ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 17.05.2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
திருத்தூதர்பணிகள் 1: 1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன.
இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்து கொண்டிருக்கின்றன.அன்று வேரூன்றய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டிடுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு தான் தெரிந்துக்கொண்ட திருத்தூதர்களுக்குத் தனக்குப் பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். அவர்களிடம் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள் என்றும் உலகின் கடைசிஎல்லை வரை என் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றும் உறுதியளிக்கின்றார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள்" என்று கூறுவது போல எழுதிய லூக்காவின் இலக்கிய நயத்தைச் சுவைத்தவாறு அவர் நமக்கு இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!
பதிலுரைப்பாடல்
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8
மக்களினங்களே,
களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும்
மாவேந்தர் அவரே. பல்லவி
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார்
கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்;
கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ்
பாடுங்கள். பல்லவி
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்;
அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி
செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதை தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. விண்ணேற்றப் பெருவிழாவாகிய இன்று “கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்” என்கிற பவுலடியாரின் கூற்றின் உண்மையை உணர்ந்தவர்களாய், கிறிஸ்துவின் மறையுடலாகிய திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும் விண்ணகத்தையே இலக்காகக் கொண்டு வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே” என்கிற திருப்பாடலைத் தியானித்த நாங்கள் உலகின் பல்வேறு நாடுகளை ஆளுகிற தலைவர்களுக்காகவும், எம்நாட்டின் தலைவர்களுக்காகவும் மன்றாடுகிறோம். நல்லாட்சி, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், சமூக நீதி, ஆகியவை, உலகிலும், எம்நாட்டிலும் நிலவ வேண்டுமென்றும், அதற்காக அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்கிற உமது அறைகூவலை சிரமேற்கொண்டு, மறைத்தூதுப் பணியாற்றவும், அறப்பணிகள் வழியாகத் தொண்டாற்றவும் தங்களையே கையளித்துள்ள அனைத்து துறவியருக்காகவும், சிறப்பாகப் பிற நாடுகளில் பணிபுரிவோருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களை நீர் தாமே நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், இறையாட்சிப் பணிக்காக மேலும் பலர் முன்வரவேண்டுமென்றும், அதற்காக நடத்தப்படும் தேவ அழைத்தல் முகாம்கள் நிறைந்த பலன் தரும்படியாகவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. திருமுழுக்கு வழியாகக் கடவுளுடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், குடும்பங்கள் ஒவ்வொன்றும், குறிப்பாகக் குழந்தைகளும், இளையோரும், தாங்கள் பெற்றுக்கொண்ட உரிமைப்பேறு, எதிர்நோக்கு, நம்பிக்கை, ஆகியவை எத்துணை மேலானவை என்பதை உணர்ந்து செயலாற்றி, நம்பிக்கை வாழ்விலும், உலகுசார் வாழ்விலும், வெற்றி பெறவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் உமக்கு அருளப்பட்டிருப்பதையும், “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்கிற வாக்குறுதியையும் இறுகப்பற்றிக்கொண்டு, விண்ணேற்றம் அடைந்த உம்மைப் போல், நாங்களும் வாழ்வில் ஏற்றம் அடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:
Post a Comment