பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
சபை உரையாளர் 2:1-2
கொலோசையர். 3:1-5, -9-11
லூக்கா 12:13-21
முன்னுரை:
இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறான இன்று இறையருள் வேண்டி இறைவனின் திருப்பாதம் தேடி வந்துள்ள இறைமக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இன்றைய சூழலில் மக்கள் ஓய்வின்றி உழைத்துத் தேடிவைக்கும் செல்வங்களின் நிலையையும், அவர்களின் மனநிலையையும் அழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றது இன்று தரப்பட்டுள்ள வாசகங்கள். கடினமாய் உழைத்துச் சேர்த்த சொத்துகள் அதற்காக உழைக்காதவரிடம் செல்வது பெரிய அநீதி. எல்லாம் வீண் என்கின்றது முதல் வாசகம். நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். நீங்கள் புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். எனவே உங்களிடையே வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார் என்கின்றார் திருத்தூதர் பவுல்.
இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? " என்று கேட்கின்றார் இறைமகன் இயேசு. ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் பயன் என்ன? என்ற இறைவார்த்தையின் மகத்துவத்தை உணர்ந்த நாம், இன்றையத் திருப்பலியில் இறைவனின் இல்லத்தில் நாம், செல்வங்களைச் சேர்த்து வைக்க, வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்… வாரீர்.
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் பதிவு செய்கின்றது இந்த வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'உழைப்பு வீண்' என வாதிடும் சபை உரையாளர், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்குத் துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும் தான் மிஞ்சுகிறது என்று எடுத்துரைக்கும் சபை உரையாளரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
<பதிலுரைப் பாடல்
பல்லவி: என் தலைவரேதலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்!
திபா. 90: 3-4,5-6,12-13,14,17
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புளுதியாகுங்கள்' என்கின்றீர். ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும். - பல்லவி
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம் நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி
இரண்டாம் முதல் வாசக முன்னுரை:
கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் 'மேலுலகுச் சார்ந்தவற்றை நாடுவது' என்கிறார் திருத்தூதர் பவுல். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகுச் சார்ந்தவையாக இருக்க வேண்டும். 'இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை' அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கின்றார். இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், 'புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!' என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார். அவரின் நினைவூட்டலைச் சிந்திக்க இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை அழைக்கின்றது.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், மேலுலகு சார்ந்தவற்றையே நாடுகிற தலைவர்களாய் விளங்கவும், இறைமக்களாகிய எங்களையும், மேலுலகு பற்றிய சிந்தனையோடே பயணிக்கும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வழிநடத்தவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எம் உலகையும் நாட்டையும் ஆளும் தலைவர்கள், “வீண், முற்றிலும் வீண்” என்கிற சபையுரையாளரின் கூற்றை உணராமல், போர்களிலும் அழிவுப் பாதைகளிலும் தங்கள் கவனத்தைச் செலுத்துவதைத் தவிர்த்து, அமைதிக்கு ஏதுவானதும், ஆக்கப்பூர்வமானதுமான செயல்களில், தங்களை ஈடுபடுத்தி, மானுடம் செழித்திட வகைச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. இன்றைய முதல் வாசகம், திருப்பாடல், நற்செய்தி உவமை ஆகியவை, மனித வாழ்வின் நிலையாமையையும், செல்வம் திரட்டுவதின் பயனில்லாமையையும் உணர்த்தினாலும், வாழ்க்கையை வெறுக்கவோ, சோம்பிக்கிடக்கவோ அவை சொல்லிக்கொடுக்கவில்லை; மாறாக, இறைவனை நம்பியவர்களாய், இறைவழியில் உழைப்பவர்களாய், இறையரசின் மீது நாட்டம் உடையவர்களாய் பயணிப்பதின் அவசியத்தை உணர்த்துகின்றன என்பதனை, நாங்கள் புரிந்து செயல்பட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இவ்வுலகில் வாழ்வோராகிய நாங்கள், மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என்பதை உணர்ந்து, எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருக்கவும், தங்கள் வாழ்வை முடித்து இறைபதம் சேர்ந்திருக்கும் அனைவருக்கும், வாழ்வு அளிப்பவராம் கிறிஸ்து தோன்றும்பொழுது, அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுகின்ற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களாகிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், பேராசை ஆகியவற்றைக் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்தவர்களாய், எம்மை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment