Tuesday, September 30, 2025

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:

அபாக்கூக்கு 1:2-3, 2:2-4
2திமோத்தேயு 1:6-8,13-14
லூக்கா 17:5-10

திருப்பலி முன்னுரை:

நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்திருக்கும் இறைஇயேசுவின் தரிசனம் நாடி  பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
திருப்பலி முன்னுரை.
இறை இயேசுவின்‌ அன்பு சீடர்களே, சீடத்திகளே ! இறைநம்பிக்கையும்‌ தன்னலமற்றச்‌ செயல்பாடுகளும்‌ சீடத்துவத்தின்‌ இரு கண்கள்‌ எனக்‌ கூறி ஆண்டின்‌ பொதுக்காலம்‌ 27 ஆம்‌ ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைநம்பிக்கையும்‌ செயல்பாடும்‌ ஒரு நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போலாகும்‌. இவை ஒன்றையொன்று நிறைவாக்குகின்றன. இறைநம்பிக்கை நிறைந்தவர்‌, வெறும்‌ நம்பிக்கையோடு நின்றுவிடாமல்‌, எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தன்‌ கடமையைச்‌ செய்கிறார்‌. துன்பத்திலும்‌ சோதனையிலும்‌ இறைப்பிரசன்னத்தை உணர முடியாத நாம்‌ சில வேளைகளில்‌ எங்கே இறைவா இருக்கின்றாய்‌ ? என்று இறைவனை நோக்கி எழுப்பும்‌ கூக்குரல்‌ வாழ்வின்‌ எதார்த்தம்‌. ஆனால்‌ நேர்மையுடையவரோ, தம்‌ நம்பிக்கையால்‌ வாழ்வடைவர்‌ என மொழியும்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌, நிகழ்காலத்‌ துன்பத்தைத்‌ தாண்டி நம்மை எதிர்நோக்கின்‌ திருப்பயணிகளாக வாழ அழைக்கிறது. இறைநம்பிக்கை நிறைந்த சாட்சிய வாழ்வு எத்துன்பத்தையும்‌ துணிவோடு சந்திக்கும்‌ ஆற்றல்‌ தருகிறது என ஓங்கி ஒலிக்கிறது இரண்டாம்‌ வாசகம்‌. கடுகளவு இறைநம்பிக்கையும்‌ மலையளவு காரியங்களைச் சாதிக்கும் சக்திமிக்கது என நற்செய்தி எடுத்துரைக்கிறது.

இறைநம்பிக்கை இறைவனின்‌ மாபெரும்‌ கொடை. அது தாழ்ச்சியோடு, பெயரும்‌ புகழும்‌ நாடாமல்‌, கடமையைச்‌ செய்யும்‌ செயல்பாட்டில்‌ வெளிப்படும்‌. அக்கொடை துன்பத்தில்‌ தளரா மனத்துடன்‌ வாழவும்‌, சோதனைகளில்‌ நேர்மையானவர்களாகவும்‌, தன்னடக்கத்துடன்‌ கடமையைச்‌ செய்யும்‌ சீடர்களாகளாகவும்‌ நம்மை மாற்றும்‌. அதற்கான அருளுக்காக இத்திருப்பலியில்‌ வேண்டுவோம்‌.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

யூதாவின்‌ இனத்தாரைப்‌ பிறவினத்தாராகிய கல்தேயர்‌ வழி இறைவன்‌ அடக்கியதைக்‌ கண்டு அபக்கூக்கு பொருமுகிறார்‌. இறைவன்‌ தரும்‌ பதிலோ, “ஆண்டவர்‌ மேல்‌ நம்பிக்கை வைப்பவன்‌ வாழ்வான்‌” (2: 4) என்பதாகும்‌. இன்றைய வாசகம்‌ அபக்கூக்குவின்‌ வினாவையும்‌ ஆண்டவரின்‌ விடையையும்‌ வெளிப்ப‌டுத்துகிறது. எனவே வாழ்க்கையில்‌ வெற்றிக்கு வழி கோல்வது எந்த ஒரு காரியத்திலும்‌ விசுவாசத்தோடு, நம்பிக்கைத்‌ திடனோடு ஈடுபடுவதாகும்‌. ஆண்டவரிடம்‌ விசுவாசம்‌ வைப்பது என்பது அவரிடம்‌ நம்மையே சரணடையச்‌ செய்வதாகும்‌ என்றுரைக்கும் இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
1. வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;  நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.   நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;  புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி
2. வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.  அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;  நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி
3. அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

