Wednesday, March 26, 2025

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

 தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:

 யோசுவா 5:9,10-12
2 கொரிந்தியர் 5:17-21
லூக்கா 15:1-3, 11-32

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுத் திருப்பலியைக் கொண்டாட வந்துள்ள அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
முதல் வாசகத்தில் மகிழ்ச்சி / பாஸ்காக் கொண்டாட்டமாகவும், இரண்டாம் வாசகத்தில் ஒப்புரவாகவும், / நற்செய்தி வாசகத்தில் இல்லம் திரும்புவதாகவும் / முன்வைக்கப்பட்டுள்ளது. என்னை நோக்கி நான் திரும்பினாலே, / இறைவனை நோக்கிய, / பிறரை நோக்கிய திருப்பம் சாத்தியமாகிவிடும். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு அன்புடன், நட்புடனும் வாழ முற்படும் போதுதான் நாம் நம் மனமாற்றத்தின் நிறைவைக் காண்கிறோம்.

இழந்த உறவை மீண்டும் சரிசெய்யவே இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். காரசாரமான நம் வார்த்தைகள் எத்தனை உறவுகளை முறித்திருக்கின்றன எனச் சிந்திப்போம். முறிந்த உறவுகள் மீண்டும் இணையும்போது அங்கே இறைவனின் பிரசன்னமும் தோன்றுகிறது. ஏனென்றால் அன்பு எங்கே உள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் என்பதை உணர்ந்திடுவோம். இந்தத் தவக்காலம் நம்மில் வீழ்ந்துக் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மிலே மனமாற்றம் காணவும், அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் நல்ல உள்ளத்தை நமக்குத் தர வேண்டியும் இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டை விட்டுப் புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள், யோசுவாவைப் படைத்தலைவராகக் கொண்டு யோர்தானைக் கடக்கின்றனர். பாலும். தேனும் பொழியும் கானான் நாட்டில் அவர்கள் கால் பதித்தவுடன் கில்காலில், எரிகோ சமவெளியில் இஸ்ரயேலர் கொண்டாடும் இரண்டாம் பாஸ்காத் தான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் கொண்டாடும் முதல் பாஸ்கா. இந்த மகிழ்ச்சியில் நாம் இன்றைய முதல் வாசகத்தை வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்:

திபா 34: 1-2. 3-4. 5-6
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பணி என்பது ஒப்புரவாக்கும் பணி என்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு மனம் திறக்கும் பவுலடியார், அந்த ஒப்புரவு என்றால் என்ன? அந்த ஒப்புரவுப் பணியில் மக்கள் மற்றும் தன் பங்கேற்பு என்ன? என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். 'தடைபட்ட உறவு மீண்டும் சரிசெய்யப்படுவதே ஒப்புரவு. கடவுள் தன் கொடையாக ஒப்புரவை நமக்கு வழங்கினாலும், அந்த ஒப்புரவிற்கு நம்மையே நாம்தான் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். ஒப்புரவை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திருத்தூதர் கூறும் இந்த அறிவுரையைச் சீரியமுறையில் மனதில் பதிவு செய்வோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கிறிஸ்துவின் வாயிலாக, நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கிய கடவுள், அதே ஒப்புரவாக்கும் திருப்பணியைத் தமது திருஅவை மூலமாகத் தொரடர்கிறார். கிறிஸ்துவின் தூதுவர்களாய் விளங்கும் திருத்தந்தை உள்ளிட்ட அருள் பணியாளர்கள் அனைவரும், தங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள ஒப்புரவாக்கும் திருப்பணியைக் குறையின்றிச் செய்யவும், இறைமக்கள் யாவரும், நிறைவாழ்வை நோக்கிய எதிர்நோக்கின் திருப்பயணத்தை, ஒப்புரவின் காலமாகிய இந்தத் தவக்காலத்தில், சிறப்பாக மேற்கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடியதை விவரிக்கும் முதல் வாசகம் கூறுவதுபோல, மாந்தர் அனைவரும், நிலத்தின் விளைச்சலை உண்டு மகிழவும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெற்று நிறைவான வாழ்வு வாழவும், எம்வீட்டிலும், நாட்டிலும், அகில உலகிலும், அமைதி நிலவவும், எல்லாரும் எல்லாம் பெற்று இனிதாக வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்” என்கிற இன்றைய திருப்பாடல் வரிகளின்படி, துயருறுவோரின் துயர் நீங்கவும், வறியோரின் வறுமை விலகவும், பிணியுற்றோரின் பிணி நீங்கவும், நோயுற்றோர் நலம் பெறவும், தேவையில் இருப்போரின் தேவைகள், உம்மால் சந்திக்கப்படவும், யார் யாரெல்லாம் எதற்காக வேண்டுகிறார்களோ, அவை எல்லாம் நிறைவேற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை” என்கிற திருப்பாடல் வரிகள், இன்றைய நற்செய்தியில் வருகிற ஊதாரி மைந்தன் வாழ்விலே நிஜமானது போல, இங்கே கூடியுள்ள எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழவும், அப்படிப்பட்ட மறுவாழ்வு வாய்த்திட “எழுந்து என் தந்தையிடம் செல்வேன்” என்றுரைத்துச் செயல்படும் மனமாற்றத்தின் ஆவியை நாங்கள் பெற்றிட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, March 17, 2025

