தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்:
யோசுவா 5:9,10-12
2 கொரிந்தியர் 5:17-21
லூக்கா 15:1-3, 11-32
திருப்பலி முன்னுரை:
இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுத் திருப்பலியைக் கொண்டாட வந்துள்ள அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
முதல் வாசகத்தில் மகிழ்ச்சி / பாஸ்காக் கொண்டாட்டமாகவும், இரண்டாம் வாசகத்தில் ஒப்புரவாகவும், / நற்செய்தி வாசகத்தில் இல்லம் திரும்புவதாகவும் / முன்வைக்கப்பட்டுள்ளது. என்னை நோக்கி நான் திரும்பினாலே, / இறைவனை நோக்கிய, / பிறரை நோக்கிய திருப்பம் சாத்தியமாகிவிடும். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு அன்புடன், நட்புடனும் வாழ முற்படும் போதுதான் நாம் நம் மனமாற்றத்தின் நிறைவைக் காண்கிறோம்.
இழந்த உறவை மீண்டும் சரிசெய்யவே இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். காரசாரமான நம் வார்த்தைகள் எத்தனை உறவுகளை முறித்திருக்கின்றன எனச் சிந்திப்போம். முறிந்த உறவுகள் மீண்டும் இணையும்போது அங்கே இறைவனின் பிரசன்னமும் தோன்றுகிறது. ஏனென்றால் அன்பு எங்கே உள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் என்பதை உணர்ந்திடுவோம். இந்தத் தவக்காலம் நம்மில் வீழ்ந்துக் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மிலே மனமாற்றம் காணவும், அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் நல்ல உள்ளத்தை நமக்குத் தர வேண்டியும் இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டை விட்டுப் புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள், யோசுவாவைப் படைத்தலைவராகக் கொண்டு யோர்தானைக் கடக்கின்றனர். பாலும். தேனும் பொழியும் கானான் நாட்டில் அவர்கள் கால் பதித்தவுடன் கில்காலில், எரிகோ சமவெளியில் இஸ்ரயேலர் கொண்டாடும் இரண்டாம் பாஸ்காத் தான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் கொண்டாடும் முதல் பாஸ்கா. இந்த மகிழ்ச்சியில் நாம் இன்றைய முதல் வாசகத்தை வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப் பாடல்:
திபா 34: 1-2. 3-4. 5-6
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். –பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
திருத்தூதர் பணி என்பது ஒப்புரவாக்கும் பணி என்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு மனம் திறக்கும் பவுலடியார், அந்த ஒப்புரவு என்றால் என்ன? அந்த ஒப்புரவுப் பணியில் மக்கள் மற்றும் தன் பங்கேற்பு என்ன? என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். 'தடைபட்ட உறவு மீண்டும் சரிசெய்யப்படுவதே ஒப்புரவு. கடவுள் தன் கொடையாக ஒப்புரவை நமக்கு வழங்கினாலும், அந்த ஒப்புரவிற்கு நம்மையே நாம்தான் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். ஒப்புரவை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திருத்தூதர் கூறும் இந்த அறிவுரையைச் சீரியமுறையில் மனதில் பதிவு செய்வோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. கிறிஸ்துவின் வாயிலாக, நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கிய கடவுள், அதே ஒப்புரவாக்கும் திருப்பணியைத் தமது திருஅவை மூலமாகத் தொரடர்கிறார். கிறிஸ்துவின் தூதுவர்களாய் விளங்கும் திருத்தந்தை உள்ளிட்ட அருள் பணியாளர்கள் அனைவரும், தங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள ஒப்புரவாக்கும் திருப்பணியைக் குறையின்றிச் செய்யவும், இறைமக்கள் யாவரும், நிறைவாழ்வை நோக்கிய எதிர்நோக்கின் திருப்பயணத்தை, ஒப்புரவின் காலமாகிய இந்தத் தவக்காலத்தில், சிறப்பாக மேற்கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடியதை விவரிக்கும் முதல் வாசகம் கூறுவதுபோல, மாந்தர் அனைவரும், நிலத்தின் விளைச்சலை உண்டு மகிழவும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெற்று நிறைவான வாழ்வு வாழவும், எம்வீட்டிலும், நாட்டிலும், அகில உலகிலும், அமைதி நிலவவும், எல்லாரும் எல்லாம் பெற்று இனிதாக வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்” என்கிற இன்றைய திருப்பாடல் வரிகளின்படி, துயருறுவோரின் துயர் நீங்கவும், வறியோரின் வறுமை விலகவும், பிணியுற்றோரின் பிணி நீங்கவும், நோயுற்றோர் நலம் பெறவும், தேவையில் இருப்போரின் தேவைகள், உம்மால் சந்திக்கப்படவும், யார் யாரெல்லாம் எதற்காக வேண்டுகிறார்களோ, அவை எல்லாம் நிறைவேற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை” என்கிற திருப்பாடல் வரிகள், இன்றைய நற்செய்தியில் வருகிற ஊதாரி மைந்தன் வாழ்விலே நிஜமானது போல, இங்கே கூடியுள்ள எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழவும், அப்படிப்பட்ட மறுவாழ்வு வாய்த்திட “எழுந்து என் தந்தையிடம் செல்வேன்” என்றுரைத்துச் செயல்படும் மனமாற்றத்தின் ஆவியை நாங்கள் பெற்றிட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Thank you
ReplyDelete