Thursday, June 4, 2026

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (07.06.2026)

 கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (07.06.2026)

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQuCC6bVBpqvjaVyotYS7I3hK-gctKzVMLjnWMkzBMAZg&s 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

இணைச் சட்டம் 8:2-3, 14ஆ-16அ
1 கொரிந்தியர் 10:16-17
யோவான்  6:51-58

திருப்பலி முன்னுரை

நற்கருணையில் வாழும் ஆண்டவரின் அன்புக்குரிய இறைமக்களே! இன்று நாம் கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவை எழுச்சியுடன் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம் மீது கொண்ட எல்லையற்ற அன்பினால், தம்மையே உணவாகவும் பானமாகவும் நமக்குத் தந்த மாபெரும் மறைபொருளை இன்று நாம் நன்றியோடு நினைவு கூர்கிறோம்.
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை உண்ணும் எவரும் என்றுமே வாழ்வர்" என்று நற்செய்தியில் இயேசு நமக்கு வாக்குறுதி அளிக்கிறார். பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் மன்னாவை வழங்கியது போல, இன்று நமது ஆன்மீகப் பயணத்திற்குத் தாகம் தீர்க்கும் பானமாகவும், பசி போக்கும் உணவாகவும் நற்கருணைத் திருவிருந்து வழங்கப்படுகிறது. நற்கருணை என்பது வெறும் சடங்கு அல்ல; அது கிறிஸ்துவின் உயிருள்ள பிரசன்னம். நாம் ஒரே அப்பத்தைப் பகிர்ந்து கொள்வதால், நாம் அனைவரும் ஒரே உடலாய் இருக்கிறோம் என்ற ஒற்றுமையை இது வலியுறுத்துகிறது. இந்தத் திருவிருந்தில் தகுதியுடன் பங்கேற்கவும், கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (இணைச் சட்டம் 8: 2-3, 14b-16a)

மோசே இஸ்ரயேல் மக்களிடம் பேசும்போது, பாலைவனத்தில் அவர்கள் அனுபவித்த சோதனைகளையும், கடவுள் அவர்களுக்குச் செய்த நன்மைகளையும் நினைவுபடுத்துகிறார். "மனிதர் உணவினால் மட்டுமல்ல, ஆண்டவரின் வாய் சொல்லால் வாழ்வர்" என்பதை அவர்களுக்குப் புகட்டவே, அவர்கள் அறியாத மன்னாவைக் கொண்டு கடவுள் அவர்களுக்கு உணவளித்தார் என்று கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பதிலுரை: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!.
திருப்பாடல்கள்  147: 12-13, 14-15, 19-20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!  அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பதிலுரை

அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.  அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பதிலுரை

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.  அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பதிலுரை

இரண்டாம் வாசக முன்னுரை (1 கொரிந்தியர் 10: 16-17)

நற்கருணைக் கிண்ணமும், அப்பமும் கிறிஸ்துவின் திருஇரத்தத்திலும் திருவுடலிலும் நாம் பங்கு கொள்வதைக் குறிக்கின்றன என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் பலராய் இருந்தாலும், ஒரே அப்பத்தில் பங்கு கொள்வதால் ஒரே உடலாய் மாறுகிறோம் என்ற ஒற்றுமையின் மறைபொருளை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும். ஒரே அப்பத்தில் பங்கு கொள்வதனால், பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம் என்கிற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர் பதட்டங்களாலும், குழப்பமான சூழல்களாலும், பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிகளாலும் அல்லலுறும் அவனியின் மீது உமது கண்களைத் திருப்பி, உலகத் தலைவர்களுக்கும், எம்நாட்டுத் தலைவர்களுக்கும் தேவையான ஞானத்தை நல்கி, அனைவருக்குமான நல்வாழ்வு மற்றும் அமைதி நோக்கி அவர்கள் எங்களை வழிநடத்த வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஒவ்வொரு திருப்பலியும் கிறிஸ்துவின் இரத்தத்திலும், கிறிஸ்துவின் உடலிலும் பங்குகொள்ளுதல் என்பதை உணர்ந்து, தகுந்த தயாரிப்போடும், தூய உள்ளத்தோடும் நாங்கள் பங்குபெறவும், நற்கருணை இல்லையேல் திருஅவை இல்லை, குருக்கள் இல்லையேல் திருப்பலி இல்லை என்பதை உணர்ந்து, நாங்கள் அனைவரும் குருக்களை மதித்து நடக்கவும், தேவ அழைத்தலை ஊக்குவிப்பவர்களாகவும்       விளங்கிட  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.” என்கிற உமது திருமொழியில் நம்பிக்கை வைத்து, எம்குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும் இறந்துபோன அடியார்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் அனைவருக்கும் நிலை வாழ்வினைத் தந்து, உயிர்ப்பின் மகிமையில் பங்குகொள்ளும் பேரின்பத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார்” என்பதை உணர்ந்து, எங்களது வாழ்வினை இறைவார்த்தையென்னும் அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பவும், “எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்கிற இறைவாக்கிற்கேற்ப, நற்கருணை பக்தி மூலம், உம்மோடு இணைந்து வாழ்கிற பேற்றினை பெற்றிட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment