ஒருவன் கிறிஸ்துவோடு ஒன்றித்து வாழ முடியும். எந்த ஒரு செயலும் இந்தக் கிறிஸ்துவுடன் கூடிய ஒன்றிப்பைப் பாதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறார். எனவே, தான் பவுலடியார், வாழ்வு என்பது கிறிஸ்துவே எனக் கோடிட்டுக் காட்டும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.  


*பதிலுரைப்பாடல்*
பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்
திபா 145: 2-3. 8-9. 17-18
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். ..அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. பெரிதும் போற்றுதலுக்கு உரிய அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே! என்பதனைத் தங்கள் மனங்களில் நிலைநிறுத்தி, இயேசுவின் நற்செய்திக்கு ஏற்பப் பணிகள் செய்து தம் வாழ்வை உமக்காக அர்பணிக்கத் தேவையான அன்பு, நீதி, தாராளக் குணம் ஆகியவற்றை நிறைவாய் பெற்ற தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமும் கனிவும் நிறைந்த அன்புத் தந்தையே எம் இறைவா! எம் குடும்பங்களில் அனைவரும் “உமது எண்ணங்கள் வேறு! எங்கள் எண்ணங்கள் வேறு” என்பதைத் தெளிவாய் உணர்ந்து, உமது எதிராய் முணுமுணுக்காமல் உமது உயரிய அன்பையும், நீதியையும் உணர்ந்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்கள் வானகத்தந்தையே, எம் இறைவா! உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களாலும், பூமி அதிர்ச்சியலும் மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அரசர்கெல்லாம் அரசரான எம் இறைவா எம் நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதாரச் சீர்கேடுகள் ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதல் இவற்றிலிருந்து வேறுபட்டுப் புதிய சிந்தனைகளும் தூய ஆவியின் வழி நடத்துதால், நல்ல வழியில் அழைத்துச் செல்லும் தன்னலமற்ற தலைவர்களை உருவாக்கித் தந்திட வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org