தன்‌ “அன்பு மகன்‌ திமொத்தேயுவுக்கு", புனித பவுல்‌ கூறும்‌ அறிவுரைகள்‌ இன்றைய வாசகம். இன்று‌ சிறப்பாகத் திமொத்தேயு பெற்ற அருட்கொடைகளுக்கு அவர்‌ பிரமாணிக்கமாய்‌ இருக்கும்படி பவுல்‌ வேண்டுதல்‌ விடுக்கிறார்‌. சிறப்பாக நம்‌ எல்லோருக்கும்‌ அளிக்கப்பட்ட வரம்‌ அன்பு. இவ்‌அன்பு வரம்பற்றிக் கூறும்‌ பவுல்‌, “ஒருவருக்கொருவர்‌ அன்பின்‌ அடிமைகளாயிருங்கள்‌ ”என்பார்‌. இவ்‌அன்பு நம்‌ கிறிஸ்துவ வாழ்வின்‌ அடித்தளமாகவும்‌, அவ்வடித்தளத்தின்‌ மேல்‌ கட்டிய கட்டடமாகவும்‌, நம்‌ நினைவு, சொல்‌, செயல்களில்‌ வெளிப்படுகிறதா? என்பதை சோதித்துப் பார்க்க அழைக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. பணிக்குருத்துவத்துக்கான அழைப்பினைப் பெற்று, திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரும், பொதுகுருத்துவதில் பங்குபெறும் இறைமக்கள் யாவருமே, தங்களுக்குரிய கடமைகளைச் செய்யவும், எந்த நிலையில் இருந்தாலும், பெருமை பாராட்டாமல், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ என்கிற தாழ்ச்சிநிறை மனநிலையோடு வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கொடுமையை ஏன் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினை ஏன் காணச் செய்கின்றீர்?” என அபக்கூக்கு நூலில் விவரிக்கப்படும் சூழலில் தான் இன்றைய உலகும் சிக்கித் தவிக்கின்றது. போர் சூழல்கள் முற்றிலும் நீங்கவும், வன்முறை கலாச்சாரம் முடிவுக்கு வரவும், பேதமைகள், பிளவுகள் அறவே ஒழியவும் அமைதியின் அரசு உலகெங்கும் உதிக்கவும், ஆட்சி செய்வோரும், தலைமை பொறுப்புகளில் இருப்போரும், குடிமக்கள் நாங்களும், நாளுமே உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. யூபிலி ஆண்டினை கொண்டாடிவருகிற நாங்கள் அனைவரும், “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்” என்கிற முதல் வாசக கூற்றின்படி, இறை நம்பிக்கையில் வேரூன்றியவர்களாய், அன்புச் செயல்களில் திளைத்தவர்களாய், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகத் திகழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “கடவுள் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்” என்பதை உணர்ந்தவர்களாக, ஆண்டவருக்கு சான்றுபகர்வதிலும், நற்செய்தியின் பொருட்டுத் துன்புறுதலிலும் திடமாய் இருந்து, மறைப்பணியாற்றும் அனைவரையும், குறிப்பாக வேதபோதக நாடுகளிலும், வேதகலாபனைகள் நிறைந்த பகுதிகளிலும், நற்செய்தி பணியாற்றுவோரையும், நீர் தாமே, உமது உறுதி தரும் ஆவியால் நிரப்ப வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அற்புதங்களைக் காண இயலும் என்கிற நற்செய்தியை முழுமையாய் நம்பிடவும், துன்பச்சூழலிலும் உறுதியாய் இருந்திடவும், எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, September 21, 2025

பொதுக் காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு

 பொதுக் காலம் 26ஆம் ஞாயிறு 

(தமிழக விவிலிய ஞாயிறு)


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

ஆமோஸ் 6:1,3-7
1திமோத்தேயு 6:11-16
லூக்கா 16:19-31

திருப்பலி முன்னுரை

இறைவார்த்தையில் நம்பிக்கை கொள்ளவும், அதனை வாழ்வாக்கவும் பெயர் சொல்லி அழைக்கப்பட்டுள்ள பேரன்புமிகு சகோதரிகளே, சகோதரர்களே ! தமிழக விவிலிய ஞாயிறு நல்வாழ்த்துகள். உலகத் திரு அவை இந்த ஆண்டினை கிறிஸ்து பிறப்பின் 2025ஆம் ஆண்டு யூபிலியாக உவகை பொங்கக் கொண்டாடும் வேளையில் தமிழகத் திரு அவை இன்று விவிலிய ஞாயிறை எழுச்சியுடன் கொண்டாடுகின்றது. 'நான் உமது வார்த்தையில் நம்பிக்கை கொள்கிறேன்' என்று நாம் ஒவ்வொருவரும் அறிக்கையிடும் விதத்தில் மையக்கருத்து அமைந்துள்ளது. இது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆண்டாண்டு தோறும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இறைவாக்கு வாசிப்பு, பல சவால்களுக்கு மத்தியில் இறைவார்த்தையை வாழ்வாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாமே வியப்புக்குரிய விதத்தில் வளர்ந்துள்ளன என்றால் அது மிகையாகாது. 


இந்த உலகவாழ்வில் ஆடம்பரத்திலும், இன்பங்களிலும் செலவிடும்போது அடுத்திருப்பவரின் துன்பதுயரங்களில் பங்கு கொள்ள மனம் இல்லாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி வாழ்பவரின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார் இறைமகன் இயேசு.ஏழைகளிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் யூதர்களை யாவே கடவுள் கடிந்து கொண்டு அவர்களுக்கு நிகழப்போகும் அவலங்களை எடுத்துரைக்கின்றார். நிலை வாழ்வைப் பற்றிக்கொள்ள விசுவாச வாழ்வில் போராட்டம் நடத்திடத் திருத்தூதர் பவுலடிகளார் நம்மை அழைக்கின்றார்.

இச்சூழ்நிலையில் இந்த ஆண்டு இறைவார்த்தையை ஏற்று, நம்பி, வாழ்வாக்கி, பிறருக்கு உகந்த முறையில் வழங்கத் தமிழகத் திரு அவையின் திருவிவிலிய அருள்பணிக் குழுவும் நமது பங்குத் திரு அவையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளன என்பதை நாம் நன்கு அறிவோம். இம்முயற்சிகள் நிறைபலனைத் தந்து நம் வாழ்வு எல்லா நிலைகளிலும் பெரு வெற்றி காண இறையருள் துணைநிற்க வேண்டுமென்று இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.

முதல் வாசக முன்னுரை: 

தீயன செய்து பேரின்பம் கொள்வோர் அச்செயலினின்று விடுவிக்கப்படுவர். ஒருவர் தாம் செய்யும் அருவருப்புச்செயல் எதையும் நியாயப்படுத்த முடியாது. ஒருநாள் வரும்; அப்போது நேரியனவற்றைச் செய்பவரே நிறைமகிழ்வு கொள்வர் என்பதைச் சுட்டிக்காட்டும் இறைவாக்கினர் ஆமோசின் கருத்துகளை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
1. ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

2. ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

3. அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

திருத்தூதர் பவுலின் மனங்கவர்ந்த பணியாளராக விளங்கியவர் திமொத்தேயு. இவர் எபேசுத் திரு அவையின் ஆயரும் ஆவார். அவருக்கு ஆண்டவர் இயேசுவின் அரும்பண்புகளை பவுல் விளக்கிக் கூறுகிறார். அத்துடன் திமொத்தேயு கடைப்பிடிக்க வேண்டிய நம்பிக்கைச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் பவுல், திமொத்தேயுவின் சான்று வாழ்வு எவ்வளவு முதன்மையானது என்பதையும் இவ்வாசகத்தில் விளக்கிக் கூறுகிறார். உளம் திறந்து உவகையுடன் இவ்வாசகத்தைக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்” எனத் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பவுலடியார் அறிவுறுத்துகிறார்.  திரு அவைக்கான அழைப்பும், திருஅவையின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்குமான அழைப்பும் அதுவேயென உணர்ந்து, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகிய அனைவரோடும், பொதுநிலையினர் ஆகிய நாங்களும், நிலை வாழ்வு நோக்கிப் பயணிக்கும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர்” என்கிற இரண்டாம் வாசக கூற்றின் அடிப்படையில், உலகாளும் தலைவர்களுக்காகவும், எம்தேசத்தை ஆள்வோருக்காகவும் மன்றாடுகிறோம். அநீதியின் செயல்களை அறவே ஒழித்து, அமைதியின் பாதையைத் தேர்வு செய்து, மாந்தர் அனைவருக்கும், குறிப்பாக எளியோருக்கும், வறியோருக்கும், நலிவுற்றோருக்கும் நலம் தருகிற நல்லாட்சி நல்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வறியோரை நசுக்கி, எளியோரை ஒடுக்கி, அநீதி புரிபவர்களின் அழிவு நிச்சயம் என்றுரைக்கும் முதல் வாசகம் உணர்த்துகிற உண்மையை உணர்ந்து, மக்கள் அனைவரும், சிறப்பாக அதிகாரத்தில் இருப்போரும், சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருப்போரும், பணம், அந்தஸ்து, சாதி, மதம், பாலினம், பிறப்புப் பின்புலம் ஆகிய காரணங்களைக் காட்டி எவரையும் கீழ்மைப் படுத்தாமல், அனைவரையும் மாண்புடன் நடத்தும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கிறித்தவ அழைப்புப் பெற்றுள்ள நாங்கள் அனைவரும், பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடவும், நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடவும், குறைச் சொல்லுக்கு இடந்தராமல், விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடவும், உரிய காலத்தில் நிலை வாழ்வைப் பற்றிக்-கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      
 
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இன்றைய நற்செய்தி உவமையில் வருகிற செல்வரிடம் இருந்த 'கண்டுகொள்ளாமை' 'பிறர் மீது அக்கறையின்மை' 'நான் உண்டு என் நலன் உண்டு' என்கிற மனநிலையோடு வாழாமல், இயன்றவரை பிறருக்கு உதவும் அக்கறையுடனும், அன்புடனும் வாழத் தேவையான, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, September 15, 2025

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 25 ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

ஆமோஸ் 8:4-7
1திமோத்தேயு 2:1-8
லூக்கா 16:1-13

திருப்பலி முன்னுரை

முன்மதியுடன் வாழ்ந்து, இறைவார்த்தைக்குச் சான்று பகரக் காத்திருக்கும் அன்புச் சகோதரிகளே, சகோதரர்களே நல்வாழ்த்துகள். விவிலிய மாதத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று நாம் இறைவார்த்தையில் எவ்வாறு நம்பிக்கை வைப்பது, அது விளக்கும் திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது, அதன் வழியாக நாம் பெறும் நிலைவாழ்வை எப்படி முன்மதி அதாவது விவேகத்துடன் வாழ்வது என்பனவற்றைச் சிந்திக்கவும் அவற்றைச் சீரிய முறையில் செயல்படுத்தவும் அழைக்கப்படுகின்றோம். அதற்கு உதவியாக இறைவாக்கினர் ஆமோசும் திருத்தூதர் பவுலும் தங்கள் வழிகாட்டுதலை வழங்குகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக நற்செய்தி, முன்மதியுடன் செயல்பட்ட ஒரு வீட்டுப் பொறுப்பாளரின் புத்திக் கூர்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 
நிரந்தரமற்ற இவ்வுலகப் பொருள்களையும், நிலைவாழ்வுக்குரிய திடமான நம்பிக்கை, ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்தப் படுகிறது. இந்த நாளில் இறைவனுக்குப் பணிசெய்யும் மக்களாக மாறிடப் பொறுப்புள்ள பணியாளராக வாழ்ந்திட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம். நம்பதக்கவராய், பெறுப்புள்ள பணியாளராய் வாழ்ந்திடுவோம்...

முதல் வாசக முன்னுரை: 

நீதியின் இறைவாக்கினர் எனப் போற்றப்படும் ஆமோஸ் தாம் கண்ட நீதியற்ற, முன்மதியற்ற செயல்கள் பலவற்றை இவ்வாசகத்தில் எடுத்துக்கூறி அவற்றை இறைவன் ஒருபோதும் மறக்கமாட்டாரென எச்சரிக்கிறார்.
வறியோரை ஏமாற்றி அவர்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு, கள்ளத் தராசினைப் பயன்படுத்துவோர்க்கு எதிராக யாவே கடவுள் தனது கோபத்தைக் வெளிக்காட்டுகின்றார். எச்சரிக்கை விடுக்கின்றார். அதே நிலையில் தான் இன்றும் நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி, அடுத்தவரை ஏமாற்றுபவர்களுக்குக் கடவுளின் கோபத்தை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்: திபா 113:1-2, 4-6, 7-8

பல்லவி: ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி
 

மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி

ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

இறைப்பற்று, கண்ணியம், அமைதியான வாழ்வு ஆகியவை சமூகத்தின் அடித்தளம். அதில் வாழும் எல்லாருக்காகவும் இறைவனிடம் மன்றாடிப் பரிந்துரைத்து நன்றி கூறுதல் அவசியமானதாகும். எல்லா மனிதரும் உண்மையை உணர்ந்து மீட்புப் பெற இறைவேண்டல் தேவையெனத் திமொத்தேயுவுக்கு திருத்தூதர் பவுல் எடுத்துரைப்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எல்லா மனிதரும் மீட்புப் பெறவும், உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென விரும்புகிற, கடவுளின் கருவிகளாகத் திகழ்கிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகிய அனைவரோடும், பொதுநிலையினர் ஆகிய நாங்களும், இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழவும், அனைவரையும் இறையாட்சி நோக்கி அழைத்து வரவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரசர்களுக்காகவும், உயர் நிலையில் உள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள் என்கிற இரண்டாம் வாசக அறிவுறுத்தலின்படி, உலகாளும் தலைவர்களுக்காகவும், எம்தேசத்தை ஆள்வோருக்காகவும் மன்றாடுகிறோம். நீதியின் பாதையில் நிலைத்திருந்து, அனைவரையும் அரவணைத்துச் செல்லவும், அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போற்றிப் பேணவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வறியோரை நசுக்கி, ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களுடைய செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என ஆணையிட்டுக் கூறும் இறைவா! இவ்வுலகின் அனைத்து நிலைகளிலும் தலைவிரித்தாடும் அநீதியை எதிர்த்துப் போராடவும், ஏழைகளைத் தூசியிலிருந்து தூக்கி நிறுத்துகின்றவரும்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி-விடுகின்றவருமான உம்மைப் போலவே, நாங்களும் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வசதியாக வாழ்வதற்குத் தேவையான செல்வதைத் திரட்டுவதில் முனைப்பாய் இருக்கும் நாங்கள் எல்லோரும், நேரிய வழிகளில் பொருளீட்டவும், ஈட்டிய பொருளைக் கொண்டு, நிலையான உறைவிடங்களில் நண்பர்களைத் தேடிக்கொள்ளவும், ஒளியின் மக்களுக்குரிய முன்மதியோடு செயல்படவும் தேவையான அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்களும், நல்ல பணிகளில் அமர்த்தப்படவும், பணிபுரியும் இடங்களில், சிறியவற்றிலும், பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய், பொறுப்புடனும் திறமையுடனும் கடமையாற்றி, வாழ்வில் உயர்நிலையை அடையவும், எந்நாளும் நிறைமகிழ்வுடன் வாழவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org
Print Friendly and PDF

Monday, September 8, 2025

பொதுக்‌ காலம்‌ 24ஆம்‌ ஞாயிறு

 பொதுக்‌ காலம்‌ 24ஆம்‌ ஞாயிறு 
 (திருச்சிலுவை மாட்சி - விழா)

இன்றைய வாசகங்கள்

எண்ணிக்கை 21:4-9 
பிலிப்பியர்‌ 2:6-11 
யோவான்: 3:13-17

திருப்பலி முன்னுரை

நிலைவாழ்வின்‌ ஊற்றான திருச்சிலுவையில்‌ மாண்புக்குரிய சகோதரிகளை, சகோதரர்களே நல்வாழ்த்துகள்‌. விவிலிய மாதத்தின்‌ இரண்டாவது வாரத்தில்‌ “நான்‌ நிலைவாழ்வைப்‌ பெற வழிகாட்டும்‌ உம்‌ வார்த்தையில்‌ நம்பிக்கை கொள்கிறேன்‌” என்ற மையப்‌ பொருளில்‌ நடைபெறும்‌ இத்திருப்பலிக்‌ கொண்டாட்டத்தில்‌ பங்கேற்றுக்‌ கொண்டிருக்கிறோம்‌.

கடவுளின்‌ வார்த்தைகள்‌ ஒவ்வொன்றும்‌ நமக்கு நல்வாழ்வை வழங்கும்‌ ஆற்றல்‌ கொண்டவை. அதில்‌ ஒன்றுதான்‌ நிலைவாழ்வு. மனிதரின்‌ இறுதி இலக்கும்‌ நிலைவாழ்வு தான்‌. இந்த நிலைவாழ்வை ஆண்டவரும்‌ மீட்பரும்‌ நம்‌ அன்புச்‌ சகோதரருமான இயேசுவில்‌ நம்பிக்கை கொள்ளும்‌ எல்லாரும்‌ பெற்றுக்‌ கொள்வர்‌. இந்த நிலைவாழ்வை எல்லாரும்‌ பெற வேண்டும் என்பதற்காகவே தந்தையின்‌ திருவுளத்தின்‌ வெளிப்பாடாக இயேசு சிலுவையில்‌ தம்மையே கையளித்தார்‌. 

அதுவரை குற்றம்‌ செய்தோரின்‌ கொடிய தண்டனைக்‌ கருவியாக விளங்கிய சிலுவை, “திருச்சிலுவை' என்ற சிறப்புத்‌ தகுதியுடன்‌ மாட்சி பெற்றது. ஆம்‌. “சிலுவை எனது பெருமை' எனக்‌ கூறிய திருத்தூதர்‌ பவுலும்‌ தன்‌ வாழ்க்கையினால்‌ நிலைவாழ்வின்‌ சான்றாளராகத்‌ திகழ்ந்தார்‌. நாமும்‌ இறைவார்த்தை தரும்‌ உந்துதலால்‌ நிலைவாழ்வின்‌ கருவிகளாக வாழத் திருச்சிலுவையின் ஒளியில்‌ இறைவேண்டல்‌ செய்பவர்களாய்‌ இத்திருப்பலியில்‌ பங்கேற்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை:

பாம்பு கடியினால்‌ பரிதவித்துக்‌ கொண்டிருந்தோர்‌, உயர்த்தப்பட்ட வெண்கலப்‌ பாம்பைப்‌ பார்த்து நலம்‌ பெற்றனர்‌. அதுபோலச் சிலுவையில் தொங்கும்‌ இயேசுவைப்‌ பார்ப்போர்‌ நிலைவாழ்வை அடைவர்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்டும்‌ முதல்‌ வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)
பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.

என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். நீதிமொழிகள்மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். - பல்லவி

அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். - பல்லவி

ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. - பல்லவி

அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

கடவுள்‌ வடிவில்‌ உயர்நிலையில்‌ இருந்தவர்‌ இயேசு. அவர்‌ தம்மைச்‌ சிலுவைச்‌ சாவு மட்டும்‌ தாழ்த்தி, கீழ்ப்படிந்ததால்‌ கடவுள்‌ அவரை மிகவே உயர்த்தி மேன்மையுறச்‌ செய்தார்‌. கீழ்ப்படிவோருக்கு மிகச்‌ சிறந்த எடுத்துக்காட்டாக வழங்கப்படும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச்‌ செவிசாய்ப்போம்‌.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா… அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருச்சிலுவையின் மகிமையை கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திரு அவையும், அதன் தலைவராம் திருத்தந்தை லியோ, ஏனைய ஆயர்கள், குருகுலத்தார், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும், இயேசுவின் திருச்சிலுவையை ஆராதிப்பதோடு நின்றுவிடாமல், சிலுவையின் பாதையில் உறுதியுடன் பயணிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக விளங்கிட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இறைவன் அருளிய விடுதலை வாழ்வின் மேன்மையை உணராமல், அவருக்கு எதிராகப் பேசி, தம்மீது தண்டனையை வருவித்துக்கொண்ட இஸ்ராயேலரைப் போலவே, இறைவன் அருளும் அமைதியின் பாதையில் நடவாமல், சண்டை - சச்சரவுகள், போர் - போராட்டங்கள், வன்முறை - தீவீரவாதம் போன்ற அழிவின் பாதைகளைத் தேர்வுசெய்யும் உலகினை, நீர்தாமே நல்வழிக்கு அழைத்து வரவும், உலகத்தலைவர்களும், எம்நாட்டுத் தலைவர்களும், தம் பொறுப்புணர்ந்து செயல்படவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு, உலகின் மேல் அன்பு கூர்ந்த இறைத்தந்தையின் அன்பினை, உலக மக்கள் அனைவரும், சாதி, மத, இன பேதமின்றி உணரவும், கிறித்தவர்களாகிய நாங்கள் அந்த இறையன்பை பற்றுறுதியுடன் வெளிப்படுத்தும் மக்களாக விளங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தம்மையே வெறுமையாக்கி, கீழ்ப்படிந்து, தாழ்த்திக்கொண்டதனால் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடும் அளவிற்கு கடவுளால் உயர்த்தப்பட்டு, எப்பெயருக்கும் மேலான பெயர் அருளப்பட்ட இயேசுவைப் பின்பற்றி, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், தாழ்ச்சியை அணிந்தவர்களாகவும், துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்களாகவும் வாழ்ந்திட    வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
      
5. ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என நாவாலே அறிக்கையிடுவதோடு நில்லாமல், வாழ்வாலும் சான்று பகரவும், வாழ்வின் எல்லாச் சூழல்களிலும், சிலுவையைப் புறந்தள்ளாமலும், சிலுவையைக் கண்டு பயந்தொளியாமலும் வாழ, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, September 1, 2025

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானம் 9:13-19
பிலமோன் 1:9b-10,12-17

லூக்கா 14:25-33

திருப்பலி முன்னுரை:

இறைஞானத்தைத் தேடி இன்று ஆலயம் நுழைந்துள்ள இறைஇயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் நன்றியோடும், மகிழ்ச்சியோடும் பங்குக்கொள்ள அன்புடன் வரவேற்கின்றோம்.
சாலமோன் கடவுளிடம் முதன்மையாகக் கேட்ட ஞானமே! யூதர்களை ஆண்டுவழி நடத்த அவர் விரும்பியதுவும் அதுவே. இறைத்திட்டத்தை அறிந்து கொள்ளக் கடவுளிடம் ஞானத்தையும், தூயஆவியாரையும் பெற வேண்டும் என்கிறது முதல் வாசகம். அன்பு, மன்னிப்பு, அடுத்தவரை அன்புடன் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற உயரிய கிறிஸ்தவப் பண்புகளை இரண்டாம் வாசகம் எடுத்துக்கூறுகிறது.
இயேசுவின் சீடராய் மாறிட எல்லாவற்றையும் ஏன் தன் உயிரையும் விடத் தயாராக இருப்பவரே தன் சீடனாக இருக்க முடியும், தன் சிலுவையைச் சுமப்பவர்கள் மட்டுமே என் சீடராக இருக்க முடியும் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார் இயேசு. ஞானத்தைத் தேடுபவர்களாய், கிறிஸ்தவ மதிப்பீடுகளை ஏற்றவர்களாய், தன் துன்பங்களை முழுமனதுடன் ஏற்று இயேசுவின் சீடராய் வாழக்கூடிய நல்ல சூழலைத் தர வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஞானம், இறைவனால் அருளப்படும் அறிவு, அதன் செயலாற்றல் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறுகிறது சாலமோனின் ஞானம். ஞானம் ஒரு ஒழுக்க நெறியாக, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பாக எண்ணப்பட்டது. ஞானம் இஸ்ரயேல் மக்களிடையே தங்கி அவர்களை வழி நடத்தும் கருவியாகக் கருதப்பட்டது. "இறைவா இத்தகைய ஞானத்தை எனக்குத் தருவாயாக" என்று மன்றாடும் பாணியில் அமைந்துள்ளதே இன்றைய வாசகம்.சாலமோனுக்குச் சிறப்புப் பெற்றுத் தந்த ஞானத்தை நிறைவாய் நாமும் பெற்றிட இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்து இறைவனை வேண்டுவோம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

1. மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

2. வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி

3. எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

4. காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.  எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! - பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலிருந்தபோது கொலோசை நகர நண்பரான பிலமோன் என்பவருக்கு எழுதிய இக்கடிதத்தில் பிலமோனின் அடிமை ஒனேசிம் என்பவரை மன்னித்து அன்புடன் சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தி வருகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், இறைமக்களாகிய நாங்களும், உம்மைவிட மேலாக எதைக் கருதினாலும், உம சீடராய் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவர்களாய், உம்மையே பற்றிக்கொண்டு, விண்ணரசு நோக்கி முன்னேறுகிற எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் விளங்கிட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இவ்வுலகின் தலைவர்களும், எம்நாட்டின் தலைவர்களும், இவ்வுலகின் மக்கள் அனைவருமே “நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை” என்பதை உணர்ந்தவராகளாய், நிலையான மகிழ்வைத் தருகிற சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், சமாதானம் ஆகிய விழுமியங்களின்படி வாழுகிற, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அடிமையாக அல்ல, அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்தின் பொருளுணர்ந்து, சாதியின் பெயராலோ, சமயத்தின் பெயராலோ, பிறப்பிடத்தின் அடிப்படையிலோ, பொருளாதாரம் மற்றும் பின்னணி அடிப்படையிலோ, எவரையும் புறந்தள்ளாமல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற உயர்நெறியின்படி, எங்கள் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை கட்டியெழுப்புகிற நல்லுள்ளத்தை, எமக்குத் தந்தருள     வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கட்டுமானப் பணிகளுக்கும், போர் தொடுத்தலுக்கும் மட்டுமின்றி, உம்மைப் பின்தொடர்வதற்கும், திண்ணமான தீர்மானமும், திடமான முடிவும், தியாகம் நிறை வாழ்வும் தேவை என்பதை, நற்செய்தி வாசகம்மூலம் அறிந்த நாங்கள், உம்மைப் பின்தொடர்வதில் உறுதியாய் இருக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
      
5. நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறிப்பாக இளையோரும், உம் திருவுள்ளதை அறிந்துகொள்ளவும்,  அதன்படி தங்கள் வாழ்வை நடத்திச்சென்று, உமக்கும் பிறருக்கும் உகந்தவர்களாய்  வாழ்ந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்

https://anbinmadal.org

Print Friendly and PDF