Monday, July 7, 2025

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

இணைச்சட்ட நூல் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37

திருப்பலி முன்னுரை:-

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு மிக அருகில் உள்ள இறைவன், அயலான் இவர்களை உணர்ந்துக்கொண்டு நிலைவாழ்வு எவ்வாறு நம்மில் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய நமக்கு எடுத்துரைக்கின்றன.
இஸ்ரயேல் மக்களுக்கு 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். புனித பவுலடியார் கூறுகிறார். ”விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள கடவுள்தன்மையைத் தொட்டுணர்ந்து நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.”
திருச்சட்ட அறிஞர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கில் 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டக் கேள்வியின் மூலம் நமக்கு வெகு அருகாமையில் உள்ள அயலானை அடையாளம் காட்டுகிறார். இதன் மூலம் மூன்று வித அன்பைப் பதிவுச் செய்கிறார். இந்த அன்பு நம்மில் நிறைவாய் இருந்தால் நிலைவாழ்வு நமக்கு வெகு அருகிலே! என்ற எண்ணங்களைத் தாங்கியவர்களாய் முழு 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' இத்திருப்பலியில் பங்குக்கொள்வோம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...

வாசக முன்னுரை:-

முதல் வாசக முன்னுரை:-

சட்டம்‌ சுட்டிக்காட்டுபவை இரண்டே இரண்டுதான்‌. ஒன்று இதைச்‌ செய்‌; மற்றொன்று இதைச்‌ செய்யாதே. சட்டத்தை இறைப்பார்வையில்‌ திருப்புவது மனச்சான்று. மனச்சான்று எப்போதும்‌ மனிதத்தை உயர்த்திப்‌ பிடிக்கக்‌ குரல்‌ கொடுக்கும்‌. சட்டம்‌ அதன்‌ குரலைக்‌ கேட்கும்‌ தூரத்தில்தான்‌ உள்ளது; 
தொலைவில்‌ இல்லையெனத் துள்ளியமாகக்‌ கூறும்‌ இணைச்சட்ட வாசகத்தைக்‌ கேட்போம்‌. 

பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!

திபா. 69: 13,16,29-30,35,36
1. ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்.  பல்லவி

2. ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

3. எளியோன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

4. கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

கிறிஸ்துவைப்‌ பற்றி அனைவரும்‌ தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து  உண்மைகளை உள்ளடக்கிக் கிறிஸ்து இயலாகத் திருத்தூதுப் பவுல்‌ சுருக்கமாக
கொலோசையருக்கு வழங்கும்‌ பகுதியை இன்றைய வழிபாடு நமக்கு இரண்டாம்‌ வாசகமாகத்‌ தந்துள்ளது. இதனைக்‌ கூர்ந்து கவனித்துக்கேட்டு நாமும்‌
கிறிஸ்துவைப்‌ பறைசாற்றுபவர்களாக வாழ்வோம

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரையும் படைத்தவரும், அனைத்துக்கும் முந்தியவருமான ஆண்டவரே, திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், இறைமக்களாகிய எங்களையும், நீர் தாமே நிறைவாக ஆசீர்வதித்து, தூயதோர் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கவும், இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் திருவுளம் கொண்ட ஆண்டவரே, அமைதியை இழந்து தவிக்கும் இந்த அவனிக்கு, உண்மையான சமாதானத்தை தந்தருள வேண்டுமென்றும், தலைவர்களும், குடிமக்களும், பகைமைகள், பேதமைகளை மறந்து, ஒன்றுபட்டு வாழவும், உயரவும்  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய இரண்டாம் வாசகத்தில் “அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன” என்று பவுலடியார் கூறுவதன் பொருளை உணர்ந்தவர்களாய், நாங்கள் எங்கள் குடும்பங்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும், உமக்கு உரியவர்களாகவே வளர்த்தெடுக்க வேண்டுமென்றும், எங்கள் பங்குகளும், பங்கு குருக்களும், பங்குப்பேரவை உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அன்பியங்களும், உமக்காகவே இயங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்து, அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடித்து, முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வந்து, இறை மனித உறவுகளில் புனிதம் பெறத் தக்க வகையில், வாழ்வதற்கான வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வதும், தம்மைப்போலவே அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வதும்தான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வதற்கான வழி என்பதை உறுதிப்படுத்திய ஆண்டவரே, அனைத்திற்கும் மேலாக உமக்கும், அதன் நீட்சியாக எம்மை அடுத்திருப்போருக்கும், முதன்முதலில் எம்குடும்பத்தாருக்கும், சிறப்பாக வயது முதிர்ந்தோருக்கும், எங்களது முழுமையான அன்பை காட்டுகிற வண்ணம், எங்கள் செயல்களும் வாழ்க்கையும் அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.          
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, July 2, 2025

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள். 

எசாயா 66:10-14
கலாத்தியர். 6:14-18
லூக்கா 10:1-12,17-20

திருப்பலி முன்னுரை:

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்!
கிறிஸ்துவை மூலைக்கல்லாகவும்‌ திருத்தூதர்களை அடிக்‌கல்லாகவும்‌ விசுவாசிகளைக்‌ கட்டிடக்‌ கல்லாகவும்‌ கொண்டு அமைந்தது தான்‌ நமது தாய்த்‌ திருச்சபை. இயேசுவைப்‌ பிடிக்க வந்தபோது சீடர்கள்‌ அனைவரும்‌ புறமுதுகுக்‌காட்டி ஓடினார்கள்‌. ஆனால்‌ அதே சீடர்கள்‌ தூய ஆவியால்‌ நிரப்பப்பட்டபோது தங்கள்‌ அழைத்தலின்‌ அர்த்தத்தை உணர்ந்தனர்‌. தங்களின்‌ கடமைகளை உணர்ந்தார்கள்‌. கிறிஸ்துவுக்காகச்‌ சாகவும்‌ துணிந்தார்கள்‌. மறைசாட்சிகளாய்‌ மரித்தார்கள்‌. இத்தகைய மாற்றம்‌ நம்‌ ஒவ்வொருவரின்‌ உள்ளத்திலும்‌ உதிக்க வேண்டும்‌, என்ற எண்ணத்தோடு இன்றைய திருப்பலியிலிணைந்திடுவோம்‌.
நாம்‌ அனைவரும்‌ தவறாகப்‌ புரிந்திருப்பது, ஊழியர்கள்‌ என்றால்‌ குருக்களும்‌, சகோதரிகளும்‌, துறவறத்தாரும்‌ மட்டுமே. ஆனால்‌ திருமுழுக்கு வாங்கிய கிறிஸ்தவனும்‌ ஒவ்வொருவனும்‌ ஊழியனே. கிறிஸ்தவர்களாகிய நாம்‌ அனைவரும்‌ அனுப்பப்பட்டவர்‌களே. உயிர்த்த ஆண்டவர்‌ தான்‌ சந்தித்த ஒவ்வொருவரையும்‌ அனுப்புகிறார்‌.
கிறிஸ்து இம்மண்ணுலகிற்கு வந்தபோது கொண்டுவந்த முதல்‌ கொடை அமைதி கிறிஸ்து விண்ணகம்‌ சென்றபோது வழங்கிய இறுதிக்‌ கொடையும்‌ அமைதியே!
கிறிஸ்துவின் அமைதியின் தூதுவராக வாழ ஒவ்வொரு திருப்பலியிலும் சிறப்பு அழைப்புத் தருகின்றார் இறைமகன் இயேசு. இதனை ஏற்று இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படுவோம். வாரீர்.

வாசக முன்னுரை:

முதல் வாசகம்‌ முன்னுரை:

நாடுகடத்தப்பட்ட மக்கள்‌ மீண்டும்‌ எருசலேமுக்குத்‌ திரும்பி வருவார்கள்‌ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதாக அமைகின்றது. கடவுள்‌ இஸ்ரயேல்‌ மீது தனிப்பட்ட அன்பையும்‌, அக்கறையையும்‌ கொண்டுள்ளார்‌ என்பதை எசாயா வாயிலாக ஆண்டவர்‌ வெளிப்படுத்துவதை இன்றைய முதல் வாசகம்‌ விவரிக்கின்றது. “கடவுளின்‌ அன்பு தாய் அன்பைப்‌ போன்றது, அந்த அன்பில்‌ நிலைத்து இன்புறுங்கள்‌' என்றும்‌ வலியுறுத்தும் எசாயாவின் வார்த்தைகளை நம் மனங்களில் இருத்தி சிந்திப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா. 66: 1-3,4-5,6-7,16,20.
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சி யைப் புகழ்ந்து பாடுங்கள். அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை. என்று சொல்லுங்கள். பல்லவி

2. அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர். அவர்கள் உம் புகழ் பாடிடுவர். உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர். என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார். ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார் கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி

இரண்டாம்‌ வாசகம்‌ முன்னுரை:

இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ தூய பவுல்‌, பணம்‌ பதவி பகட்டு போன்ற உலக ஆடம்பர வலைகளில்‌ சிக்கிக்‌ கிறிஸ்தவ அடிப்படையை மறந்திருந்தக்‌ கலாத்திய மக்களுக்குக்‌ கிறிஸ்துவின்‌ சிலுவை மீது கொள்ளும்‌ நம்பிக்கையே அடிப்படை, மற்ற வெளி ஆடம்பரங்கள்‌ அவசியமில்லை என்பதை நினைவூட்டுகிறார்‌. கிறிஸ்துவின்‌ சிலுவையே உண்மையான சீடரின்‌ பெருமை.
தூய ஆவியில்‌ புதுப்படைப்பாக, புதிய மனிதர்களாகத்‌ தன்னைப்‌ போல இயேசுவின்‌ அடிமையாக மாறி, நிலைவாழ்வைப்‌ பெற்றுக்‌ கொள்ள அழைப்பு விடுக்கிறார்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இரக்கத்தின் ஆண்டவரே! “ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்” என்றுரைத்து, சீடர்களைத் திருத்தூது பணிக்கு அனுப்பினீரே! தீமை தலைவிரித்தாடும் இவ்வுலகில், உமது தூய திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், நீர் தாமே பாதுகாத்து வழிநடத்த   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்” என்கிற வாக்குறுதியை, இன்றைய முதல் வாசகம்மூலம் தருபவரே, மூண்டு வரும் போர்களாலும், யுத்தங்களாலும், நீடித்து வரும் சண்டை சச்சரவுகளாலும், சர்வாதிகார போக்குகளாலும், பயங்கரவாத-தீவிரவாத வன்முறைகளாலும், நிலைகுலைந்து போயுள்ள இவ்வுலகில், அமைதி ஆறெனப் பெருக்கெடுத்து ஓடவும், தலைவர்கள் யாவரும், சமாதானத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒழுகவும் வரமருள          வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;” என வாஞ்சையோடு வாக்களிப்பவரே! வறுமை, வேலையின்மை, நோய், முதுமை, இயலாமை,  தொடர்  தோல்விகள், ஏமாற்றங்கள், குடும்பத்தில் சமாதானமின்மை போன்ற பல்வேறு இன்னல்களால் அவதியுறும் மக்கள் அனைவரையும், குறிப்பாகச் சமீப கால விபத்துகளாலும், போர்களாலும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிப்போரையும், தாயின் பரிவோடு கண்ணோக்கி, கரம்பிடித்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “புதிய படைப்பாவதே இன்றியமையாதது.” என்கிற பவுலடியாரின் அறிவுரையை ஆழ்மனதில் பதியவைத்து, சடங்கு சம்பிரதாயங்களைக் காட்டிலும் உண்மையான நம்பிக்கையும், நம்பிக்கைக்கு ஏற்ற நல்ல வாழ்க்கையும் தான் முக்கியம் என்கிற உணர்வோடு, சாட்சிய வாழ்வு வாழ்வதற்கான, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்கிற நற்செய்திக்குறிப்பு    இன்றளவும் உண்மையாக இருப்பதனால், உம்முடைய இறையாட்சிப்  பணிக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி, தேவ அழைத்தல் பெருகும்படி, அறுவடையின் உரிமையாளராம் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, June 24, 2025

புனிதர்கள் பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா

 புனிதர்கள் பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா
பொதுக் காலம் 13ஆம் ஞாயிறு - 29.06.2025


இன்றைய வாசகங்கள்:

திருத்தூதர் பணி 12:1-11
2 திமொத்தேயு 4:6-8
மத்தேயு16: 13-19

திருப்பலி முன்னுரை

புனிதர்களான பேதுருவும் பவுலும் திரு அவையின் தூண்களாகத் திருவிவிலியத்தால் எடுத்துக்காட்டப்படுகின்றனர். திரு அவையின் முதல் திருத்தந்தையான புனித பேதுரு ஆளுமைத் திறனோடு எளிய மனமும் ஏழைகளின் மீது மிகுந்த கனிவும் கொண்ட மிகச் சாதாரண மனிதர். திருத்தூதரான புனித பவுல் இளமை துடிப்பும் படைப்புத்திறனும் உயர்ந்த அறிவாற்றலும் கொண்ட அசாதாரண மனிதர். இருவரின் பண்புகளும் குண நலன்களும் இரு வேறு துருவங்களாக இருந்த போதும் இயேசுவின் பொருட்டு இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொண்டவர்கள். முதியோருக்கு உதாரணமாகப் புனித பேதுருவையும் இளையோருக்கு எடுத்துக்காட்டாகப் புனித பவுலையும் கூற முடியும். அந்த அளவிற்கு இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதும் தங்களுடைய வல்லமைமிக்க வாழ்க்கை சாட்சியத்தால் திரு அவையை வளர்த்து எடுத்தனர். 

இன்று நம் தாய் திருநாட்டில் நிலவுகின்ற எதிரும் புதிருமான சூழல்கள் நம்மைப் புனித பேதுருவின் கனிவையும் புனித பவுலின் துணிவையும் கொண்டு வாழ அழைப்பு விடுக்கின்றது. எந்நிலையில் இருந்தாலும் அந்நிலையில் பணிவும் துணிவும் நம்மிடம் இருக்குமானால் நமது வாழ்வும் சான்று வாழ்வாக அமையும் என்ற உணர்வோடு இன்றைய திருப்பலி கொண்டாட்டத்தில் குடும்பமாய் இணைவோம்.

வாசக முன்னுரை : 

முதல் வாசக முன்னுரை : 

துன்புற்ற வேளையில் தூக்கிப் பிடிப்பேன் என்ற இறைவனின் கரம் எவ்வாறு வல்லமையோடு திருத்தூதர் பேதுருவோடு செயலாற்றியது என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துக் கூறுகிறது. ஆண்டவரின் தூதர் முன்செல்ல, கட்டப்பட்ட அத்தனை விலங்குகளும் உடைய, பேதுரு தன் உணர்வு பெற்றவராய் சிறையிலிருந்து வெளிவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை எடுத்துக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி
2 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
3 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பேதுருவின் நற்செய்தி சாட்சியத்திற்குச் சற்றும் சளைத்தவர் அல்ல புனித பவுல். நல்லதொரு போராட்டத்தில் ஓடுகிறேன் என எப்போதும் நற்செய்தியைப் பற்றிக் கொள்வதிலே பற்றி நின்று, நற்செய்தி அறிவிக்காவிடில் தனக்கு ஐயோ கேடு என நற்செய்தியின் சாட்சியாக வாழ்ந்தவர் புனித பவுல்.கடவுள் பேதுரு சிறையிலிருந்து விடுவித்தது போல எவ்வாறு தன்னையும் சிங்கத்தின் பிடியிலிருந்து விடுவித்தாரெனப் புனித பவுல் எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின் மேல் என் திரு அவையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா” என்றுரைத்து திருஅவையை நிறுவிய இறைவா, பேதுருவின் வழிமரபில் எம்மை வழிநடத்த, நீர் தெரிந்தெடுத்துள்ள திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மேய்ப்புப்பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அளவு கடந்த அன்புடனும் மேற்கொள்ள, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அடைபட்டுக் கிடந்த சிறையின் அறை ஒளிமயமாகி, விலங்குகள் உடைபட, இரும்பு வாயில் தானாகத் திறந்து வழிவிட, விடுதலையின் அனுபவத்தைப் புனித பேதுருவுக்கு அளித்த இறைவா, போர் மேகங்களால் இருளடைந்து, அதிகரித்துவரும் யுத்தச்சூழல்களால் நிலைகுலைந்து, அழிவின் விளிம்பில் அல்லலுறும் அவனிக்கு, அமைதியை அருளவேண்டுமென்றும், உலகாளும் தலைவர்கள், சமாதானத்தின் பாதைக்குத் திரும்பவேண்டுமென்றும், உண்மையான விடுதலையை, எங்கள் தேசம் சமத்துவதில் சுவைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றுரைத்து, மன்னிக்கும் அதிகாரத்தினை, திருஅவைக்கும் திருப்பணியாளர்களுக்கும் அருளிய இறைவா, உம்மோடு ஒப்புரவாக நீர் தந்திருக்கும் ஒப்பற்ற கருவியாகிய, பாவசங்கீர்தனம் எனப்படும் ஒப்புரவு அருட்சாதனத்தை, நாங்கள் போற்றிப்பயன்படுத்தவும், மன்னிப்பு என்னும் திறவுகோலால், மனித உறவுகளைப் பேணி, நல்லுறவுடன் வாழவும் வரமருள  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புனிதர்கள் பேதுரு, பவுல், ஆகியோரது பெருவிழாவின், ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், சீமோன் பேதுருவைப் போல “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என நம்பிக்கை அறிக்கையிடவும்; பவுலடியாரைப் போல “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” எனச்சொல்லும்படியான, பிரமாணிக்கம் நிறைந்த சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்றும், அதற்கான நிறையருளை, நீரே தந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, June 17, 2025

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா



இன்றைய வாசகங்கள்:

தொடக்க நூல் 14:18-20 
1 கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17

திருப்பலி முன்னுரை:

உலகம் உயிர்ப்புடன் இயங்க தன் உயிரைத் தானமாய் தந்து இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை இன்று அன்னையாம் திரு அவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது. 
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்க தனது உடலையே உணவாகத் தந்து தனது ரத்தத்தை உயிர் வாழ உதவும் பானமாகத் தந்த இயேசுவின் பேரன்பை நினைத்து இன்று அன்னையாம் திரு அவை விழா எடுக்கின்றது. 
ஆம், தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப் போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளைக் கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 
நம்மை எவ்வாறு பிறருக்கு பகிர்ந்து கொடுப்பது ? நமது திறமைகளை, நமது உழைப்பை நமது நேரத்தை நமது பணத்தை நமது நல்ல மனதை பிறருக்கு தாராளமாய் தந்து உதவுவதன் மூலம் நம்மைப் பிறருக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்.  
பகிர்தளிலும் இழப்பதிலும் கிடைக்கின்ற இன்பத்தைச் சுவைத்திட தம் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நம்மை நேசித்த இயேசுவை நெருக்கமாய் நேசிப்போம். 
தன் உடலையும் உயிரையும் நமக்குக் கொடையாகத் தந்த இயேசுவின் வழியில் இரத்தத் தானம் உடல் உறுப்புத் தானம் போன்றவை செய்திட மனமுவந்து முன்வருவோம். கொடுப்பதில் இன்பம் பெறுவோம். இழப்பதில் நிறைவு காண்போம். அதற்கான அருளை இன்றைய திருப்பலியில் கொடையாகப் பெறுவோம்.  

வாசக முன்னுரை : 

முதல் வாசக முன்னுரை : 

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையின் நாயகனான ஆபிரகாமுக்கு உன்னத கடவுளின் குருவாக இருந்த மெல்கிசதேக் வாழ்த்து கூறுவதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கொள்கிறது. குருத்துவம் என்னும் சிறப்பு அழைப்பைப் பெற்றவர்கள் நமக்கு ஆசீர் வழங்கும்போது அது பன்மடங்காக நிலைக்கிறது என உணர்ந்தவர்களாய் நமது ஞான மேய்ப்பர்களை மதிக்கவும் அவர்களிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும் நம்மாலான தாராள செப, பொருள் உதவிகளை ஆலய பங்கு வளர்ச்சிக்கு வழங்கவும் இறையருள் வேண்டி முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.  

பதிலுரைப் பாடல்

திபா 110: 1. 2. 3. 4
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி...

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி…

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்! பல்லவி…

4 "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.  பல்லவி.

இரண்டாம் வாசக முன்னுரை :  

திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொரு முறையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது நாம் கிறிஸ்துவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உணவாக உட்கொள்கிறோம் என்பதாகும். கிறிஸ்துவை உணவாக உட்கொள்ளும் நாம் அவரது சாயலாக மாற வேண்டும். கிறிஸ்துவின் சாயலாக நமது வாழ்வு மாற அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம். 



கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா
தொடர்பாடல் (குறுகியபாடம்)ஒலிவடிவில்

-----------------------------------------------
சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய்,
கீதமும் பாடலும் இசைத்தே உந்தன்
ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.
1
எல்லாப் புகழும் கடந்தவர் அவரே;
இயலாது உன்னால் அவரைப் புகழ,
இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.

உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம்
போற்றுதற்குரிய இப்பேருண்மை இன்று 
சிந்தனைக்கு ஏற்றப் பொருளே
2
தூய விருந்தின் பந்தியில் அன்று
பன்னிரு சோதரர் கூட்டம் அதற்கே
கிடைத்த உணவிது;  ஐயமேயில்லை.

ஆர்ப்பரிப்புடனே இனிமையும் கலந்த
நிறைபுகழ் கீதம் ஒலிப்பதோ டன்றி
மகிழ்வும் மனதில் பெருகிடுமே.
3
நல்ல ஆயனே, உண்மை உணவே,
இயேசுவே, எம்மேல் இரங்கிடுவீரே,
எமக்கு நல்அமுதே ஊட்டிடுவீரே.

நும் திருமந்தை எம்மைக் காத்து,
நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில்
நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : 

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

1. “மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்கிற திருப்பாடல் வரிகளின்படி, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் பணிக்குருத்துவத்திலும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், எங்களது பொதுக்குருத்துவத்திலும், பிரமாணிக்கமாக இருக்கவும், கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் ஆகியவற்றின் உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னதக் கடவுள்” ஆபிராமுக்கு ஆசி வழங்கியது போலவே, இவ்வுலகிற்கும், உலகாளும் தலைவர்களுக்கும், ஆசியும் ஞானமும் வழங்கும் அமைதியின் அரசராய் விளங்கவும், போர்கள், சண்டைகள், கலவரங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற தீங்குகள் யாவும் நீங்கப்பெற்ற நிம்மதியான சூழலை உருவாக்கித்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் “நற்கருணை இல்லையேல், திருஅவை இல்லை; குருக்கள் இல்லையேல் நற்கருணை இல்லை” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், நற்கருணை, குருத்துவம் ஆகிய திருவருட்சாதனங்களின் மேன்மையைப் போற்றவும், தேவ அழைத்தலுக்காக ஜெபிக்கவும், தேவ அழைத்தலை எங்கள் குடும்பங்களிலே ஊக்குவிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம், ஆண்டவருடைய சாவை, அவர் வரும்வரை அறிவிக்கிறோம்” என்கிற நம்பிக்கையின் மறையுண்மையை, எங்கள் வாய்களால் மட்டுமல்லாமல், வாழ்க்கையாலும் அறிக்கையிடவும், ஒரே அப்பத்தை உண்டு, ஒரே கிண்ணத்திலிருந்து பருகுவதன் மூலம், ஒன்றிப்பின் சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, அவற்றின்மீது ஆசிக் கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறச்செய்து, அனைவரும் வயிறார உண்ணச்செய்த ஆண்டவரே, எங்களது நற்கருணை பக்தியானது வழிபாட்டோடு நின்றுவிடாமல், பிறரோடு, குறிப்பாக வறியவரோடு, பகிருகின்ற வாழ்வாகத் தொடர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, June 10, 2025

மூவொரு இறைவன் பெருவிழா 2025

மூவொரு இறைவன் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

நீதிமொழிகள் 8:22-31 
உரோமையர் 5: 1-5
யோவான் 16:12-15

திருப்பலி முன்னுரை:

இருந்தவரும்‌ இருப்பவரும்‌ வரவிருக்கின்றவருமான தந்தை, மகன்‌, தூய ஆவியார்‌ என்னும்‌ தூய்மைமிகு மூவோரு இறைவனின்‌ பெருவிழாவை சிறப்பிக்கத் திரு அவையாய்‌ ஒன்று கூடிய உங்கள்‌ ஒவ்வொருவரையும்‌ அன்புடன்‌ வரவேற்கின்றோம்‌.

விண்ணகத் தந்தை, மனிதனாக மண்ணிற்கு வந்த இறைமகன்‌ இயேசு, துணையாளராக நமக்குத் தரப்பட்ட தூய ஆவியாரால்‌ மூவரும்‌ இணைந்து மூவொரு இறைவனாக, ஒரே கடவுளாக, ஒரே எண்ணம்‌, ஒரே சிந்தனை, ஒரே சொல்‌, ஒரே செயல்‌ என யாவிலும்‌ இணைந்தவர்களாக இருக்கிறார்கள்‌. குடும்பத்தைக் கட்டியெழுப்ப கடவுளால்‌ படைக்கப்பட்ட இறைமக்கள்‌ சமூகமாகிய நாம்‌ ஒவ்வொருவரும்‌ மூவோரு இறைவனின்‌ சாயலை நமதாக்கி வாழும்போது நமது குடும்பங்கள்‌ ஒற்றுமையின்‌ விளைநிலமாக, மகிழ்ச்சியின்‌ பிறப்பிடமாக, நன்மைகளின்‌ ஊற்றாகத் திகழும்.

தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கிச் சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழத் தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது என்பதையும் அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனக் கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தைக் கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்பது நாம் காணக்கூடிய அல்ல. மாறாக விசுவாசத்தின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. இந்த நம்பிக்கை நமது இறுதி நியத்தீர்ப்பின்போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும் நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன். அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளைத் தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கைப்படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி : 

அல்லேலூயா, இருந்தவரும்‌ இருக்கின்றரும்‌ வரஇருக்கின்றவரும்‌ எல்லாம்‌ வல்லவருமான கடவுள்‌, தந்‌ைத, மகன்‌, தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிற இந்நாளில், மனித அறிவினால் புரிந்துகொள்ள முடியாத, இந்த நம்பிக்கையின் மறைபொருளை, உணர்ந்து, உள்வாங்கி, கூட்டொருங்கியக்க திருஅவையாய் விளங்குவதன்மூலம், பறைசாற்றிடத் தேவையான அருளினை, எம்திருத்தந்தை லியோ அவர்களுக்கும், ஏனைய திருஅவை தலைவர்களுக்கும், இறைமக்களாகிய எங்களுக்கும் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பூவுலகு உண்டாகுமுன்னே இருந்து செயலாற்றிய இறைவனின் ஞானம், மனித உள்ளங்களிலும், குறிப்பாக உலகத்தலைவர்கள், மற்றும் எங்கள் நாட்டுத்தலைவர்கள் மனங்களிலும் செயலாற்றி, திரித்துவக் கடவுளிடம் நாங்கள் கற்றுக்கொள்ளுகிற ஒற்றுமை, இணைந்த செயல்பாடு, போட்டிகள் துறந்து அமைதியில் நிலைத்தல், ஆகிய நற்குணங்களின்படி வாழவும், ஆளவும் வேண்டிய அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், குடும்பம் என்கிற குட்டித்திருஅவையைக் கட்டியெழுப்பிட வேண்டுமென்றும், தாய், தந்தை, கணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள், சுற்றம் சூழல் ஆகிய அனைவரும், மேட்டுமை எண்ணங்களை விட்டொழித்து, திரியேக இறைவனில் இருக்கிற ஒரே சிந்தனை, ஒத்துணர்வு, ஒன்றித்த செயல்பாடு ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டு, அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம்' என்பதை நன்றியோடு நினைவுகூர்ந்து, அந்த உன்னத நிலையில் என்றும் நிலைத்திருக்க வேண்டிய அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின் துணையுடன், “துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும்” என்றும் “அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது” என்றும் நம்புகிற திருக்கூட்டமாய், நாங்கள் விளங்கிட வேண்டுமென்றும், இந்த யூபிலி ஆண்டில் மட்டுமல்லாது, என்றைக்குமே எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, June 2, 2025

தூய ஆவியாரின் பெருவிழா 2025

 தூய ஆவியாரின் பெருவிழா

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Maino_Pentecost%C3%A9s._Lienzo._285_x_163_cm._Museo_del_Prado.jpg/500px-Maino_Pentecost%C3%A9s._Lienzo._285_x_163_cm._Museo_del_Prado.jpg

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 2: 1-11
உரோமையர் 8:8-17
யோவான் 14:15-16,23-26

திருப்பலி முன்னுரை :

இணைந்து பயணிக்கும்‌ அன்பியமாகத் திரு அவையை வழிநடத்தக்கூடிய பெந்தகோஸ்து பெருவிழா எனச் சிறப்பிக்கத் திருச்‌சமூகமாய்‌ ஒன்று கூடிய உங்கள்‌ ஒவ்வொருவரையும்‌ பாசத்தோடு வாழ்த்தி வரவேற்கின்றோம்‌. தூய ஆவியாரின்‌ திருவிழாவை அன்னையாம்‌ திரு அவை தனது திரு அவையின்‌ பிறப்பு பெருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது. உடைந்து சிதைந்து கிடந்த திருத்தூதர்களை ஒன்றிணைத்து உலகெங்கும்‌ சென்று படைப்பிற்கெல்லாம்‌ நற்செய்தியை பறைசாற்றக்கூடிய கருவிகளாக உருவாக்கியவர்‌ தூய ஆவியாரே.
அடுத்து என்ன செய்யலாம்‌ என்று கலங்கி நின்ற திருத்தூதர்களுக்கு ஆண்டவரைப்‌ பற்றிய நற்செய்தி அகிலமெங்கும்‌ எடுத்துரையுங்கள்‌ என உள்ளொளி தந்து உடனிருந்து வழிநடத்தியவர்‌ தூய ஆவியார்‌.
தூய ஆவியாரின்‌ துணையோடு இயங்குபவர்கள்‌ கடவுளின்‌ மக்கள்‌ என்பதை உணர்ந்து உண்மை, அன்பு, நீதி, நேர்மை, கனிவு, தாழ்ச்சி என்னும்‌ தூய ஆவியாரின்‌ கனிகளாலும்‌ வரங்களாலும்‌ நிரப்பப்படவும்‌ புதிய கல்வி ஆண்டுத் தொடங்கவிருக்கும்‌ இந்நாள்களில்‌ நமது குழந்தைகள்‌ அறிவிலும்‌ ஞானத்திலும்‌ சிறந்து விளங்கித் தூய ஆவியாரின்‌ துணையோடு சிந்திக்கவும்‌ படிக்கவும்‌ கல்வி ஆண்டின்‌ தொடக்கமுதலே ஞானத்தோடு பாடங்களை உள்வாங்கிக்‌ கொள்ளவும்‌
இறையருள்‌ வேண்டிக் கல்வாரி பலியில்‌ பக்தியோடு பங்கெடுப்போம்‌…

வாசக முன்னுரை :

முதல் வாசக முன்னுரை :

இன்றைய வாசகத்தில் திருத்தூதர்கள் தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்குப் பின் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:
1. அவர்களின் நாக் கட்டவிழ்க்கப்படுகிறது.  
2. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. 
இதுவரை கோழையாக அறைக்குள் அடைந்து கிடந்த திருதூதர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பிப் பெற்று வீரர்களாக வீதிக்கு வருகின்றனர். துணிச்சலோடும், கொள்கைப்பிடிப்போடும் இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். அயல் மொழிகளில் பேசினர். இந்தத் துணிச்சலை  நாமும் பெற அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல் 

திபா 104: 1,24. 29-30. 31,34

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! -பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்றும் கிறிஸ்துவின் ஆவியில் உண்மையில் இயக்கப்படுபவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் கடவுளின் பிள்ளையென அழைக்கப்பட முடியும். எனவே, அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை விடுத்துக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற நமக்கு உறுதுணையாக இருப்பவர் தூய ஆவியார் என்று விளக்கமளிக்கும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
 

*********  தொடர் பாடல்  பாடல் இசையுடன்  *********   

தொடர் பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா!  தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்.  அல்லேலூயா.  

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

அல்லேலூயா, அல்லேலூயா!  தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்.  அல்லேலூயா.

1. அன்பு இறைவா ! எல்லோரோடும்‌ அமைதியுடன்‌ வாழுங்கள்‌ என்ற மகிழ்வின்‌ செய்தியை நற்செய்தியாக எங்களுக்கு வழங்கக்கூடிய திருத்தந்தை, ஆயாகள்‌, அருள்பணியாளர்கள்‌, இருபால்‌ துறவறத்தார்‌
செல்லும்‌ இடமெல்லாம்‌ தூய ஆவியாரின்‌ துணையோடு பயணிக்க வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.

2. நாட்டை வழிநடத்தக்கூடிய நாட்டுத்‌ தலைவர்கள்‌ தூய ஆவியாரால்‌ வழங்கக்கூடிய ஞானத்தையும்‌ விவேகத்தையும்‌ கொடையாகக்‌ கொண்டு தூய ஆவியாரின்‌ கனிகளான அன்பு, அமைதி, மகிழ்ச்சி,
பரிவு என்ற பண்புகளால்‌ தொடர்ந்து வழிநடத்த வரம்‌ தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்‌.

3. தூய ஆவியைப்‌ பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌ என்ற மொழிந்த அன்பு இறைவா ! திருமுழுக்கின்‌ வழியாக நற்செய்தி பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும்‌ திரு அவையின்‌
கடமைகளையும்‌ தேவைகளையும்‌ உணர்ந்து இறையன்பிலும்‌ பிறர்‌ அன்பிலும்‌ வளர வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.

4. உம் பேரருளால் எம்மை வழிநடத்தும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பு இறைவா! புதிய கல்வி ஆண்டில்‌ காலடி எடுத்து வைக்க இருக்கும்‌ எம்‌பங்கு மாணவ செல்வங்களுக்காகவும்‌ அவர்களை அறிவிலும்‌ ஞானத்திலும்‌ பக்தியிலும்‌ ஒழுக்கத்திலும்‌ வளர்த்‌தெடுக்கக்கூடிய கடமையை ஏற்றுள்ள எல்லா ஆசிரியர்களுக்காகவும்‌ வேண்டுகின்றோம்‌. இவர்கள்‌ தூய ஆவியாரின்‌ துணையோடு மனிதநேய மாண்புகளில்‌ சிறந்து விளங்கிட வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.



https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, May 28, 2025

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 2025

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபேசியர் 9:24-28;10:19-23
லூக்கா 24 :46-53

திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட நம் ஆலயத்தில் ஒருமனப்பட்டுப் பெரும் மகிழ்ச்சியுடன் குழுமியிருக்கும் அனைவருக்கும் எல்லாப் பெயர்களிலும் மேலான இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாற்பது நாட்களின் உடனிருப்பு முடிவுப்பெறும் வேளையில் தம் சீடர்களை அழைத்து, தனக்குப் பின் தந்தையின் இறையாட்சியை எப்படித் தூதுரைக்க வேண்டும்? அவர்களின் சாட்சியவாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்றும், அதற்குத் துணையாகத் தூய ஆவியாரின் வல்லமை மிகுந்த ஆற்றலைப் பெற்றுக் கொண்டு உலகின் கடைசி எல்லைவரை அறிவித்ததை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அண்ணாந்துப் பார்த்து நின்றச் சீடர்கள் வீறுக்கொண்டு எழுந்து, நிறைவாழ்வை இவ்வுலகில் முன் நிறுத்தி, உலக மாந்தர்கள் அனைவரையும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் மாற்றியது போல, நாமும் இயேசுவின் ஆற்றலால் இத்தகைய நற்செயல்களைச் செய்திட, அதனால் நாம் எதிர் நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்ள, இறைஇரக்கத்தின் திருமுகமாம் இயேசுவின் அருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள்மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களைத் துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2, 5-6, 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

1. மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி

2.  ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

3. ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் வலிமை மிக்கத் தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். வேறு எப்பெயருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். இவைகளை உணர்ந்து கொள்ள ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! என்ற இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்மன்றாட்டுகள்:

1. ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழாவை கொண்டாடுகிற இந்நாளில் “இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று சீடர்களுக்குப் பணிக்கப்பட்ட கடமையை நினைவு கூர்கிறோம். இறைமக்களாகிய நாங்கள் யாவரும், உலகின் எல்லாத் திசைகளிலும், உம்முடைய உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும், எங்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ, மற்றும் திருஅவைத் தலைவர்கள் அனைவரும், சாட்சிய வாழ்வில் நாங்கள் நிலைத்திருக்க, எங்களைத் துடிப்புடன் வழிநடத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அவர்கள் கண்கள் முன்பாக மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டவரை, அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த சீடர்களைப் போன்று, நாங்களும் எங்கள் கண்களை உம்மை நோக்கி உயர்த்துகிறோம். தந்தையின் வலப்புறம் வீற்றிருந்து ஆட்சி செய்கிற நீர், உலகிற்கு அமைதி அருளவும், போர், கலவரம், வன்முறை, தீவிரவாதம் ஆகிய கொடுமைகளிலிருந்து மானுடத்தை மீட்கவும், அமைதிக்காக உழைக்கும் நல்மனதினை, நாடாளும் தலைவர்களுக்கு நல்கிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குருவாக விண்ணகம் நுழைந்து, விண்ணக வாயிலைத் திறந்து வைத்துள்ள இறைமகனே, இறைமக்கள் அனைவரும், மண்ணுலகத் தேவைகளில் புதையுண்டு போகாமல், விண்ணுலகுச் சார்ந்தவற்றை நாடுகின்ற ஊக்கம் நிறைந்த எதிர்நோக்கின் பயணிகளாக விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். உறுதியான நம்பிக்கையோடு அவரை அணுகிச் செல்வோமாக” என்கிற திருமுக வரிகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் உம்மை அணுகி வருகிறோம். இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறைகள் யாவும் நீங்கப்பெற்ற நிறை வாழ்வைப் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்ற உம்மொழிக்கேற்ப, தூய ஆவியாரின் துணையோடு செம்மையான வாழ்வை நாங்கள் மேற்கொள்ளவும், புதிய கல்வி ஆண்டைத் தொடங்குகிற இவ்வேளையில், மாணவ மாணவியர் அனைவரும், ஆசிரிய பெருமைக்களும், ஆவியின் வரங்களாலும் கொடைகளாலும் நிரப்பப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF