Monday, December 8, 2025

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

 திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 35:1-6,10 
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

திருப்பலிமுன்னுரை

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு - மகிழ்ச்சியின் ஞாயிறு. மகிழ்ச்சி என்னும்‌ திருவிளக்கேற்றி, ஒளியின்‌ கடவுளாகிய இயேசுவுக்குச்‌ சான்று பகர வருகை புரிந்துள்ள அன்பு இறைமக்களே, உங்கள்‌ அனைவரையும்‌ திருவருகைக்‌ காலம்‌ மூன்றாம்‌ ஞாயிறு வழிபாட்டிற்கு மகிழ்வோடு வரவேற்கிறோம்‌.

மீண்டும் இறைவாக்கினர் எசாயா அகமகிழ்ந்து பூரித்துக் கூறுவதாவது பாழ்நிலங்கள் புத்துயிர் பெற்றுப் பூத்துக் குலுங்கும். ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் காண்பார்கள். மக்கள் அனைவரும் நலமும் வளமான வாழ்வும் பெற்றுப் பெரும் மகிழ்ச்சியில் சீனோனுக்கு வருவார்கள். துன்பமும் துயரமும் பறந்தோடும் என்றார்.

பயிரிடுபவரைப் போலக் காலம் கனியும் வரை பொறுமையோடு காத்திருங்கள். தண்டனைத்தீர்ப்பு ஆளாகாதவாறு உங்களைக் காத்துகொள்ளுங்கள் என்று திருத்தூதர் யாக்கோபு நமக்கு அறிவுரை வழங்குகிறார்.

இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் மெசியாவைக் கண்டு கொண்டதின் மகிழ்ச்சியில் தம் சீடர்களை உறுதிசெய்ய அனுப்பிவைக்கின்றார். இறைவாக்கினரை விட மேலானவர் என்றும் மனிதராய் பிறந்தவர்களில் மிகப் பெரியவர் என்றும் தன் முன்னோடிக்குப் புகழ்மாலைச் சூட்டுகிறார். ஆம் அன்பர்களே யோவாயைப் போல் மெசியாவைக் கண்டுணர்ந்துக் கரடுமுரடான பாதையை வெற்றிகரமாகக் கடந்து அவர்தரும் நிலைவாழ்வை மகிழ்ச்சியோடு நோக்கிப் பயணிக்க அவரின் உடனிருப்பை தேடி, வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் மகிழ்ச்சியே!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எசாயா நூலிருந்த எடுக்கப்பட்டுள்ள இந்த வாசகம் அடிமைத்தனத்தலிருந்து விடுபட்டுத் திரும்பும் இஸ்ரயேலரின் மனநிலையைப் பிரதிப்பலிக்கின்றது. யாவே கடவுள் பாழ்நிலங்களைச் சோலையாக மாற்றுகிறார். நலிவுற்றோரைப் புதுபலன் பெற்றவைத்துப் பயணிக்க வைக்கிறார். மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர். பெரும் மகிழ்ச்சியால் அவர்கள் முகம் மலர்ந்திருக்கும். மெசியாவை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கும் எசாயாவின் இவ்வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

பதிலுரை: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.
திருப்பாடல் 146: 7,8,9,-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.  பதிலுரை

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பதிலுரை 

ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! 
பதிலுரை

இரண்டாம் வாசக முன்னுரை

பயிர்செய்வோர் எப்படிப் பொறுமைக் காத்துக் காலம் கனியும் வரை காத்திருந்து தன் உழைப்பின் பயனைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைவாரோ, அதைபோல் நாம் ஆண்டவரின் வருகைக்கு நம் உள்ளங்களை உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரைக் கூறும் திருத்தூதர் யாக்கோபு, ”நடுவர்கள் வந்து விட்டார்கள். எனவே நிலைவாழ்வைக் காத்துக்கொள்ள நம்பிக்கையோடு பயணியுங்கள்” என்று விடுக்கும் மகிழ்சிசியின் அழைப்பைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை அகமகிழ்வின் ஞாயிறாகக் கொண்டாடுகிற திருஅவையோடு இணைந்து, திருத்தந்தை லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். வரவிருப்பவர் தாம் தான் என்பதை, தமது செயல்கள்மூலம் கண்டுணரலாமென, நற்செய்தியில் எடுத்துரைக்கும் இயேசுவைப் பின்பற்றி, திருஅவையானது தனது சான்று பகரும் வாழ்வால், இயேசுவின் வருகையைப் பறைசாற்றிட, உமது அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருவருகைக் கால வளையத்தின் மூன்றாம் மெழுகுதிரியை ‘மகிழ்ச்சியின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்த நாளில், “ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் துன்பமும் துயரமும் பறந்தோடும்” என்கிற முதல் வாசக இறைவாக்கு இந்தப் பூவுலகில் மெய்ப்படவேண்டுமென்றும், அமைதி, நீதி, சமத்துவம் செழிக்கும் பூமியாக இந்த வையகம் விளங்கிட உலகின் தலைவர்களும், எம்நாட்டின் தலைவர்களும், உலக மக்கள் யாவருமே உழைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பயிரிடுபவரை முன்மாதிரியாய் நிறுத்தி யாக்கோபு சுட்டிக்காட்டுகிற, துன்பத்தைத் தாங்குதல், பொறுமையைக் கடைப்பிடித்தல் ஆகிய நற்குணங்களில் நாங்கள் வளர வரம் வேண்டும் அதே வேளையில், சமீபத்திய புயல் மற்றும் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வில், அரசு தரும் இழப்பீடுகளைத் தாண்டி, நீர் செயல்படவேண்டுமென்றும், அவர்கள் குறையின்றி வாழ வழிபிறக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை ஊக்கப்படுத்துங்கள் என்கிற முதல் வாசக அறைகூவலுக்கு செவிசாய்த்து, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு உற்சாகம் தந்து, இயலாதவர்களுக்கு உதவுபவர்களாகத் திகழ்ந்து, கிறிஸ்துவின் வருகைக்கு உண்மையிலேயே தயாரிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. ‘மனிதராய்ப் பிறந்தவர்களுள் இவரைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை’ என இயேசுவாலேயே சுட்டிக்காட்டப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாலைவனக் குரலைக் கேட்டு, ஆண்டவரின் பாதையை ஆயத்தம் செய்யும் மனிதர்களாய் நாங்கள் இருந்து, விண்ணகத்தில் மிகப்பெரியோராய் இடம்பெறுகிற அருள் பெற்றிட   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment