தவக்காலம் மூன்றாம் ஞாயிறு 08.03.2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
விடுதலைப் பயணம் 17:3-7
உரோமையர் 5:1-2,5-8
யோவான் 4:5-42
திருப்பலி முன்னுரை:
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). இன்றைய திருவழிபாடு நம்முடைய ஆன்மீகத் தாகத்தைப் பற்றிப் பேசுகிறது.
உடல் தாகத்தைத் தணிக்க கிணற்று நீரைத் தேடி வந்த சமாரியப் பெண்ணிடம், "வாழ்வு தரும் தண்ணீரை" வாக்களிக்கிறார் இயேசு. அந்தத் தண்ணீர் ஒருமுறை பருகினால் மீண்டும் தாகம் எடுக்காத, நிலைவாழ்வு தரும் இறைவருள் ஆகும். சமாரியப் பெண் தன் குடத்தை விட்டுவிட்டு, ஊர் மக்களிடம் இயேசுவைப் பற்றி அறிவிக்கச் சென்றது போல, நாமும் நம்முடைய பழைய பாவப் பழக்கங்களை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் அன்பைப் பறைசாற்ற அழைக்கப்படுகிறோம்.
நம் உள்ளத்தில் உள்ள கசப்பு, வெறுப்பு, உலக ஆசைகள் எனும் தாகங்களைத் தணிக்க வல்லவர் இயேசு ஒருவரே என்பதை உணர்ந்து, இந்தத் திருப்பலியில் தகுதியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 17:3-7)
பாறையிலிருந்து சுரந்த தண்ணீர். இஸ்ரயேல் மக்கள் பாலைவனப் பயணத்தின்போது தாகத்தால் தவித்து, மோசேக்கும் இறைவனுக்கும் எதிராக முணுமுணுக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையின்மையைப் பொருட்படுத்தாமல், இறைவன் பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்து அவர்களின் தாகத்தைத் தணிக்கிறார். நம்முடைய துன்ப நேரங்களில் நாம் இறைவனைச் சோதிக்காமல், அவரே நம் வாழ்வின் ஊற்று என்பதை நம்ப வேண்டும் என்று இவ்வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது. பக்தி உணர்வுடன் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப் பாடல்
பல்லவி : உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர் ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்
திருப்பாடல்கள்: 95: 1-2, 6-7,7-9
1. வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி
2. வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி
3. இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5:1-2, 5-8)
தூய ஆவியின் வழியாக ஊற்றப்படும் அன்பு. இறைவன் நம் மீது கொண்டுள்ள அன்பு எவ்வளவு பெரியது என்பதை புனித பவுல் அடியார் இவ்வாசகத்தில் விளக்குகிறார். நாம் இன்னும் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். அந்த அன்பு தூய ஆவியின் வழியாக நம் இதயங்களில் ஊற்றப்பட்டுள்ளது. இந்த அன்பு தரும் நம்பிக்கையே நம்மை வாழ்விக்கிறது என்பதை உணர்ந்து இவ்வாசகத்தைக் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-
ஆண்டவரே! நீர் உண்மையில் உலகின் மீட்பர். நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. “நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே” என்கிற திருமுக வாசகத்தின் உண்மையை உணர்ந்து, தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், மனித அறிவையும் ஆற்றலையும் மட்டுமே நம்பியிராமல், இறைஞானத்தால் வழிநடத்தப்பட, எம்மையே ஒப்புவிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. போர்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இயற்கை சீற்றங்களாலும், மானுடப்பண்பு மங்கி வருவதாலும் இருண்டிருக்கும் இவ்வுலகுக்கு “இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்” என்கிற ஏசாயாவின் இறைவாக்கு புத்தெழுச்சி தரவும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், அனைத்துலக மக்களும், ஒளியின் ஆட்சி நோக்கிப் பயணிக்கவும், செயல்படவும், அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பணமும், பதவியும், பகட்டும், எம்மைக் கவர்ந்திழுக்கும் சூழலில், சிலுவையில் அறையுண்ட மெசியாவாகிய இயேசுவைத் தவிர, நாங்கள் பற்றிக்கொள்ள வேறு ஆதாரம் இல்லை என்பதை உணர்ந்து, நாங்கள் யாவரும், குறிப்பாக இளையோரும், எங்களிடையே இருக்கும் உலகப்பற்று எனும் நுகத்தை அகற்றிவிட்டு, உம்மையே பற்றிக்கொண்டு வாழ்கின்ற ஞானத்தையும், தாழ்ச்சியையும், மனஉறுதியையும் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும்” என்கிற முதல் வாசக இறைவாக்கு எங்களிலே நிறைவேறி “அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்” என்பதுவும் உண்மையாகி, எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லாதோர்க்கு துணை நிற்பதும், உடையற்றோருக்கு உடுக்கக் கொடுப்பதும், வறியோரின் தேவையை நிறைவு செய்வதும் தான், நீர் விரும்பும் நோன்பு என்றுணர்ந்து அறச்செயல்கள் புரியவும், அதன் வழியாக, இவ்வுலகிற்கு நாங்கள், ஒளியாகவும் உப்பாகவும் விளங்க வேண்டுமென்றும், எங்களது நற்செயல்களைக் காண்கின்ற எல்லோரும், விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:
Post a Comment