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு-ஆண்டு 3

 தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
1கொரிந்தியர். 10:1-6,10-12
லூக்கா:- 13: 1-9

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்பு வாழ்த்துக்கள்! நம் கடவுள் இரக்கத்தின் கடவுள். தண்டனையின் இறைவன் அல்ல. மாறாக மன்னிப்பின் இறைவன். எனவே பிறர் வழியாக இறைவன் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அலட்சியம் செய்யாமல் அக்கறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார்.
இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக் கூடாது. அத்திமரத்திற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இன்றும் நம் ஆண்டவர் நமக்குத் தருவதை நன்கு பயன்படுத்திக்கொள்வோம். ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்தவர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம். அப்போது தான் இந்தத் தவக்காலம் நமக்கு இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக அமையும். அதற்காக இன்றைய திருப்பலி வழிப்பாட்டில் வரம் வேண்டிப் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல்வாசகத்தில் வித்தியாசமான கடவுளை அஃதாவது உணர்வுள்ள, மக்களின் துயர்கண்டுத் துடிக்கிற கடவுளைக் காட்டுகிறது. மோசே கடவுளின் வெளிப்பாட்டைக் காண்கிறார். இறைவனின் குறுக்கீட்டால் அவரின் பணி மாற்றம் அடைகிறது. மேலும் அவர் இனி தனக்கென வாழப் போவதில்லை ஒட்டுமொத்த இஸ்ரயேலரின் குடும்பங்களுக்காக. கடவுளுக்கும், மோசேக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் இறைவனின் வெளிப்பாடும், அழைத்தலும் அமைந்துள்ள முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

`கிறிஸ்துவே அப்பாறை!' எனக் கிறிஸ்துவின் மேன்மையை முன்வைக்கின்றார் திருத்தூதர் பவுலடிகளார். இரக்கம் நிறைந்த கடவுளின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற நற்கனித் தராவிட்டால் இஸ்ரயேல் மக்களுக்கு நேரிட்ட அதே அழிவு நமக்கும் நேரிடும் என்று எச்சரிக்கின்றார். `எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடிப் பார்த்துக்கொள்ளட்டும்!' என்று கூறும் இந்தப் பவுலடிகளாரின் அறிவுரைக்குக் கவனமுடன் செவிய்மெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்

`மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது,’ என்கிறார் ஆண்டவர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. எரியும் முட்புதரிலிருந்து ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்று உம்மை வெளிப்படுத்திய கடவுளே, எம்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலனில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிற வேளையில், அவர்களுக்குப் பூரண உடல் நலம் தரும்படியாகவும், இறைமக்களை உள்ளடக்கிய திருஅவை முழுவதுமே, நல்லாயனின் பின்னே அணிவகுக்கும் ஆடுகள்போல, எதிர்நோக்கின் திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “அவர்களின் துயரங்களை நான் அறிவேன். அவர்களை விடுவிக்கவும், நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.” எனக்கூறி இஸ்ராயேல் மக்களின் விடுதலைப் பயணத்தில் உடனிருந்து வழிநடத்தியவரே, அமைதியிழந்து தவிக்கும் இவ்வுலகிற்கு நிலையான அமைதி தரவும், பல்வேறு இன்னல்களால் அவதியுறும் உலக நாடுகள் நல்வாழ்வை நோக்கி நகரவும், எம்தாயகமாம் இந்திய தேசமும், நீதியின் வழியில், சமத்துவம் நோக்கிப் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கிறிஸ்து என்கிற ஆன்மீகப் பாறையிலிருந்து, ஆன்மீகப் பானத்தைப் பருகியும், ஆன்மீக உணவை உண்டும் வருகிற நாங்கள் அனைவரும், தீயனவற்றில் ஆசை கொண்டு, அழிவு விளைவிக்கும் முணுமுணுப்பின் பாதையில் பயணித்த இஸ்ரயேலரைப் போல் அல்லாமல், கடவுளுக்கு உகந்தவராய் எம்வாழ்க்கைப்பயணத்தைத் தொடரவும், குறிப்பாகத் தேர்வு காலத்தில் இருக்கும் எம்குழந்தைகள் அனைவரும், உல்லாசத்தைத் துறந்து, உற்சாகமாய் உழைத்து, வெற்றி நோக்கிப் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கனி கொடுக்கத் தவறினாலும், எம்மை வெட்டி வீழ்த்தாமல், விட்டுவைத்து, இன்னொரு ஆண்டையும், மற்றொரு தவக்காலத்தையும் தந்துள்ள இறைவா, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இந்த அருள் தரும் காலத்தைச் செவ்வனே செலவிட்டு, மனமாற்றத்தின் பாதையில் பயணிக்க அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. ஞானத்தின் இருப்பிடமே இறைவா! தங்கள் கல்வியாண்டு இறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருக்க எங்கள் பிள்ளைகள் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் சிறப்பாகவும், விவேகத்துடன் செயல்பட்டு, தங்கள் உழைப்பின் வெற்றிக் கனியைச் சுவைத்திடவும், அவர்களின் அடுத்தக் கல்வியாண்டுச் சிறப்புடன் அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்…

www.anbinmadal.org


Print Friendly and PDF


Thursday, March 13, 2025

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

 தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

தொடக்க நூல் 15:5-12,17-18
பிலிப்பியர். 3:17-4:1
லூக்கா 9:28-36

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!. புயலுக்குப் பின் அமைதி, இரவுக்குப் பின் பகல், துன்பத்திற்குப் பின் மகிழ்ச்சி என்பதைப் போல் இயேசுவின் பாடுகளுக்குப் பின் மகிமை உண்டு என்ற ஆழ்ந்தப் பொருள் நிறைந்த நம்பிக்கையை நாம் மனதினில் பதிவு செய்கிறது இன்றைய வாசகங்கள். மலையின் மேல் ஏறி ஓர் ஆன்மீகதேடலைத் தேடுவதை நம் நாட்டில் எப்பொழுதும் காணலாம். அன்று இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இந்த நிகழ்வுகள் உண்டு என்பதை விவிலியத்தில் காணலாம். தாபோர் மலையில் திருத்தூதர்கள் அடைந்த ஆன்மீக தெய்வீக நிகழ்வின் மகிழ்ச்சி என்றும் நம்மில் நிறைந்திருக்கட்டும்.

மகிழ்ச்சியான தாபோர் மலைக்கும் துன்பமான கெத்சமணித் தோட்டத்திற்கும் அதே சீடர்களை அழைத்துச் செல்கிறார். அதுபோல அன்றாட வாழ்வில் பல மகிழ்ச்சியான ஆறுதலான நேரங்களில் இறைவன் நம்மை உறுதிப்படுத்துகிறார். சந்திக்கவிருக்கும் துன்பங்களைத் தாங்கும் சக்தியைத் தருகிறார். ஆனால் நாம் அதைப் பலமுறை கண்டுகொள்வது கிடையாது. துன்பங்கள் மட்டுமே நமக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது. எந்நாளும், எந்நேரமும் நம்மை வழிநடத்தும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம். காற்றில் ஆடும் நாணலைப் போல் நாமும் இயேசுவோடு இணைந்திருந்தால் அச்சம் என்பதில்லை நம் வாழ்வில்! எனவே இன்பத் துன்பங்களை ஏற்றுக் கொண்டு இயேசுவோடு இரண்டறக் கலந்து வாழ வேண்டி அருள் வரங்கள் இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

புதியநாட்டைப் பெற்ற ஆபிராமுடன் இறைவன் செய்யும் இந்த உடன்படிக்கையில் மூன்று நிகழ்வுகள் உள்ளன. வாக்குறுதி, அடையாளம், கீழ்ப்படிதல். விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்ற வாக்குறுதி. உடன்படிக்கையின் அடையாளமாக இரண்டு பாறைகளின்மேல் ஆண்டவரின் கட்டளைப்படி ஆபிராம் விலங்குகளை வெட்டி வைக்கின்றார். 'ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்'. இதுதான் ஆபிராமின் கீழ்ப்படிதல். இவ்வாறு கடவுளின் உடன்படிக்கையையும், ஆபிராமின் கொண்ட நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 27: 1,7-8,9-13-14
பல்லவி: ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்க அடைக்கலம். யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? -பல்லவி

ஆண்டவரே நான் மன்றாடும்போது என் குலரைக் கேட்டருளும். என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ”புறப்படு அவரது முகத்தை நாடு” என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். -பல்லவி

உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும். -பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.-பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாவது வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார் என்று அவரின் அன்பைப் பதிவு செய்கின்றார்.நாம் நமது தன்னல வாழ்வுக்குள் இறந்துப் புதைக்கப்பட்டால் தான் வேற்றுரு பெற்றுக் கிறிஸ்துவைப் போல உயிர்த்தெழ முடியும். தன் மக்கள்மீது அவருக்குள்ள அன்பை உச்சிமுகர்ந்துக் கொண்டாடும் அவர் "ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்" என்று திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த அறிவுரைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது "என் அன்பார்ந்த மைந்தர் இவரே! இவருக்குச் செவிசாயுங்கள்"

நம்பிக்கையார்களின் மன்றாட்டுகள்

1. ஆண்டவரின் தோற்றமாற்ற நிகழ்வை விவரிக்கும் நற்செய்தியிலே “நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்”, என்று சொல்லப்பட்டதை நினைவில் கொண்டு, ஆண்டவராகிய இயேசுவுக்கும், அவரின் பிரதிநிதியாகிய திருத்தந்தைக்கும் ஏனைய தலைவர்களுக்கும், செவிகொடுக்கும் மக்களாக நாங்கள் விளங்கவும், உடல் நலிவுற்றிருக்கும் எம்திருத்தந்தை, முழு உடல் நலம் பெற்று நீடு வாழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்
.
2. “நமக்கோ விண்ணகமே தாய்நாடு” என்றாலும், இம்மண்ணில் வாழ்கிற நாள்வரையில், நாட்டிற்கு உகந்த குடிமக்களாக வாழ வேண்டிய கடமையுணர்ந்து நாங்கள் செயலாற்றவேண்டுமென்றும், உலகத் தலைவர்களும், எம்நாட்டுத் தலைவர்களும் அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகிய விழுமியங்களைப் பேணிக்காக்கிறவர்களாக விளங்கவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்கிற முதல் வாசக கூற்றுப்படி இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எல்லா வேளையிலும், குறிப்பாக இந்த யூபிலி ஆண்டுத் தவக்காலத்திலும், நம்பிக்கையில் நிலைத்திருந்து, ஜெப, தவமுயற்சிகளிலும், பிறரன்புச் செயல்களிலும் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவல்ல இயேசுவின் பாதையில் பயணித்து, “ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்” என்கிற திருப்பாடல் வரிகளை உள்வாங்கியவர்களாய், அவரது திருமுகத்தையே நாடி, யாருக்கும் அஞ்சிடாத வாழ்க்கை வாழ்ந்திடத் தேவையான அருள்தர வேண்டுமென்றும், இறந்த அடியார்கள் அனைவரும் வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் கண்டிடவேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, March 4, 2025

தவக்காலம் முதல் ஞாயிறு - ஆண்டு-3

தவக்காலம் முதல் ஞாயிறு - ஆண்டு-3

James J. Tissot, 'Jesus Carried Up to a Pinnacle of the Temple' (1886-94), gouache on gray wove paper, 8.75 x 6.25 in. Brooklyn Museum, New York.

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

இணைச் சட்டம் 26:4-10
உரோமையர் 10:8-13
லூக்கா 4:1-13

திருப்பலியின் முன்னுரை:

இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் வரவு நல்வரவு ஆகுக. வருடம் ஒரு முறை, திருஅவை இயேசுவின் பாடுகளை மனதில் சிந்தித்து நம்மை மனமாற்றத்திற்கு மீண்டுமாய் அழைக்கிறது.

இறை மனித உறவைப் புதுப்பிக்கும் காலம். இருகிப்போன இதயங்கள் அன்பில் மீண்டும் துளிர்க்கும் காலம். ஆணவமும், சுயநலங்களும் களையப்பட்டுப் புதிய வாழ்வுப் பெற அழைக்கப்படும் காலம். நாற்பது நாட்கள் என்ற காலக்கட்டம் விவிலியத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பின்னிப்பிணைந்துள்ளதை நாம் காணலாம். இந்த நாற்பது நாட்களின் முடிவில் கிடைத்த வெற்றி அனுபவங்களை நாமும் பெற்று மகிழ அழைக்கப்படுகிறோம்.

