Monday, November 17, 2025

கிறிஸ்து அரசர் பெருவிழா

 கிறிஸ்து அரசர் பெருவிழா

இன்றைய வாசகங்கள்

2 சாமுவேல் 5:1-3
கொலோசையர் 1:12-20
மத்தேயு 1:18-24

திருப்பலி முன்னுரை

அன்பானவர்களே ! திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை 'இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' என்ற பெருவிழாவாகத் தாய் திருஅவை கொண்டாடுகிறது.
இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர்தான். ஆனால் அவரின் அரசாட்சி இவ்வுலக அரசர்களின் ஆட்சி போன்றதல்ல. இவ்வுலக அரசர்களின் ஆட்சி அதிகாரத்தையும் பணத்தையும் மையமாகக் கொண்டது. கிறிஸ்துவின் அரசாட்சியோ அன்பு, தியாகம், இரக்கம், உண்மை, நீதி, சகோதரத்துவம், அமைதி போன்றவைகளை மையமாகக் கொண்டது.

இஸ்ரயேல் மக்கள் தாவீதைப் போன்று போர் புரிகின்ற ஓர் அரசனை எதிர்பார்த்துக் காத்து இருந்தார்கள். உரோமை ஆட்சியினரின் பிடியிலிருந்து விடுவிக்க ஓர் அரசியல் நெறி சார்ந்த அரசரை எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ இவ்வுலக அரசியல் தலைவர்களைப் போன்று இல்லாமல், அடிமையின் நிலை ஏற்று வந்தார். அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் போதித்தார். தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி துன்பத்தைக் கண்டு தப்பி ஓடவில்லை. மாறாக, சிலுவையை ஏற்றுக் கொண்டு, பகைவரை மன்னித்து, இறைவனின் ஆட்சியை மண்ணுலகில் விதைத்தார். எந்த ஓர் அரசரும் தர முடியாத விடுதலையை பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் நமக்குத் தந்தார். 

அவர் விட்டுச் சென்ற இறையாட்சிப் பணியை இன்றைய திரு அவை இலட்சியப் பயணமாக ஏற்றுப் பயணிக்கிறது. இயேசு கிறிஸ்துவே நம் குடும்பங்களின் அரசர், இறையாட்சியே நம் இலட்சியக் கனவு என்ற சிந்தனைகளோடு இப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை: 

இஸ்ரயேலின் அரசராகச் சவுலுக்குப் பின் தாவீதை இறைவன் திருப்பொழிவு செய்கிறார். தாவீது அரசர் இஸ்ரயேல் மக்களை ஒன்றிணைத்து, உடன்படிக்கைப் பேழையை மீண்டும் எருசலேமுக்கு கொண்டு வருகிறார் என்பதைப் பறைசாற்றும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்: திபா 122:1-2, 4-5

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1. “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி
2. ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

கிறிஸ்து நம்மைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, உலகம் முழுவதையும் தந்தையாம் கடவுளோடு ஒப்புரவு ஆக்கினார். இவ்வுலகப் படைப்பு அனைத்திற்கும் கிறிஸ்துவே அரசர். அவர்  வழியாகவே, அவருக்காக, அனைத்தும் படைக்கப்பட்டிருக்கின்றன எனக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் எனும் பெருவிழவை கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திருவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலைத் தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம். “திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமுமான கிறிஸ்துவே எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு” எங்கள் வாழ்க்கை அமைய   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்” என்கிற பவுலடியாரின் உண்மை கூற்றின்படி, உலகாளும் அதிபர்களும், நாடாளும் தலைவர்களும், இறையாட்சியின் விழுமியங்களுக்கு ஏற்றபடி தம் ஆளுமை அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டுமென்றும், அமைதி, சமத்துவம், நல்லிணக்கம், மனிதமாண்பு ஆகியவை பேணப்படுகிற  பூமியாக இந்நாநிலத்தை மாற்றிட, மாந்தர் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. திருவழிபாட்டு ஆண்டின் நிறைவு வாரத்தில் இருக்கும் நாங்கள் அனைவரும், மரித்த விசுவாசிகளுக்காகச் சிறப்பாக ஜெபிக்கும் இந்த நவம்பர் மாதத்தில், மண்ணுலக வாழ்வின் நிலையாத்தன்மையை உணர்ந்தவர்களாய், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என இறைவேண்டல் செய்வதோடு, நேரிய வழியில் எம்வாழ்க்கையை கட்டியெழுப்பவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இறந்த அடியாளர்கள் அனைவரும், குறிப்பாக எங்கள் குடும்பங்களிலே மரித்தவர்கள், எங்கள் உறவு மற்றும் நட்புச் சூழல்களில் மரித்தவர்கள், நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள் மற்றும் மறந்துபோனவர்கள், தங்களுக்காக ஜெபிக்க யாருமே இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் “என்னோடு பேரின்ப வீட்டில் இன்று நீர் இருப்பீர்” என்கிற அருள்வாக்கை கேட்கிற நற்பேறு பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      
 
5. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும், தம்மோடு ஒப்புரவாக்க திருவுளம் கொண்ட, கடவுளின் திருமகனது வருகையை எதிர்நோக்கியிருக்கும் நாங்கள் அனைவரும், சிறப்பாக  இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பகைமை உணர்வுகளை மறந்து, ஒன்றிப்பு, உடனிருப்பு, பங்கேற்பு, ஆகிய பண்புகளை வளர்த்து, ஒப்புரவின் மக்களாகவும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகவும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, November 10, 2025

பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

பொதுக்காலம்  33ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள் 

மலாக்கி 4: 1-2
2தெசலோனிக்கர் 3: 7-12
லூக்கா 21: 5-19

திருப்பலி முன்னுரை 

இறைமகன் இயேசுவின் அன்பில் மலர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் வரவு நல்வரவு ஆகுக…

இறைவாக்கு வழிபாடு இன்று நம் முன்வைக்கும் கருத்துகள் யாதெனில் இறைவனில் மனௌறுதியடன் கடைசிவரை இருந்தால் நிலைவாழ்வு என்னும் வெற்றியைப் பெற முடியும் என்பதே…

இதையே மலாக்கி இறைவாக்கினர் கூறுகிறார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கையில் நலம் தரும் மருந்து இருக்கும். என்றும் உழைத்து உண்ணப் பவுலடியார் கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிடுகிறார்.

எருசலேம் ஆலயத்திற்கு வரவிருக்கும் பேரழிவை எடுத்துரைக்குக் கிறிஸ்து, அவரின் முன்னிட்டு நமக்கு வரும் நிந்தனைகளைப் பற்றியும், அதை எப்படி எதிர்க்கொள்வது எனபதைப் பற்றியும் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். அதேவேளையில் அவர் நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும் தந்துப் பலப்படுத்துவதைப் பற்றி எடுத்துரைக்கும் அவர் நாம் மன உறுதியோடு இருந்து நம் வாழ்வைக் காத்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவரில் மன உறுதியுடன் இருந்து நிலைவாழ்வைக் காத்துக் கொள்ள இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து இறைஇயேசுவின் ஆசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

முதல்‌ வாசக முன்னுரை: 

இறுதித்‌ தீர்ப்பு நாளைக்‌ குறித்த எச்சரிக்கையையும்‌ அதே வேளையில்‌, எதிர்நோக்கையும்‌ தருவதே இன்றைய முதல்‌ வாசகம்‌. கடவுளுக்கு அஞ்சி நடக்காத ஆணவக்காரர்களுக்கு, எரியும்‌ தீச்சூளையும்‌, அவருக்கு அஞ்சு நடப்பவருக்கோ நலம்‌ தரும்‌ கதிரவன்‌ எழுவானெனக் கூறும்‌ வாசகத்துக்குச்‌ செவிமடுப்போம்‌. 

பதிலுரைப்பாடல் 

திருப்பாடல் 98: 5-6, 7-8, 9
பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார். 

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கிக் கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி
 

கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி
 

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி 

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

இயேசுவின்‌ இரண்டாம்‌ வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருக்க நம்மை அழைக்கிறது இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌. கிறிஸ்துவ வாழ்க்கையின்‌ கடமையையும்‌ பொறுப்பையும்‌ உணர்ந்து உழைத்து வாழ அழைக்கும்‌ இந்த வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கட்டப்படும் ஆலயங்கள் அழியலாம். ஆனால் கிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாகிய திருஅவை, காலத்தால் அழிவுறாதது. கிறிஸ்துவின் பிரதிநிதியாய் இருந்து அதனை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை 14 ஆம் லியோ, மற்றும் ஆயர்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரும், பொதுநிலையினராகிய நாங்களும், அழிந்துபோகும் உலக இயல்பின்படி வாழாமல், நிலை வாழ்வுக்குரிய இயல்பை அணிந்தவர்களாய் வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் தொடுக்கின்ற போர்களும், பல இடங்களில் ஏற்பட்டு வருகிற நிலநடுக்கங்களும், வெள்ளங்களும், பஞ்சமும், கொள்ளை நோயும், அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும், இனப்படுகொலைகள், மதக்கலவரங்கள் மற்றும் துப்புறுத்தல்கள் ஆகியவை குறைந்தொழியா இக்காலத்தில், நீர்தாமே நீதியின் கதிரவனை எழச்செய்து, அமைதியெனும் நலம் தரும் மருந்தினைத் தந்து, தலைவர்களையும், குடிமக்களையும் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” என்கிற நற்செய்தி வாழ்த்தொலியால் நம்பிக்கை ஊட்டப்பெறும் நாங்கள், இறந்த அடியார்களை நினைவுகூரும் இந்த நவம்பர் மாதத்தில், எங்கள் குடும்பங்கள், அன்பியங்கள் மற்றும் பங்கில் மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும், நாங்கள் நன்றியோடு நினைவுகூர்ந்து ஜெபிக்க கடமைப்பட்டுள்ள அனைத்து நல்லோருக்காகவும் மன்றாடுகிறோம். நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்கிற பவுலடியாரின் போதனைக்கேற்ப, நாங்கள் அனைவரும் கடின உழைப்பாளிகளாகவும், பொறுப்புள்ள மனிதர்களாகவும் விளங்கிட வேண்டுமென்றும், எம் இளையோர்க்கும், வேலையின்றி தவிக்கும் அனைவருக்கும், அவரவர் தகுதிக்கேற்ப நல்ல பணி கிடைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
    
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டோ, தவறான போதனைகளால் ஈர்க்கப்பட்டோ ஏமாந்து போகாமலும், எமக்கெதிராக இழைக்கப்படும் துன்பங்கள், புறக்கணிப்புகள், துரோகங்கள் ஆகியவற்ற்றைக்கண்டு கலங்காமலும், மன உறுதியோடு இருந்து, எங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, November 3, 2025

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசேக்கியேல்  47: 1-2, 8-9, 12
கொரிந்தியர்    3: 9b-11, 16-17
யோவான்         2: 13-22

திருப்பலி முன்னுரை 

இனியவர்களே ! இவ்வுலகில்‌ உள்ள அனைத்துக்‌ கோவில்களுக்கும்‌ தாயான லாத்தரன்‌ பெருங்கோவிலின்‌ நேர்ந்தளிப்பு நாளை இன்று தாய்‌ திரு அவை கொண்டாடுகிறது. நம்‌ உடல்‌ இறைவன்‌ வாழ்கின்ற கோவில்‌. இக்கோவிலின்‌ மாண்பினை அறிந்து, இறைவன்‌ என்றென்றைக்கும்‌ தங்கும்‌ கோவிலாக நாம்‌ மாற இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கின்றது. 

“உள்ளம்‌ பெருங்கோயில்‌ ஊன்‌ உடம்பு ஆலயம்‌” என்கிறார்‌ திருமூலர்‌. உடலும்‌ உள்ளமும்‌ ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத அளவுக்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளம்‌ இல்லாமல்‌ உடலும்‌, உடல்‌ இல்லாமல்‌ உள்ளமும்‌ வாழ்வின்‌ அர்த்தத்தைக்‌ கொடுப்பதில்லை. உள்ளத்தில்‌ உறைகின்ற இறைவனுக்கு உடலே கோவிலாக அமைகின்றது. இறைவனும்‌ மனிதனும்‌ இணையும்‌ இடந்தான்‌ கோவில்‌. கோவிலில்‌ தான்‌ பலிகள்‌ ஒப்புக்கொடுக்கப்பீநிகின்றன. இறைமனித உறவை ஒப்புரவாக்க வந்த இயேசு, எருசலேம்‌ கோவிலைத்‌ தூய்மைப்படுத்துவதை இன்று யோவான்‌ நற்செய்தியில்‌ வாசிக்கிறோம்‌. தூய ஆவியாரின்‌ ஆற்றலால்‌ தந்தையின்‌ திருவுளத்தை நிறைவேற்ற வந்த இயேசுவே அந்தக் கோவில் என்பதை யூதர்கள்‌ புரிந்து கொள்ளவில்லை.

கற்களால்‌ ஆனது ம்ட்டும்தான்‌ கோவில்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. “கடவுளின்‌ ஆவியார்‌ உங்களுள்‌ குடிகொண்டிருக்கிறார்‌ நீங்களே அக்கோவில்‌” என்று திருத்தூதர்‌ பவுல்‌ இரண்டாம்‌ வாசகத்தில்‌ குறிப்பிடுகிறார்‌. இக்கோவிலிலிருந்து செல்லும்‌ ஆற்றல்‌ தீமை அனைத்தையும்‌ நன்மையாக மாற்றுகிறது என்று இறைவாக்கினர்‌ எசேக்கியல்‌ நூலிலிருந்து முதல்‌ வாசகத்தில்‌ வாசிக்கின்றோம்‌. இறைவன்‌ வாழுகின்ற கோவிலாக நாம்‌ மாற அருள்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ மன்றாடுவோம்‌.

முதல்‌ வாசக முன்னுரை: 

கோவிலிலிருந்து பாயும்‌ தண்ணீர்‌ உயிர்‌ அளிக்க வல்லது. தண்ணீர்‌ தொடுகின்ற இடமெல்லாம்‌ புத்துணர்வையும்‌, நற்குணத்தையும்‌ நல்ல உணவையும்‌ தந்து உதவுகின்றது எனக்‌ கூறும்‌ முதல்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 46: 1-2,3c. 4-5. 7-8 (பல்லவி: 4)
பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. - பல்லவி

ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. - பல்லவி

படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! 
- பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

நாம்‌ அனைவரும்‌ இறைவன்‌ கட்டுகின்ற கோவில்‌. இயேசுவே அதன்‌ அடித்தளம்‌. நம்‌ உடல்‌ தரய்‌ ஆவியார்‌ தங்கும்‌ கோவில்‌, அதைத்‌ தூய்மையாக வைத்திருப்பது நம்‌ ஒவ்வொருவரின்‌ பொறுப்பு என்று கூறும்‌ இரண்டாம்‌ வாசகத்துக்குச்‌ செவிசாய்ப்போம்‌. 

நற்செய்திக்கு முன்‌  வாழ்த்தொலி:

அல்லேலூயா, எனது பெயர்‌ என்றென்றும்‌ போற்றப்படுமாறு இக்கோவிலை நான்‌ தெரிந்தெடுத்துத்‌ திருநிலைப்படுத்தியுள்ளேன்‌, என்கிறார்‌ ஆண்டவர்‌. அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. உரோமை நகருக்கு மட்டுமல்லாமல், அனைத்துலகத் திரு அவைக்கும் தாய்த்தலமாகவும், தலைமை ஆலயமாகவும் விளங்குகிற லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவினை கொண்டாடுகிற இந்நாளில், திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரையும், பொதுநிலையினராகிய எங்களையும், நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருக்கோவிலிலிருந்து புறப்படுகிற ஆறு பாய்கிற இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும் என முன்னுரைக்கும் இறைவாக்கினர் எசேக்கியேலின் கூற்றுப்படி, இவ்வுலகும், உலகின் உயிரினங்கள் அனைத்தும், வாழ்வாங்கு வாழவும், துளிர்விட்டிருக்கும் அமைதிக்கான முயற்சிகள் நிறைவான பலன் தந்து, அமைதியும் சமாதானமும் செழிக்கும் பூமியாக இவ்வையகம் விளங்கவும், நாடுகளை ஆட்சி செய்கிற தலைவர்கள் மற்றும் மக்கள் யாவரும், நாளுமே உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே” என்கிற திருப்பாடல் வரிகளில் நம்பிக்கை கொண்டவர்களாய், எம்மை வாட்டி வதைக்கும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், சோதனைகள், வறுமை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடிகள், கடன் தொல்லைகள், இன்னும்பிற இன்னல்கள் ஆகியவற்றை, உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். நீர் தாமே எங்களுக்குத் துணையாகவும் அரணாகவும் இருந்து, கரைசேர்க்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தந்தையின் இல்லத்தின் மீதுள்ள ஆர்வத்தால் எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய இயேசுவின் அறச்சீற்றத்தை புரிந்தவர்களாய், நாங்களும், எங்கள் பங்குத் தந்தையரோடும் பங்குப்பேரவை, அன்பியங்கள், பக்த சபைகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களோடு இணைந்து, எங்கள் பங்குத்தளத்தைப் புனிதமிகு ஆலயமாகக் கட்டியெழுப்பத் தேவையான அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? என்கிற பவுலடியாரின் வினாவினை உள்வாங்கியவர்களாய், எங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், சமூக மற்றும் பங்கு வாழ்க்கையையும் தூயதாக அமைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, October 30, 2025

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு.
 இறந்த விசுவாசிகள் அனைவர்

The urgency of All Souls Day 

இன்றைய வாசகங்கள் 

சாலமோனின்‌ ஞானம்‌ 3:1-9 
உரோமையர்‌ 5:5-11  
யோவான்‌ 6:37-40 

திருப்பலி முன்னுரை:

 அன்பிற்கினியவர்களே ! இறைநம்பிக்கையாளர்கள்‌ ஒருபோதும்‌ இறப்பதில்லை. அவர்கள்‌ எப்பொழுதும்‌ இறைவனில்‌ வாழ்கின்றார்கள்‌ என்கின்ற எதிர்நோக்கோடு வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. 
 நாம்‌ இறைவனிடமிருந்து வருகிறோம்‌. இவ்வுலக வாழ்க்கைப்‌ பயணம்‌ முடிந்ததும்‌, நாம்‌ இறைவனிடமே திரும்பிச்‌ செல்ல வேண்டும்‌. கடந்த வருடம்‌ கல்லறைத்‌ தோட்டங்களில்‌ நம்மோடு நடந்தவர்களில்‌ சிலர்‌ இந்த வருடம்‌. நம்மோடு இல்லை. இவ்வுலகம்‌ நிரந்தரமானது அல்ல என்பதையே ஒவ்வோர்‌ இறப்பும்‌, இந்த நாளும்‌ நமக்கு உணர்த்துகின்றன. நமது பெற்றோர்‌, உற்றார்‌, உறவினர்‌, நண்பர்களின்‌ ஆன்மாக்களுக்காக மன்றாட வந்திருக்கும்‌ நாம்‌, அவர்களை நன்றியோடு நினைத்துப்‌ பார்ப்போம்‌. அவர்கள்‌ வழியாக இறைவன்‌ நமக்குச்‌ செய்த அனைத்து நன்மைகளுக்காகவும்‌ நன்றி கூறுவோம்‌. நாம்‌ மன்றாடும்‌ இறைவேண்டல்களும்‌, ஏற்றுகின்ற மெழுகுத்திரிகளும்‌, ஒப்புக்கொடுக்கின்ற திருப்பலிகளும்‌ அவர்களின்‌ குற்றங்களை மன்னித்து, என்றைக்கும்‌ இறைவனை முகமுகமாகத் தரிசிக்கின்ற மாபெரும்‌ பேற்றினைப்‌ பெற இப்பலியில்‌ உருக்கமாக மன்றாடுவோம்‌. 

 முதல்‌ வாசக முன்னுரை: 

 சாலமோனின்‌ ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்‌ வாசகம்‌, இறைவனிடம்‌ நம்பிக்கை கொண்டவர்கள்‌, எத்தீங்கும்‌ நேரிடாமல்‌, கடவுளின்‌ கைகளில்‌ அமைதியில்‌ இளைப்பாறுகிவர்கள்‌, கடவுள்முன்‌ ஒளி வீசுவார்கள்‌ என்னும்‌ நம்பிக்கையைத்‌ தருகின்றது. இப்போது வாசிக்கப்படும்‌ முதல்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌. 

 பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a) 
 பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
அல்லது: (13): வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.

1.ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

2.நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

3. வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

 இரண்டாம்‌ வாசக முன்னுரை:   

இறைவனில்‌ நம்பிக்கைக்‌ கொண்டு இறந்த ஒவ்வொருவருக்கும்‌ வாழ்வு உண்டு. இறைவனோடு என்றென்றைக்கும்‌ இருக்கின்ற பெரும்‌ மகிழ்ச்சியை இயேசு கிறிஸ்து தம்‌ இறப்பினால்‌ நம்‌ அனைவருக்கும்‌ அளித்தாரெனக் கூறும்‌ இரண்டாம்‌ வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.  

 நற்செய்திக்கு முன் வாழ்த்தோலி: 

 மகனைக்‌ கண்டு, அவரிடம்‌ நம்பிக்கைக்‌ கொள்ளும்‌ அனைவரும்‌ நிலைவாழ்வு பெற வேண்டும்‌ என்பதே, என்‌ தந்தையின்‌ திருவுளம்‌. நானும்‌ இறுதி நாளில்‌, அவர்களை உயிர்த்தெழச்‌ செய்வேன்‌.   

 நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌ 

  1. வாகை சூடிய திருஅவையை நேற்றைய தினமும், துன்புறும் திருஅவையை இன்றைய தினமும் நினைவுகூர்கிற, பயணிக்கும் திருஅவையாகிய எங்களை, நீர்தாமே கண்ணோக்கியருளவும், எம்மை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரையும், பொதுநிலையினராகிய எங்களையும், இம்மையிலும் மறுமையிலும், வாழ்வித்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. திருஅவையின் மேய்ப்புப் பணியில், தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து, உம்மிடம் வந்தடைந்துள்ள திருத்தந்தையர், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், எங்களுக்குத் திருவருட்சாதனங்களை வழங்கிய மறைப்-பணியாளார்கள், எங்களின் விசுவாச வாழ்விற்கு துணை நின்று, இறந்து போன வேதியர், நற்செய்திப் பணியாளர், நல்மனம் படைத்த நல்லோர் ஆகிய அனைவரின் ஆன்மாக்களுக்கும், நீர்தாமே, முடிவில்லா பேரின்பத்தில் பங்குதர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உலக அமைதிக்காகவும், நாடுகளின் விடுதைலக்காகவும், வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும், அனைத்துத் தரப்பினரின் மாண்புக்காகவும், நல்வாழ்வுக்காகவும் உழைத்து மரித்த உலகத் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்கள், சமூகப் போராளிகள் ஆகியோரும், அறிவியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளின் மூலம், மானுட வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து மரித்துப் போனவர்கள் ஆகிய அனைவரும், விண்ணக அரசில் தமக்குரிய வெகுமதியை பெற்றிட  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் குடும்பங்களில் மரித்துப்போன எம்பெற்றோர், உறவினர், உடன்பிறந்தோர், பிள்ளைகள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரையும், எங்கள் வாழ்வு நலம்பெற உதவிய ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், படை வீரர்கள், காவலர்கள், அரசு மற்றும் தனியார் பணியாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணிகள் செய்வோர் ஆகியோரில், இறந்துபோனவர்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, அவர்களுக்கு நீர்தாமே நித்திய இளைப்பாறுதல் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
    
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இவ்வுலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, அழிந்துபோகும் செல்வங்களுக்கு அடிமைப்படாமல், அறவழியில் நடக்கவும் ‘விண்ணகமே எங்கள் தாய்நாடு’ என்கிற நம்பிக்கையோடு பயணிக்கும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாயிருக்க, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, October 23, 2025

பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு

பொதுக்காலம்  30 ஆம் ஞாயிறு 

Blog | Ebenezer Baptist Church

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சீராக் : 35: 12-14, 16-18
2திமோத்தேயு 4: 6-8, 16-18
லூக்கா 18:9-14 

திருப்பலி முன்னுரை:

திருவழிபாட்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய வார்த்தை வழிபாடு இறைவனுக்கு ஏற்புடையோரின் மன்றாட்டைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்கின்றது.
ஆண்டவர் நடுவராய் உள்ளார். அவரிடம் ஒரு தலைச்சார்பு இல்லை. அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிபுரிவரின் மன்றாட்டு முகில்களை எட்டும் என்பதைச் சீராக் ஞான நூல் எடுத்துரைக்கின்றது.  திருத்தூதர் பவுலடியார் தனது பணியை முடித்து விட்ட மகிழ்ச்சியில் ஆண்டவரின் ஆற்றல் தன்னை எவ்வாறு வழிநடத்தியது என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.
இறைமகன் இயேசு பரிசேயர் – வரிதண்டுபவர் உவமைமூலம் இறைவன் முன்னிலையில் எப்படி நம் செபங்களை அவருக்கு ஏற்புடையவனாக அமைப்பது என்று நல் ஆசானாகப் போதிக்கின்றார். தன்னையே உயர்த்தித் தம்பட்டம் அடித்துப் பெருமையுடன் செபிப்பதைக் காட்டிலும் தாழ்ச்சியுடன் தன்னைப் பாவி என்று தாழ்த்திச் செபித்த செபமே இறைவனுக்கு ஏற்புடையது. அதுவே முகில்களை ஊடுருவிச் செல்லும். இக்கருத்துகளை மனதில் பதிவு செய்து இன்றைய வழிபாட்டில் தாழ்ச்சியுடன் நம்மையே இறைவனிடம் ஒப்புக் கொடுத்து அவரின் ஆற்றலை வேண்டி நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், கைவிடப்பட்டவருக்கும் தன் நீதியை வெளிப்படுத்துகிறார். தாழ்ச்சி நிறைந்த இறைவேண்டல் வான் முகில்களை ஊடுருவிச் செல்லும் எனக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

திருப்பாடல் 34: 1-2. 16-17. 18,22
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர் பல்லவி

ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய வாசகத்தில் புனித பவுலடியார் தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறார். 'மற்றவர்கள் தன்னைவிட்டு அகன்றாலும், இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்தியதற்காக நன்றி நவில்கின்றார். விண்ணரசில் சேர்வதற்கான மீட்பைப் பெற்றுவிட்டதை நம்பிக்கையுடன் இங்குப் பதிவுச் செய்கிறார். இந்த வெற்றி வாகையைப் பகிர்ந்து கொள்ளும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌

1. நீதியுள்ள நடுவராம் ஆண்டவர், அவர் தோன்றுவாரென விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே, வெற்றியின் மணிமுடியைத் தருவார் என்கிற பவுலடியாரின் நம்பிக்கை, தாயாம் திரு அவையையும், அதன் தலைவராகத் திகழும்   திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரையும், பொதுநிலையினராகிய எங்களையும் உறுதிப்படுத்த, அந்த உறுதியுடனேயே, நாங்கள் அனைவரும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிச் சென்றிட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது” என்கிறது இன்றைய முதல் வாசகம். இறைவனிடம் உள்ள நீதியும், ஒருதலைச்சார்பின்மையும், ஏழைகள்பால் பரிவும், புலம்பெயர்ந்தார் மீது கரிசனையும், அனைவருக்குமான நீதியும், இவ்வுலகினையும் எம்நாட்டினையும் ஆள்கிற தலைவர்களிடமும், மக்கள் அனைவரிடமும் துலங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்” என்கிற சீராக் நூலின் ஞானமும், “இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்” என்கிற திருப்பாடல் வரிகளும், உடைந்த உள்ளத்தார்,  நைந்த நெஞ்சத்தார், வறுமையில் வாடுவோர், துயரில் தவிப்போர், கண்ணீரில் மிதப்போர் ஆகியோரைத் தேற்றவும்,  அனைத்து துன்பங்களிலுமிருந்தும் அனைவரும் விடுபட்டு வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” என்கிற நற்செய்தி உவமையைப் புரிந்தவர்களாய், எங்களையே   “நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும்” பரிசேயத்தனத்தைத் துறந்து, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என மன்றாடுகிற  தாழ்ச்சிநிறை உள்ளத்தை,  நீர் தாமே எங்களுக்குத் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்… விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” எனப் பவுலடியாரைப் போலச் சொல்லத் தகுந்த, நேரிய, நம்பிக்கை குன்றாத, பிரமாணிக்கம் நிறைந்த வாழ்வையும், வாழ்கின்றபோது எங்களையே பலியாகப் படைக்கிற தியாகத்தையும், வாழ்வின் இறுதிவரை நல்லதொரு போராட்டத்தில் ஈடுபடுகிற நெஞ்சுரத்தையும் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, October 12, 2025

பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு

 பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு - 19.10.2025 
அகில உலக நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு  

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 17:8-13
2திமோத்தேயு 3:14-4:2
லூக்கா 18:1-8

திருப்பலி முன்னுரை: 

அன்பு உள்ளங்களே ! தளரா மனத்துடன் நம்பிக்கையோடு செய்யும் இறைவேண்டல் நிச்சயமாகக் கேட்கப்படும் எனப் பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறுத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.  
இன்றைய வார்த்தை வழிபாடு ‘இடைவிடாத செபம் இறையருளைப் பெற்றுத் தரும்’ என்ற சீரியக் கருத்தை நமக்கு வழங்குகின்றது.
விடுதலைப் பயணநூலில் மோசேயின் கரங்கள் உயர்ந்திருந்தபோது இஸ்ரயேல் மக்கள் வெற்றியைக் கண்டனர். இறைஇயேசு உவமைகளின் மூலம் நம்மைத் தொடர்ந்து செபிக்க அழைக்கின்றார்.
கைம்பெண் தன்னுடைய விடாமுயற்சியினால் நேர்மையற்ற நடுவரிடமிருந்து நல்ல தீர்ப்பைப் பெறுகிறார். இவ்வாறு நீதியுள்ள இரக்கமுள்ள கடவுள் தம்மிடம் இடைவிடாது மன்றாடுவோரின் மன்றாட்டை நிச்சயமாக் கேட்பார் என்பது உறுதி.
இயேசு தன் பணிவாழ்வு முழுவதும் தந்தையோடு செப உறவில் நிலைத்திருந்தார். காலையிலும் மாலையிலும், ஒவ்வொரு நிகழ்வைத் தொடங்கும் முன்பும் செபித்தார். எனவே தான் திருத்தூதர் பவுல் கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் என்று! நமது கிறஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற ஆயுதங்களால் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது. இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இடைவிடாது செபிக்க, கடவுளிடம் நம்பிக்கையும், தன்னம்பிக்கையுடன் அவரை நாடவும் வேண்டிய வரங்களைப் பெற்றிட நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

முதல் வாசக முன்னுரை: 

இஸ்ரயேலர் இறைவன்மீது நம்பிக்கைக்கொண்டு தளரா மனத்துடன் மன்றாடியபோது இறைவன் அவர்கள் பக்கம் இருந்து வெற்றி அளித்தார். நாமும் இறைமீதான நம்பிக்கையுடன் தளரா மனம் கொண்டு வாழவும் செயல்படவும் வரம் வேண்டி முதல் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம். 

பதிலுரைப் பாடல்: 

திபா 121:1-2, 3-4, 5-6, 7-8 
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி. 
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்: உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதும் இல்லை. பல்லவி
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்: அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது: இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை: 

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவை எந்தச் சூழ்நிலையிலும் தளரா மனத்துடன் இறைவார்த்தையை கற்றுக்கொண்டு, அதில் நிலைத்து நின்று, நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: 

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. உலகளாவிய மறைபரப்பு ஞாயிறாகிய இன்று, இரண்டாம் வாசகம் கூறுவதுபோல “மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்கவல்ல திருமறையை” அறிக்கையிடுதலிலும், சான்று பகர்தலிலும், முதன்மையாய் விளங்குகிற எம்திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரும், அதே அழைத்தலில் பங்குபெறுகிற பொதுநிலையினராகிய நாங்களும், உறுதியாய் பயணிக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “மோசே தம் கையை உயர்த்தியிருந்த போதெல்லாம் வெற்றியடைந்த இஸ்ரயேலரின்” அனுபவம், இறை அருள் இல்லாமல், தீமைமீது வெற்றியும், நிலையான அமைதியும் சாத்தியமில்லை என்பதை உணர்த்துகிறது. உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், குடிமக்களாகிய நாங்களும், இறைவனை நாடுகிற, இறைஅரசுக்குரிய விழுமியங்களைப் பின்பற்றுகிற மனிதர்களாக, விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவார்த்தையை அறிவி” எனத் திமொத்தேயுவுக்குத் திருத்தூதர் பவுல் எழுதிய வார்த்தைகளையே, தங்கள் வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு, மறைப்பணித் தளங்களிலும், வேதபோதக நாடுகளிலும், துன்புறுத்தலும் வேதனைகளும் நிறைந்த இடங்களிலும், துணிவுடன் அருள் பணியாற்றும், குருக்கள், துறவியர், மற்றும் நற்செய்தி பணியாளர்கள் அனைவருக்கும், நீர்தாமே அரணும் கோட்டையுமாக இருந்து, திடமும் பலமும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை. ஆண்டவரே எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; போகும்போதும், வரும்போதும், இப்போதும், எப்போதும் காத்தருள்வார்” என்கிற திருப்பாடல் வரிகளால் திடம்பெறுகிற நாங்கள் அனைவரும், இந்த யூபிலி ஆண்டில் மட்டுமல்லாது, எம்வாழ்க்கை முழுவதுமே, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், மானிட மகன் வரும்போது மண்ணுலகில் காண விரும்புகிற, நம்பிக்கையைக் கொண்டவர்களாய் விளங்கவும், கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும், நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளதாகத் திகழுகிற இறைவார்த்தையை, நாங்களும், எங்கள் பிள்ளைகளும் குடும்பங்களும், உறுதியாய் பற்றிக்கொண்டு வாழுகிற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, October 6, 2025

பொதுக்‌ காலம்‌ 28ஆம்‌ ஞாயிறு

 பொதுக்‌ காலம்‌ 28ஆம்‌ ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2அரசர்கள் 6:14-17
2திமோத்தேயு 2:8-13
லூக்கா 17:11-19

திருப்பலி முன்னுரை

அன்பு உள்ளங்களே ! நாம்‌ இறைவனிடம்‌ பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூறவும்‌, இறைவனுக்கு என்றும்‌ நன்றியுள்ளவர்களாக வாழவும்‌ பொதுக்காலம்‌ 28 ஆம்‌ ஞாயிறுத்‌ திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
நன்றியுணர்வு என்பது ஆழமான இறைநம்பிக்கையின்‌ அடையாளம்‌. அது அனைத்து நன்மைகளும்‌ இறைவனிடமிருந்தே வருகின்றன என்னும்‌ உறுதியைத்‌ தருகின்றது. மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படைத்‌ தகுதி நன்றி நிறைந்த உள்ளம்தான்‌. நமக்குக்‌ கிடைத்த நிறைய நலன்களையும்‌ கொடைகளையும்‌ பற்றி எண்ணாமல்‌, கிடைக்காத ஒரு சிலவற்றை நினைத்துக்‌ கவலைப்பட்டுக்‌ கொண்டிருக்கிறோம்‌. நன்மைகளை எண்ணிப்‌ பாருங்கள்‌ (Count your Blessings) என்பது ஓர்‌ அழகான ஆங்கிலச்‌ சொற்றொடர்‌. தொழுநோயிலிருந்து குணம்‌ பெற்ற நாமான்‌, எலிசாவுக்கு நன்றி சொல்லிக் கைம்மாறு செய்ய வருவதை இன்றைய முதல்‌ வாசகத்திலும்‌, இயேசுவால்‌ குணம்‌ பெற்ற பத்து தொழுநோயாளருள்‌ சமாரியர்‌ ஒருவர்‌ மட்டுமே வந்து நன்றி சொல்வதை இன்றைய நற்செய்தி வாசகத்திலும்‌ வாசிக்கிறோம்‌.
நாம்‌ இதுவரைப்‌ பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு என்றும்‌ நன்றி கூறும்‌ உள்ளத்தை நமக்குத்‌ தந்திட மன்றாடி இத்திருப்பலியில்‌ பங்கேற்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை: 

எலிசாவின் வாக்கிற்கு இணங்கி, தனது வேலைக்காரனின் வேண்டுதலின் பேரில் சிரியா நாட்டு அரசனின் படைத்தலைவனான நாமான் யோர்தான் ஆற்றில் ழுழ்கித் தன் தொழுநோயிலிருந்து விடுதலைப் பெற்றான். வேற்றினத்தவரான நாமான் யாவே ஒருவரே கடவுள். உண்மையின் கடவுள் என்று நம்பினான். எது உண்மை? பலி அல்ல. கீழ்படிதலே சிறந்தது எனக் கூறும் இரண்டு அரசர்கள் நூலிலிருந்து எடுக்கப்பட இம்முதல் வாசகத்திற்கு உள்ளம் திறந்துச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல் 98: 1. 2-3-4
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

இன்றைய இரண்டாவது வாசகத்தில்," இயேசுகிறிஸ்து தாவீதின் வழி வித்து எனவும், இறந்த இயேசுகிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்” என்பது தனது நற்செய்தியென அறிவிக்கிறார். எனவே தன் வேதனைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் இயேசுகிறிஸ்துவுக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் புனித பவுலடியாரின் மனநிலை நமக்குள் நிலைக்கவும், இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவராலும் ஒருபோதும் சிறைபடுத்த முடியாது என்பதையும் உணர்ந்தவர்களாய் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வரும் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச்‌ சூழ்நிலையிலும்‌ நன்றி கூறுங்கள்‌. உங்களுக்காகக்‌ கிறிஸ்து இயேசு வழியாய்க்‌ கடவுள்‌ வெளிப்படுத்திய திருவுளம்‌ இதுவே. அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. “தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும், அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும், கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு”, திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரும், பொதுநிலையினராகிய நாங்களும், மக்களினத்தார் காண, எம்சொல்லாலும், செயலாலும், வாழ்வாலும், உமது மீட்பினை பறைசாற்றிட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. வேற்று நாட்டையும் இனத்தையும் சார்ந்த நாமானின் நோயைக் குணமாக்கி, “உலகெங்குமுள்ள அனைவரும் கடவுள் அருளிய விடுதலையைக்” காணச்செய்த இறைவா! உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், அனைத்துலக மக்களும், இன, மத, மொழி வேறுபாடின்றி, அனைவரையும் ஏற்று வாழவும், பகைமைக்கு இடம் தராமல், ஒன்றுபட்ட மானுடத்தை உருவாக்க உழைக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்” என்கிற நம்பிக்கையில், திருமுழுக்கு பெற்றுள்ள அனைவரும், இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழவும், வாழ்க்கையின் முடிவில் விண்ணக பேற்றினை அடையவும், எம்குடும்பங்களிலும், திரு அவையிலும் வாழ்ந்து மரித்த அனைவரும், நிலைவாழ்வின் பேரின்பத்தை அனுபவிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கடவுளைப் போற்றிப் புகழவும், பெற்ற நன்மைக்கு நன்றி கூறவும் மனமில்லாதவர்களைக் கண்டு வருந்திய இறைவா! நன்றி மறந்தோரையும், நன்மைக்குப் பதில் தீமை செய்வோரையும், உமக்கும், பிறருக்கும், குறிப்பாக எங்களை வாழ்வில் உயர்த்திய பெற்றோர், பெரியோர், ஆசிரிய பெருமக்கள் போன்றோருக்கும் நன்றி மறந்த எங்களையும், நீர் மன்னித்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்” என்கிற பவுலடியாரின் அறிவுரைப்படி, எல்லா காலத்திலும், உமக்கும் பிறர்க்கும், நன்றியுள்ளவர்களாய் வாழவும், துன்பத்திலும் துயரத்திலும் மட்டுமே உம்மை நினைவு கூர்ந்து, உம்மிடம் ஓடி வருபவராய் இல்லாமல், எங்கள் வெற்றிகளிலும், மகிழ்ச்சியான தருணங்களிலும், ‘நன்மைகள் அனைத்தின் ஊற்றும் நீரே’ என்பதை உணர்ந்து, நன்றியுணர்வுடன் வாழ அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.