பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்
இணைச்சட்ட நூல் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37
திருப்பலி முன்னுரை:-
பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு மிக அருகில் உள்ள இறைவன், அயலான் இவர்களை உணர்ந்துக்கொண்டு நிலைவாழ்வு எவ்வாறு நம்மில் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய நமக்கு எடுத்துரைக்கின்றன.
இஸ்ரயேல் மக்களுக்கு 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். புனித பவுலடியார் கூறுகிறார். ”விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள கடவுள்தன்மையைத் தொட்டுணர்ந்து நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.”
திருச்சட்ட அறிஞர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கில் 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டக் கேள்வியின் மூலம் நமக்கு வெகு அருகாமையில் உள்ள அயலானை அடையாளம் காட்டுகிறார். இதன் மூலம் மூன்று வித அன்பைப் பதிவுச் செய்கிறார். இந்த அன்பு நம்மில் நிறைவாய் இருந்தால் நிலைவாழ்வு நமக்கு வெகு அருகிலே! என்ற எண்ணங்களைத் தாங்கியவர்களாய் முழு 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' இத்திருப்பலியில் பங்குக்கொள்வோம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...
வாசக முன்னுரை:-
முதல் வாசக முன்னுரை:-
சட்டம் சுட்டிக்காட்டுபவை இரண்டே இரண்டுதான். ஒன்று இதைச் செய்; மற்றொன்று இதைச் செய்யாதே. சட்டத்தை இறைப்பார்வையில் திருப்புவது மனச்சான்று. மனச்சான்று எப்போதும் மனிதத்தை உயர்த்திப் பிடிக்கக் குரல் கொடுக்கும். சட்டம் அதன் குரலைக் கேட்கும் தூரத்தில்தான் உள்ளது;
தொலைவில் இல்லையெனத் துள்ளியமாகக் கூறும் இணைச்சட்ட வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!
திபா. 69: 13,16,29-30,35,36
1. ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். பல்லவி
2. ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி
3. எளியோன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி
4. கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:-
கிறிஸ்துவைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து உண்மைகளை உள்ளடக்கிக் கிறிஸ்து இயலாகத் திருத்தூதுப் பவுல் சுருக்கமாக
கொலோசையருக்கு வழங்கும் பகுதியை இன்றைய வழிபாடு நமக்கு இரண்டாம் வாசகமாகத் தந்துள்ளது. இதனைக் கூர்ந்து கவனித்துக்கேட்டு நாமும்
கிறிஸ்துவைப் பறைசாற்றுபவர்களாக வாழ்வோம
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-
1. தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரையும் படைத்தவரும், அனைத்துக்கும் முந்தியவருமான ஆண்டவரே, திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், இறைமக்களாகிய எங்களையும், நீர் தாமே நிறைவாக ஆசீர்வதித்து, தூயதோர் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கவும், இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் திருவுளம் கொண்ட ஆண்டவரே, அமைதியை இழந்து தவிக்கும் இந்த அவனிக்கு, உண்மையான சமாதானத்தை தந்தருள வேண்டுமென்றும், தலைவர்களும், குடிமக்களும், பகைமைகள், பேதமைகளை மறந்து, ஒன்றுபட்டு வாழவும், உயரவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. இன்றைய இரண்டாம் வாசகத்தில் “அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன” என்று பவுலடியார் கூறுவதன் பொருளை உணர்ந்தவர்களாய், நாங்கள் எங்கள் குடும்பங்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும், உமக்கு உரியவர்களாகவே வளர்த்தெடுக்க வேண்டுமென்றும், எங்கள் பங்குகளும், பங்கு குருக்களும், பங்குப்பேரவை உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அன்பியங்களும், உமக்காகவே இயங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்து, அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடித்து, முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வந்து, இறை மனித உறவுகளில் புனிதம் பெறத் தக்க வகையில், வாழ்வதற்கான வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வதும், தம்மைப்போலவே அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வதும்தான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வதற்கான வழி என்பதை உறுதிப்படுத்திய ஆண்டவரே, அனைத்திற்கும் மேலாக உமக்கும், அதன் நீட்சியாக எம்மை அடுத்திருப்போருக்கும், முதன்முதலில் எம்குடும்பத்தாருக்கும், சிறப்பாக வயது முதிர்ந்தோருக்கும், எங்களது முழுமையான அன்பை காட்டுகிற வண்ணம், எங்கள் செயல்களும் வாழ்க்கையும் அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.