எதற்காக இயேசு 'எங்களுக்குச் சோதனைகள் வேண்டாம்' என்று கற்பிப்பதற்குப் பதில் 'எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்' என்று இறைவேண்டலைக் கற்பிக்கின்றார். நன்மையும், அன்பும் உருவான எல்லாம் வல்லக் கடவுள் ஏன் தீமையை அனுமதிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் நம் உள்ளத்தில் எழக்கூடியவை. இந்தக் கேள்விகளுக்குப் பதிலாக வருபவை அல்ல இயேசுவின் சோதனைகள். இதை ஒரு பாலைவன நிகழ்வாக மட்டும் பார்க்காமல் நம் உள்ளத்தில் நிகழும் நன்மைக்கும் - தீமைக்கும் எதிரான போராட்டமாகவும் பார்க்கலாம்.

சாத்தனின் போராட்டங்களை வென்று வெற்றிப் பெறுவோம். இவற்றிக்குத் தேவையான இறையருளையும் சாத்தனை வெல்ல உறுதியான மனத்திடத்தையும் வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:-

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் இறைவன் தமக்குச் செய்த உதவிகளை நினைத்துத் துணை நின்று கடவுளுக்கு  நன்றிக் கடன் செலுத்துவதைக் காட்டுகிறது. நாடோடிகளாக புலம் பெயர்ந்த மக்கள் தாங்கள் சந்தித்த துன்பங்களின் மத்தியிலும், சிறுமைகளின் போதும் வலிய கரத்தாலும் ஒங்கிய புயத்தாலும் இறைவன் தங்களை காத்ததை நினைத்துக் கண்ணீர் சிந்தி நன்றி செலுத்துகின்றனர்.  இவ்வாறு இஸ்ராயேல் மக்கள் இறையருளைப் பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கும் முதல் வாசகமான இணைச்சட்டம் நூல் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15
பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். -பல்லவி

தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். -பல்லவி

உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர். சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். -பல்லவி

அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்;அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்;அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்'. -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-  

நம்பிக்கை ஒற்றை வாக்கியம்தான்: 'இயேசுவே ஆண்டவர்.' பழைய ஏற்பாட்டில் இறைவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவித்து, பாலும், தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றார். புதிய ஏற்பாட்டு இறைவன் பாவம் என்னும் அடிமைத்தனம் விடுத்து, மக்களைப் புதிய வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். இயேசுவில் கடவுள் இன்னும் அதிகம் நெருங்கி வருகின்றார் மனுக்குலத்தோடு. இயேசுவின் வருகை மனிதர்நடுவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் அழித்துவிடுகிறது. இவற்றை உணர்த்தும்  திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த இறைவார்த்தைகளை நம்பிக்கையுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும்  வாழ்வர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அருஞ்செயல்களாலும், தாம் தெரிந்தெடுத்த இஸ்ராயேல் இனத்தைப் பாதுகாத்து வழிநடத்திய கடவுள், அவர் தாமே தேர்ந்தெடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பாதுகாத்து, பரிபூரண உடல் நலத்தையும், திருஅவையைத் திறம்பட வழிநடத்த தேவையான திடனையும் தந்திட வேண்டுமென்றும், பல்வேறு நிலைகளில் பணியாற்றும் திருஅவைத் தலைவர்களையும் இறைமக்களையும், தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தாருக்கு பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை வாக்களித்து வழிநடத்திய கடவுள், போர்களாலும், வன்முறைகளாலும், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளாலும் இன்னலுறும் இவ்வுலகையும், சிறப்பாக எம்தேசத்தையும், கனிவோடு கண்ணோக்கி, உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர்களாகவும், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்களாகவும் மாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தாரென உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவோம்” என்கிற மறையுண்மையை இந்தத் தவக்காலத்தில் ஆழமாய் உணர்ந்து, அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும், அளவற்ற நலன்களைப் பொழிகிற அவர்மீது நம்பிக்கை கொண்டவர்களாய், ஜெபம், தவம், நற்செயல் ஆகியவற்றில் நிலைத்திருக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என்பதைப் புரிந்தவர்களாய், கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்திடவும், எம்சிந்தனை, சொல், செயல் ஆகிய அனைத்திலும் கடவுளையே மகிமைப்படுத்தும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் திகழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Wednesday, February 26, 2025

பொதுக்காலம் ஆண்டின் எட்டாம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் எட்டாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சீராக் ஞானம் 27-4-7
1கொரிந்தியர் 15: 54-58
லூக்கா 6: 39-45

திருப்பலி முன்னுரை

பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உவமையின் வாயிலாகப் பல அறிவுரைகளை நம் மனதில் பதிவு செய்கின்றார். நாம் அடிக்கடிப் பிறருடைய குற்றங்களை மிகைப்படுத்தி அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமையில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. ஏனெனில் நம்மிடத்தில் கணக்கற்ற குற்றங்கள் உள்ளன. முதலில் நம் கண்ணில் உள்ள மரக்கட்டயை எடுத்துவிட்டு அதன்பின் மற்றவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க முன்வர வேண்டும். தனது நிலையை அறியாமல் அடுத்தவர்களைக் குறைகூறும் மனிதர்கள் ஒரு விதத்தில் மனநோயாளிகள் எனலாம்.

தன்னையே முழுவதும் அறிவதுதான் வாழ்க்கையின் முதற்படி. தன்னை முழுமையாகப் புரிந்தவன் பிறரையும் புரிந்துக் கொள்வான். ஒருவன் தன்னையே நன்கு புரிந்து கொண்டால் தான்  நிறை, குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். தான் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவன் தான் பிறருக்கு வழிகாட்ட முடியும். இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவதே மேல் என்பதை உணர வேண்டும்.

தன்னிடம் இருக்கும் தவற்றை அறியாது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று அதிகம்.முதலில் நாம் திருந்துவோம்; பிறகு மற்றவர்கள் திருந்த அறிவுரைகள் சொல்வோம், வழிக் காட்டுவோம். இத்திருப்பலியில் உளமாறக் கலந்து மாற்றம் காண்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

மனிதனுடைய வார்த்தைகள் தான் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. "சல்லடையில் சலிக்கின்றபோது உமி தங்கிவிடுவது போல, மனிதரின் பேச்சில் மாசு படிந்து விடுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கின் ஞான நூல் நாம் பேசுவதற்கு முன்னால் நம்மையே நாம் சோதித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. இதனைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி
அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;  `ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுலடியார் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வழியாக அவர்களுக்குச் சாவைப் பற்றி ஏற்பட்ட அச்சத்தை நீக்குகிறார். எப்படியொரு விதையானது மண்ணில் மடிந்து மீண்டும் உயிர் பெற்று எழுகிறதோ அதைப் போல் நாமும் கிறிஸ்துவில் மரித்து இறுதிநாளில் சாவை வெற்றிக் கொண்டு அவரைப் போல உயிர்த்தெழுவோம் என்று நம்பிக்கைத் தரும் அவரின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ‘ஆண்டவருக்காக உழைப்பது வீண் போகாது’ என்கிற பவுலடியாரின் வார்த்தைகள் மெய்யாகும் வண்ணம், திருஅவைக்காக உழைப்போர் அனைவரும், அனைத்து ஆசீரும் பெற்று வாழவும், குறிப்பாக உடல் நலம் குன்றி, சிகிச்சை பெற்றுவரும் எம்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூரண சுகம் பெற்று, நல்ல உடலுள்ள வலிமையோடு, இறைமக்களாகிய எங்களை வழிநடத்த, அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றிகூற’ நமக்கு அழைப்புவிடுத்த இன்றைய இரண்டாம் வாசகத்தை மனதில் கொண்டவர்களாய், உலகை ஆளும் தலைவர்களுக்காகவும், நம் நாட்டை ஆள்கின்ற தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம். அவர்களது திட்டங்களாலும் செயல்பாடுகளாலும், அமைதியும், நீதியும், சமத்துவமும் செழித்தோங்கி, அனைவரும் வாழ்வு பெற வேண்டும் என்கிற இறைத்திட்டம் வெற்றிபெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர். அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்” என்கிற பதிலுரைப்பாடல் வரிகளின்படி, இறைவனை நம்பி வாழும் அனைவரும், சிறியோர் முதல் பெரியோர்வரை, கனிதரும் வாழ்வு வாழவேண்டுமென்றும், இளையோரும் குடும்பங்களும் முதியோரை மதித்து, அவர்கள் மகிழும் வண்ணம், சீரிய வாழ்வினை மேற்கொள்ளவேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே குழுமியுள்ள நாங்கள் அனைவரும் “உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர்” என்கிற நற்செய்தியை வாழ்வில் பின்பற்றி, எம்சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நல்லதையே தெரிவுசெய்து, நற்பண்புள்ள ஒரு தலைமுறைக்கு வித்திடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

www.anbinmadal.org


Print Friendly and PDF


Tuesday, February 18, 2025

பொதுக்காலம் ஆண்டின் ஏழாம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் ஏழாம் ஞாயிறு  


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23
1கொரிந்தியர் 15: 45-49
லூக்கா 6: 27-38

திருப்பலி முன்னுரை

பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் நம் மனதில் அன்பை விதைக்கின்றன. இறைமகன் இயேசுவின் விழுமியமாகிய அன்பைத் தம் வாழ்வில் நிலைநாட்டி, அவரே நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரின் முக்கியக் கட்டளையாகிய உன்னைப் போல் உன் அயலானை நேசி. அவர் உமது எதிரியாக இருந்தாலும் அன்புச் செய். அவருக்காய் இறைவனிடம் மன்றாடு என்பதே! அதற்கான நம் வாழ்நாள் முன்னோடித் தான் மக்களின் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். தன்னைச் சுட்டவனை மன்னித்துத் தன் நண்பனாக ஏற்றுக்கொண்ட அவர், அலி அஃகாவைச் சிறையில் சந்தித்து இறைமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தினார்.

நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்று இறைவன் அழைக்கின்றார். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது. தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? சிந்திப்போம். இத்திருப்பலியில் இயேசுவின் அன்புடன் கலந்து விடைக் காணச் செபிப்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

தன்னுயிரைக் கொல்லத் தன்னைத் துரத்தி வந்த சவுல் அரசனைக் கொன்றுப் பழித் தீர்த்துக் கொள்வதற்கு நல்ல சந்தர்பப்பம் தாவீதுக்குக் கிடைத்தது. ஆனால் ஆண்டவர் அருள்பொழிவுப் பெற்றவர்மேல் கை வைக்கக் கூடாது என்று அவருக்கு ஒரு தீங்கும் செய்யாமல் மன்னித்துவிட்ட தாவீதின் பெருந்தன்மையயாகச் செயலை எடுத்துக்கூறும் இன்றைய முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம். பகைவனுக்கு அன்பு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ` பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

மண்ணகத்தைச் சார்ந்த நாம் விண்ணகலிருந்து வந்த இயேசுவின் சாயலை நாம் அணிந்து கொள்ள வேண்டும். அஃதாவது இயேசு சிலுவையில் தொங்கும்போது கூடத் தன் பகைவரை மன்னித்து அவர்களுக்காகச் செபித்துபோல நாமும் பகைவரை மன்னித்து வாழ அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பவுலடியார் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வழியாக. இதனைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், இறைமக்களை நிறைவாழ்வில் வழிநடத்த தேவையான அருளினை, உம்மிடமிருந்து பெற்றிடவும், அருள்பொழிவு பெற்ற அவர்களை, பொதுநிலையினர் யாவரும், தாவீதைப் போல, மிகுந்த மரியாதையோடு நடத்தி, பணிந்து வாழ்கிற பண்பினைப் பெற்றிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மண்ணைச் சார்ந்த மனிதர் வாழ்வினில் எதிர்நோக்கை விதைத்திட, விண்ணைச் சார்ந்தவராம் இயேசுவையே தாரை வார்த்த தந்தையின் பரிவுள்ளத்தை, இவ்வுலகு மற்றும் நாட்டை ஆள்கிறவர்கள் ஓரளவாவது பெற்று, அமைதியிலும் நீதியிலும் வழிநடத்த வேண்டுமென்றும், மண்ணக விண்ணக விதிகளின்படி ஆட்சிபுரிய வேண்டுமென்றும், எம்தேசமும், பரந்த இப்பாருலகும் நலம்பெற வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்” என்கிற திருப்பாடல் வரிகளின்படி, மாந்தர் அனைவரும், குறிப்பாக எம்பங்கில் வாழ்கிற அனைவரும், உமது பேரன்பையும் இரக்கத்தையும் சுவைத்து, நோய்கள் அனைத்தும் நீங்கப்பெற்று, நலன்கள் அனைத்தாலும் நிரப்பப்பெற்று, நிறை வாழ்வு வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால் எங்களுக்கும் அளக்கப்படும்” என்கிற நற்செய்தி தரும் பாடத்தைப் பயின்றவர்களாய், அடுத்திருப்போருக்கு ஆதரவு, இல்லாதோர்க்கு ஈகை, பகைவருக்குப் பரிவு, அனைவருக்கும் அன்புப் பொழிந்து, தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நாங்களும் இரக்கம் உள்ளவர்களாய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, February 11, 2025

பொதுக்காலம் ஆண்டின் ஆறாம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் ஆறாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 17: 5-8
1 கொரிந்தியர் 15: 12,16-20
லூக்கா 6: 17,20-26

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் ஆறாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய நற்செய்தியில், இறைமகன் இயேசு ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்குத் தெளிவாகச் சொல்கிறார். ஏழைகள் உயர்த்திப் பேசப்படுவதையும், செல்வர்கள் கடுமையாக வார்த்தைகளால் இடித்துரைக்கப்படுவதையும் விவிலியத்தில் பல இடங்களில் காண முடிகிறது.
கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை. இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு. 

இவ்வுலகுக் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்றச் செல்வம் கிடைக்கலாம், ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் உணர முடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது. வலியோரை அல்ல எளியோரையே இறைவன் விரும்புகிறார். ஏனெனில் இவர்கள் நிலைவாழ்வில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். நாமும் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைப் பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்

வாசகமுன்னுரை:

முதல்‌ வாசக முன்னுரை:

இன்றைய முதல்‌ வாசகமானது இறைவாக்கினர்‌ எரேமியா நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம், புல்லென மடிந்து போகும்‌ மனிதரில்‌ நம்பிக்கை வைக்காமல்‌ ஆண்டவரில்‌ நம்பிக்கைக்‌ கொண்டு, நீர்‌ அருகில்‌ நடப்பட்ட மரம்போல் பசுமையாக வளர்ந்து கனி கொடுக்க அழைக்கும்‌ வார்த்தைகளைக்‌ கேட்டு ஆண்டவரில்‌ நம்பிக்கைக்‌ கொண்டு வாழும்‌ வரம்‌ கேட்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4-6 (பல்லவி: 40: 4a)
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை:

இயேசு கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு, இறந்த அனைவரும்‌ உயிருடன்‌ எழுப்பப்படுவதன்‌ முன்‌ அடையாளம்‌. இதுவே நம்‌ நம்பிக்கையும்‌. இயேசுவின்‌ உயிர்ப்பில்‌ நம்பிக்கை கொண்டு அவர்‌ வழியாக இறப்புக்கு பின்னும்‌ வாழ்வு உண்டு என்ற உண்மையில்‌ அசைக்க முடியாத நம்பிக்க கெண்டவர்களாய்‌ வாழப் புனித பவுல்‌ கொரிந்தியருக்கு எழுதிய முதல்‌ திருமுகத்திலிகுந்து வாசிக்கப்படும்‌ இரண்டாம்‌ வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 6: 23அ
அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1. யூபிலி ஆண்டைக் கொண்டாடும் திருஅவையானது, இன்றைய திருப்பாடல் வரிகளுக்கேற்ப, நீரோடையோரம் நடப்பட்ட மரம்போலவும், பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் மரம்போல் செழிக்கவும், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவருமே, வற்றாத எதிர்நோக்குடன் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர் மேகங்களும், கலவரச் சூழல்களும், பொருளாதாரப் பேதங்களும் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்கிற நாங்கள், ‘ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்’ என்கிற இறைவாக்கினர் எரேமியா கூற்றுப்படி, உம்மையே நம்பி வேண்டுகிறோம்; பரந்துபட்ட இவ்வுலகிலும், எம்பாரதத் தேசத்திலும், அமைதியும் நீதியும் செழித்தோங்கி, அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். இஃது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது” என, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் முன்னிறுத்தும் நம்பிக்கையை எமதாக்கி, எம்குடும்பங்களில் மரித்த அனைவருக்காகவும், இவ்வுலகைவிட்டு மறைந்துபோன அத்தனை ஆண்மக்களுக்காவும் மன்றாடுகிறோம். “விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்” என்கிற நற்செய்தி, அவர்களிலே நிறைவடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இப்போது ஏழைகளாய் இருப்போரும், பட்டினியாய் இருப்போரும், அழுதுகொண்டிருப்போரும் பேறுபெற்றோர் என்கிற நற்செய்தியை, நீர் உரைக்கக்கேட்ட நாங்கள், எங்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி இன்பம் பிறக்கும், நோய்கள் நீங்கி நலம் கிட்டும், பசியும், பிணியும், இல்லாமையும், ஏழ்மையும் மறைந்து, நாங்களும், மற்ற எல்லோரும் நிறைவு பெறுவோம் என்கிற எதிர்நோக்குடன் உழைக்கவும், உமை நம்பி வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

>Print Friendly and PDF