Sunday, June 7, 2026

பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு - 14-06-2026

பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு

https://miro.medium.com/v2/1*SFD4WntCSlLLnyoj-1pOSw.jpeg

இன்றைய நற்செய்தி வாசகம்

விடுதலைப் பயணம் 19: 2-6a
உரோமையர் 5: 6-11
மத்தேயு 9: 36- 10: 8

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில், திரண்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு இயேசு பரிவு கொள்கிறார். அவர்கள் "ஆயன் இல்லாத ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டிருந்தனர்" என்று வாசிக்கிறோம். இந்த உலகளாவிய ஆன்மீகப் பசி தீரவும், மக்களை நல்வழிப்படுத்தவும் இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்பி வைக்கிறார்.
இயேசுவின் அந்த அன்புப் பணி இன்றும் தொடர வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இறைவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு, அவருடைய திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களாக அனுப்பப்பட்டுள்ளோம். "இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய் வழங்குங்கள்" என்ற கிறிஸ்துவின் கட்டளைப்படி, நம்மிடமுள்ள திறமைகளையும், அருளையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இந்த மேய்ப்புப் பணியில் நாம் ஆர்வத்துடன் பங்கேற்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 19: 2-6a)
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுபட்டுச் சீனாய் பாலைவனத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஆண்டவர் மோசே வழியாகத் தமக்கு ஒரு 'புனிதமான மக்களினத்தை' உருவாக்க விரும்புகிறார். "நீங்கள் என் சொல்லுக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், எல்லா மக்களுள்ளும் நீங்களே எனக்குச் சொந்தமான மக்களாய் இருப்பீர்கள்" என்று ஆண்டவர் கூறும் வாக்குறுதியை இவ்வாசகத்தில் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1. அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

2. ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

3. ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5: 6-11)

நாம் பாவிகளாய் இருந்தபோதே, நமக்காகத் தம் உயிரைத் தந்து கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் தகுதியற்றவர்களாய் இருந்தும், கிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் என்ற மேலான உண்மையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஆண்டின் பொதுக்காலத்தை மீண்டும் தொடங்கியிருக்கும் தாயாம் திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், இன்றைய பதிலுரைப் பாடலில் அறிக்கையிட்டதுபோல, “நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!” என்கிற உணர்வோடு வாழுகிற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்ட மக்கள்மேல் பரிவு கொண்ட இயேசுவே! அமைதியையும் நல்வாழ்வையும் நோக்கி வழிநடத்துகிற நல்ல தலைமையின்றி தவிக்கின்ற இவ்வுலகிற்கு, நல்ல தலைவர்களையும், ஏற்கனவே இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்களுக்கு நல்புத்தியையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் நீங்களே என் தனிச் சொத்தாவீர்கள்” என்கிற உமது வாக்குத்தத்தத்தின் படி நாங்கள் அனைவரும் உமக்குரிய மக்களாகவே வாழவும், புதிய கல்வி ஆண்டைத் தொடங்கியுள்ள எம்பிள்ளைகளும், இளையோரும், உமக்கும், பிறருக்கும் பணிந்திருந்து, பயனுள்ள செயல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, உயர்நிலை அடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்று அங்கலாய்த்த இயேசுவே!  அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய உம்மிடமே மன்றாடுகிறோம். தேவ அழைத்தல் பெருகும்படியாகவும், அழைக்கப்பட்டோரில் பலர் தேர்ந்தெடுக்கப்படவும், தேர்ந்தெடுக்கப்பட்டோர் அனைவரும் பிரமாணிக்கத்தோடு வாழவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், அவர்களை மாண்புடன் நடத்தவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்கிற உம் அறைகூவலுக்கு செவிசாய்த்து, மனம் மாறி நற்செய்தியை நம்புவதோடு நில்லாமல், நாங்கள் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியிருக்கிறோம் என்பதையும் உணர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் ஏற்புடைய வாழ்வை மேற்கொண்டு, கொடையாகப் பெற்றதை, கொடையாகவே வழங்குகிற நல்மனது பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment