Sunday, October 12, 2025

பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு

 பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு - 19.10.2025 
அகில உலக நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு  

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 17:8-13
2திமோத்தேயு 3:14-4:2
லூக்கா 18:1-8

திருப்பலி முன்னுரை: 

அன்பு உள்ளங்களே ! தளரா மனத்துடன் நம்பிக்கையோடு செய்யும் இறைவேண்டல் நிச்சயமாகக் கேட்கப்படும் எனப் பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறுத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.  
இன்றைய வார்த்தை வழிபாடு ‘இடைவிடாத செபம் இறையருளைப் பெற்றுத் தரும்’ என்ற சீரியக் கருத்தை நமக்கு வழங்குகின்றது.
விடுதலைப் பயணநூலில் மோசேயின் கரங்கள் உயர்ந்திருந்தபோது இஸ்ரயேல் மக்கள் வெற்றியைக் கண்டனர். இறைஇயேசு உவமைகளின் மூலம் நம்மைத் தொடர்ந்து செபிக்க அழைக்கின்றார்.
கைம்பெண் தன்னுடைய விடாமுயற்சியினால் நேர்மையற்ற நடுவரிடமிருந்து நல்ல தீர்ப்பைப் பெறுகிறார். இவ்வாறு நீதியுள்ள இரக்கமுள்ள கடவுள் தம்மிடம் இடைவிடாது மன்றாடுவோரின் மன்றாட்டை நிச்சயமாக் கேட்பார் என்பது உறுதி.
இயேசு தன் பணிவாழ்வு முழுவதும் தந்தையோடு செப உறவில் நிலைத்திருந்தார். காலையிலும் மாலையிலும், ஒவ்வொரு நிகழ்வைத் தொடங்கும் முன்பும் செபித்தார். எனவே தான் திருத்தூதர் பவுல் கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் என்று! நமது கிறஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற ஆயுதங்களால் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது. இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இடைவிடாது செபிக்க, கடவுளிடம் நம்பிக்கையும், தன்னம்பிக்கையுடன் அவரை நாடவும் வேண்டிய வரங்களைப் பெற்றிட நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

முதல் வாசக முன்னுரை: 

இஸ்ரயேலர் இறைவன்மீது நம்பிக்கைக்கொண்டு தளரா மனத்துடன் மன்றாடியபோது இறைவன் அவர்கள் பக்கம் இருந்து வெற்றி அளித்தார். நாமும் இறைமீதான நம்பிக்கையுடன் தளரா மனம் கொண்டு வாழவும் செயல்படவும் வரம் வேண்டி முதல் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம். 

பதிலுரைப் பாடல்: 

திபா 121:1-2, 3-4, 5-6, 7-8 
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி. 
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்: உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதும் இல்லை. பல்லவி
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்: அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது: இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை: 

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவை எந்தச் சூழ்நிலையிலும் தளரா மனத்துடன் இறைவார்த்தையை கற்றுக்கொண்டு, அதில் நிலைத்து நின்று, நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: 

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. உலகளாவிய மறைபரப்பு ஞாயிறாகிய இன்று, இரண்டாம் வாசகம் கூறுவதுபோல “மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்கவல்ல திருமறையை” அறிக்கையிடுதலிலும், சான்று பகர்தலிலும், முதன்மையாய் விளங்குகிற எம்திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரும், அதே அழைத்தலில் பங்குபெறுகிற பொதுநிலையினராகிய நாங்களும், உறுதியாய் பயணிக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “மோசே தம் கையை உயர்த்தியிருந்த போதெல்லாம் வெற்றியடைந்த இஸ்ரயேலரின்” அனுபவம், இறை அருள் இல்லாமல், தீமைமீது வெற்றியும், நிலையான அமைதியும் சாத்தியமில்லை என்பதை உணர்த்துகிறது. உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், குடிமக்களாகிய நாங்களும், இறைவனை நாடுகிற, இறைஅரசுக்குரிய விழுமியங்களைப் பின்பற்றுகிற மனிதர்களாக, விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவார்த்தையை அறிவி” எனத் திமொத்தேயுவுக்குத் திருத்தூதர் பவுல் எழுதிய வார்த்தைகளையே, தங்கள் வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு, மறைப்பணித் தளங்களிலும், வேதபோதக நாடுகளிலும், துன்புறுத்தலும் வேதனைகளும் நிறைந்த இடங்களிலும், துணிவுடன் அருள் பணியாற்றும், குருக்கள், துறவியர், மற்றும் நற்செய்தி பணியாளர்கள் அனைவருக்கும், நீர்தாமே அரணும் கோட்டையுமாக இருந்து, திடமும் பலமும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை. ஆண்டவரே எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; போகும்போதும், வரும்போதும், இப்போதும், எப்போதும் காத்தருள்வார்” என்கிற திருப்பாடல் வரிகளால் திடம்பெறுகிற நாங்கள் அனைவரும், இந்த யூபிலி ஆண்டில் மட்டுமல்லாது, எம்வாழ்க்கை முழுவதுமே, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், மானிட மகன் வரும்போது மண்ணுலகில் காண விரும்புகிற, நம்பிக்கையைக் கொண்டவர்களாய் விளங்கவும், கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும், நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளதாகத் திகழுகிற இறைவார்த்தையை, நாங்களும், எங்கள் பிள்ளைகளும் குடும்பங்களும், உறுதியாய் பற்றிக்கொண்டு வாழுகிற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, October 6, 2025

பொதுக்‌ காலம்‌ 28ஆம்‌ ஞாயிறு

 பொதுக்‌ காலம்‌ 28ஆம்‌ ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2அரசர்கள் 6:14-17
2திமோத்தேயு 2:8-13
லூக்கா 17:11-19

திருப்பலி முன்னுரை

அன்பு உள்ளங்களே ! நாம்‌ இறைவனிடம்‌ பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூறவும்‌, இறைவனுக்கு என்றும்‌ நன்றியுள்ளவர்களாக வாழவும்‌ பொதுக்காலம்‌ 28 ஆம்‌ ஞாயிறுத்‌ திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
நன்றியுணர்வு என்பது ஆழமான இறைநம்பிக்கையின்‌ அடையாளம்‌. அது அனைத்து நன்மைகளும்‌ இறைவனிடமிருந்தே வருகின்றன என்னும்‌ உறுதியைத்‌ தருகின்றது. மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படைத்‌ தகுதி நன்றி நிறைந்த உள்ளம்தான்‌. நமக்குக்‌ கிடைத்த நிறைய நலன்களையும்‌ கொடைகளையும்‌ பற்றி எண்ணாமல்‌, கிடைக்காத ஒரு சிலவற்றை நினைத்துக்‌ கவலைப்பட்டுக்‌ கொண்டிருக்கிறோம்‌. நன்மைகளை எண்ணிப்‌ பாருங்கள்‌ (Count your Blessings) என்பது ஓர்‌ அழகான ஆங்கிலச்‌ சொற்றொடர்‌. தொழுநோயிலிருந்து குணம்‌ பெற்ற நாமான்‌, எலிசாவுக்கு நன்றி சொல்லிக் கைம்மாறு செய்ய வருவதை இன்றைய முதல்‌ வாசகத்திலும்‌, இயேசுவால்‌ குணம்‌ பெற்ற பத்து தொழுநோயாளருள்‌ சமாரியர்‌ ஒருவர்‌ மட்டுமே வந்து நன்றி சொல்வதை இன்றைய நற்செய்தி வாசகத்திலும்‌ வாசிக்கிறோம்‌.
நாம்‌ இதுவரைப்‌ பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு என்றும்‌ நன்றி கூறும்‌ உள்ளத்தை நமக்குத்‌ தந்திட மன்றாடி இத்திருப்பலியில்‌ பங்கேற்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை: 

எலிசாவின் வாக்கிற்கு இணங்கி, தனது வேலைக்காரனின் வேண்டுதலின் பேரில் சிரியா நாட்டு அரசனின் படைத்தலைவனான நாமான் யோர்தான் ஆற்றில் ழுழ்கித் தன் தொழுநோயிலிருந்து விடுதலைப் பெற்றான். வேற்றினத்தவரான நாமான் யாவே ஒருவரே கடவுள். உண்மையின் கடவுள் என்று நம்பினான். எது உண்மை? பலி அல்ல. கீழ்படிதலே சிறந்தது எனக் கூறும் இரண்டு அரசர்கள் நூலிலிருந்து எடுக்கப்பட இம்முதல் வாசகத்திற்கு உள்ளம் திறந்துச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல் 98: 1. 2-3-4
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

இன்றைய இரண்டாவது வாசகத்தில்," இயேசுகிறிஸ்து தாவீதின் வழி வித்து எனவும், இறந்த இயேசுகிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்” என்பது தனது நற்செய்தியென அறிவிக்கிறார். எனவே தன் வேதனைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் இயேசுகிறிஸ்துவுக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் புனித பவுலடியாரின் மனநிலை நமக்குள் நிலைக்கவும், இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவராலும் ஒருபோதும் சிறைபடுத்த முடியாது என்பதையும் உணர்ந்தவர்களாய் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வரும் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச்‌ சூழ்நிலையிலும்‌ நன்றி கூறுங்கள்‌. உங்களுக்காகக்‌ கிறிஸ்து இயேசு வழியாய்க்‌ கடவுள்‌ வெளிப்படுத்திய திருவுளம்‌ இதுவே. அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. “தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும், அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும், கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு”, திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரும், பொதுநிலையினராகிய நாங்களும், மக்களினத்தார் காண, எம்சொல்லாலும், செயலாலும், வாழ்வாலும், உமது மீட்பினை பறைசாற்றிட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. வேற்று நாட்டையும் இனத்தையும் சார்ந்த நாமானின் நோயைக் குணமாக்கி, “உலகெங்குமுள்ள அனைவரும் கடவுள் அருளிய விடுதலையைக்” காணச்செய்த இறைவா! உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், அனைத்துலக மக்களும், இன, மத, மொழி வேறுபாடின்றி, அனைவரையும் ஏற்று வாழவும், பகைமைக்கு இடம் தராமல், ஒன்றுபட்ட மானுடத்தை உருவாக்க உழைக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்” என்கிற நம்பிக்கையில், திருமுழுக்கு பெற்றுள்ள அனைவரும், இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழவும், வாழ்க்கையின் முடிவில் விண்ணக பேற்றினை அடையவும், எம்குடும்பங்களிலும், திரு அவையிலும் வாழ்ந்து மரித்த அனைவரும், நிலைவாழ்வின் பேரின்பத்தை அனுபவிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கடவுளைப் போற்றிப் புகழவும், பெற்ற நன்மைக்கு நன்றி கூறவும் மனமில்லாதவர்களைக் கண்டு வருந்திய இறைவா! நன்றி மறந்தோரையும், நன்மைக்குப் பதில் தீமை செய்வோரையும், உமக்கும், பிறருக்கும், குறிப்பாக எங்களை வாழ்வில் உயர்த்திய பெற்றோர், பெரியோர், ஆசிரிய பெருமக்கள் போன்றோருக்கும் நன்றி மறந்த எங்களையும், நீர் மன்னித்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்” என்கிற பவுலடியாரின் அறிவுரைப்படி, எல்லா காலத்திலும், உமக்கும் பிறர்க்கும், நன்றியுள்ளவர்களாய் வாழவும், துன்பத்திலும் துயரத்திலும் மட்டுமே உம்மை நினைவு கூர்ந்து, உம்மிடம் ஓடி வருபவராய் இல்லாமல், எங்கள் வெற்றிகளிலும், மகிழ்ச்சியான தருணங்களிலும், ‘நன்மைகள் அனைத்தின் ஊற்றும் நீரே’ என்பதை உணர்ந்து, நன்றியுணர்வுடன் வாழ அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

Tuesday, September 30, 2025

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:

அபாக்கூக்கு 1:2-3, 2:2-4
2திமோத்தேயு 1:6-8,13-14
லூக்கா 17:5-10

திருப்பலி முன்னுரை:

நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்திருக்கும் இறைஇயேசுவின் தரிசனம் நாடி  பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
திருப்பலி முன்னுரை.
இறை இயேசுவின்‌ அன்பு சீடர்களே, சீடத்திகளே ! இறைநம்பிக்கையும்‌ தன்னலமற்றச்‌ செயல்பாடுகளும்‌ சீடத்துவத்தின்‌ இரு கண்கள்‌ எனக்‌ கூறி ஆண்டின்‌ பொதுக்காலம்‌ 27 ஆம்‌ ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைநம்பிக்கையும்‌ செயல்பாடும்‌ ஒரு நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போலாகும்‌. இவை ஒன்றையொன்று நிறைவாக்குகின்றன. இறைநம்பிக்கை நிறைந்தவர்‌, வெறும்‌ நம்பிக்கையோடு நின்றுவிடாமல்‌, எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தன்‌ கடமையைச்‌ செய்கிறார்‌. துன்பத்திலும்‌ சோதனையிலும்‌ இறைப்பிரசன்னத்தை உணர முடியாத நாம்‌ சில வேளைகளில்‌ எங்கே இறைவா இருக்கின்றாய்‌ ? என்று இறைவனை நோக்கி எழுப்பும்‌ கூக்குரல்‌ வாழ்வின்‌ எதார்த்தம்‌. ஆனால்‌ நேர்மையுடையவரோ, தம்‌ நம்பிக்கையால்‌ வாழ்வடைவர்‌ என மொழியும்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌, நிகழ்காலத்‌ துன்பத்தைத்‌ தாண்டி நம்மை எதிர்நோக்கின்‌ திருப்பயணிகளாக வாழ அழைக்கிறது. இறைநம்பிக்கை நிறைந்த சாட்சிய வாழ்வு எத்துன்பத்தையும்‌ துணிவோடு சந்திக்கும்‌ ஆற்றல்‌ தருகிறது என ஓங்கி ஒலிக்கிறது இரண்டாம்‌ வாசகம்‌. கடுகளவு இறைநம்பிக்கையும்‌ மலையளவு காரியங்களைச் சாதிக்கும் சக்திமிக்கது என நற்செய்தி எடுத்துரைக்கிறது.

இறைநம்பிக்கை இறைவனின்‌ மாபெரும்‌ கொடை. அது தாழ்ச்சியோடு, பெயரும்‌ புகழும்‌ நாடாமல்‌, கடமையைச்‌ செய்யும்‌ செயல்பாட்டில்‌ வெளிப்படும்‌. அக்கொடை துன்பத்தில்‌ தளரா மனத்துடன்‌ வாழவும்‌, சோதனைகளில்‌ நேர்மையானவர்களாகவும்‌, தன்னடக்கத்துடன்‌ கடமையைச்‌ செய்யும்‌ சீடர்களாகளாகவும்‌ நம்மை மாற்றும்‌. அதற்கான அருளுக்காக இத்திருப்பலியில்‌ வேண்டுவோம்‌.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

யூதாவின்‌ இனத்தாரைப்‌ பிறவினத்தாராகிய கல்தேயர்‌ வழி இறைவன்‌ அடக்கியதைக்‌ கண்டு அபக்கூக்கு பொருமுகிறார்‌. இறைவன்‌ தரும்‌ பதிலோ, “ஆண்டவர்‌ மேல்‌ நம்பிக்கை வைப்பவன்‌ வாழ்வான்‌” (2: 4) என்பதாகும்‌. இன்றைய வாசகம்‌ அபக்கூக்குவின்‌ வினாவையும்‌ ஆண்டவரின்‌ விடையையும்‌ வெளிப்ப‌டுத்துகிறது. எனவே வாழ்க்கையில்‌ வெற்றிக்கு வழி கோல்வது எந்த ஒரு காரியத்திலும்‌ விசுவாசத்தோடு, நம்பிக்கைத்‌ திடனோடு ஈடுபடுவதாகும்‌. ஆண்டவரிடம்‌ விசுவாசம்‌ வைப்பது என்பது அவரிடம்‌ நம்மையே சரணடையச்‌ செய்வதாகும்‌ என்றுரைக்கும் இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
1. வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;  நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.   நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;  புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி
2. வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.  அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;  நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி
3. அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

தன்‌ “அன்பு மகன்‌ திமொத்தேயுவுக்கு", புனித பவுல்‌ கூறும்‌ அறிவுரைகள்‌ இன்றைய வாசகம். இன்று‌ சிறப்பாகத் திமொத்தேயு பெற்ற அருட்கொடைகளுக்கு அவர்‌ பிரமாணிக்கமாய்‌ இருக்கும்படி பவுல்‌ வேண்டுதல்‌ விடுக்கிறார்‌. சிறப்பாக நம்‌ எல்லோருக்கும்‌ அளிக்கப்பட்ட வரம்‌ அன்பு. இவ்‌அன்பு வரம்பற்றிக் கூறும்‌ பவுல்‌, “ஒருவருக்கொருவர்‌ அன்பின்‌ அடிமைகளாயிருங்கள்‌ ”என்பார்‌. இவ்‌அன்பு நம்‌ கிறிஸ்துவ வாழ்வின்‌ அடித்தளமாகவும்‌, அவ்வடித்தளத்தின்‌ மேல்‌ கட்டிய கட்டடமாகவும்‌, நம்‌ நினைவு, சொல்‌, செயல்களில்‌ வெளிப்படுகிறதா? என்பதை சோதித்துப் பார்க்க அழைக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. பணிக்குருத்துவத்துக்கான அழைப்பினைப் பெற்று, திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரும், பொதுகுருத்துவதில் பங்குபெறும் இறைமக்கள் யாவருமே, தங்களுக்குரிய கடமைகளைச் செய்யவும், எந்த நிலையில் இருந்தாலும், பெருமை பாராட்டாமல், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ என்கிற தாழ்ச்சிநிறை மனநிலையோடு வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கொடுமையை ஏன் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினை ஏன் காணச் செய்கின்றீர்?” என அபக்கூக்கு நூலில் விவரிக்கப்படும் சூழலில் தான் இன்றைய உலகும் சிக்கித் தவிக்கின்றது. போர் சூழல்கள் முற்றிலும் நீங்கவும், வன்முறை கலாச்சாரம் முடிவுக்கு வரவும், பேதமைகள், பிளவுகள் அறவே ஒழியவும் அமைதியின் அரசு உலகெங்கும் உதிக்கவும், ஆட்சி செய்வோரும், தலைமை பொறுப்புகளில் இருப்போரும், குடிமக்கள் நாங்களும், நாளுமே உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. யூபிலி ஆண்டினை கொண்டாடிவருகிற நாங்கள் அனைவரும், “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்” என்கிற முதல் வாசக கூற்றின்படி, இறை நம்பிக்கையில் வேரூன்றியவர்களாய், அன்புச் செயல்களில் திளைத்தவர்களாய், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகத் திகழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “கடவுள் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்” என்பதை உணர்ந்தவர்களாக, ஆண்டவருக்கு சான்றுபகர்வதிலும், நற்செய்தியின் பொருட்டுத் துன்புறுதலிலும் திடமாய் இருந்து, மறைப்பணியாற்றும் அனைவரையும், குறிப்பாக வேதபோதக நாடுகளிலும், வேதகலாபனைகள் நிறைந்த பகுதிகளிலும், நற்செய்தி பணியாற்றுவோரையும், நீர் தாமே, உமது உறுதி தரும் ஆவியால் நிரப்ப வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அற்புதங்களைக் காண இயலும் என்கிற நற்செய்தியை முழுமையாய் நம்பிடவும், துன்பச்சூழலிலும் உறுதியாய் இருந்திடவும், எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, September 21, 2025

பொதுக் காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு

 பொதுக் காலம் 26ஆம் ஞாயிறு 

(தமிழக விவிலிய ஞாயிறு)


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

ஆமோஸ் 6:1,3-7
1திமோத்தேயு 6:11-16
லூக்கா 16:19-31

திருப்பலி முன்னுரை

இறைவார்த்தையில் நம்பிக்கை கொள்ளவும், அதனை வாழ்வாக்கவும் பெயர் சொல்லி அழைக்கப்பட்டுள்ள பேரன்புமிகு சகோதரிகளே, சகோதரர்களே ! தமிழக விவிலிய ஞாயிறு நல்வாழ்த்துகள். உலகத் திரு அவை இந்த ஆண்டினை கிறிஸ்து பிறப்பின் 2025ஆம் ஆண்டு யூபிலியாக உவகை பொங்கக் கொண்டாடும் வேளையில் தமிழகத் திரு அவை இன்று விவிலிய ஞாயிறை எழுச்சியுடன் கொண்டாடுகின்றது. 'நான் உமது வார்த்தையில் நம்பிக்கை கொள்கிறேன்' என்று நாம் ஒவ்வொருவரும் அறிக்கையிடும் விதத்தில் மையக்கருத்து அமைந்துள்ளது. இது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆண்டாண்டு தோறும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இறைவாக்கு வாசிப்பு, பல சவால்களுக்கு மத்தியில் இறைவார்த்தையை வாழ்வாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாமே வியப்புக்குரிய விதத்தில் வளர்ந்துள்ளன என்றால் அது மிகையாகாது. 


இந்த உலகவாழ்வில் ஆடம்பரத்திலும், இன்பங்களிலும் செலவிடும்போது அடுத்திருப்பவரின் துன்பதுயரங்களில் பங்கு கொள்ள மனம் இல்லாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி வாழ்பவரின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார் இறைமகன் இயேசு.ஏழைகளிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் யூதர்களை யாவே கடவுள் கடிந்து கொண்டு அவர்களுக்கு நிகழப்போகும் அவலங்களை எடுத்துரைக்கின்றார். நிலை வாழ்வைப் பற்றிக்கொள்ள விசுவாச வாழ்வில் போராட்டம் நடத்திடத் திருத்தூதர் பவுலடிகளார் நம்மை அழைக்கின்றார்.

இச்சூழ்நிலையில் இந்த ஆண்டு இறைவார்த்தையை ஏற்று, நம்பி, வாழ்வாக்கி, பிறருக்கு உகந்த முறையில் வழங்கத் தமிழகத் திரு அவையின் திருவிவிலிய அருள்பணிக் குழுவும் நமது பங்குத் திரு அவையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளன என்பதை நாம் நன்கு அறிவோம். இம்முயற்சிகள் நிறைபலனைத் தந்து நம் வாழ்வு எல்லா நிலைகளிலும் பெரு வெற்றி காண இறையருள் துணைநிற்க வேண்டுமென்று இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.

முதல் வாசக முன்னுரை: 

தீயன செய்து பேரின்பம் கொள்வோர் அச்செயலினின்று விடுவிக்கப்படுவர். ஒருவர் தாம் செய்யும் அருவருப்புச்செயல் எதையும் நியாயப்படுத்த முடியாது. ஒருநாள் வரும்; அப்போது நேரியனவற்றைச் செய்பவரே நிறைமகிழ்வு கொள்வர் என்பதைச் சுட்டிக்காட்டும் இறைவாக்கினர் ஆமோசின் கருத்துகளை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
1. ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

2. ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

3. அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

திருத்தூதர் பவுலின் மனங்கவர்ந்த பணியாளராக விளங்கியவர் திமொத்தேயு. இவர் எபேசுத் திரு அவையின் ஆயரும் ஆவார். அவருக்கு ஆண்டவர் இயேசுவின் அரும்பண்புகளை பவுல் விளக்கிக் கூறுகிறார். அத்துடன் திமொத்தேயு கடைப்பிடிக்க வேண்டிய நம்பிக்கைச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் பவுல், திமொத்தேயுவின் சான்று வாழ்வு எவ்வளவு முதன்மையானது என்பதையும் இவ்வாசகத்தில் விளக்கிக் கூறுகிறார். உளம் திறந்து உவகையுடன் இவ்வாசகத்தைக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்” எனத் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பவுலடியார் அறிவுறுத்துகிறார்.  திரு அவைக்கான அழைப்பும், திருஅவையின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்குமான அழைப்பும் அதுவேயென உணர்ந்து, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகிய அனைவரோடும், பொதுநிலையினர் ஆகிய நாங்களும், நிலை வாழ்வு நோக்கிப் பயணிக்கும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர்” என்கிற இரண்டாம் வாசக கூற்றின் அடிப்படையில், உலகாளும் தலைவர்களுக்காகவும், எம்தேசத்தை ஆள்வோருக்காகவும் மன்றாடுகிறோம். அநீதியின் செயல்களை அறவே ஒழித்து, அமைதியின் பாதையைத் தேர்வு செய்து, மாந்தர் அனைவருக்கும், குறிப்பாக எளியோருக்கும், வறியோருக்கும், நலிவுற்றோருக்கும் நலம் தருகிற நல்லாட்சி நல்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வறியோரை நசுக்கி, எளியோரை ஒடுக்கி, அநீதி புரிபவர்களின் அழிவு நிச்சயம் என்றுரைக்கும் முதல் வாசகம் உணர்த்துகிற உண்மையை உணர்ந்து, மக்கள் அனைவரும், சிறப்பாக அதிகாரத்தில் இருப்போரும், சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருப்போரும், பணம், அந்தஸ்து, சாதி, மதம், பாலினம், பிறப்புப் பின்புலம் ஆகிய காரணங்களைக் காட்டி எவரையும் கீழ்மைப் படுத்தாமல், அனைவரையும் மாண்புடன் நடத்தும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கிறித்தவ அழைப்புப் பெற்றுள்ள நாங்கள் அனைவரும், பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடவும், நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடவும், குறைச் சொல்லுக்கு இடந்தராமல், விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடவும், உரிய காலத்தில் நிலை வாழ்வைப் பற்றிக்-கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      
 
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இன்றைய நற்செய்தி உவமையில் வருகிற செல்வரிடம் இருந்த 'கண்டுகொள்ளாமை' 'பிறர் மீது அக்கறையின்மை' 'நான் உண்டு என் நலன் உண்டு' என்கிற மனநிலையோடு வாழாமல், இயன்றவரை பிறருக்கு உதவும் அக்கறையுடனும், அன்புடனும் வாழத் தேவையான, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, September 15, 2025

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 25 ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

ஆமோஸ் 8:4-7
1திமோத்தேயு 2:1-8
லூக்கா 16:1-13

திருப்பலி முன்னுரை

முன்மதியுடன் வாழ்ந்து, இறைவார்த்தைக்குச் சான்று பகரக் காத்திருக்கும் அன்புச் சகோதரிகளே, சகோதரர்களே நல்வாழ்த்துகள். விவிலிய மாதத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று நாம் இறைவார்த்தையில் எவ்வாறு நம்பிக்கை வைப்பது, அது விளக்கும் திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது, அதன் வழியாக நாம் பெறும் நிலைவாழ்வை எப்படி முன்மதி அதாவது விவேகத்துடன் வாழ்வது என்பனவற்றைச் சிந்திக்கவும் அவற்றைச் சீரிய முறையில் செயல்படுத்தவும் அழைக்கப்படுகின்றோம். அதற்கு உதவியாக இறைவாக்கினர் ஆமோசும் திருத்தூதர் பவுலும் தங்கள் வழிகாட்டுதலை வழங்குகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக நற்செய்தி, முன்மதியுடன் செயல்பட்ட ஒரு வீட்டுப் பொறுப்பாளரின் புத்திக் கூர்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 
நிரந்தரமற்ற இவ்வுலகப் பொருள்களையும், நிலைவாழ்வுக்குரிய திடமான நம்பிக்கை, ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்தப் படுகிறது. இந்த நாளில் இறைவனுக்குப் பணிசெய்யும் மக்களாக மாறிடப் பொறுப்புள்ள பணியாளராக வாழ்ந்திட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம். நம்பதக்கவராய், பெறுப்புள்ள பணியாளராய் வாழ்ந்திடுவோம்...

முதல் வாசக முன்னுரை: 

நீதியின் இறைவாக்கினர் எனப் போற்றப்படும் ஆமோஸ் தாம் கண்ட நீதியற்ற, முன்மதியற்ற செயல்கள் பலவற்றை இவ்வாசகத்தில் எடுத்துக்கூறி அவற்றை இறைவன் ஒருபோதும் மறக்கமாட்டாரென எச்சரிக்கிறார்.
வறியோரை ஏமாற்றி அவர்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு, கள்ளத் தராசினைப் பயன்படுத்துவோர்க்கு எதிராக யாவே கடவுள் தனது கோபத்தைக் வெளிக்காட்டுகின்றார். எச்சரிக்கை விடுக்கின்றார். அதே நிலையில் தான் இன்றும் நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி, அடுத்தவரை ஏமாற்றுபவர்களுக்குக் கடவுளின் கோபத்தை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்: திபா 113:1-2, 4-6, 7-8

பல்லவி: ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி
 

மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி

ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

இறைப்பற்று, கண்ணியம், அமைதியான வாழ்வு ஆகியவை சமூகத்தின் அடித்தளம். அதில் வாழும் எல்லாருக்காகவும் இறைவனிடம் மன்றாடிப் பரிந்துரைத்து நன்றி கூறுதல் அவசியமானதாகும். எல்லா மனிதரும் உண்மையை உணர்ந்து மீட்புப் பெற இறைவேண்டல் தேவையெனத் திமொத்தேயுவுக்கு திருத்தூதர் பவுல் எடுத்துரைப்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எல்லா மனிதரும் மீட்புப் பெறவும், உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென விரும்புகிற, கடவுளின் கருவிகளாகத் திகழ்கிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகிய அனைவரோடும், பொதுநிலையினர் ஆகிய நாங்களும், இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழவும், அனைவரையும் இறையாட்சி நோக்கி அழைத்து வரவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரசர்களுக்காகவும், உயர் நிலையில் உள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள் என்கிற இரண்டாம் வாசக அறிவுறுத்தலின்படி, உலகாளும் தலைவர்களுக்காகவும், எம்தேசத்தை ஆள்வோருக்காகவும் மன்றாடுகிறோம். நீதியின் பாதையில் நிலைத்திருந்து, அனைவரையும் அரவணைத்துச் செல்லவும், அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போற்றிப் பேணவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வறியோரை நசுக்கி, ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களுடைய செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என ஆணையிட்டுக் கூறும் இறைவா! இவ்வுலகின் அனைத்து நிலைகளிலும் தலைவிரித்தாடும் அநீதியை எதிர்த்துப் போராடவும், ஏழைகளைத் தூசியிலிருந்து தூக்கி நிறுத்துகின்றவரும்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி-விடுகின்றவருமான உம்மைப் போலவே, நாங்களும் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வசதியாக வாழ்வதற்குத் தேவையான செல்வதைத் திரட்டுவதில் முனைப்பாய் இருக்கும் நாங்கள் எல்லோரும், நேரிய வழிகளில் பொருளீட்டவும், ஈட்டிய பொருளைக் கொண்டு, நிலையான உறைவிடங்களில் நண்பர்களைத் தேடிக்கொள்ளவும், ஒளியின் மக்களுக்குரிய முன்மதியோடு செயல்படவும் தேவையான அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்களும், நல்ல பணிகளில் அமர்த்தப்படவும், பணிபுரியும் இடங்களில், சிறியவற்றிலும், பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய், பொறுப்புடனும் திறமையுடனும் கடமையாற்றி, வாழ்வில் உயர்நிலையை அடையவும், எந்நாளும் நிறைமகிழ்வுடன் வாழவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org
Print Friendly and PDF

Monday, September 8, 2025

பொதுக்‌ காலம்‌ 24ஆம்‌ ஞாயிறு

 பொதுக்‌ காலம்‌ 24ஆம்‌ ஞாயிறு 
 (திருச்சிலுவை மாட்சி - விழா)

இன்றைய வாசகங்கள்

எண்ணிக்கை 21:4-9 
பிலிப்பியர்‌ 2:6-11 
யோவான்: 3:13-17

திருப்பலி முன்னுரை

நிலைவாழ்வின்‌ ஊற்றான திருச்சிலுவையில்‌ மாண்புக்குரிய சகோதரிகளை, சகோதரர்களே நல்வாழ்த்துகள்‌. விவிலிய மாதத்தின்‌ இரண்டாவது வாரத்தில்‌ “நான்‌ நிலைவாழ்வைப்‌ பெற வழிகாட்டும்‌ உம்‌ வார்த்தையில்‌ நம்பிக்கை கொள்கிறேன்‌” என்ற மையப்‌ பொருளில்‌ நடைபெறும்‌ இத்திருப்பலிக்‌ கொண்டாட்டத்தில்‌ பங்கேற்றுக்‌ கொண்டிருக்கிறோம்‌.

கடவுளின்‌ வார்த்தைகள்‌ ஒவ்வொன்றும்‌ நமக்கு நல்வாழ்வை வழங்கும்‌ ஆற்றல்‌ கொண்டவை. அதில்‌ ஒன்றுதான்‌ நிலைவாழ்வு. மனிதரின்‌ இறுதி இலக்கும்‌ நிலைவாழ்வு தான்‌. இந்த நிலைவாழ்வை ஆண்டவரும்‌ மீட்பரும்‌ நம்‌ அன்புச்‌ சகோதரருமான இயேசுவில்‌ நம்பிக்கை கொள்ளும்‌ எல்லாரும்‌ பெற்றுக்‌ கொள்வர்‌. இந்த நிலைவாழ்வை எல்லாரும்‌ பெற வேண்டும் என்பதற்காகவே தந்தையின்‌ திருவுளத்தின்‌ வெளிப்பாடாக இயேசு சிலுவையில்‌ தம்மையே கையளித்தார்‌. 

அதுவரை குற்றம்‌ செய்தோரின்‌ கொடிய தண்டனைக்‌ கருவியாக விளங்கிய சிலுவை, “திருச்சிலுவை' என்ற சிறப்புத்‌ தகுதியுடன்‌ மாட்சி பெற்றது. ஆம்‌. “சிலுவை எனது பெருமை' எனக்‌ கூறிய திருத்தூதர்‌ பவுலும்‌ தன்‌ வாழ்க்கையினால்‌ நிலைவாழ்வின்‌ சான்றாளராகத்‌ திகழ்ந்தார்‌. நாமும்‌ இறைவார்த்தை தரும்‌ உந்துதலால்‌ நிலைவாழ்வின்‌ கருவிகளாக வாழத் திருச்சிலுவையின் ஒளியில்‌ இறைவேண்டல்‌ செய்பவர்களாய்‌ இத்திருப்பலியில்‌ பங்கேற்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை:

பாம்பு கடியினால்‌ பரிதவித்துக்‌ கொண்டிருந்தோர்‌, உயர்த்தப்பட்ட வெண்கலப்‌ பாம்பைப்‌ பார்த்து நலம்‌ பெற்றனர்‌. அதுபோலச் சிலுவையில் தொங்கும்‌ இயேசுவைப்‌ பார்ப்போர்‌ நிலைவாழ்வை அடைவர்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்டும்‌ முதல்‌ வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)
பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.

என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். நீதிமொழிகள்மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். - பல்லவி

அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். - பல்லவி

ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. - பல்லவி

அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

கடவுள்‌ வடிவில்‌ உயர்நிலையில்‌ இருந்தவர்‌ இயேசு. அவர்‌ தம்மைச்‌ சிலுவைச்‌ சாவு மட்டும்‌ தாழ்த்தி, கீழ்ப்படிந்ததால்‌ கடவுள்‌ அவரை மிகவே உயர்த்தி மேன்மையுறச்‌ செய்தார்‌. கீழ்ப்படிவோருக்கு மிகச்‌ சிறந்த எடுத்துக்காட்டாக வழங்கப்படும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச்‌ செவிசாய்ப்போம்‌.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா… அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருச்சிலுவையின் மகிமையை கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திரு அவையும், அதன் தலைவராம் திருத்தந்தை லியோ, ஏனைய ஆயர்கள், குருகுலத்தார், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும், இயேசுவின் திருச்சிலுவையை ஆராதிப்பதோடு நின்றுவிடாமல், சிலுவையின் பாதையில் உறுதியுடன் பயணிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக விளங்கிட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இறைவன் அருளிய விடுதலை வாழ்வின் மேன்மையை உணராமல், அவருக்கு எதிராகப் பேசி, தம்மீது தண்டனையை வருவித்துக்கொண்ட இஸ்ராயேலரைப் போலவே, இறைவன் அருளும் அமைதியின் பாதையில் நடவாமல், சண்டை - சச்சரவுகள், போர் - போராட்டங்கள், வன்முறை - தீவீரவாதம் போன்ற அழிவின் பாதைகளைத் தேர்வுசெய்யும் உலகினை, நீர்தாமே நல்வழிக்கு அழைத்து வரவும், உலகத்தலைவர்களும், எம்நாட்டுத் தலைவர்களும், தம் பொறுப்புணர்ந்து செயல்படவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு, உலகின் மேல் அன்பு கூர்ந்த இறைத்தந்தையின் அன்பினை, உலக மக்கள் அனைவரும், சாதி, மத, இன பேதமின்றி உணரவும், கிறித்தவர்களாகிய நாங்கள் அந்த இறையன்பை பற்றுறுதியுடன் வெளிப்படுத்தும் மக்களாக விளங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தம்மையே வெறுமையாக்கி, கீழ்ப்படிந்து, தாழ்த்திக்கொண்டதனால் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடும் அளவிற்கு கடவுளால் உயர்த்தப்பட்டு, எப்பெயருக்கும் மேலான பெயர் அருளப்பட்ட இயேசுவைப் பின்பற்றி, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், தாழ்ச்சியை அணிந்தவர்களாகவும், துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்களாகவும் வாழ்ந்திட    வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
      
5. ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என நாவாலே அறிக்கையிடுவதோடு நில்லாமல், வாழ்வாலும் சான்று பகரவும், வாழ்வின் எல்லாச் சூழல்களிலும், சிலுவையைப் புறந்தள்ளாமலும், சிலுவையைக் கண்டு பயந்தொளியாமலும் வாழ, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, September 1, 2025

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானம் 9:13-19
பிலமோன் 1:9b-10,12-17

லூக்கா 14:25-33

திருப்பலி முன்னுரை:

இறைஞானத்தைத் தேடி இன்று ஆலயம் நுழைந்துள்ள இறைஇயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் நன்றியோடும், மகிழ்ச்சியோடும் பங்குக்கொள்ள அன்புடன் வரவேற்கின்றோம்.
சாலமோன் கடவுளிடம் முதன்மையாகக் கேட்ட ஞானமே! யூதர்களை ஆண்டுவழி நடத்த அவர் விரும்பியதுவும் அதுவே. இறைத்திட்டத்தை அறிந்து கொள்ளக் கடவுளிடம் ஞானத்தையும், தூயஆவியாரையும் பெற வேண்டும் என்கிறது முதல் வாசகம். அன்பு, மன்னிப்பு, அடுத்தவரை அன்புடன் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற உயரிய கிறிஸ்தவப் பண்புகளை இரண்டாம் வாசகம் எடுத்துக்கூறுகிறது.
இயேசுவின் சீடராய் மாறிட எல்லாவற்றையும் ஏன் தன் உயிரையும் விடத் தயாராக இருப்பவரே தன் சீடனாக இருக்க முடியும், தன் சிலுவையைச் சுமப்பவர்கள் மட்டுமே என் சீடராக இருக்க முடியும் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார் இயேசு. ஞானத்தைத் தேடுபவர்களாய், கிறிஸ்தவ மதிப்பீடுகளை ஏற்றவர்களாய், தன் துன்பங்களை முழுமனதுடன் ஏற்று இயேசுவின் சீடராய் வாழக்கூடிய நல்ல சூழலைத் தர வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஞானம், இறைவனால் அருளப்படும் அறிவு, அதன் செயலாற்றல் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறுகிறது சாலமோனின் ஞானம். ஞானம் ஒரு ஒழுக்க நெறியாக, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பாக எண்ணப்பட்டது. ஞானம் இஸ்ரயேல் மக்களிடையே தங்கி அவர்களை வழி நடத்தும் கருவியாகக் கருதப்பட்டது. "இறைவா இத்தகைய ஞானத்தை எனக்குத் தருவாயாக" என்று மன்றாடும் பாணியில் அமைந்துள்ளதே இன்றைய வாசகம்.சாலமோனுக்குச் சிறப்புப் பெற்றுத் தந்த ஞானத்தை நிறைவாய் நாமும் பெற்றிட இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்து இறைவனை வேண்டுவோம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

1. மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

2. வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி

3. எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

4. காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.  எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! - பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலிருந்தபோது கொலோசை நகர நண்பரான பிலமோன் என்பவருக்கு எழுதிய இக்கடிதத்தில் பிலமோனின் அடிமை ஒனேசிம் என்பவரை மன்னித்து அன்புடன் சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தி வருகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், இறைமக்களாகிய நாங்களும், உம்மைவிட மேலாக எதைக் கருதினாலும், உம சீடராய் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவர்களாய், உம்மையே பற்றிக்கொண்டு, விண்ணரசு நோக்கி முன்னேறுகிற எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் விளங்கிட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இவ்வுலகின் தலைவர்களும், எம்நாட்டின் தலைவர்களும், இவ்வுலகின் மக்கள் அனைவருமே “நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை” என்பதை உணர்ந்தவராகளாய், நிலையான மகிழ்வைத் தருகிற சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், சமாதானம் ஆகிய விழுமியங்களின்படி வாழுகிற, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அடிமையாக அல்ல, அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்தின் பொருளுணர்ந்து, சாதியின் பெயராலோ, சமயத்தின் பெயராலோ, பிறப்பிடத்தின் அடிப்படையிலோ, பொருளாதாரம் மற்றும் பின்னணி அடிப்படையிலோ, எவரையும் புறந்தள்ளாமல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற உயர்நெறியின்படி, எங்கள் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை கட்டியெழுப்புகிற நல்லுள்ளத்தை, எமக்குத் தந்தருள     வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கட்டுமானப் பணிகளுக்கும், போர் தொடுத்தலுக்கும் மட்டுமின்றி, உம்மைப் பின்தொடர்வதற்கும், திண்ணமான தீர்மானமும், திடமான முடிவும், தியாகம் நிறை வாழ்வும் தேவை என்பதை, நற்செய்தி வாசகம்மூலம் அறிந்த நாங்கள், உம்மைப் பின்தொடர்வதில் உறுதியாய் இருக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
      
5. நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறிப்பாக இளையோரும், உம் திருவுள்ளதை அறிந்துகொள்ளவும்,  அதன்படி தங்கள் வாழ்வை நடத்திச்சென்று, உமக்கும் பிறருக்கும் உகந்தவர்களாய்  வாழ்ந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, August 24, 2025

பொதுக்காலம் ஆண்டின் 22 ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 22 ஆம் ஞாயிறு

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சீராக்கின் ஞான நூல் 3: 17-18,20,28-29
எபிரேயர் 12: 18-19, 22-24
லூக்கா  14: 1,7-14

திருப்பலி முன்னுரை:

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டியில் பங்கேற்க ஓர் இனமாய் ஆலயம் வந்துள்ள இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

தாழ்ச்சியே தலையாய புண்ணியங்களுள் முதலாவது. இறை அருளைப் பெற்றுக் கொள்ள மிக முக்கியமான, முதன்மையான பண்பான தாழ்ச்சியை நமதாக்கிக் கொள்ள இன்றையத் திருவழிபாடு நம்மை அழைக்கின்றது. 

தாழ்ச்சி என்பது தன்னையே இழிவாக நினைப்பதைக் குறிப்பது அன்று; மாறாக இறைவனுடைய திருவுளத்திற்குக் கீழ்படிவதற்கு வேண்டிய பணிவைக் குறிப்பிடுகிறது. நான் ஆண்டவரின் அடிமை என்று தன்னையே தாழ்த்திக் கொண்ட அன்னை மரியா பெண்களுக்குள் பேறுபெற்றவராகவும் எல்லாத் தலைமுறையினரும் அவரைப் பேறுபெற்றவர் என அழைக்கவும் இறைவன் திருவுளம் கொண்டார். 

இறைமகன் இயேசுவும் தம்மையே தாழ்த்தி அடிமைநிலையை ஏற்று நம் பாவங்களுக்காக இறந்ததால், இறைவன் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் என்று புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறியுள்ளார். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன் என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்ற வாழ்தொலி நம் ஒவ்வொருவரையும் இயேசுவிடமிருந்து கனிவையும் தாழ்ச்சியையும் கற்று வாழ அழைப்பு விடுக்கிறது. தாழ்ச்சி என்ற அருளைப் பெற இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

சீராக்கின் ஞானநூலின் ஆசிரியர் ”குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்: அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்புக் காட்டுவர்.” என்று கூறுகிறார். மனிதர் முன் உயர்ந்தவர் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள்போல் தோன்றினாலும் கடவுள் முன்னிலையில் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவர். எனவே பணிவோடு நடந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்
திருப்பாடல்: 68: 3-10
நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். - பல்லவி

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். - பல்லவி

கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

ஒரு காலத்தில் கடவுள் அச்சம் தரும் நெருப்பிலும், இருண்ட மேகத்திலும், கொடிய இருளிலும், சூழல்காற்றிலும் வெளிப்பட்டார். ஆனால் நமது காலத்தில் வானதூதர்களாலும், நீதிமான்களாலும் சூழப்பட்ட அமைதியின் கடவுளாக, தாழ்ச்சியின் கடவுளாகக் காட்சியளிக்கின்றார் என்று சினாய் மலைக்கும் சீயோன் மலைக்கும் உள்ள வித்தியாசங்களின் மூலம் இயேசு கிறிஸ்து நம்மை மீட்டு இறைவனோடு ஒப்புறவாகி உள்ளார் என்பதை வலியுறுத்தும் திருத்தூதர் பவுலின் எபிரேயருக்கு எழுதப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை” என இரண்டாம் வாசகத்தில் விவரிக்கப்படும் நிலை உருவாகும்வரை, பயணிக்கும் திரு அவையாகிய எம்மை வழிநடத்தி வருகிற திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், நம்பிக்கை, எதிர்நோக்கு, பிறரன்பு ஆகிய இறையியல் பண்புகளோடு வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது” என்கிற ஞான நூலின் வார்த்தைகள் உண்மையாகிவருகிற இக்காலக்கட்டத்தில், அகந்தை மற்றும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை விட்டொழித்து, பணிவும், சாந்தமும், அமைதியை நாடுகிற நல்லுள்ளமும் கொண்டவர்களாய், இவ்வுலகின் தலைவர்களையும், எம்நாட்டின் தலைவர்களையும் மாற்றிடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. முதன்மையான இடங்களைப் பெறுவதற்கும், பெருமை பாராட்டுவதற்கும் எதையும் செய்யத் துணிகிற இக்காலத்தில், போட்டி மனப்பான்மையுடன், பிறரை அழித்தேனும் முன்னேறத் துடிக்கும் கயமையைத் துறந்து, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய விழுமியங்களின்படி வாழ்ந்து, நேரிய வழியில் உயர்வை எய்துகிற நல்ல மனதினை, எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. “தம்மைத்தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” என்ற உம் அருள்வாக்கை மனதில் நிறுத்தி, எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும், சமுதாயத்திலும், பிறருக்கு முன்னுரிமை அளித்து, புரிதலும் பகிர்தலும் மிகுந்த அன்புறவை வளர்த்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், எமக்குக் கைம்மாறு செய்ய இயலாதவர்களையும் நாங்கள் பரிவுடன் கண்ணோக்கி, பணிவிடை செய்தால், இவ்வுலகில் பேறுபெற்றவர் ஆவதோடு,  நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது கைம்மாறும் பெறுவோம் என்பதை புரிந்துகொண்டு, தன்னலமற்ற அறச்செயல்களில் ஈடுபடுகிற அருளினை, இங்கே கூடியுள்ள எங்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, August 20, 2025

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 66: 18-21
எபிரேயர் 12:5-7,11-13
லூக்கா  13: 22-30

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டு, நிறைவாழ்வை நோக்கி வெற்றி நடைபோடும் இறைகுலமே! பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

வாழ்வுக்குச் செல்லும் வழிக் குறுகலானது. ஆனால் அழிவுக்குச் செல்லும் வழியோ அகலமானது. நம்மில் எத்தனையோ பேர் வாழ்க்கைப் போராட்டத்தில் துவண்டு விடாமல் இறுதிரைப் போராடி நம் வாழ்வில் வெற்றிப் பெறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

எசாயா இறைவாக்கினர் கலக்கமுற்றுக் கவலையில் இருந்த மக்களை நம்பிக்கையில் தேற்றுவதை நாம் காணலாம். இறையாட்சியில் நுழைவதற்கும் நம் வாழ்வில் நம்பிக்கை என்னும் நங்கூரம் அவசியமானது. ஆண்டவரின் கண்டிப்பால் திருந்தியவர்கள் துயரத்திற்கு உள்ளனாலும் பின்பு அவர்கள் அமைதியும், நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.

இடுக்கலான வழி நீதியின் வழி, அமைதியின் வழி, மகிழ்ச்சியின் வழி. இடுக்கலான வாயில் வழியே நுழைவோர் நிலைவாழ்வைப் பெறுவர். இதை மேற்கொள்பவர்கள் வெகுசிலரே. அந்த வெகுசிலராகிய நாம் இறைமகன் இயேசுவில் நம்பிக்கை வைத்து அர்ப்பணவாழ்வு வாழ இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

பாபிலோனியாவிற்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் எசாயா, தொடர்ந்து, பிற இனத்தவரும் இஸ்ரயேலின் மாட்சி நோக்கி வருவர் என்று இறைவாக்கு உரைக்கின்றார். எருசலேமின் கதவுகள் பிற இனத்தாருக்கும் திறந்துவிடப்படுகின்றன. உள்ளே நுழையும் அவர்கள் இறைவனின் மாட்சிமையை உணர்ந்து கொள்வார்கள். இறைவனின் மேய்ச்சல் நிலத்தைக் கண்டு கொள்வார்கள். இறைவன் அவர்களின் உரிமைச்சொத்தாகவும் மாறுவார் என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:- உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
திருப்பாடல் 117: 1. 2
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி
ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி 

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகத்தில்  திருத்தூதர் பவுலின் நமது வாழ்வில் துன்பங்களும், துயரங்களும், குறுக்கிடும்போது யேசுவின் பாடுகளும், துன்பங்களும் நமக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். இயேசுவின் துன்பம் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற மட்டுமல்ல மாறாக நம் வாழ்வின் மீட்பை உறுதி செய்யவே. ஆனால் நமது துன்பம் மற்றவர்களுக்காக அல்ல மாறாக நமது விசுவாச வாழ்வின் போராட்டத்திற்காக மட்டுமே. அதற்கு இயேசுவின் வாழ்வும் வழியும் ஓர் பாடமாக அமைய வேண்டும் என்று திருத்தூதர் பவுல் கூறுகின்றார்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து, மக்கள் அனைவரையும் இறையாட்சியில் கூட்டிச்சேர்க்கும் திருப்பணியைச் செய்துவருகிற எங்கள் திருத்தந்தை லியோ அவர்களும், ஏனைய ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், உம்மால் நிறைவாக ஆசீர்வதிக்கப்படவும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் அறிந்தவராகிய நீர், உலகையும் உலகத் தலைவர்களையும், எம்நாட்டுத் தலைவர்களையும், பகைமை உணர்விலிருந்தும், போர் வேட்கையிலுமிருந்தும் விடுவித்து, அமைதியின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்” என்பதையும், எங்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும், நாங்கள் திருத்தப்படுவதற்காகத்தான் என்பதையும் உணர்ந்து, அவற்றைத் தாங்கிக்கொள்ளவும், உம்முடைய துணையோடு, அவற்றை மேற்கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், “கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்” என்கிற உண்மையை உணர்ந்து, பழம்பெருமை, இனப்பெருமை, செல்வச்செருக்கு, பதவி ஆணவம் ஆகியவற்றைத் துறந்து, தாழ்ச்சி என்கிற நற்பண்பை அணிந்தவர்களாய், இறையரசை நோக்கி நம்பிக்கையோடு பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பணமும் பகட்டும், சிற்றின்பமும் உல்லாசமும், பாவமும் பழிச்செயலும் பெருகிவிட்ட இவ்வுலகில் “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்” என்கிற உம் போதனைக்குச் செவிமடுத்து, ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த நல்லதொரு வாழ்வினை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, August 12, 2025

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 38:4-6, 8-10
எபிரேயர் 12:1-4
லூக்கா  12:49-53

திருப்பலி முன்னுரை:

படைகளின் ஆண்டவரின் உறைவிடத்தில் அமர்ந்தும் ஆற்றுப்படுத்திக் கொள்ள இந்தப் பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.

'மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்!' என்று தான் வந்ததை அறிவிக்கும் இயேசு தன் வருகை அமைதியை அல்ல பிளவையே உண்டாக்கும் என்று சொல்வதோடு, தான் பெற வேண்டிய இரத்தத் திருமுழுக்கே அந்தப் பிளவின் முதற்கனி என்கின்றார். இறையரசு பற்றிய செய்தி அதை அறிவிப்பவருக்கு அழிவாக முடிகிறது. பிளவு, துன்பம், அறிவிப்பவரின் அழிவு - இந்த மூன்றும்தான் இறையரசின் தாக்கங்கள்.

இயேசுவை அல்லது இறையரசைத் தேர்ந்து கொண்டால் நாம் மற்றதை விட்டுவிடுதல் அவசியம். இதற்குத் தேவை மனத்திடம். தனக்குத் துன்பம் வந்தாலும் தான் தேர்ந்துகொண்ட 'சாய்ஸ்' இதுதான் என்று நிலைத்து நிற்கிறார்கள் எரேமியாவும், இயேசுவும். 'அவரின்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம்' என்று சொல்லி எபிரேயர் திருமடலின் ஆசிரியரும் தன் மக்களை அழைக்கிறார். அவரின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நம் கண்கள் கசங்கலாம். ஆனால், இறுதியில் நம் பார்வைத் தெளிவாகும்! தெளிவானப் பார்வைப் பெற்றிடத் திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

எரேமியா இறைவாக்கினர் தன் சொந்த மக்களாலும் அரசனாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்றார். அவரின் இறைவாக்கும், செய்தியும் மக்களுக்கு அச்சம் தருவதாலும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தாததாலும் இவ்வாறு செய்கின்றனர் மக்கள். இருந்தாலும் எத்தியோப்பியன் ஒருவன் அரசனிடம் முறையிட அரசனும் எரேமியாவை விடுவிக்க ஆணையிடுகின்றான். இவ்வாறாக, ஒரே நகரில் சிலர் எரேமியாவுக்கு சார்பாகவும், பலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். ஆக, இறைவனின் செய்தி அல்லது இறைவாக்கு கொண்டு வரும் நிகழ்வு மக்களிடையே பிளவு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.

திருப்பாடல்40: 1. 2. 3. 17

1. நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி

2. அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி

3. புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி

4. நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்றால் என்ன என்று வரையறை செய்துவிட்டு, தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சிம்சோன் என முதல் ஏற்பாட்டு குலமுதுவர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வேரூன்றியிருந்த விதத்தை எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்துத் தொடர்ந்து ஓடுவோம் என்றும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்வோம் என்றும் அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன ... அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.” என்கிற நற்செய்தி வாழ்த்தொலிக்கு ஏற்ப, இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் தாயாம் திருஅவையை வழிநடத்தி வருகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரில், நல்லாயனாம் உம்மைக்கண்டு, உம் குரலுக்குச் செவிசாய்த்து பின்தொடர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மண்ணுலகில் நீர்மூட்டவந்த அன்பெனும் நெருப்பையும், நீதியின் சுடரையும் அணைத்துவிட்டு, பகைமையின் பாதையில் பயணிக்கும் இவ்வுலகையும், உலகின் தலைவர்களையும், எம்நாட்டின் தலைவர்களையும், சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், சமாதானம் ஆகிய விழுமியங்களின்படி, வாழுகிற மற்றும் ஆளுகிற, நல்லோராய் நீர் உருமாற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “நானோ எளியவன்; நீரே என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்” என்கிற திருப்பாடல் வரிகளையே, எங்கள் வேண்டுதலாக உம்முன் எழுப்பி, இன்னல்கள் நிறைந்த எம்வாழ்வில், மனம் சோர்ந்து, தளர்ந்து போகாமல், நம்பிக்கையோடு பயணிக்கவும், குறிப்பாக இளையோர் மற்றும் வலுவற்றோர், உம்மையே தங்கள் துணைவகராகக் கொண்டு, துணிவோடு முன்னேற அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிச் செல்லவும், எங்கள் தனிப்பட்ட அழைத்தல் மற்றும் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப, எங்களுக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில், மன உறுதியோடு ஓடிடத் தேவையான, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், மனவுறுதியோடு பங்கேற்று, எங்களைப் பற்றிகொண்டிருக்கிற எல்லா சுமைகளையும், பாவநாட்டங்களையும் உதறித் தள்ளிவிட்டு, உம் சார்பாகவும், உமது அரசுக்கு ஏற்றவர்களாகவும் வாழ்ந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  


https://anbinmadal.org

Print Friendly and PDF

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

இன்றைய வாசகங்கள்:-

திருவெளிப்பாடு. 11:19, 12:1-6,10
1கொரிந்தியர். 15:20-26
லூக்கா. 1:39-56

திருப்பலி முன்னுரை:-

இன்று நாம் அன்னை மரியா விண்ணேற்றம் அடைந்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நமது நாடு அடைந்த சுதந்திரத்தையும் நினைத்து ஒரு விழா எடுக்கின்றோம். மேற்கூறிய இரண்டு விழாக்களும் சாத்தியமான தன் காரணம் நம்பிக்கை! 

அன்னை மரியாவுக்கு இறைவனது பராமரிப்பின் மீது நம்பிக்கை இருந்ததனால் தான் அவர் இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றார். மங்கள வார்த்தை அவருக்குச் சொல்லப்பட்டபோது இறைவனின் வாக்கில் நம்பிக்கை வைத்து 'ஆம்' என்று சொன்னார். இறைவனின் தாயானதால் அவரை இறைவன் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார் என்று திரு அவை நம்புகிறது.

ஒரு நாள் நாம் சுதந்திரம் பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால்தான் நம் முன்னோர்கள் தங்கள் உயிரையே தியாகம் வைத்து, சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்.

எபிரேயருக்கு எழுதிய நூலில் இது விளக்கிக் கூறப்படுகின்றது: "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்றுப் பெற்றனர்" (எபிரேயர் 11:1-2).

மரியன்னையின் மீது அன்பு வைத்திற்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்குத் தக்க உதவிகளைச் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ள முடியும்.

ஆகவே, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான இன்று மரியன்னைக்கு மகிமைச் செலுத்துவோம், அதே நேரங்களில் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஒரு பெண்ணால் (முதல் ஏவாள்) இழந்த விண்ணக வாழ்வும், மகிழ்வும் மற்றொரு பெண்ணால் (மரியாவின் வழியாக) மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் அன்னை மரியா. அவருக்கு ஏற்ற மாட்சியையும், துன்பங்களையும் அதன் வழியாக நாம் கண்ட மீட்பையும் எடுத்துக் கூறும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

\திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)

பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! பல்லவி 

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி 

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். இந்த நிகழ்வு அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது மரியாளின் விண்ணேற்பு வழியாக. சாவே கடைசி பகைவன். அதுவும் அழிக்கப்படும் என்று இயேசுவின் இரண்டாம் வருகையை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்...

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும், உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும், ஏழைகளின் மகிழ்ச்சியில் இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மகிழ்ச்சியும், எம்புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா! உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து, நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும். மரியாளைப் போலத் தாழ்ச்சியிலும், இறைநம்பிக்கையிலும் சிறந்து விளங்க அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா! நாங்கள் உம் ஞானத்தையும், இரக்கத்தையும், உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய், நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும், நீர் எமக்குக் கொடுத்த சுதந்திரக்காற்றை  அனுபவிக்கவும் தேவையான வரங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 4. முன்னேற்றப் பாதையில் வழி நடத்தும் எம் இறைவா, எமக்காய் நீர் தந்த அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் சகிப்புத்தன்மை இல்லாமையால் அமைதி இல்லா ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இவ்வேளை உம் அன்பின் போதனைகளால் அனைத்தையும் மறந்து மக்களுக்காகத் தொண்டாற்ற வேண்டிய வரத்தைத் தர உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.  


                                                                 https://anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, August 5, 2025

பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

 பொதுக்காலம்  19ஆம் ஞாயிறு 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானம் 18:6-9
எபிரேயர் 11:1-2,8-19
லூக்கா 12: 32-48

திருப்பலி முன்னுரை:

தெய்வத்தின் திருப்பாதங்களில் அமர்ந்து பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு திருவழிப்பாட்டில் கலந்துக்கொள்ள வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.

கிறிஸ்துவ வாழ்வின் மையமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை தான் ஆபிரகாமை கடவுளோடு ஒன்றிணைத்தது. அதே நம்பிக்கைதான் நோய்களைக் குணமாக்கியது. பாவிகள் மன்னிப்புப் பெற்றதும், இறந்தவர் உயிர் பெற்றதும் இந்த நம்பிக்கையில்தான்...

இன்றைய காலக்கட்டத்தில் உலக அரங்கில், திருச்சபையின் அமைப்பு ரீதியைப் பார்க்கின்றபோது நம்பிக்கையற்ற நிலை பலரது மனதில் எழலாம். ஆனால் இந்த அவல நிலைமாறத் தான் எங்கிருந்தோ ஒரு ஒளி நம்மீது வீசுகிறது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை நடசத்திரமாக இயேசு தோன்றுகிறார். ”சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம் உங்கள் பரம தந்தையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அழைக்கின்றார்.

நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதியான நம்பிக்கையில் விழிப்போடு செயல்படும் பணியாளர்களாக மாறவும் உயிரேட்டம் நிறைந்த செயல்பாடுள்ள வாழ்வு வாழ்வதற்காக வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்…  வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இறைவனின் நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு அவரின் வாக்குப்பிறழாமை. அஃதாவது, அவரின் சொல்லுக்கும், செயலுக்கும் முரண் இருக்காது. அவரின் வாக்குப்பிறழாமைக்கு ஓர் உதாரணம் தருகின்றது இன்றைய முதல் வாசகம்.  கடவுளின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கடவுளின் முன்னிலையில் பெருமைப்படுத்தப்படுவார்கள். அவர்களும் இறைவனைப் புகழ்ந்துப் பாடுவர் என்று சாலமோனின் ஞானம் கூறுவதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 33: 1,12. 18-19. 20,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

1. நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். - பல்லவி

2. தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.  அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

3. நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை' என்று நம்பிக்கையை வரையறுக்கிறது இன்றைய இரண்டாம் வாசகம். நம்பிக்கைக்கு வரையறைத் தருகின்ற திருத்தூதர் பவுல் தொடர்ந்து, ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கைப் பற்றி எழுதுகின்றார். நிலையற்றவைகளை நிலையற்றவைகள் என ஏற்றுக்கொள்ளும், இறைவனின் நம்பகத்தன்மை உணர்ந்து கொள்ளும் ஒருவரால் மட்டுமே நம்பிக்கைக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்கிற நற்செய்தி வரிகளால் திடம் பெற்று, தாயாம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். எமது திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரோடு இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், தந்தையின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாகவே வாழுகிற வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும்” ஏற்றுக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் தந்தையரிடமிருந்து பாடம் பயின்றவர்களாய், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், தற்காலிக லாபங்களுக்காக, நிலையான அமைதியையும், அனைவருக்குமான நல வாழ்வையும் அடகு வைக்காமல், நீதியின் பாதையில் எமை ஆளவும், குடிமக்கள் அனைவரும், தம் கடமை உணர்ந்து செயலாற்றவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்” என்கிற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம்முடைய கடைக்கண் பார்வையால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றும், ஆண்டவர் தமது உரிமை சொத்தாகத் தெரிந்தெடுத்த, பேறுபெற்ற மக்களாக, அல்லல்கள் யாவும் நீங்கப்பெற்று, அருள்வரங்கள் அனைத்தும் நிரம்பப்பெற்றவர்களாக வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், அசையாத அடித்தளமுள்ள, சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிற, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக விளங்கவும், அதற்குரிய விழுமியங்களோடு வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ‘நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்’ என்கிற உண்மையை உணர்ந்தும், ‘மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்’ என்கிற அளவுகோலை அறிந்தும், எம்கிறித்தவ அழைப்புக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொண்டு, விழிப்பாகவும், ஆயத்தமாகவும் இருந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF