Monday, September 1, 2025

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானம் 9:13-19
பிலமோன் 1:9b-10,12-17

லூக்கா 14:25-33

திருப்பலி முன்னுரை:

இறைஞானத்தைத் தேடி இன்று ஆலயம் நுழைந்துள்ள இறைஇயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் நன்றியோடும், மகிழ்ச்சியோடும் பங்குக்கொள்ள அன்புடன் வரவேற்கின்றோம்.
சாலமோன் கடவுளிடம் முதன்மையாகக் கேட்ட ஞானமே! யூதர்களை ஆண்டுவழி நடத்த அவர் விரும்பியதுவும் அதுவே. இறைத்திட்டத்தை அறிந்து கொள்ளக் கடவுளிடம் ஞானத்தையும், தூயஆவியாரையும் பெற வேண்டும் என்கிறது முதல் வாசகம். அன்பு, மன்னிப்பு, அடுத்தவரை அன்புடன் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற உயரிய கிறிஸ்தவப் பண்புகளை இரண்டாம் வாசகம் எடுத்துக்கூறுகிறது.
இயேசுவின் சீடராய் மாறிட எல்லாவற்றையும் ஏன் தன் உயிரையும் விடத் தயாராக இருப்பவரே தன் சீடனாக இருக்க முடியும், தன் சிலுவையைச் சுமப்பவர்கள் மட்டுமே என் சீடராக இருக்க முடியும் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார் இயேசு. ஞானத்தைத் தேடுபவர்களாய், கிறிஸ்தவ மதிப்பீடுகளை ஏற்றவர்களாய், தன் துன்பங்களை முழுமனதுடன் ஏற்று இயேசுவின் சீடராய் வாழக்கூடிய நல்ல சூழலைத் தர வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஞானம், இறைவனால் அருளப்படும் அறிவு, அதன் செயலாற்றல் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறுகிறது சாலமோனின் ஞானம். ஞானம் ஒரு ஒழுக்க நெறியாக, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பாக எண்ணப்பட்டது. ஞானம் இஸ்ரயேல் மக்களிடையே தங்கி அவர்களை வழி நடத்தும் கருவியாகக் கருதப்பட்டது. "இறைவா இத்தகைய ஞானத்தை எனக்குத் தருவாயாக" என்று மன்றாடும் பாணியில் அமைந்துள்ளதே இன்றைய வாசகம்.சாலமோனுக்குச் சிறப்புப் பெற்றுத் தந்த ஞானத்தை நிறைவாய் நாமும் பெற்றிட இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்து இறைவனை வேண்டுவோம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

1. மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

2. வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி

3. எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

4. காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.  எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! - பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலிருந்தபோது கொலோசை நகர நண்பரான பிலமோன் என்பவருக்கு எழுதிய இக்கடிதத்தில் பிலமோனின் அடிமை ஒனேசிம் என்பவரை மன்னித்து அன்புடன் சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தி வருகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், இறைமக்களாகிய நாங்களும், உம்மைவிட மேலாக எதைக் கருதினாலும், உம சீடராய் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவர்களாய், உம்மையே பற்றிக்கொண்டு, விண்ணரசு நோக்கி முன்னேறுகிற எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் விளங்கிட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இவ்வுலகின் தலைவர்களும், எம்நாட்டின் தலைவர்களும், இவ்வுலகின் மக்கள் அனைவருமே “நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை” என்பதை உணர்ந்தவராகளாய், நிலையான மகிழ்வைத் தருகிற சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், சமாதானம் ஆகிய விழுமியங்களின்படி வாழுகிற, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அடிமையாக அல்ல, அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்தின் பொருளுணர்ந்து, சாதியின் பெயராலோ, சமயத்தின் பெயராலோ, பிறப்பிடத்தின் அடிப்படையிலோ, பொருளாதாரம் மற்றும் பின்னணி அடிப்படையிலோ, எவரையும் புறந்தள்ளாமல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற உயர்நெறியின்படி, எங்கள் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை கட்டியெழுப்புகிற நல்லுள்ளத்தை, எமக்குத் தந்தருள     வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கட்டுமானப் பணிகளுக்கும், போர் தொடுத்தலுக்கும் மட்டுமின்றி, உம்மைப் பின்தொடர்வதற்கும், திண்ணமான தீர்மானமும், திடமான முடிவும், தியாகம் நிறை வாழ்வும் தேவை என்பதை, நற்செய்தி வாசகம்மூலம் அறிந்த நாங்கள், உம்மைப் பின்தொடர்வதில் உறுதியாய் இருக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
      
5. நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறிப்பாக இளையோரும், உம் திருவுள்ளதை அறிந்துகொள்ளவும்,  அதன்படி தங்கள் வாழ்வை நடத்திச்சென்று, உமக்கும் பிறருக்கும் உகந்தவர்களாய்  வாழ்ந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, August 24, 2025

பொதுக்காலம் ஆண்டின் 22 ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 22 ஆம் ஞாயிறு

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சீராக்கின் ஞான நூல் 3: 17-18,20,28-29
எபிரேயர் 12: 18-19, 22-24
லூக்கா  14: 1,7-14

திருப்பலி முன்னுரை:

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டியில் பங்கேற்க ஓர் இனமாய் ஆலயம் வந்துள்ள இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

தாழ்ச்சியே தலையாய புண்ணியங்களுள் முதலாவது. இறை அருளைப் பெற்றுக் கொள்ள மிக முக்கியமான, முதன்மையான பண்பான தாழ்ச்சியை நமதாக்கிக் கொள்ள இன்றையத் திருவழிபாடு நம்மை அழைக்கின்றது. 

தாழ்ச்சி என்பது தன்னையே இழிவாக நினைப்பதைக் குறிப்பது அன்று; மாறாக இறைவனுடைய திருவுளத்திற்குக் கீழ்படிவதற்கு வேண்டிய பணிவைக் குறிப்பிடுகிறது. நான் ஆண்டவரின் அடிமை என்று தன்னையே தாழ்த்திக் கொண்ட அன்னை மரியா பெண்களுக்குள் பேறுபெற்றவராகவும் எல்லாத் தலைமுறையினரும் அவரைப் பேறுபெற்றவர் என அழைக்கவும் இறைவன் திருவுளம் கொண்டார். 

இறைமகன் இயேசுவும் தம்மையே தாழ்த்தி அடிமைநிலையை ஏற்று நம் பாவங்களுக்காக இறந்ததால், இறைவன் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் என்று புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறியுள்ளார். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன் என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்ற வாழ்தொலி நம் ஒவ்வொருவரையும் இயேசுவிடமிருந்து கனிவையும் தாழ்ச்சியையும் கற்று வாழ அழைப்பு விடுக்கிறது. தாழ்ச்சி என்ற அருளைப் பெற இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

சீராக்கின் ஞானநூலின் ஆசிரியர் ”குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்: அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்புக் காட்டுவர்.” என்று கூறுகிறார். மனிதர் முன் உயர்ந்தவர் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள்போல் தோன்றினாலும் கடவுள் முன்னிலையில் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவர். எனவே பணிவோடு நடந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்
திருப்பாடல்: 68: 3-10
நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். - பல்லவி

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். - பல்லவி

கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

ஒரு காலத்தில் கடவுள் அச்சம் தரும் நெருப்பிலும், இருண்ட மேகத்திலும், கொடிய இருளிலும், சூழல்காற்றிலும் வெளிப்பட்டார். ஆனால் நமது காலத்தில் வானதூதர்களாலும், நீதிமான்களாலும் சூழப்பட்ட அமைதியின் கடவுளாக, தாழ்ச்சியின் கடவுளாகக் காட்சியளிக்கின்றார் என்று சினாய் மலைக்கும் சீயோன் மலைக்கும் உள்ள வித்தியாசங்களின் மூலம் இயேசு கிறிஸ்து நம்மை மீட்டு இறைவனோடு ஒப்புறவாகி உள்ளார் என்பதை வலியுறுத்தும் திருத்தூதர் பவுலின் எபிரேயருக்கு எழுதப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை” என இரண்டாம் வாசகத்தில் விவரிக்கப்படும் நிலை உருவாகும்வரை, பயணிக்கும் திரு அவையாகிய எம்மை வழிநடத்தி வருகிற திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், நம்பிக்கை, எதிர்நோக்கு, பிறரன்பு ஆகிய இறையியல் பண்புகளோடு வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது” என்கிற ஞான நூலின் வார்த்தைகள் உண்மையாகிவருகிற இக்காலக்கட்டத்தில், அகந்தை மற்றும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை விட்டொழித்து, பணிவும், சாந்தமும், அமைதியை நாடுகிற நல்லுள்ளமும் கொண்டவர்களாய், இவ்வுலகின் தலைவர்களையும், எம்நாட்டின் தலைவர்களையும் மாற்றிடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. முதன்மையான இடங்களைப் பெறுவதற்கும், பெருமை பாராட்டுவதற்கும் எதையும் செய்யத் துணிகிற இக்காலத்தில், போட்டி மனப்பான்மையுடன், பிறரை அழித்தேனும் முன்னேறத் துடிக்கும் கயமையைத் துறந்து, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய விழுமியங்களின்படி வாழ்ந்து, நேரிய வழியில் உயர்வை எய்துகிற நல்ல மனதினை, எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. “தம்மைத்தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” என்ற உம் அருள்வாக்கை மனதில் நிறுத்தி, எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும், சமுதாயத்திலும், பிறருக்கு முன்னுரிமை அளித்து, புரிதலும் பகிர்தலும் மிகுந்த அன்புறவை வளர்த்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், எமக்குக் கைம்மாறு செய்ய இயலாதவர்களையும் நாங்கள் பரிவுடன் கண்ணோக்கி, பணிவிடை செய்தால், இவ்வுலகில் பேறுபெற்றவர் ஆவதோடு,  நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது கைம்மாறும் பெறுவோம் என்பதை புரிந்துகொண்டு, தன்னலமற்ற அறச்செயல்களில் ஈடுபடுகிற அருளினை, இங்கே கூடியுள்ள எங்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, August 20, 2025

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 66: 18-21
எபிரேயர் 12:5-7,11-13
லூக்கா  13: 22-30

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டு, நிறைவாழ்வை நோக்கி வெற்றி நடைபோடும் இறைகுலமே! பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

வாழ்வுக்குச் செல்லும் வழிக் குறுகலானது. ஆனால் அழிவுக்குச் செல்லும் வழியோ அகலமானது. நம்மில் எத்தனையோ பேர் வாழ்க்கைப் போராட்டத்தில் துவண்டு விடாமல் இறுதிரைப் போராடி நம் வாழ்வில் வெற்றிப் பெறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

எசாயா இறைவாக்கினர் கலக்கமுற்றுக் கவலையில் இருந்த மக்களை நம்பிக்கையில் தேற்றுவதை நாம் காணலாம். இறையாட்சியில் நுழைவதற்கும் நம் வாழ்வில் நம்பிக்கை என்னும் நங்கூரம் அவசியமானது. ஆண்டவரின் கண்டிப்பால் திருந்தியவர்கள் துயரத்திற்கு உள்ளனாலும் பின்பு அவர்கள் அமைதியும், நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.

இடுக்கலான வழி நீதியின் வழி, அமைதியின் வழி, மகிழ்ச்சியின் வழி. இடுக்கலான வாயில் வழியே நுழைவோர் நிலைவாழ்வைப் பெறுவர். இதை மேற்கொள்பவர்கள் வெகுசிலரே. அந்த வெகுசிலராகிய நாம் இறைமகன் இயேசுவில் நம்பிக்கை வைத்து அர்ப்பணவாழ்வு வாழ இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

பாபிலோனியாவிற்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் எசாயா, தொடர்ந்து, பிற இனத்தவரும் இஸ்ரயேலின் மாட்சி நோக்கி வருவர் என்று இறைவாக்கு உரைக்கின்றார். எருசலேமின் கதவுகள் பிற இனத்தாருக்கும் திறந்துவிடப்படுகின்றன. உள்ளே நுழையும் அவர்கள் இறைவனின் மாட்சிமையை உணர்ந்து கொள்வார்கள். இறைவனின் மேய்ச்சல் நிலத்தைக் கண்டு கொள்வார்கள். இறைவன் அவர்களின் உரிமைச்சொத்தாகவும் மாறுவார் என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:- உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
திருப்பாடல் 117: 1. 2
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி
ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி 

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகத்தில்  திருத்தூதர் பவுலின் நமது வாழ்வில் துன்பங்களும், துயரங்களும், குறுக்கிடும்போது யேசுவின் பாடுகளும், துன்பங்களும் நமக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். இயேசுவின் துன்பம் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற மட்டுமல்ல மாறாக நம் வாழ்வின் மீட்பை உறுதி செய்யவே. ஆனால் நமது துன்பம் மற்றவர்களுக்காக அல்ல மாறாக நமது விசுவாச வாழ்வின் போராட்டத்திற்காக மட்டுமே. அதற்கு இயேசுவின் வாழ்வும் வழியும் ஓர் பாடமாக அமைய வேண்டும் என்று திருத்தூதர் பவுல் கூறுகின்றார்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து, மக்கள் அனைவரையும் இறையாட்சியில் கூட்டிச்சேர்க்கும் திருப்பணியைச் செய்துவருகிற எங்கள் திருத்தந்தை லியோ அவர்களும், ஏனைய ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், உம்மால் நிறைவாக ஆசீர்வதிக்கப்படவும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் அறிந்தவராகிய நீர், உலகையும் உலகத் தலைவர்களையும், எம்நாட்டுத் தலைவர்களையும், பகைமை உணர்விலிருந்தும், போர் வேட்கையிலுமிருந்தும் விடுவித்து, அமைதியின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்” என்பதையும், எங்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும், நாங்கள் திருத்தப்படுவதற்காகத்தான் என்பதையும் உணர்ந்து, அவற்றைத் தாங்கிக்கொள்ளவும், உம்முடைய துணையோடு, அவற்றை மேற்கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், “கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்” என்கிற உண்மையை உணர்ந்து, பழம்பெருமை, இனப்பெருமை, செல்வச்செருக்கு, பதவி ஆணவம் ஆகியவற்றைத் துறந்து, தாழ்ச்சி என்கிற நற்பண்பை அணிந்தவர்களாய், இறையரசை நோக்கி நம்பிக்கையோடு பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பணமும் பகட்டும், சிற்றின்பமும் உல்லாசமும், பாவமும் பழிச்செயலும் பெருகிவிட்ட இவ்வுலகில் “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்” என்கிற உம் போதனைக்குச் செவிமடுத்து, ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த நல்லதொரு வாழ்வினை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, August 12, 2025

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 38:4-6, 8-10
எபிரேயர் 12:1-4
லூக்கா  12:49-53

திருப்பலி முன்னுரை:

படைகளின் ஆண்டவரின் உறைவிடத்தில் அமர்ந்தும் ஆற்றுப்படுத்திக் கொள்ள இந்தப் பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.

'மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்!' என்று தான் வந்ததை அறிவிக்கும் இயேசு தன் வருகை அமைதியை அல்ல பிளவையே உண்டாக்கும் என்று சொல்வதோடு, தான் பெற வேண்டிய இரத்தத் திருமுழுக்கே அந்தப் பிளவின் முதற்கனி என்கின்றார். இறையரசு பற்றிய செய்தி அதை அறிவிப்பவருக்கு அழிவாக முடிகிறது. பிளவு, துன்பம், அறிவிப்பவரின் அழிவு - இந்த மூன்றும்தான் இறையரசின் தாக்கங்கள்.

