பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு 28-06-2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
2 அரசர் 4:8-11,14-16அ
உரோமையர் 6:3-4,8-11
மத்தேயு 10:37-42
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு இரண்டு முக்கியமான கருத்துகளை நமக்கு முன்வைக்கிறது: விருந்தோம்பல் மற்றும் சீடத்துவத்தின் விலை. முதல் வாசகத்தில், இறைமனிதர் எலிசாவிற்குத் தாராள மனதோடு விருந்தளித்த சூனேம் ஊர்ப் பெண்மணி, அதன் வழியாகக் கடவுளின் ஆசீரையும் மகப்பேற்றையும் பெறுகிறார். நற்செய்தியில் இயேசு, "தன்னை விட மேலாக எவரையும் அன்பு செய்பவர் எனக்குத் தகுதியற்றவர்" என்று கூறி, ஒரு சீடராக இருப்பதன் ஆழமான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறார்.
அதே சமயம், ஒரு சீடருக்குச் செய்யப்படும் மிகச் சிறிய உதவி கூட (ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் போல) கைம்மாறு பெறாமல் போகாது என்று இயேசு நமக்கு ஊக்கமளிக்கிறார். நாம் கிறிஸ்துவின் பெயரால் பிறரை வரவேற்கிறோமா? நமது விருந்தோம்பல் தாராளமாக இருக்கிறதா? கிறிஸ்துவுக்காகச் சிலுவையைச் சுமக்க நாம் தயாரா? எனச் சிந்திக்க இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. இத்திருப்பலியில் தகுதியுடன் பங்கேற்கத் தடையாக இருக்கும் நம் சுயநலங்களைக் களைந்து, இறைவனிடம் மன்னிப்பு வேண்டிப் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (2 அரசர்கள் 4: 8-11, 14-16a)
சூனேம் ஊரைச் சேர்ந்த ஒரு செல்வந்தப் பெண்மணி, இறைவாக்கினர் எலிசாவைக் கடவுளின் மனிதராகக் கண்டு, அவருக்குத் தாராளமாக விருந்தளித்து, தங்குவதற்கு இடமும் கொடுக்கிறார். அந்த விருந்தோம்பலின் பயனாக, குழந்தைப் பேறு இல்லாமல் வருந்திய அந்தப் பெண்மணிக்கு ஒரு மகன் பிறப்பான் என்று எலிசா வாக்குறுதி அளிக்கிறார். பிறருக்குச் செய்யும் உதவி ஒருபோதும் வீண் போகாது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி
விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி
ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 6: 3-4, 8-11)
திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவுடன் இறந்து, அவரோடு புதிய வாழ்வு பெற உயிர்த்தெழுந்திருக்கிறோம் என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் இனி பாவத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாகக் கிறிஸ்துவில் கடவுளுக்காக வாழ்பவர்கள் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”. அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும், திருத்தந்தை லியோ தொடங்கி, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் வரை, நாங்கள் அனைவருமே, சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக அல்லாமல், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்களாக விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. போர்-பதட்டம், வன்முறை, பகைமை, வெறுப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக சீர்கேடுகள் எனப் பல வகைகளில் அங்கலாய்க்கிற எம் உலகுக்காக மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள், நல்லாட்சி நல்கவும், அமைதி நோக்கி எம்மை வழிநடத்தவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. இன்றைய முதல் வாசகம் எங்களுக்கு உணர்த்துகிற பாடத்தைக் கற்றவர்களாய், எங்களுக்காக உழைக்கிற இறையடியார்களையும், அருள் பணியாளர்களையும், துறவியரையும், நாங்கள் மாண்புடன் நடத்தி, மகிழ்வுடன் பணிந்து, உவப்புடன் சேவிக்க வேண்டுமென்றும், அதற்குக் கைம்மாறாக உம்முடைய பேரருளை அபரிவிதமாய் பெற்று மகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், இறந்த அடியார்கள் அனைவருக்கும் நீர் தாமே நிலைவாழ்வு அருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். அதே நேரம், இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் ஒவ்வொருவரும், பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்களாகவும், எங்களது தினசரி சிலுவைகளை சுமந்து உம்பின்னே நடக்கிறவர்களாகவும் திகழ வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், அனைத்தையும் அனைவரையும் விட உம்மை அன்பு செய்பவர்களாகவும், உம்மை ஏற்றுக்கொள்வதற்காக அனைத்தையும் இழக்கத் துணிந்தவர்களாகவும், உம் சீடர் என்பதால் மிகச் சிறியோருக்கும் உதவுபவர்களாகவும் இருந்து, உமக்கு ஏற்புடையவர்களாக வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:
Post a Comment