Wednesday, December 3, 2025

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு ஆண்டு-1

regram @j.madoff Matthew 3:1-12 1 In those days came John … | Flickr

இன்றைய நற்செய்தி வாசகங்கள் : 

எசாயா 11:1-10
உரோமையர் 15:4-9
மத்தேயு 3:1-12

திருப்பலி முன்னுரை : 

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு.

இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் மனமாற்றத்திற்கான அழைப்பை ஏற்றுத் தெய்வத்தின் திருவடியை நோக்கி வந்துள்ள இறைகுலமே வருக. உங்கள் வரவு உங்களுக்கு நலமும் வளமும் தருவதாக.

கிறிஸ்துவின் வருகை நீதி, அமைதி, நேர்மை, ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டிய காலம். இத்தகைய உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வுக்கு உயிர்த்தெழ எசாயா இறைவாக்கினர் வேறுவேறான இயல்புகளைக் கொண்ட மிருகங்களே இணைந்து வாழ்வதாக இயம்புகிறார். இத்தகைய கனவு வாழ்வை நீங்கள் செயலாக்க, கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் ஒருவரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார் பவுலடியார்.

மனமாற்றத்தை நம்மிடையே விரும்பும் திருமுழுக்கு யோவான் அந்த மனமாற்றத்திற்கேற்றச் செயல்களால் வாழ்ந்துக்காட்டுங்கள் என்று வலியுறுத்துகின்றார். அமைதியையும் உறவையும் நிலைநாட்ட வந்த இயேசுவின் பிறப்பு நம் முறிந்த உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும். நம் குடும்பங்களில் உறவுமுறிவுகளையும், தவறுகளையும் சீர்படுத்த முன்வருவோம். இவ்வாறு நாம் வாழும் இடங்களில் அமைதியையும் அன்பையும் நிலைநாட்டும்போது அங்கே ஆண்டவர் இயேசு பிறக்கின்றார். இவ்வாறு ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்து பயனுள்ள விதத்தில் கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை :

முதல் வாசக முன்னுரை : 

உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வு உயிர்த்தெழ இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஏசாயா அழைப்பு விடுக்கின்றார். சிங்கக்குட்டியும் கொழுத்த காளையும் கூடிவாழும், பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும், பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். அதேபோல் பல்வேறு இயல்புகளைக் கொண்ட நாம் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே எசாயாவின் எதிர்பார்ப்பும், கனவும் ஆகும்.  எசாயா விடுக்கும் அழைப்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல் :

பல்லவி: அகமகிழ்வோடு  ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.
திருப்பாடல்72: 1-2, 7-8, 12-13,17

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி 

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி 

அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை :

எசாயாவின் கனவுகளை நினைவாக்க நீங்கள் கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அழைப்பு விடுக்கின்றார் பவுல் அடிகளார். மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. எனவே இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் அனைவரும் ஒரு மனத்தினராய்ச் செயல்படுமாறு எடுத்துரைக்கும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திரு அவையும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களும், இறைமக்களாகிய நாங்களும், இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவது போல, மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் எதிர்நோக்கு பெற்று, கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கு ஏற்ப ஒரே மனத்தினராய் இருந்து,  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்ந்திடும் அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருவருகைக் கால தயாரிப்பு வளையத்தின் இரண்டாம் மெழுகுதிரியை ‘அமைதியின் மெழுகுதிரியாக, சமாதானத்தின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்த நாளில், இன்றைய முதல் வாசகம் சித்தரிக்கக்கூடிய ஓநாயும் செம்மறியாட்டுக் குட்டியும், சிறுத்தைப்புலியும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழுகிற அமைதியின் சூழல் உருவாகவும், போர்களும், வன்முறைச் செயல்களும், தீவீரவாதமும் முற்றிலும் மறைந்து, சமாதானம் தழைக்கும் பூமியாக, இவ்வுலகு மாறவும், அமைதியின் அரசராய்ப் பிறந்த குழந்தையாகிய உம்மால் நாங்கள் வழிநடத்தப்படவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உலகையும், எம்நாட்டையும் ஆளும் தலைவர்கள் அனைவரும், ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு ஆகியவற்றை பெற்றவர்களாய், நேர்மையை அரைக்கச்சையாகவும், உண்மையை இடைக்கச்சையாகவும் அணிந்து, ஏழைகளுக்கு இரங்கி, அனைவருக்கும் நீதி வழங்கி, நடுநிலையோடு ஆட்சி செய்யும் அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கடந்த கால அனுபவங்களால், டிசம்பர் மாதம் என்றதுமே அஞ்சுகிற எங்களுக்கு, இந்த ஆண்டு எந்தவிதமான இயற்கைச் சீற்றமோ அதனால் ஏற்படும் அழிவோ இல்லாமல் காக்குமாறும், நாங்கள் அனைவருமே கிறிஸ்து பிறப்புக்காக எம்மையே மகிழ்ச்சியுடன் தயாரிக்கவும், ஏழைகளோடு பகிர்வதன் மூலம் அவர்களுக்கும் மகிழ்ச்சியைத்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்கிற திருமுழுக்கு யோவானின் குரலைக்கேட்டு, மனமாற்றத்தின் பாதையில் பயணிக்கவும், “நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” என்கிற எச்சரிக்கையை உணர்ந்தவர்களாய், நற்செயல் புரியும் நல்லவர்களாக வாழ, வரம்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

                                            www.anbinmadal.org