இயேசுவை அல்லது இறையரசைத் தேர்ந்து கொண்டால் நாம் மற்றதை விட்டுவிடுதல் அவசியம். இதற்குத் தேவை மனத்திடம். தனக்குத் துன்பம் வந்தாலும் தான் தேர்ந்துகொண்ட 'சாய்ஸ்' இதுதான் என்று நிலைத்து நிற்கிறார்கள் எரேமியாவும், இயேசுவும். 'அவரின்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம்' என்று சொல்லி எபிரேயர் திருமடலின் ஆசிரியரும் தன் மக்களை அழைக்கிறார். அவரின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நம் கண்கள் கசங்கலாம். ஆனால், இறுதியில் நம் பார்வைத் தெளிவாகும்! தெளிவானப் பார்வைப் பெற்றிடத் திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

எரேமியா இறைவாக்கினர் தன் சொந்த மக்களாலும் அரசனாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்றார். அவரின் இறைவாக்கும், செய்தியும் மக்களுக்கு அச்சம் தருவதாலும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தாததாலும் இவ்வாறு செய்கின்றனர் மக்கள். இருந்தாலும் எத்தியோப்பியன் ஒருவன் அரசனிடம் முறையிட அரசனும் எரேமியாவை விடுவிக்க ஆணையிடுகின்றான். இவ்வாறாக, ஒரே நகரில் சிலர் எரேமியாவுக்கு சார்பாகவும், பலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். ஆக, இறைவனின் செய்தி அல்லது இறைவாக்கு கொண்டு வரும் நிகழ்வு மக்களிடையே பிளவு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.

திருப்பாடல்40: 1. 2. 3. 17

1. நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி

2. அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி

3. புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி

4. நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்றால் என்ன என்று வரையறை செய்துவிட்டு, தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சிம்சோன் என முதல் ஏற்பாட்டு குலமுதுவர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வேரூன்றியிருந்த விதத்தை எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்துத் தொடர்ந்து ஓடுவோம் என்றும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்வோம் என்றும் அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன ... அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.” என்கிற நற்செய்தி வாழ்த்தொலிக்கு ஏற்ப, இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் தாயாம் திருஅவையை வழிநடத்தி வருகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரில், நல்லாயனாம் உம்மைக்கண்டு, உம் குரலுக்குச் செவிசாய்த்து பின்தொடர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மண்ணுலகில் நீர்மூட்டவந்த அன்பெனும் நெருப்பையும், நீதியின் சுடரையும் அணைத்துவிட்டு, பகைமையின் பாதையில் பயணிக்கும் இவ்வுலகையும், உலகின் தலைவர்களையும், எம்நாட்டின் தலைவர்களையும், சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், சமாதானம் ஆகிய விழுமியங்களின்படி, வாழுகிற மற்றும் ஆளுகிற, நல்லோராய் நீர் உருமாற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “நானோ எளியவன்; நீரே என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்” என்கிற திருப்பாடல் வரிகளையே, எங்கள் வேண்டுதலாக உம்முன் எழுப்பி, இன்னல்கள் நிறைந்த எம்வாழ்வில், மனம் சோர்ந்து, தளர்ந்து போகாமல், நம்பிக்கையோடு பயணிக்கவும், குறிப்பாக இளையோர் மற்றும் வலுவற்றோர், உம்மையே தங்கள் துணைவகராகக் கொண்டு, துணிவோடு முன்னேற அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிச் செல்லவும், எங்கள் தனிப்பட்ட அழைத்தல் மற்றும் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப, எங்களுக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில், மன உறுதியோடு ஓடிடத் தேவையான, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், மனவுறுதியோடு பங்கேற்று, எங்களைப் பற்றிகொண்டிருக்கிற எல்லா சுமைகளையும், பாவநாட்டங்களையும் உதறித் தள்ளிவிட்டு, உம் சார்பாகவும், உமது அரசுக்கு ஏற்றவர்களாகவும் வாழ்ந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  


https://anbinmadal.org

Print Friendly and PDF

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

இன்றைய வாசகங்கள்:-

திருவெளிப்பாடு. 11:19, 12:1-6,10
1கொரிந்தியர். 15:20-26
லூக்கா. 1:39-56

திருப்பலி முன்னுரை:-

இன்று நாம் அன்னை மரியா விண்ணேற்றம் அடைந்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நமது நாடு அடைந்த சுதந்திரத்தையும் நினைத்து ஒரு விழா எடுக்கின்றோம். மேற்கூறிய இரண்டு விழாக்களும் சாத்தியமான தன் காரணம் நம்பிக்கை! 

அன்னை மரியாவுக்கு இறைவனது பராமரிப்பின் மீது நம்பிக்கை இருந்ததனால் தான் அவர் இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றார். மங்கள வார்த்தை அவருக்குச் சொல்லப்பட்டபோது இறைவனின் வாக்கில் நம்பிக்கை வைத்து 'ஆம்' என்று சொன்னார். இறைவனின் தாயானதால் அவரை இறைவன் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார் என்று திரு அவை நம்புகிறது.

ஒரு நாள் நாம் சுதந்திரம் பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால்தான் நம் முன்னோர்கள் தங்கள் உயிரையே தியாகம் வைத்து, சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்.

எபிரேயருக்கு எழுதிய நூலில் இது விளக்கிக் கூறப்படுகின்றது: "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்றுப் பெற்றனர்" (எபிரேயர் 11:1-2).

மரியன்னையின் மீது அன்பு வைத்திற்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்குத் தக்க உதவிகளைச் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ள முடியும்.

ஆகவே, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான இன்று மரியன்னைக்கு மகிமைச் செலுத்துவோம், அதே நேரங்களில் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஒரு பெண்ணால் (முதல் ஏவாள்) இழந்த விண்ணக வாழ்வும், மகிழ்வும் மற்றொரு பெண்ணால் (மரியாவின் வழியாக) மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் அன்னை மரியா. அவருக்கு ஏற்ற மாட்சியையும், துன்பங்களையும் அதன் வழியாக நாம் கண்ட மீட்பையும் எடுத்துக் கூறும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

\திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)

பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! பல்லவி 

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி 

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். இந்த நிகழ்வு அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது மரியாளின் விண்ணேற்பு வழியாக. சாவே கடைசி பகைவன். அதுவும் அழிக்கப்படும் என்று இயேசுவின் இரண்டாம் வருகையை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்...

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும், உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும், ஏழைகளின் மகிழ்ச்சியில் இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மகிழ்ச்சியும், எம்புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா! உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து, நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும். மரியாளைப் போலத் தாழ்ச்சியிலும், இறைநம்பிக்கையிலும் சிறந்து விளங்க அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா! நாங்கள் உம் ஞானத்தையும், இரக்கத்தையும், உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய், நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும், நீர் எமக்குக் கொடுத்த சுதந்திரக்காற்றை  அனுபவிக்கவும் தேவையான வரங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 4. முன்னேற்றப் பாதையில் வழி நடத்தும் எம் இறைவா, எமக்காய் நீர் தந்த அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் சகிப்புத்தன்மை இல்லாமையால் அமைதி இல்லா ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இவ்வேளை உம் அன்பின் போதனைகளால் அனைத்தையும் மறந்து மக்களுக்காகத் தொண்டாற்ற வேண்டிய வரத்தைத் தர உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.  


                                                                 https://anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, August 5, 2025

பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

 பொதுக்காலம்  19ஆம் ஞாயிறு 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானம் 18:6-9
எபிரேயர் 11:1-2,8-19
லூக்கா 12: 32-48

திருப்பலி முன்னுரை:

தெய்வத்தின் திருப்பாதங்களில் அமர்ந்து பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு திருவழிப்பாட்டில் கலந்துக்கொள்ள வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.

கிறிஸ்துவ வாழ்வின் மையமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை தான் ஆபிரகாமை கடவுளோடு ஒன்றிணைத்தது. அதே நம்பிக்கைதான் நோய்களைக் குணமாக்கியது. பாவிகள் மன்னிப்புப் பெற்றதும், இறந்தவர் உயிர் பெற்றதும் இந்த நம்பிக்கையில்தான்...

இன்றைய காலக்கட்டத்தில் உலக அரங்கில், திருச்சபையின் அமைப்பு ரீதியைப் பார்க்கின்றபோது நம்பிக்கையற்ற நிலை பலரது மனதில் எழலாம். ஆனால் இந்த அவல நிலைமாறத் தான் எங்கிருந்தோ ஒரு ஒளி நம்மீது வீசுகிறது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை நடசத்திரமாக இயேசு தோன்றுகிறார். ”சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம் உங்கள் பரம தந்தையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அழைக்கின்றார்.

நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதியான நம்பிக்கையில் விழிப்போடு செயல்படும் பணியாளர்களாக மாறவும் உயிரேட்டம் நிறைந்த செயல்பாடுள்ள வாழ்வு வாழ்வதற்காக வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்…  வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இறைவனின் நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு அவரின் வாக்குப்பிறழாமை. அஃதாவது, அவரின் சொல்லுக்கும், செயலுக்கும் முரண் இருக்காது. அவரின் வாக்குப்பிறழாமைக்கு ஓர் உதாரணம் தருகின்றது இன்றைய முதல் வாசகம்.  கடவுளின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கடவுளின் முன்னிலையில் பெருமைப்படுத்தப்படுவார்கள். அவர்களும் இறைவனைப் புகழ்ந்துப் பாடுவர் என்று சாலமோனின் ஞானம் கூறுவதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 33: 1,12. 18-19. 20,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

1. நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். - பல்லவி

2. தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.  அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

3. நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை' என்று நம்பிக்கையை வரையறுக்கிறது இன்றைய இரண்டாம் வாசகம். நம்பிக்கைக்கு வரையறைத் தருகின்ற திருத்தூதர் பவுல் தொடர்ந்து, ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கைப் பற்றி எழுதுகின்றார். நிலையற்றவைகளை நிலையற்றவைகள் என ஏற்றுக்கொள்ளும், இறைவனின் நம்பகத்தன்மை உணர்ந்து கொள்ளும் ஒருவரால் மட்டுமே நம்பிக்கைக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்கிற நற்செய்தி வரிகளால் திடம் பெற்று, தாயாம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். எமது திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரோடு இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், தந்தையின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாகவே வாழுகிற வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும்” ஏற்றுக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் தந்தையரிடமிருந்து பாடம் பயின்றவர்களாய், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், தற்காலிக லாபங்களுக்காக, நிலையான அமைதியையும், அனைவருக்குமான நல வாழ்வையும் அடகு வைக்காமல், நீதியின் பாதையில் எமை ஆளவும், குடிமக்கள் அனைவரும், தம் கடமை உணர்ந்து செயலாற்றவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்” என்கிற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம்முடைய கடைக்கண் பார்வையால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றும், ஆண்டவர் தமது உரிமை சொத்தாகத் தெரிந்தெடுத்த, பேறுபெற்ற மக்களாக, அல்லல்கள் யாவும் நீங்கப்பெற்று, அருள்வரங்கள் அனைத்தும் நிரம்பப்பெற்றவர்களாக வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், அசையாத அடித்தளமுள்ள, சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிற, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக விளங்கவும், அதற்குரிய விழுமியங்களோடு வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ‘நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்’ என்கிற உண்மையை உணர்ந்தும், ‘மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்’ என்கிற அளவுகோலை அறிந்தும், எம்கிறித்தவ அழைப்புக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொண்டு, விழிப்பாகவும், ஆயத்தமாகவும் இருந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, July 29, 2025

பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு ஆண்டு 3

 பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சபை உரையாளர் 2:1-2
கொலோசையர். 3:1-5, -9-11
லூக்கா 12:13-21

முன்னுரை:

இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறான இன்று இறையருள் வேண்டி இறைவனின் திருப்பாதம் தேடி வந்துள்ள இறைமக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

இன்றைய சூழலில் மக்கள் ஓய்வின்றி உழைத்துத் தேடிவைக்கும் செல்வங்களின் நிலையையும், அவர்களின் மனநிலையையும் அழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றது இன்று தரப்பட்டுள்ள வாசகங்கள். கடினமாய் உழைத்துச் சேர்த்த சொத்துகள் அதற்காக உழைக்காதவரிடம் செல்வது பெரிய அநீதி. எல்லாம் வீண் என்கின்றது முதல் வாசகம். நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். நீங்கள் புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். எனவே உங்களிடையே வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார் என்கின்றார் திருத்தூதர் பவுல்.

இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? " என்று கேட்கின்றார் இறைமகன் இயேசு. ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் பயன் என்ன? என்ற இறைவார்த்தையின் மகத்துவத்தை உணர்ந்த நாம், இன்றையத் திருப்பலியில் இறைவனின் இல்லத்தில் நாம்,  செல்வங்களைச் சேர்த்து வைக்க, வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்… வாரீர்.

 வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் பதிவு செய்கின்றது இந்த வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'உழைப்பு வீண்' என வாதிடும் சபை உரையாளர், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்குத் துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும் தான் மிஞ்சுகிறது என்று எடுத்துரைக்கும் சபை உரையாளரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

<

பதிலுரைப் பாடல்

பல்லவி: என் தலைவரேதலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்!

திபா. 90: 3-4,5-6,12-13,14,17

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புளுதியாகுங்கள்' என்கின்றீர்.  ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும். - பல்லவி

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.  ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!  ஆம் நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் 'மேலுலகுச் சார்ந்தவற்றை நாடுவது' என்கிறார் திருத்தூதர் பவுல். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகுச் சார்ந்தவையாக இருக்க வேண்டும். 'இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை' அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கின்றார். இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், 'புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!' என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.  அவரின் நினைவூட்டலைச் சிந்திக்க இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை அழைக்கின்றது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், மேலுலகு சார்ந்தவற்றையே நாடுகிற தலைவர்களாய் விளங்கவும், இறைமக்களாகிய எங்களையும், மேலுலகு பற்றிய சிந்தனையோடே பயணிக்கும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வழிநடத்தவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம் உலகையும் நாட்டையும் ஆளும் தலைவர்கள், “வீண், முற்றிலும் வீண்” என்கிற சபையுரையாளரின் கூற்றை உணராமல், போர்களிலும் அழிவுப் பாதைகளிலும் தங்கள் கவனத்தைச் செலுத்துவதைத் தவிர்த்து, அமைதிக்கு ஏதுவானதும், ஆக்கப்பூர்வமானதுமான செயல்களில், தங்களை ஈடுபடுத்தி, மானுடம் செழித்திட வகைச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய முதல் வாசகம், திருப்பாடல், நற்செய்தி உவமை ஆகியவை, மனித வாழ்வின் நிலையாமையையும், செல்வம் திரட்டுவதின் பயனில்லாமையையும் உணர்த்தினாலும், வாழ்க்கையை வெறுக்கவோ, சோம்பிக்கிடக்கவோ அவை சொல்லிக்கொடுக்கவில்லை; மாறாக, இறைவனை நம்பியவர்களாய், இறைவழியில் உழைப்பவர்களாய், இறையரசின் மீது நாட்டம் உடையவர்களாய் பயணிப்பதின் அவசியத்தை உணர்த்துகின்றன என்பதனை, நாங்கள் புரிந்து செயல்பட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இவ்வுலகில் வாழ்வோராகிய நாங்கள், மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என்பதை உணர்ந்து, எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருக்கவும், தங்கள் வாழ்வை முடித்து இறைபதம் சேர்ந்திருக்கும் அனைவருக்கும், வாழ்வு அளிப்பவராம் கிறிஸ்து தோன்றும்பொழுது, அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுகின்ற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களாகிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், பேராசை ஆகியவற்றைக் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்தவர்களாய், எம்மை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 21, 2025

பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு ஆண்டு 3

 பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு ஆண்டு 3


இன்றைய வாசகங்கள்: 

தொடக்கநூல்‌ 18:20-32 
கொலோசையர்‌ 2:12-14 
லூக்கா 11:1-13

திருப்பலி முன்னுரை: 

இறைவேண்டலால்‌ இறைவனின்‌ கொடைகளைப்‌ பெறும்‌ நம்பிக்கையுடன்‌ இறை இல்லம்‌ தேடி வந்துள்ள இறையன்பர்களே பொதுக்‌ காலம்‌ 17ஆம்‌ ஞாயிறின்‌ நல்வாழ்த்துகள்‌. 

இறைவனிடம்‌ வேண்டல்‌ செய்வது ஒரு கலை. அதனால்‌ நாம்‌ பெறுவது மாபெரும்‌ பொடை. அனைத்துக்‌ கொடைகளையும்‌ தம்மிடம்‌ குவித்து வைத்து, தக்க காலத்தில்‌ நாம்‌ மேற்கொள்ளும்‌ இறைவேண்டலின்‌ தன்மைக்கேற்ப நம்‌ தேவைகளை உணர்ந்து, கடவுள்‌ நமக்கு வாரி வழங்கி வருகிறார்‌. இதனை இன்றைய வழிபாடு முழுவதும்‌ நாம்‌ கண்டுணரலாம்‌. எப்படியும்‌ அடைந்தே தீருவது என்ற நோக்கத்தில்‌ தங்களது வேண்டல்களை எழுப்புவது மனித இயல்பு. இந்த நடைமுறையைப் புனித அகுஸ்தினாரின்‌ அன்னை மோனிக்கா பின்பற்றித் தொடர்ந்து வேண்டல்‌ செய்து தம்‌ மகன்‌ அகுஸ்தினாரை மனந்திரும்பச்‌ செய்ததை வரலாறு நமக்கு எடுத்துக்‌ கூறுகிறது. 

இறைவேண்டலில்‌ இடைவிடாத்‌ தன்மையும்‌ வேண்டல்‌ செய்யும்‌ முறையும்‌ கூர்ந்து கவனிக்கத்தக்கது. இது போன்ற அனுபவங்கள்‌ நமக்கும்‌ ஏற்பட்டிருக்கக்கூடும்‌. 

இறைவேண்டலில்‌ 1. இறை திருவுளத்தை நாடுதல்‌, 2. பெற்ற பயனைப்‌ பிறருக்குப்‌ பகிர்ந்தளித்தல்‌, 3. பொது நலன்களுக்காக மன்றாடுதல்‌, 4. நம்பிக்கை நலனைத்‌ தரவல்லது என்பதை உணர்ந்து செயல்படுதல்‌, 5. கவனச்‌ சிதறலின்றி வேண்டல்‌ செய்தல்‌, 6. கொடைகளைப்‌ பெற்றபின்‌ கடவுளின்‌ மேன்மை மிகுந்த செயல்களை எடுத்துரைத்தல்‌ எனப் பல சிறப்பு அணுகுமுறைகள்‌ உள்ளன. குறிப்பாக நற்செய்தி சுட்டிக்‌ காட்டும்‌ இயேசு நமக்குக்‌ கற்பிக்கும்‌ இறைவேண்டல்‌ முறையை உணர்ந்தவர்களாய்‌ இன்றைய திருப்பலியில்‌ இறைவேண்டல்‌ மனப்‌ பான்மையோடு பங்கெடுத்து இறையருளை நிறைவாகப்‌ பெறுவோம்‌. 

முதல்‌ வாசக முன்னுரை : 

“அயராது செய்யும்‌ இறைவேண்டல்‌ இறைவனையும்‌ அசைத்துப்‌ பார்த்து அவரது அருளை அள்ளித்தரும்‌ என்பது பலரது நம்பிக்கை அதன்படியே இறைவன்‌ சோதோம்‌ கொமோரா குறித்து செய்யக்‌ தருதிய கொடிய தண்டனைச்‌ செயலை, நம்பிக்கையின்‌ தந்த என நாம்‌ போற்றும்‌ குலமுதல்வர்‌ ஆபிரகாம்‌ தனது சாதுர்யம்‌ நிறைந்த இறைவேண்டலால்‌ தடுத்து நிறுத்திச் சாதனை புரிந்ததை விவரிக்கும்‌ முதல்‌ வாசகத்தைக்‌ கேட்போம்‌. 

பதிலுரைப்‌ பாடல்‌ : 

திபா 138:1-2அ, 2ஆஇ-8, 6-7அஆ, 7இ-8 

பல்லவி : ஆண்டவரே நான்‌ மன்றாடிய நாளில்‌ எனக்குச்‌ செவிசாய்த்தீர்‌. 

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; -பல்லவி

உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.  நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை : 

திருமுழுக்கின்போது நாம்‌ கிறிஸ்துவோடு இறந்து அடக்கம்‌ செய்யப்‌ படுகிறோம்‌. அதே கிறிஸ்துவை உயிர்த்தெழச்‌ செய்த கடவுளது வல்லமையை நம்புகிறோம்‌. கிறிஸ்துவோடு நம்மையும்‌ கடவுள்‌ உயிர்த்தெழச்‌ செய்வார்‌. இதற்குத்‌ தடையாக இருக்கும்‌ அனைத்தையும்‌ கிறிஸ்து சிலுவையில்‌ ஆணியடித்து ஒழித்துவிட்டார்‌ என்பதை உணர்த்தும்‌ இந்த வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌. 

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி : 

அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்குரிய மனப்‌ பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்‌. அதனால்‌ நாம்‌, “அப்பா தந்தையே” என அழைக்கிறோம்‌. அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌:

1. “விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி” என்கிற உமது நற்செய்தி தருகிற நம்பிக்கையுடன், தாயாம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், தூய ஆவியாரால் நிரப்பப்பட வேண்டுமென்றும், இறைமக்களாகிய எங்களை நிறைவழியில் வழிநடத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. சோதோம் கொமோராவுக்கு நேரப்போகிற அழிவை உணர்ந்தவராய், ஆபிரகாம் உம்மிடம் கெஞ்சியது போல, அழிவின் பாதையில் விரைந்துப் பயணித்துக்கொண்டிருக்கிற எங்கள் உலகுக்காக, நாங்களும் உம்மிடம் பரிந்து பேசுகிறோம். உலகத்தலைவர்கள் அனைவரும், அமைதியின் பாதைக்குத் திரும்பவும், எம்நாட்டுத் தலைவர்களும் குடிமக்களும், சமத்துவம், சமய நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களைப் பின்பற்றி வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எமக்கு எதிரான அனைத்தையும், சிலுவையில் வைத்து, ஆணியடித்து அறவே ஒழித்துவிட்ட இயேசுவின் இனிய நாமத்தில் உம்மை இறைஞ்சுகிறோம். எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும், நாங்கள் சந்திக்கிற அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து, உயிர்த்த இயேசுவைப் போல, நாங்களும் வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “கேளுங்கள், கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற உமது வாக்குறுதியை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, எம்தேவைகளை உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். வறுமையில் வாடுவோருக்கு வளமையையும், நோயில் தவிப்போருக்கு உடல் நலத்தையும், இளையோருக்கு நல்ல எதிர்காலத்தையும், தனிமையிலும் முதுமையிலும் வாடுவோருக்கு ஆதரவையும், குடும்பங்களுக்குச் சமாதானத்தையும் நிறைமகிழ்வையும், நீர் தாமே தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், திருமுழுக்குப் பெற்றபோது, கிறிஸ்துவோடு பாவத்திற்கு மரித்து, தூயதோர் வாழ்க்கைக்கு உயிர்ப்பிக்கபப்பட்டோம் என்பதை உணர்ந்தவர்களாய், தீய பழக்கங்கள், பாவ நாட்டங்கள் அனைத்தையும் விட்டொழித்து, புனிதத்தின் பாதையில் பயணிக்க, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, July 15, 2025

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு -ஆண்டு 3

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு -ஆண்டு 3

இன்றைய வாசகங்கள்‌:-

தொடக்கநூல்‌ 18:1-10 
கொலோசையர்‌ 1:24-28
லூக்கா 10:38-42

திருப்பலி முன்னுரை:-

நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுத்து நலமுடன்‌ வாழ ஆண்டவர்‌ இயேசுவினால்‌ அன்புடன்‌ அழைக்கப்பட்டுள்ள அருமையான இறைமக்களே நல்வாழ்த்துகள்‌ ! பல சமயங்களில்‌ கடவுளின்‌ ஆசி நம்‌ இல்லத்தைத்‌ தேடி, நம்மைத்தேடி வந்து கொண்டிருக்கிறது. நாம்தான்‌ அதனைக்‌ கண்டு பிடிக்கும்‌ ஆற்றல்‌ இல்லாமல்‌ மயக்க நிலையில்‌, தயக்க நிலையில்‌ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்‌. பொதுக்‌ காலம்‌ 16ஆம்‌ ஞாயிறாகிய இன்றைய வழிபாடு நம்மைச்‌ சுற்றிப்‌ பல கூறுகள்‌ வலம்‌ வந்தாலும்‌ அவற்றுள்‌ நல்லவற்றைத்‌ ‌ தேர்வுசெய்து நமதாக்கிக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.  

குலமுதல்வர்‌, நம்பிக்கையாளரின்‌ தந்தையெனப் போற்றப்படும்‌ ஆபிரகாமின்‌ இல்லத்துக்கு வந்த இறையன்பர்கள்‌ மூவரும்‌ நல்லாசியை ஈந்து ஆபிரகாம்‌ விரைவில்‌ தனது வழிமரபைக்‌ காணும்‌ பேற்றினைப்‌ பெறுவார்‌ என்று உறுதியளிக்கின்றனர்‌. அதுபோலவே திருத்தூதர்‌ பவுலும்‌ கொலோசைய மக்களுக்குத் திரு அவையின்‌ மறைஉடலாம்‌ கிறிஸ்துவின்‌ பாடுகளில்‌ தாம்‌ பங்கேற்ற அனுபவத்தைக்‌ கூறி, கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலையை அடையும்‌ நல்லறிவைக்‌ காட்டுகின்றார்‌.

பலவற்றைப்‌ பற்றிக் கவலைப்பட வேண்டாம்‌ நல்ல பங்காகிய இயேசுவைத்‌ தேர்வு கொள்வதே முன்மதியுள்ள செயல்‌ என்பதை நற்செய்தி சுட்டிக்‌ காட்டுகிறது. இத்திருப்பலியில்‌ இதயப்‌ பற்றுதலோடு இணைந்து பங்கேற்கும்‌ நாம்‌ எப்போதும்‌ நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுப்பவர்களாக வாழவும்‌, பகட்டும்‌, கவர்ச்சியும்‌ கலந்து வரும்‌ தீயனவற்றைத்‌ தூக்கியெறிபவர்களாக வாழவும்‌ அருள்வேண்டுவோம்‌…  

வாசக முன்னுரை

முதல்‌ வாசக முன்னுரை

கடவுள்‌ தமக்களித்த வழிமரபு வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படும்‌ காலத்தை எதிர்நோக்கி வாழ்ந்தார்‌ முதுபெரும்தந்தை ஆபிரகாம்‌. அவரது வீட்டுக்கு வந்த இறைமாந்தர்கள்‌ மூவர்‌ சிறப்பாகக்‌ கவனிக்கப்பட்ட விதத்தையும்‌ அவர்கள்‌ ஆசியளித்துக்‌ கூறிய வார்த்தைகளையும்‌ உள்ளடக்கிய இவ்வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌. 

பதிலுரைப் பாடல்

திபா 15: 2. 3-4. 5 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
1 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர். - பல்லவி
2. தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். - பல்லவி
3. தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை : 

கொலோசைய மக்கள்‌ தாங்கள்‌ பெற்றுக்கொண்டுள்ள கிறிஸ்துவைப்‌ பற்றிய திட்டங்களைத்‌ திருத்தூதர்‌ பவுல்‌ எடுத்துக்‌ கூறுகிறார்‌. இதற்காகவே தாம்‌ திருத்தூதராக அழைக்கப்பட்டதாகவும்‌ கூறுகிறார்‌. நாமும்‌ நம்மில்‌ இருக்கும்‌ கிறிஸ்து நம்மிடம்‌ எதிர்நோக்குவது என்ன? அதை நாம்‌ எப்படியெல்லாம்‌ செயலாக்கம்‌ செய்ய வேண்டும்‌ என்ற ஆர்வத்தோடு இந்த வாசகத்திற்குச்‌ செவிசாய்ப்போம்‌. 

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா ! சீரிய நல்‌ உள்ளத்தோடு வார்த்தையைக்‌ கேட்டு, அதைக்‌ காத்து, மன உறுதியுடன்‌ பலன்‌ தருகிறவர்கள்‌ பேறுபெற்றோர்‌. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், தூய பவுலடியாரைப் போல “இறைவார்த்தையை முழுமையாக வழங்கும் பொறுப்பினை” கடவுள் தங்களுக்குக் கொடுத்துள்ளதை உணர்ந்து, தங்களது திருத்தொண்டுப் பணியினைச் செவ்வனே நிறைவேற்றவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், அவர்கள் காட்டுகிற நல்வழியில், எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் பயணிக்கவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தம் கூடார வாயிலில் அமர்ந்திருந்த ஆபிரகாம், இறைமனிதர்கள் தம்மை விட்டுக் கடந்து போகாதிருக்க இறைஞ்சியது போல, எமையாளும் அரசியல் தலைவர்களும், உலகமக்கள் அனைவரும், அமைதி மற்றும் சமாதானத்திற்கான வாய்ப்புகள் கடந்து போகாமல் பார்த்துக்கொள்வதோடு, ஒருவர் ஒருவரை மதித்து, பணிவிடை புரிந்து, நிறை அருளையும் ஆசீரையும். அனைவரும் பெற்று மகிழ, உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. யூபிலி ஆண்டைக் கொண்டாடி வரும் நாங்கள் அனைவரும், “கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலை பெறுகிற விதத்தில்” எம்கிறித்தவ அழைத்தலுக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொள்ள வேண்டுமென்றும், மாசற்றவராய் நடந்து, நேரியவற்றைச் செய்து, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்கள் ஆகும் பேற்றினைப் பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பரபரப்பான எங்கள் வாழ்க்கைச் சூழலில், விறுவிறுப்பான எங்கள் பணிகளிலும் வேலைகளிலும், எங்களையே முழுமையாகத் தொலைத்துவிடாமல், மரியாவைப் போல, உம்பாதம் அமருகிற நல்ல பங்கைத் தெரிவு செய்து கொள்ளவும், எம்குடும்பத்தாரோடும் சமூகத்துடனும் நல்லுறவுடன் வாழ்கிற சிறந்த வழியை மேற்கொள்ளவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இனிய விருந்தோம்பல் இறைவனை மகிழ்விப்பதோடு, குடும்பத்தின் குறை தீரவும் வழி செய்திடும் என்பதனை இன்றைய முதல் வாசகம் விவரித்தது. எங்கள் அன்பு இறைவா, அன்பும், அறனும், விருந்தோம்பல் போன்ற நற்பண்புகளும், எம் இல்வாழ்க்கையை அணி செய்ய வேண்டுமென்றும், குறைகள் யாவும், அதிலும் சிறப்பாக, குழந்தையின்மை என்கிற குறை நீங்கப்பெற்ற நிறைவாழ்வு எமதாக வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 7, 2025

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

இணைச்சட்ட நூல் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37

திருப்பலி முன்னுரை:-

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு மிக அருகில் உள்ள இறைவன், அயலான் இவர்களை உணர்ந்துக்கொண்டு நிலைவாழ்வு எவ்வாறு நம்மில் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய நமக்கு எடுத்துரைக்கின்றன.
இஸ்ரயேல் மக்களுக்கு 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். புனித பவுலடியார் கூறுகிறார். ”விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள கடவுள்தன்மையைத் தொட்டுணர்ந்து நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.”
திருச்சட்ட அறிஞர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கில் 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டக் கேள்வியின் மூலம் நமக்கு வெகு அருகாமையில் உள்ள அயலானை அடையாளம் காட்டுகிறார். இதன் மூலம் மூன்று வித அன்பைப் பதிவுச் செய்கிறார். இந்த அன்பு நம்மில் நிறைவாய் இருந்தால் நிலைவாழ்வு நமக்கு வெகு அருகிலே! என்ற எண்ணங்களைத் தாங்கியவர்களாய் முழு 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' இத்திருப்பலியில் பங்குக்கொள்வோம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...

வாசக முன்னுரை:-

முதல் வாசக முன்னுரை:-

சட்டம்‌ சுட்டிக்காட்டுபவை இரண்டே இரண்டுதான்‌. ஒன்று இதைச்‌ செய்‌; மற்றொன்று இதைச்‌ செய்யாதே. சட்டத்தை இறைப்பார்வையில்‌ திருப்புவது மனச்சான்று. மனச்சான்று எப்போதும்‌ மனிதத்தை உயர்த்திப்‌ பிடிக்கக்‌ குரல்‌ கொடுக்கும்‌. சட்டம்‌ அதன்‌ குரலைக்‌ கேட்கும்‌ தூரத்தில்தான்‌ உள்ளது; 
தொலைவில்‌ இல்லையெனத் துள்ளியமாகக்‌ கூறும்‌ இணைச்சட்ட வாசகத்தைக்‌ கேட்போம்‌. 

பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!

திபா. 69: 13,16,29-30,35,36
1. ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்.  பல்லவி

2. ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

3. எளியோன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

4. கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

கிறிஸ்துவைப்‌ பற்றி அனைவரும்‌ தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து  உண்மைகளை உள்ளடக்கிக் கிறிஸ்து இயலாகத் திருத்தூதுப் பவுல்‌ சுருக்கமாக
கொலோசையருக்கு வழங்கும்‌ பகுதியை இன்றைய வழிபாடு நமக்கு இரண்டாம்‌ வாசகமாகத்‌ தந்துள்ளது. இதனைக்‌ கூர்ந்து கவனித்துக்கேட்டு நாமும்‌
கிறிஸ்துவைப்‌ பறைசாற்றுபவர்களாக வாழ்வோம

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரையும் படைத்தவரும், அனைத்துக்கும் முந்தியவருமான ஆண்டவரே, திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், இறைமக்களாகிய எங்களையும், நீர் தாமே நிறைவாக ஆசீர்வதித்து, தூயதோர் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கவும், இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் திருவுளம் கொண்ட ஆண்டவரே, அமைதியை இழந்து தவிக்கும் இந்த அவனிக்கு, உண்மையான சமாதானத்தை தந்தருள வேண்டுமென்றும், தலைவர்களும், குடிமக்களும், பகைமைகள், பேதமைகளை மறந்து, ஒன்றுபட்டு வாழவும், உயரவும்  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய இரண்டாம் வாசகத்தில் “அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன” என்று பவுலடியார் கூறுவதன் பொருளை உணர்ந்தவர்களாய், நாங்கள் எங்கள் குடும்பங்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும், உமக்கு உரியவர்களாகவே வளர்த்தெடுக்க வேண்டுமென்றும், எங்கள் பங்குகளும், பங்கு குருக்களும், பங்குப்பேரவை உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அன்பியங்களும், உமக்காகவே இயங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்து, அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடித்து, முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வந்து, இறை மனித உறவுகளில் புனிதம் பெறத் தக்க வகையில், வாழ்வதற்கான வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வதும், தம்மைப்போலவே அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வதும்தான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வதற்கான வழி என்பதை உறுதிப்படுத்திய ஆண்டவரே, அனைத்திற்கும் மேலாக உமக்கும், அதன் நீட்சியாக எம்மை அடுத்திருப்போருக்கும், முதன்முதலில் எம்குடும்பத்தாருக்கும், சிறப்பாக வயது முதிர்ந்தோருக்கும், எங்களது முழுமையான அன்பை காட்டுகிற வண்ணம், எங்கள் செயல்களும் வாழ்க்கையும் அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.          
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, July 2, 2025

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள். 

எசாயா 66:10-14
கலாத்தியர். 6:14-18
லூக்கா 10:1-12,17-20

திருப்பலி முன்னுரை:

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்!
கிறிஸ்துவை மூலைக்கல்லாகவும்‌ திருத்தூதர்களை அடிக்‌கல்லாகவும்‌ விசுவாசிகளைக்‌ கட்டிடக்‌ கல்லாகவும்‌ கொண்டு அமைந்தது தான்‌ நமது தாய்த்‌ திருச்சபை. இயேசுவைப்‌ பிடிக்க வந்தபோது சீடர்கள்‌ அனைவரும்‌ புறமுதுகுக்‌காட்டி ஓடினார்கள்‌. ஆனால்‌ அதே சீடர்கள்‌ தூய ஆவியால்‌ நிரப்பப்பட்டபோது தங்கள்‌ அழைத்தலின்‌ அர்த்தத்தை உணர்ந்தனர்‌. தங்களின்‌ கடமைகளை உணர்ந்தார்கள்‌. கிறிஸ்துவுக்காகச்‌ சாகவும்‌ துணிந்தார்கள்‌. மறைசாட்சிகளாய்‌ மரித்தார்கள்‌. இத்தகைய மாற்றம்‌ நம்‌ ஒவ்வொருவரின்‌ உள்ளத்திலும்‌ உதிக்க வேண்டும்‌, என்ற எண்ணத்தோடு இன்றைய திருப்பலியிலிணைந்திடுவோம்‌.
நாம்‌ அனைவரும்‌ தவறாகப்‌ புரிந்திருப்பது, ஊழியர்கள்‌ என்றால்‌ குருக்களும்‌, சகோதரிகளும்‌, துறவறத்தாரும்‌ மட்டுமே. ஆனால்‌ திருமுழுக்கு வாங்கிய கிறிஸ்தவனும்‌ ஒவ்வொருவனும்‌ ஊழியனே. கிறிஸ்தவர்களாகிய நாம்‌ அனைவரும்‌ அனுப்பப்பட்டவர்‌களே. உயிர்த்த ஆண்டவர்‌ தான்‌ சந்தித்த ஒவ்வொருவரையும்‌ அனுப்புகிறார்‌.
கிறிஸ்து இம்மண்ணுலகிற்கு வந்தபோது கொண்டுவந்த முதல்‌ கொடை அமைதி கிறிஸ்து விண்ணகம்‌ சென்றபோது வழங்கிய இறுதிக்‌ கொடையும்‌ அமைதியே!
கிறிஸ்துவின் அமைதியின் தூதுவராக வாழ ஒவ்வொரு திருப்பலியிலும் சிறப்பு அழைப்புத் தருகின்றார் இறைமகன் இயேசு. இதனை ஏற்று இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படுவோம். வாரீர்.

வாசக முன்னுரை:

முதல் வாசகம்‌ முன்னுரை:

நாடுகடத்தப்பட்ட மக்கள்‌ மீண்டும்‌ எருசலேமுக்குத்‌ திரும்பி வருவார்கள்‌ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதாக அமைகின்றது. கடவுள்‌ இஸ்ரயேல்‌ மீது தனிப்பட்ட அன்பையும்‌, அக்கறையையும்‌ கொண்டுள்ளார்‌ என்பதை எசாயா வாயிலாக ஆண்டவர்‌ வெளிப்படுத்துவதை இன்றைய முதல் வாசகம்‌ விவரிக்கின்றது. “கடவுளின்‌ அன்பு தாய் அன்பைப்‌ போன்றது, அந்த அன்பில்‌ நிலைத்து இன்புறுங்கள்‌' என்றும்‌ வலியுறுத்தும் எசாயாவின் வார்த்தைகளை நம் மனங்களில் இருத்தி சிந்திப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா. 66: 1-3,4-5,6-7,16,20.
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சி யைப் புகழ்ந்து பாடுங்கள். அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை. என்று சொல்லுங்கள். பல்லவி

2. அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர். அவர்கள் உம் புகழ் பாடிடுவர். உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர். என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார். ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார் கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி

இரண்டாம்‌ வாசகம்‌ முன்னுரை:

இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ தூய பவுல்‌, பணம்‌ பதவி பகட்டு போன்ற உலக ஆடம்பர வலைகளில்‌ சிக்கிக்‌ கிறிஸ்தவ அடிப்படையை மறந்திருந்தக்‌ கலாத்திய மக்களுக்குக்‌ கிறிஸ்துவின்‌ சிலுவை மீது கொள்ளும்‌ நம்பிக்கையே அடிப்படை, மற்ற வெளி ஆடம்பரங்கள்‌ அவசியமில்லை என்பதை நினைவூட்டுகிறார்‌. கிறிஸ்துவின்‌ சிலுவையே உண்மையான சீடரின்‌ பெருமை.
தூய ஆவியில்‌ புதுப்படைப்பாக, புதிய மனிதர்களாகத்‌ தன்னைப்‌ போல இயேசுவின்‌ அடிமையாக மாறி, நிலைவாழ்வைப்‌ பெற்றுக்‌ கொள்ள அழைப்பு விடுக்கிறார்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இரக்கத்தின் ஆண்டவரே! “ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்” என்றுரைத்து, சீடர்களைத் திருத்தூது பணிக்கு அனுப்பினீரே! தீமை தலைவிரித்தாடும் இவ்வுலகில், உமது தூய திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், நீர் தாமே பாதுகாத்து வழிநடத்த   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்” என்கிற வாக்குறுதியை, இன்றைய முதல் வாசகம்மூலம் தருபவரே, மூண்டு வரும் போர்களாலும், யுத்தங்களாலும், நீடித்து வரும் சண்டை சச்சரவுகளாலும், சர்வாதிகார போக்குகளாலும், பயங்கரவாத-தீவிரவாத வன்முறைகளாலும், நிலைகுலைந்து போயுள்ள இவ்வுலகில், அமைதி ஆறெனப் பெருக்கெடுத்து ஓடவும், தலைவர்கள் யாவரும், சமாதானத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒழுகவும் வரமருள          வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;” என வாஞ்சையோடு வாக்களிப்பவரே! வறுமை, வேலையின்மை, நோய், முதுமை, இயலாமை,  தொடர்  தோல்விகள், ஏமாற்றங்கள், குடும்பத்தில் சமாதானமின்மை போன்ற பல்வேறு இன்னல்களால் அவதியுறும் மக்கள் அனைவரையும், குறிப்பாகச் சமீப கால விபத்துகளாலும், போர்களாலும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிப்போரையும், தாயின் பரிவோடு கண்ணோக்கி, கரம்பிடித்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “புதிய படைப்பாவதே இன்றியமையாதது.” என்கிற பவுலடியாரின் அறிவுரையை ஆழ்மனதில் பதியவைத்து, சடங்கு சம்பிரதாயங்களைக் காட்டிலும் உண்மையான நம்பிக்கையும், நம்பிக்கைக்கு ஏற்ற நல்ல வாழ்க்கையும் தான் முக்கியம் என்கிற உணர்வோடு, சாட்சிய வாழ்வு வாழ்வதற்கான, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்கிற நற்செய்திக்குறிப்பு    இன்றளவும் உண்மையாக இருப்பதனால், உம்முடைய இறையாட்சிப்  பணிக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி, தேவ அழைத்தல் பெருகும்படி, அறுவடையின் உரிமையாளராம் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, June 24, 2025

புனிதர்கள் பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா

 புனிதர்கள் பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா
பொதுக் காலம் 13ஆம் ஞாயிறு - 29.06.2025


இன்றைய வாசகங்கள்:

திருத்தூதர் பணி 12:1-11
2 திமொத்தேயு 4:6-8
மத்தேயு16: 13-19

திருப்பலி முன்னுரை

புனிதர்களான பேதுருவும் பவுலும் திரு அவையின் தூண்களாகத் திருவிவிலியத்தால் எடுத்துக்காட்டப்படுகின்றனர். திரு அவையின் முதல் திருத்தந்தையான புனித பேதுரு ஆளுமைத் திறனோடு எளிய மனமும் ஏழைகளின் மீது மிகுந்த கனிவும் கொண்ட மிகச் சாதாரண மனிதர். திருத்தூதரான புனித பவுல் இளமை துடிப்பும் படைப்புத்திறனும் உயர்ந்த அறிவாற்றலும் கொண்ட அசாதாரண மனிதர். இருவரின் பண்புகளும் குண நலன்களும் இரு வேறு துருவங்களாக இருந்த போதும் இயேசுவின் பொருட்டு இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொண்டவர்கள். முதியோருக்கு உதாரணமாகப் புனித பேதுருவையும் இளையோருக்கு எடுத்துக்காட்டாகப் புனித பவுலையும் கூற முடியும். அந்த அளவிற்கு இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதும் தங்களுடைய வல்லமைமிக்க வாழ்க்கை சாட்சியத்தால் திரு அவையை வளர்த்து எடுத்தனர். 

இன்று நம் தாய் திருநாட்டில் நிலவுகின்ற எதிரும் புதிருமான சூழல்கள் நம்மைப் புனித பேதுருவின் கனிவையும் புனித பவுலின் துணிவையும் கொண்டு வாழ அழைப்பு விடுக்கின்றது. எந்நிலையில் இருந்தாலும் அந்நிலையில் பணிவும் துணிவும் நம்மிடம் இருக்குமானால் நமது வாழ்வும் சான்று வாழ்வாக அமையும் என்ற உணர்வோடு இன்றைய திருப்பலி கொண்டாட்டத்தில் குடும்பமாய் இணைவோம்.

வாசக முன்னுரை : 

முதல் வாசக முன்னுரை : 

துன்புற்ற வேளையில் தூக்கிப் பிடிப்பேன் என்ற இறைவனின் கரம் எவ்வாறு வல்லமையோடு திருத்தூதர் பேதுருவோடு செயலாற்றியது என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துக் கூறுகிறது. ஆண்டவரின் தூதர் முன்செல்ல, கட்டப்பட்ட அத்தனை விலங்குகளும் உடைய, பேதுரு தன் உணர்வு பெற்றவராய் சிறையிலிருந்து வெளிவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை எடுத்துக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி
2 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
3 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பேதுருவின் நற்செய்தி சாட்சியத்திற்குச் சற்றும் சளைத்தவர் அல்ல புனித பவுல். நல்லதொரு போராட்டத்தில் ஓடுகிறேன் என எப்போதும் நற்செய்தியைப் பற்றிக் கொள்வதிலே பற்றி நின்று, நற்செய்தி அறிவிக்காவிடில் தனக்கு ஐயோ கேடு என நற்செய்தியின் சாட்சியாக வாழ்ந்தவர் புனித பவுல்.கடவுள் பேதுரு சிறையிலிருந்து விடுவித்தது போல எவ்வாறு தன்னையும் சிங்கத்தின் பிடியிலிருந்து விடுவித்தாரெனப் புனித பவுல் எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின் மேல் என் திரு அவையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா” என்றுரைத்து திருஅவையை நிறுவிய இறைவா, பேதுருவின் வழிமரபில் எம்மை வழிநடத்த, நீர் தெரிந்தெடுத்துள்ள திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மேய்ப்புப்பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அளவு கடந்த அன்புடனும் மேற்கொள்ள, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அடைபட்டுக் கிடந்த சிறையின் அறை ஒளிமயமாகி, விலங்குகள் உடைபட, இரும்பு வாயில் தானாகத் திறந்து வழிவிட, விடுதலையின் அனுபவத்தைப் புனித பேதுருவுக்கு அளித்த இறைவா, போர் மேகங்களால் இருளடைந்து, அதிகரித்துவரும் யுத்தச்சூழல்களால் நிலைகுலைந்து, அழிவின் விளிம்பில் அல்லலுறும் அவனிக்கு, அமைதியை அருளவேண்டுமென்றும், உலகாளும் தலைவர்கள், சமாதானத்தின் பாதைக்குத் திரும்பவேண்டுமென்றும், உண்மையான விடுதலையை, எங்கள் தேசம் சமத்துவதில் சுவைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றுரைத்து, மன்னிக்கும் அதிகாரத்தினை, திருஅவைக்கும் திருப்பணியாளர்களுக்கும் அருளிய இறைவா, உம்மோடு ஒப்புரவாக நீர் தந்திருக்கும் ஒப்பற்ற கருவியாகிய, பாவசங்கீர்தனம் எனப்படும் ஒப்புரவு அருட்சாதனத்தை, நாங்கள் போற்றிப்பயன்படுத்தவும், மன்னிப்பு என்னும் திறவுகோலால், மனித உறவுகளைப் பேணி, நல்லுறவுடன் வாழவும் வரமருள  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புனிதர்கள் பேதுரு, பவுல், ஆகியோரது பெருவிழாவின், ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், சீமோன் பேதுருவைப் போல “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என நம்பிக்கை அறிக்கையிடவும்; பவுலடியாரைப் போல “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” எனச்சொல்லும்படியான, பிரமாணிக்கம் நிறைந்த சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்றும், அதற்கான நிறையருளை, நீரே தந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF