Tuesday, July 15, 2025

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு -ஆண்டு 3

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு -ஆண்டு 3

இன்றைய வாசகங்கள்‌:-

தொடக்கநூல்‌ 18:1-10 
கொலோசையர்‌ 1:24-28
லூக்கா 10:38-42

திருப்பலி முன்னுரை:-

நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுத்து நலமுடன்‌ வாழ ஆண்டவர்‌ இயேசுவினால்‌ அன்புடன்‌ அழைக்கப்பட்டுள்ள அருமையான இறைமக்களே நல்வாழ்த்துகள்‌ ! பல சமயங்களில்‌ கடவுளின்‌ ஆசி நம்‌ இல்லத்தைத்‌ தேடி, நம்மைத்தேடி வந்து கொண்டிருக்கிறது. நாம்தான்‌ அதனைக்‌ கண்டு பிடிக்கும்‌ ஆற்றல்‌ இல்லாமல்‌ மயக்க நிலையில்‌, தயக்க நிலையில்‌ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்‌. பொதுக்‌ காலம்‌ 16ஆம்‌ ஞாயிறாகிய இன்றைய வழிபாடு நம்மைச்‌ சுற்றிப்‌ பல கூறுகள்‌ வலம்‌ வந்தாலும்‌ அவற்றுள்‌ நல்லவற்றைத்‌ ‌ தேர்வுசெய்து நமதாக்கிக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.  

குலமுதல்வர்‌, நம்பிக்கையாளரின்‌ தந்தையெனப் போற்றப்படும்‌ ஆபிரகாமின்‌ இல்லத்துக்கு வந்த இறையன்பர்கள்‌ மூவரும்‌ நல்லாசியை ஈந்து ஆபிரகாம்‌ விரைவில்‌ தனது வழிமரபைக்‌ காணும்‌ பேற்றினைப்‌ பெறுவார்‌ என்று உறுதியளிக்கின்றனர்‌. அதுபோலவே திருத்தூதர்‌ பவுலும்‌ கொலோசைய மக்களுக்குத் திரு அவையின்‌ மறைஉடலாம்‌ கிறிஸ்துவின்‌ பாடுகளில்‌ தாம்‌ பங்கேற்ற அனுபவத்தைக்‌ கூறி, கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலையை அடையும்‌ நல்லறிவைக்‌ காட்டுகின்றார்‌.

பலவற்றைப்‌ பற்றிக் கவலைப்பட வேண்டாம்‌ நல்ல பங்காகிய இயேசுவைத்‌ தேர்வு கொள்வதே முன்மதியுள்ள செயல்‌ என்பதை நற்செய்தி சுட்டிக்‌ காட்டுகிறது. இத்திருப்பலியில்‌ இதயப்‌ பற்றுதலோடு இணைந்து பங்கேற்கும்‌ நாம்‌ எப்போதும்‌ நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுப்பவர்களாக வாழவும்‌, பகட்டும்‌, கவர்ச்சியும்‌ கலந்து வரும்‌ தீயனவற்றைத்‌ தூக்கியெறிபவர்களாக வாழவும்‌ அருள்வேண்டுவோம்‌…  

வாசக முன்னுரை

முதல்‌ வாசக முன்னுரை

கடவுள்‌ தமக்களித்த வழிமரபு வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படும்‌ காலத்தை எதிர்நோக்கி வாழ்ந்தார்‌ முதுபெரும்தந்தை ஆபிரகாம்‌. அவரது வீட்டுக்கு வந்த இறைமாந்தர்கள்‌ மூவர்‌ சிறப்பாகக்‌ கவனிக்கப்பட்ட விதத்தையும்‌ அவர்கள்‌ ஆசியளித்துக்‌ கூறிய வார்த்தைகளையும்‌ உள்ளடக்கிய இவ்வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌. 

பதிலுரைப் பாடல்

திபா 15: 2. 3-4. 5 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
1 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர். - பல்லவி
2. தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். - பல்லவி
3. தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை : 

கொலோசைய மக்கள்‌ தாங்கள்‌ பெற்றுக்கொண்டுள்ள கிறிஸ்துவைப்‌ பற்றிய திட்டங்களைத்‌ திருத்தூதர்‌ பவுல்‌ எடுத்துக்‌ கூறுகிறார்‌. இதற்காகவே தாம்‌ திருத்தூதராக அழைக்கப்பட்டதாகவும்‌ கூறுகிறார்‌. நாமும்‌ நம்மில்‌ இருக்கும்‌ கிறிஸ்து நம்மிடம்‌ எதிர்நோக்குவது என்ன? அதை நாம்‌ எப்படியெல்லாம்‌ செயலாக்கம்‌ செய்ய வேண்டும்‌ என்ற ஆர்வத்தோடு இந்த வாசகத்திற்குச்‌ செவிசாய்ப்போம்‌. 

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா ! சீரிய நல்‌ உள்ளத்தோடு வார்த்தையைக்‌ கேட்டு, அதைக்‌ காத்து, மன உறுதியுடன்‌ பலன்‌ தருகிறவர்கள்‌ பேறுபெற்றோர்‌. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், தூய பவுலடியாரைப் போல “இறைவார்த்தையை முழுமையாக வழங்கும் பொறுப்பினை” கடவுள் தங்களுக்குக் கொடுத்துள்ளதை உணர்ந்து, தங்களது திருத்தொண்டுப் பணியினைச் செவ்வனே நிறைவேற்றவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், அவர்கள் காட்டுகிற நல்வழியில், எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் பயணிக்கவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தம் கூடார வாயிலில் அமர்ந்திருந்த ஆபிரகாம், இறைமனிதர்கள் தம்மை விட்டுக் கடந்து போகாதிருக்க இறைஞ்சியது போல, எமையாளும் அரசியல் தலைவர்களும், உலகமக்கள் அனைவரும், அமைதி மற்றும் சமாதானத்திற்கான வாய்ப்புகள் கடந்து போகாமல் பார்த்துக்கொள்வதோடு, ஒருவர் ஒருவரை மதித்து, பணிவிடை புரிந்து, நிறை அருளையும் ஆசீரையும். அனைவரும் பெற்று மகிழ, உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. யூபிலி ஆண்டைக் கொண்டாடி வரும் நாங்கள் அனைவரும், “கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலை பெறுகிற விதத்தில்” எம்கிறித்தவ அழைத்தலுக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொள்ள வேண்டுமென்றும், மாசற்றவராய் நடந்து, நேரியவற்றைச் செய்து, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்கள் ஆகும் பேற்றினைப் பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பரபரப்பான எங்கள் வாழ்க்கைச் சூழலில், விறுவிறுப்பான எங்கள் பணிகளிலும் வேலைகளிலும், எங்களையே முழுமையாகத் தொலைத்துவிடாமல், மரியாவைப் போல, உம்பாதம் அமருகிற நல்ல பங்கைத் தெரிவு செய்து கொள்ளவும், எம்குடும்பத்தாரோடும் சமூகத்துடனும் நல்லுறவுடன் வாழ்கிற சிறந்த வழியை மேற்கொள்ளவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இனிய விருந்தோம்பல் இறைவனை மகிழ்விப்பதோடு, குடும்பத்தின் குறை தீரவும் வழி செய்திடும் என்பதனை இன்றைய முதல் வாசகம் விவரித்தது. எங்கள் அன்பு இறைவா, அன்பும், அறனும், விருந்தோம்பல் போன்ற நற்பண்புகளும், எம் இல்வாழ்க்கையை அணி செய்ய வேண்டுமென்றும், குறைகள் யாவும், அதிலும் சிறப்பாக, குழந்தையின்மை என்கிற குறை நீங்கப்பெற்ற நிறைவாழ்வு எமதாக வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 7, 2025

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

இணைச்சட்ட நூல் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37

திருப்பலி முன்னுரை:-

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு மிக அருகில் உள்ள இறைவன், அயலான் இவர்களை உணர்ந்துக்கொண்டு நிலைவாழ்வு எவ்வாறு நம்மில் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய நமக்கு எடுத்துரைக்கின்றன.
இஸ்ரயேல் மக்களுக்கு 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். புனித பவுலடியார் கூறுகிறார். ”விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள கடவுள்தன்மையைத் தொட்டுணர்ந்து நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.”
திருச்சட்ட அறிஞர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கில் 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டக் கேள்வியின் மூலம் நமக்கு வெகு அருகாமையில் உள்ள அயலானை அடையாளம் காட்டுகிறார். இதன் மூலம் மூன்று வித அன்பைப் பதிவுச் செய்கிறார். இந்த அன்பு நம்மில் நிறைவாய் இருந்தால் நிலைவாழ்வு நமக்கு வெகு அருகிலே! என்ற எண்ணங்களைத் தாங்கியவர்களாய் முழு 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' இத்திருப்பலியில் பங்குக்கொள்வோம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...

வாசக முன்னுரை:-

முதல் வாசக முன்னுரை:-

சட்டம்‌ சுட்டிக்காட்டுபவை இரண்டே இரண்டுதான்‌. ஒன்று இதைச்‌ செய்‌; மற்றொன்று இதைச்‌ செய்யாதே. சட்டத்தை இறைப்பார்வையில்‌ திருப்புவது மனச்சான்று. மனச்சான்று எப்போதும்‌ மனிதத்தை உயர்த்திப்‌ பிடிக்கக்‌ குரல்‌ கொடுக்கும்‌. சட்டம்‌ அதன்‌ குரலைக்‌ கேட்கும்‌ தூரத்தில்தான்‌ உள்ளது; 
தொலைவில்‌ இல்லையெனத் துள்ளியமாகக்‌ கூறும்‌ இணைச்சட்ட வாசகத்தைக்‌ கேட்போம்‌. 

பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!

திபா. 69: 13,16,29-30,35,36
1. ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்.  பல்லவி

2. ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

3. எளியோன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

4. கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

கிறிஸ்துவைப்‌ பற்றி அனைவரும்‌ தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து  உண்மைகளை உள்ளடக்கிக் கிறிஸ்து இயலாகத் திருத்தூதுப் பவுல்‌ சுருக்கமாக
கொலோசையருக்கு வழங்கும்‌ பகுதியை இன்றைய வழிபாடு நமக்கு இரண்டாம்‌ வாசகமாகத்‌ தந்துள்ளது. இதனைக்‌ கூர்ந்து கவனித்துக்கேட்டு நாமும்‌
கிறிஸ்துவைப்‌ பறைசாற்றுபவர்களாக வாழ்வோம

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரையும் படைத்தவரும், அனைத்துக்கும் முந்தியவருமான ஆண்டவரே, திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், இறைமக்களாகிய எங்களையும், நீர் தாமே நிறைவாக ஆசீர்வதித்து, தூயதோர் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கவும், இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் திருவுளம் கொண்ட ஆண்டவரே, அமைதியை இழந்து தவிக்கும் இந்த அவனிக்கு, உண்மையான சமாதானத்தை தந்தருள வேண்டுமென்றும், தலைவர்களும், குடிமக்களும், பகைமைகள், பேதமைகளை மறந்து, ஒன்றுபட்டு வாழவும், உயரவும்  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய இரண்டாம் வாசகத்தில் “அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன” என்று பவுலடியார் கூறுவதன் பொருளை உணர்ந்தவர்களாய், நாங்கள் எங்கள் குடும்பங்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும், உமக்கு உரியவர்களாகவே வளர்த்தெடுக்க வேண்டுமென்றும், எங்கள் பங்குகளும், பங்கு குருக்களும், பங்குப்பேரவை உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அன்பியங்களும், உமக்காகவே இயங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்து, அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடித்து, முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வந்து, இறை மனித உறவுகளில் புனிதம் பெறத் தக்க வகையில், வாழ்வதற்கான வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வதும், தம்மைப்போலவே அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வதும்தான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வதற்கான வழி என்பதை உறுதிப்படுத்திய ஆண்டவரே, அனைத்திற்கும் மேலாக உமக்கும், அதன் நீட்சியாக எம்மை அடுத்திருப்போருக்கும், முதன்முதலில் எம்குடும்பத்தாருக்கும், சிறப்பாக வயது முதிர்ந்தோருக்கும், எங்களது முழுமையான அன்பை காட்டுகிற வண்ணம், எங்கள் செயல்களும் வாழ்க்கையும் அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.          
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, July 2, 2025

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள். 

எசாயா 66:10-14
கலாத்தியர். 6:14-18
லூக்கா 10:1-12,17-20

திருப்பலி முன்னுரை:

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்!
கிறிஸ்துவை மூலைக்கல்லாகவும்‌ திருத்தூதர்களை அடிக்‌கல்லாகவும்‌ விசுவாசிகளைக்‌ கட்டிடக்‌ கல்லாகவும்‌ கொண்டு அமைந்தது தான்‌ நமது தாய்த்‌ திருச்சபை. இயேசுவைப்‌ பிடிக்க வந்தபோது சீடர்கள்‌ அனைவரும்‌ புறமுதுகுக்‌காட்டி ஓடினார்கள்‌. ஆனால்‌ அதே சீடர்கள்‌ தூய ஆவியால்‌ நிரப்பப்பட்டபோது தங்கள்‌ அழைத்தலின்‌ அர்த்தத்தை உணர்ந்தனர்‌. தங்களின்‌ கடமைகளை உணர்ந்தார்கள்‌. கிறிஸ்துவுக்காகச்‌ சாகவும்‌ துணிந்தார்கள்‌. மறைசாட்சிகளாய்‌ மரித்தார்கள்‌. இத்தகைய மாற்றம்‌ நம்‌ ஒவ்வொருவரின்‌ உள்ளத்திலும்‌ உதிக்க வேண்டும்‌, என்ற எண்ணத்தோடு இன்றைய திருப்பலியிலிணைந்திடுவோம்‌.
நாம்‌ அனைவரும்‌ தவறாகப்‌ புரிந்திருப்பது, ஊழியர்கள்‌ என்றால்‌ குருக்களும்‌, சகோதரிகளும்‌, துறவறத்தாரும்‌ மட்டுமே. ஆனால்‌ திருமுழுக்கு வாங்கிய கிறிஸ்தவனும்‌ ஒவ்வொருவனும்‌ ஊழியனே. கிறிஸ்தவர்களாகிய நாம்‌ அனைவரும்‌ அனுப்பப்பட்டவர்‌களே. உயிர்த்த ஆண்டவர்‌ தான்‌ சந்தித்த ஒவ்வொருவரையும்‌ அனுப்புகிறார்‌.
கிறிஸ்து இம்மண்ணுலகிற்கு வந்தபோது கொண்டுவந்த முதல்‌ கொடை அமைதி கிறிஸ்து விண்ணகம்‌ சென்றபோது வழங்கிய இறுதிக்‌ கொடையும்‌ அமைதியே!
கிறிஸ்துவின் அமைதியின் தூதுவராக வாழ ஒவ்வொரு திருப்பலியிலும் சிறப்பு அழைப்புத் தருகின்றார் இறைமகன் இயேசு. இதனை ஏற்று இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படுவோம். வாரீர்.

வாசக முன்னுரை:

முதல் வாசகம்‌ முன்னுரை:

நாடுகடத்தப்பட்ட மக்கள்‌ மீண்டும்‌ எருசலேமுக்குத்‌ திரும்பி வருவார்கள்‌ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதாக அமைகின்றது. கடவுள்‌ இஸ்ரயேல்‌ மீது தனிப்பட்ட அன்பையும்‌, அக்கறையையும்‌ கொண்டுள்ளார்‌ என்பதை எசாயா வாயிலாக ஆண்டவர்‌ வெளிப்படுத்துவதை இன்றைய முதல் வாசகம்‌ விவரிக்கின்றது. “கடவுளின்‌ அன்பு தாய் அன்பைப்‌ போன்றது, அந்த அன்பில்‌ நிலைத்து இன்புறுங்கள்‌' என்றும்‌ வலியுறுத்தும் எசாயாவின் வார்த்தைகளை நம் மனங்களில் இருத்தி சிந்திப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா. 66: 1-3,4-5,6-7,16,20.
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சி யைப் புகழ்ந்து பாடுங்கள். அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை. என்று சொல்லுங்கள். பல்லவி

2. அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர். அவர்கள் உம் புகழ் பாடிடுவர். உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர். என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார். ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார் கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி

இரண்டாம்‌ வாசகம்‌ முன்னுரை:

இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ தூய பவுல்‌, பணம்‌ பதவி பகட்டு போன்ற உலக ஆடம்பர வலைகளில்‌ சிக்கிக்‌ கிறிஸ்தவ அடிப்படையை மறந்திருந்தக்‌ கலாத்திய மக்களுக்குக்‌ கிறிஸ்துவின்‌ சிலுவை மீது கொள்ளும்‌ நம்பிக்கையே அடிப்படை, மற்ற வெளி ஆடம்பரங்கள்‌ அவசியமில்லை என்பதை நினைவூட்டுகிறார்‌. கிறிஸ்துவின்‌ சிலுவையே உண்மையான சீடரின்‌ பெருமை.
தூய ஆவியில்‌ புதுப்படைப்பாக, புதிய மனிதர்களாகத்‌ தன்னைப்‌ போல இயேசுவின்‌ அடிமையாக மாறி, நிலைவாழ்வைப்‌ பெற்றுக்‌ கொள்ள அழைப்பு விடுக்கிறார்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இரக்கத்தின் ஆண்டவரே! “ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்” என்றுரைத்து, சீடர்களைத் திருத்தூது பணிக்கு அனுப்பினீரே! தீமை தலைவிரித்தாடும் இவ்வுலகில், உமது தூய திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், நீர் தாமே பாதுகாத்து வழிநடத்த   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்” என்கிற வாக்குறுதியை, இன்றைய முதல் வாசகம்மூலம் தருபவரே, மூண்டு வரும் போர்களாலும், யுத்தங்களாலும், நீடித்து வரும் சண்டை சச்சரவுகளாலும், சர்வாதிகார போக்குகளாலும், பயங்கரவாத-தீவிரவாத வன்முறைகளாலும், நிலைகுலைந்து போயுள்ள இவ்வுலகில், அமைதி ஆறெனப் பெருக்கெடுத்து ஓடவும், தலைவர்கள் யாவரும், சமாதானத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒழுகவும் வரமருள          வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;” என வாஞ்சையோடு வாக்களிப்பவரே! வறுமை, வேலையின்மை, நோய், முதுமை, இயலாமை,  தொடர்  தோல்விகள், ஏமாற்றங்கள், குடும்பத்தில் சமாதானமின்மை போன்ற பல்வேறு இன்னல்களால் அவதியுறும் மக்கள் அனைவரையும், குறிப்பாகச் சமீப கால விபத்துகளாலும், போர்களாலும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிப்போரையும், தாயின் பரிவோடு கண்ணோக்கி, கரம்பிடித்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “புதிய படைப்பாவதே இன்றியமையாதது.” என்கிற பவுலடியாரின் அறிவுரையை ஆழ்மனதில் பதியவைத்து, சடங்கு சம்பிரதாயங்களைக் காட்டிலும் உண்மையான நம்பிக்கையும், நம்பிக்கைக்கு ஏற்ற நல்ல வாழ்க்கையும் தான் முக்கியம் என்கிற உணர்வோடு, சாட்சிய வாழ்வு வாழ்வதற்கான, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்கிற நற்செய்திக்குறிப்பு    இன்றளவும் உண்மையாக இருப்பதனால், உம்முடைய இறையாட்சிப்  பணிக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி, தேவ அழைத்தல் பெருகும்படி, அறுவடையின் உரிமையாளராம் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, June 24, 2025

புனிதர்கள் பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா

 புனிதர்கள் பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா
பொதுக் காலம் 13ஆம் ஞாயிறு - 29.06.2025


இன்றைய வாசகங்கள்:

திருத்தூதர் பணி 12:1-11
2 திமொத்தேயு 4:6-8
மத்தேயு16: 13-19

திருப்பலி முன்னுரை

புனிதர்களான பேதுருவும் பவுலும் திரு அவையின் தூண்களாகத் திருவிவிலியத்தால் எடுத்துக்காட்டப்படுகின்றனர். திரு அவையின் முதல் திருத்தந்தையான புனித பேதுரு ஆளுமைத் திறனோடு எளிய மனமும் ஏழைகளின் மீது மிகுந்த கனிவும் கொண்ட மிகச் சாதாரண மனிதர். திருத்தூதரான புனித பவுல் இளமை துடிப்பும் படைப்புத்திறனும் உயர்ந்த அறிவாற்றலும் கொண்ட அசாதாரண மனிதர். இருவரின் பண்புகளும் குண நலன்களும் இரு வேறு துருவங்களாக இருந்த போதும் இயேசுவின் பொருட்டு இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொண்டவர்கள். முதியோருக்கு உதாரணமாகப் புனித பேதுருவையும் இளையோருக்கு எடுத்துக்காட்டாகப் புனித பவுலையும் கூற முடியும். அந்த அளவிற்கு இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதும் தங்களுடைய வல்லமைமிக்க வாழ்க்கை சாட்சியத்தால் திரு அவையை வளர்த்து எடுத்தனர். 

இன்று நம் தாய் திருநாட்டில் நிலவுகின்ற எதிரும் புதிருமான சூழல்கள் நம்மைப் புனித பேதுருவின் கனிவையும் புனித பவுலின் துணிவையும் கொண்டு வாழ அழைப்பு விடுக்கின்றது. எந்நிலையில் இருந்தாலும் அந்நிலையில் பணிவும் துணிவும் நம்மிடம் இருக்குமானால் நமது வாழ்வும் சான்று வாழ்வாக அமையும் என்ற உணர்வோடு இன்றைய திருப்பலி கொண்டாட்டத்தில் குடும்பமாய் இணைவோம்.

வாசக முன்னுரை : 

முதல் வாசக முன்னுரை : 

துன்புற்ற வேளையில் தூக்கிப் பிடிப்பேன் என்ற இறைவனின் கரம் எவ்வாறு வல்லமையோடு திருத்தூதர் பேதுருவோடு செயலாற்றியது என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துக் கூறுகிறது. ஆண்டவரின் தூதர் முன்செல்ல, கட்டப்பட்ட அத்தனை விலங்குகளும் உடைய, பேதுரு தன் உணர்வு பெற்றவராய் சிறையிலிருந்து வெளிவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை எடுத்துக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி
2 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
3 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பேதுருவின் நற்செய்தி சாட்சியத்திற்குச் சற்றும் சளைத்தவர் அல்ல புனித பவுல். நல்லதொரு போராட்டத்தில் ஓடுகிறேன் என எப்போதும் நற்செய்தியைப் பற்றிக் கொள்வதிலே பற்றி நின்று, நற்செய்தி அறிவிக்காவிடில் தனக்கு ஐயோ கேடு என நற்செய்தியின் சாட்சியாக வாழ்ந்தவர் புனித பவுல்.கடவுள் பேதுரு சிறையிலிருந்து விடுவித்தது போல எவ்வாறு தன்னையும் சிங்கத்தின் பிடியிலிருந்து விடுவித்தாரெனப் புனித பவுல் எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின் மேல் என் திரு அவையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா” என்றுரைத்து திருஅவையை நிறுவிய இறைவா, பேதுருவின் வழிமரபில் எம்மை வழிநடத்த, நீர் தெரிந்தெடுத்துள்ள திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மேய்ப்புப்பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அளவு கடந்த அன்புடனும் மேற்கொள்ள, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அடைபட்டுக் கிடந்த சிறையின் அறை ஒளிமயமாகி, விலங்குகள் உடைபட, இரும்பு வாயில் தானாகத் திறந்து வழிவிட, விடுதலையின் அனுபவத்தைப் புனித பேதுருவுக்கு அளித்த இறைவா, போர் மேகங்களால் இருளடைந்து, அதிகரித்துவரும் யுத்தச்சூழல்களால் நிலைகுலைந்து, அழிவின் விளிம்பில் அல்லலுறும் அவனிக்கு, அமைதியை அருளவேண்டுமென்றும், உலகாளும் தலைவர்கள், சமாதானத்தின் பாதைக்குத் திரும்பவேண்டுமென்றும், உண்மையான விடுதலையை, எங்கள் தேசம் சமத்துவதில் சுவைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றுரைத்து, மன்னிக்கும் அதிகாரத்தினை, திருஅவைக்கும் திருப்பணியாளர்களுக்கும் அருளிய இறைவா, உம்மோடு ஒப்புரவாக நீர் தந்திருக்கும் ஒப்பற்ற கருவியாகிய, பாவசங்கீர்தனம் எனப்படும் ஒப்புரவு அருட்சாதனத்தை, நாங்கள் போற்றிப்பயன்படுத்தவும், மன்னிப்பு என்னும் திறவுகோலால், மனித உறவுகளைப் பேணி, நல்லுறவுடன் வாழவும் வரமருள  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புனிதர்கள் பேதுரு, பவுல், ஆகியோரது பெருவிழாவின், ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், சீமோன் பேதுருவைப் போல “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என நம்பிக்கை அறிக்கையிடவும்; பவுலடியாரைப் போல “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” எனச்சொல்லும்படியான, பிரமாணிக்கம் நிறைந்த சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்றும், அதற்கான நிறையருளை, நீரே தந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, June 17, 2025

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா



இன்றைய வாசகங்கள்:

தொடக்க நூல் 14:18-20 
1 கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17

திருப்பலி முன்னுரை:

உலகம் உயிர்ப்புடன் இயங்க தன் உயிரைத் தானமாய் தந்து இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை இன்று அன்னையாம் திரு அவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது. 
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்க தனது உடலையே உணவாகத் தந்து தனது ரத்தத்தை உயிர் வாழ உதவும் பானமாகத் தந்த இயேசுவின் பேரன்பை நினைத்து இன்று அன்னையாம் திரு அவை விழா எடுக்கின்றது. 
ஆம், தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப் போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளைக் கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 
நம்மை எவ்வாறு பிறருக்கு பகிர்ந்து கொடுப்பது ? நமது திறமைகளை, நமது உழைப்பை நமது நேரத்தை நமது பணத்தை நமது நல்ல மனதை பிறருக்கு தாராளமாய் தந்து உதவுவதன் மூலம் நம்மைப் பிறருக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்.  
பகிர்தளிலும் இழப்பதிலும் கிடைக்கின்ற இன்பத்தைச் சுவைத்திட தம் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நம்மை நேசித்த இயேசுவை நெருக்கமாய் நேசிப்போம். 
தன் உடலையும் உயிரையும் நமக்குக் கொடையாகத் தந்த இயேசுவின் வழியில் இரத்தத் தானம் உடல் உறுப்புத் தானம் போன்றவை செய்திட மனமுவந்து முன்வருவோம். கொடுப்பதில் இன்பம் பெறுவோம். இழப்பதில் நிறைவு காண்போம். அதற்கான அருளை இன்றைய திருப்பலியில் கொடையாகப் பெறுவோம்.  

வாசக முன்னுரை : 

முதல் வாசக முன்னுரை : 

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையின் நாயகனான ஆபிரகாமுக்கு உன்னத கடவுளின் குருவாக இருந்த மெல்கிசதேக் வாழ்த்து கூறுவதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கொள்கிறது. குருத்துவம் என்னும் சிறப்பு அழைப்பைப் பெற்றவர்கள் நமக்கு ஆசீர் வழங்கும்போது அது பன்மடங்காக நிலைக்கிறது என உணர்ந்தவர்களாய் நமது ஞான மேய்ப்பர்களை மதிக்கவும் அவர்களிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும் நம்மாலான தாராள செப, பொருள் உதவிகளை ஆலய பங்கு வளர்ச்சிக்கு வழங்கவும் இறையருள் வேண்டி முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.  

பதிலுரைப் பாடல்

திபா 110: 1. 2. 3. 4
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி...

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி…

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்! பல்லவி…

4 "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.  பல்லவி.

இரண்டாம் வாசக முன்னுரை :  

திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொரு முறையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது நாம் கிறிஸ்துவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உணவாக உட்கொள்கிறோம் என்பதாகும். கிறிஸ்துவை உணவாக உட்கொள்ளும் நாம் அவரது சாயலாக மாற வேண்டும். கிறிஸ்துவின் சாயலாக நமது வாழ்வு மாற அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம். 



கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா
தொடர்பாடல் (குறுகியபாடம்)ஒலிவடிவில்

-----------------------------------------------
சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய்,
கீதமும் பாடலும் இசைத்தே உந்தன்
ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.
1
எல்லாப் புகழும் கடந்தவர் அவரே;
இயலாது உன்னால் அவரைப் புகழ,
இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.

உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம்
போற்றுதற்குரிய இப்பேருண்மை இன்று 
சிந்தனைக்கு ஏற்றப் பொருளே
2
தூய விருந்தின் பந்தியில் அன்று
பன்னிரு சோதரர் கூட்டம் அதற்கே
கிடைத்த உணவிது;  ஐயமேயில்லை.

ஆர்ப்பரிப்புடனே இனிமையும் கலந்த
நிறைபுகழ் கீதம் ஒலிப்பதோ டன்றி
மகிழ்வும் மனதில் பெருகிடுமே.
3
நல்ல ஆயனே, உண்மை உணவே,
இயேசுவே, எம்மேல் இரங்கிடுவீரே,
எமக்கு நல்அமுதே ஊட்டிடுவீரே.

நும் திருமந்தை எம்மைக் காத்து,
நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில்
நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : 

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

1. “மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்கிற திருப்பாடல் வரிகளின்படி, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் பணிக்குருத்துவத்திலும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், எங்களது பொதுக்குருத்துவத்திலும், பிரமாணிக்கமாக இருக்கவும், கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் ஆகியவற்றின் உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னதக் கடவுள்” ஆபிராமுக்கு ஆசி வழங்கியது போலவே, இவ்வுலகிற்கும், உலகாளும் தலைவர்களுக்கும், ஆசியும் ஞானமும் வழங்கும் அமைதியின் அரசராய் விளங்கவும், போர்கள், சண்டைகள், கலவரங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற தீங்குகள் யாவும் நீங்கப்பெற்ற நிம்மதியான சூழலை உருவாக்கித்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் “நற்கருணை இல்லையேல், திருஅவை இல்லை; குருக்கள் இல்லையேல் நற்கருணை இல்லை” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், நற்கருணை, குருத்துவம் ஆகிய திருவருட்சாதனங்களின் மேன்மையைப் போற்றவும், தேவ அழைத்தலுக்காக ஜெபிக்கவும், தேவ அழைத்தலை எங்கள் குடும்பங்களிலே ஊக்குவிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம், ஆண்டவருடைய சாவை, அவர் வரும்வரை அறிவிக்கிறோம்” என்கிற நம்பிக்கையின் மறையுண்மையை, எங்கள் வாய்களால் மட்டுமல்லாமல், வாழ்க்கையாலும் அறிக்கையிடவும், ஒரே அப்பத்தை உண்டு, ஒரே கிண்ணத்திலிருந்து பருகுவதன் மூலம், ஒன்றிப்பின் சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, அவற்றின்மீது ஆசிக் கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறச்செய்து, அனைவரும் வயிறார உண்ணச்செய்த ஆண்டவரே, எங்களது நற்கருணை பக்தியானது வழிபாட்டோடு நின்றுவிடாமல், பிறரோடு, குறிப்பாக வறியவரோடு, பகிருகின்ற வாழ்வாகத் தொடர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, June 10, 2025

மூவொரு இறைவன் பெருவிழா 2025

மூவொரு இறைவன் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

நீதிமொழிகள் 8:22-31 
உரோமையர் 5: 1-5
யோவான் 16:12-15

திருப்பலி முன்னுரை:

இருந்தவரும்‌ இருப்பவரும்‌ வரவிருக்கின்றவருமான தந்தை, மகன்‌, தூய ஆவியார்‌ என்னும்‌ தூய்மைமிகு மூவோரு இறைவனின்‌ பெருவிழாவை சிறப்பிக்கத் திரு அவையாய்‌ ஒன்று கூடிய உங்கள்‌ ஒவ்வொருவரையும்‌ அன்புடன்‌ வரவேற்கின்றோம்‌.

விண்ணகத் தந்தை, மனிதனாக மண்ணிற்கு வந்த இறைமகன்‌ இயேசு, துணையாளராக நமக்குத் தரப்பட்ட தூய ஆவியாரால்‌ மூவரும்‌ இணைந்து மூவொரு இறைவனாக, ஒரே கடவுளாக, ஒரே எண்ணம்‌, ஒரே சிந்தனை, ஒரே சொல்‌, ஒரே செயல்‌ என யாவிலும்‌ இணைந்தவர்களாக இருக்கிறார்கள்‌. குடும்பத்தைக் கட்டியெழுப்ப கடவுளால்‌ படைக்கப்பட்ட இறைமக்கள்‌ சமூகமாகிய நாம்‌ ஒவ்வொருவரும்‌ மூவோரு இறைவனின்‌ சாயலை நமதாக்கி வாழும்போது நமது குடும்பங்கள்‌ ஒற்றுமையின்‌ விளைநிலமாக, மகிழ்ச்சியின்‌ பிறப்பிடமாக, நன்மைகளின்‌ ஊற்றாகத் திகழும்.

தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கிச் சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழத் தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது என்பதையும் அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனக் கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தைக் கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்பது நாம் காணக்கூடிய அல்ல. மாறாக விசுவாசத்தின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. இந்த நம்பிக்கை நமது இறுதி நியத்தீர்ப்பின்போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும் நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன். அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளைத் தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கைப்படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி : 

அல்லேலூயா, இருந்தவரும்‌ இருக்கின்றரும்‌ வரஇருக்கின்றவரும்‌ எல்லாம்‌ வல்லவருமான கடவுள்‌, தந்‌ைத, மகன்‌, தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிற இந்நாளில், மனித அறிவினால் புரிந்துகொள்ள முடியாத, இந்த நம்பிக்கையின் மறைபொருளை, உணர்ந்து, உள்வாங்கி, கூட்டொருங்கியக்க திருஅவையாய் விளங்குவதன்மூலம், பறைசாற்றிடத் தேவையான அருளினை, எம்திருத்தந்தை லியோ அவர்களுக்கும், ஏனைய திருஅவை தலைவர்களுக்கும், இறைமக்களாகிய எங்களுக்கும் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பூவுலகு உண்டாகுமுன்னே இருந்து செயலாற்றிய இறைவனின் ஞானம், மனித உள்ளங்களிலும், குறிப்பாக உலகத்தலைவர்கள், மற்றும் எங்கள் நாட்டுத்தலைவர்கள் மனங்களிலும் செயலாற்றி, திரித்துவக் கடவுளிடம் நாங்கள் கற்றுக்கொள்ளுகிற ஒற்றுமை, இணைந்த செயல்பாடு, போட்டிகள் துறந்து அமைதியில் நிலைத்தல், ஆகிய நற்குணங்களின்படி வாழவும், ஆளவும் வேண்டிய அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், குடும்பம் என்கிற குட்டித்திருஅவையைக் கட்டியெழுப்பிட வேண்டுமென்றும், தாய், தந்தை, கணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள், சுற்றம் சூழல் ஆகிய அனைவரும், மேட்டுமை எண்ணங்களை விட்டொழித்து, திரியேக இறைவனில் இருக்கிற ஒரே சிந்தனை, ஒத்துணர்வு, ஒன்றித்த செயல்பாடு ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டு, அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம்' என்பதை நன்றியோடு நினைவுகூர்ந்து, அந்த உன்னத நிலையில் என்றும் நிலைத்திருக்க வேண்டிய அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின் துணையுடன், “துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும்” என்றும் “அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது” என்றும் நம்புகிற திருக்கூட்டமாய், நாங்கள் விளங்கிட வேண்டுமென்றும், இந்த யூபிலி ஆண்டில் மட்டுமல்லாது, என்றைக்குமே எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, June 2, 2025

தூய ஆவியாரின் பெருவிழா 2025

 தூய ஆவியாரின் பெருவிழா

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Maino_Pentecost%C3%A9s._Lienzo._285_x_163_cm._Museo_del_Prado.jpg/500px-Maino_Pentecost%C3%A9s._Lienzo._285_x_163_cm._Museo_del_Prado.jpg

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 2: 1-11
உரோமையர் 8:8-17
யோவான் 14:15-16,23-26

திருப்பலி முன்னுரை :

இணைந்து பயணிக்கும்‌ அன்பியமாகத் திரு அவையை வழிநடத்தக்கூடிய பெந்தகோஸ்து பெருவிழா எனச் சிறப்பிக்கத் திருச்‌சமூகமாய்‌ ஒன்று கூடிய உங்கள்‌ ஒவ்வொருவரையும்‌ பாசத்தோடு வாழ்த்தி வரவேற்கின்றோம்‌. தூய ஆவியாரின்‌ திருவிழாவை அன்னையாம்‌ திரு அவை தனது திரு அவையின்‌ பிறப்பு பெருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது. உடைந்து சிதைந்து கிடந்த திருத்தூதர்களை ஒன்றிணைத்து உலகெங்கும்‌ சென்று படைப்பிற்கெல்லாம்‌ நற்செய்தியை பறைசாற்றக்கூடிய கருவிகளாக உருவாக்கியவர்‌ தூய ஆவியாரே.
அடுத்து என்ன செய்யலாம்‌ என்று கலங்கி நின்ற திருத்தூதர்களுக்கு ஆண்டவரைப்‌ பற்றிய நற்செய்தி அகிலமெங்கும்‌ எடுத்துரையுங்கள்‌ என உள்ளொளி தந்து உடனிருந்து வழிநடத்தியவர்‌ தூய ஆவியார்‌.
தூய ஆவியாரின்‌ துணையோடு இயங்குபவர்கள்‌ கடவுளின்‌ மக்கள்‌ என்பதை உணர்ந்து உண்மை, அன்பு, நீதி, நேர்மை, கனிவு, தாழ்ச்சி என்னும்‌ தூய ஆவியாரின்‌ கனிகளாலும்‌ வரங்களாலும்‌ நிரப்பப்படவும்‌ புதிய கல்வி ஆண்டுத் தொடங்கவிருக்கும்‌ இந்நாள்களில்‌ நமது குழந்தைகள்‌ அறிவிலும்‌ ஞானத்திலும்‌ சிறந்து விளங்கித் தூய ஆவியாரின்‌ துணையோடு சிந்திக்கவும்‌ படிக்கவும்‌ கல்வி ஆண்டின்‌ தொடக்கமுதலே ஞானத்தோடு பாடங்களை உள்வாங்கிக்‌ கொள்ளவும்‌
இறையருள்‌ வேண்டிக் கல்வாரி பலியில்‌ பக்தியோடு பங்கெடுப்போம்‌…

வாசக முன்னுரை :

முதல் வாசக முன்னுரை :

இன்றைய வாசகத்தில் திருத்தூதர்கள் தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்குப் பின் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:
1. அவர்களின் நாக் கட்டவிழ்க்கப்படுகிறது.  
2. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. 
இதுவரை கோழையாக அறைக்குள் அடைந்து கிடந்த திருதூதர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பிப் பெற்று வீரர்களாக வீதிக்கு வருகின்றனர். துணிச்சலோடும், கொள்கைப்பிடிப்போடும் இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். அயல் மொழிகளில் பேசினர். இந்தத் துணிச்சலை  நாமும் பெற அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல் 

திபா 104: 1,24. 29-30. 31,34

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! -பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்றும் கிறிஸ்துவின் ஆவியில் உண்மையில் இயக்கப்படுபவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் கடவுளின் பிள்ளையென அழைக்கப்பட முடியும். எனவே, அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை விடுத்துக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற நமக்கு உறுதுணையாக இருப்பவர் தூய ஆவியார் என்று விளக்கமளிக்கும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
 

*********  தொடர் பாடல்  பாடல் இசையுடன்  *********   

தொடர் பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா!  தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்.  அல்லேலூயா.  

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

அல்லேலூயா, அல்லேலூயா!  தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்.  அல்லேலூயா.

1. அன்பு இறைவா ! எல்லோரோடும்‌ அமைதியுடன்‌ வாழுங்கள்‌ என்ற மகிழ்வின்‌ செய்தியை நற்செய்தியாக எங்களுக்கு வழங்கக்கூடிய திருத்தந்தை, ஆயாகள்‌, அருள்பணியாளர்கள்‌, இருபால்‌ துறவறத்தார்‌
செல்லும்‌ இடமெல்லாம்‌ தூய ஆவியாரின்‌ துணையோடு பயணிக்க வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.

2. நாட்டை வழிநடத்தக்கூடிய நாட்டுத்‌ தலைவர்கள்‌ தூய ஆவியாரால்‌ வழங்கக்கூடிய ஞானத்தையும்‌ விவேகத்தையும்‌ கொடையாகக்‌ கொண்டு தூய ஆவியாரின்‌ கனிகளான அன்பு, அமைதி, மகிழ்ச்சி,
பரிவு என்ற பண்புகளால்‌ தொடர்ந்து வழிநடத்த வரம்‌ தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்‌.

3. தூய ஆவியைப்‌ பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌ என்ற மொழிந்த அன்பு இறைவா ! திருமுழுக்கின்‌ வழியாக நற்செய்தி பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும்‌ திரு அவையின்‌
கடமைகளையும்‌ தேவைகளையும்‌ உணர்ந்து இறையன்பிலும்‌ பிறர்‌ அன்பிலும்‌ வளர வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.

4. உம் பேரருளால் எம்மை வழிநடத்தும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பு இறைவா! புதிய கல்வி ஆண்டில்‌ காலடி எடுத்து வைக்க இருக்கும்‌ எம்‌பங்கு மாணவ செல்வங்களுக்காகவும்‌ அவர்களை அறிவிலும்‌ ஞானத்திலும்‌ பக்தியிலும்‌ ஒழுக்கத்திலும்‌ வளர்த்‌தெடுக்கக்கூடிய கடமையை ஏற்றுள்ள எல்லா ஆசிரியர்களுக்காகவும்‌ வேண்டுகின்றோம்‌. இவர்கள்‌ தூய ஆவியாரின்‌ துணையோடு மனிதநேய மாண்புகளில்‌ சிறந்து விளங்கிட வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.



https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, May 28, 2025

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 2025

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபேசியர் 9:24-28;10:19-23
லூக்கா 24 :46-53

திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட நம் ஆலயத்தில் ஒருமனப்பட்டுப் பெரும் மகிழ்ச்சியுடன் குழுமியிருக்கும் அனைவருக்கும் எல்லாப் பெயர்களிலும் மேலான இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாற்பது நாட்களின் உடனிருப்பு முடிவுப்பெறும் வேளையில் தம் சீடர்களை அழைத்து, தனக்குப் பின் தந்தையின் இறையாட்சியை எப்படித் தூதுரைக்க வேண்டும்? அவர்களின் சாட்சியவாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்றும், அதற்குத் துணையாகத் தூய ஆவியாரின் வல்லமை மிகுந்த ஆற்றலைப் பெற்றுக் கொண்டு உலகின் கடைசி எல்லைவரை அறிவித்ததை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அண்ணாந்துப் பார்த்து நின்றச் சீடர்கள் வீறுக்கொண்டு எழுந்து, நிறைவாழ்வை இவ்வுலகில் முன் நிறுத்தி, உலக மாந்தர்கள் அனைவரையும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் மாற்றியது போல, நாமும் இயேசுவின் ஆற்றலால் இத்தகைய நற்செயல்களைச் செய்திட, அதனால் நாம் எதிர் நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்ள, இறைஇரக்கத்தின் திருமுகமாம் இயேசுவின் அருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள்மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களைத் துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2, 5-6, 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

1. மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி

2.  ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

3. ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் வலிமை மிக்கத் தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். வேறு எப்பெயருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். இவைகளை உணர்ந்து கொள்ள ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! என்ற இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்மன்றாட்டுகள்:

1. ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழாவை கொண்டாடுகிற இந்நாளில் “இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று சீடர்களுக்குப் பணிக்கப்பட்ட கடமையை நினைவு கூர்கிறோம். இறைமக்களாகிய நாங்கள் யாவரும், உலகின் எல்லாத் திசைகளிலும், உம்முடைய உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும், எங்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ, மற்றும் திருஅவைத் தலைவர்கள் அனைவரும், சாட்சிய வாழ்வில் நாங்கள் நிலைத்திருக்க, எங்களைத் துடிப்புடன் வழிநடத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அவர்கள் கண்கள் முன்பாக மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டவரை, அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த சீடர்களைப் போன்று, நாங்களும் எங்கள் கண்களை உம்மை நோக்கி உயர்த்துகிறோம். தந்தையின் வலப்புறம் வீற்றிருந்து ஆட்சி செய்கிற நீர், உலகிற்கு அமைதி அருளவும், போர், கலவரம், வன்முறை, தீவிரவாதம் ஆகிய கொடுமைகளிலிருந்து மானுடத்தை மீட்கவும், அமைதிக்காக உழைக்கும் நல்மனதினை, நாடாளும் தலைவர்களுக்கு நல்கிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குருவாக விண்ணகம் நுழைந்து, விண்ணக வாயிலைத் திறந்து வைத்துள்ள இறைமகனே, இறைமக்கள் அனைவரும், மண்ணுலகத் தேவைகளில் புதையுண்டு போகாமல், விண்ணுலகுச் சார்ந்தவற்றை நாடுகின்ற ஊக்கம் நிறைந்த எதிர்நோக்கின் பயணிகளாக விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். உறுதியான நம்பிக்கையோடு அவரை அணுகிச் செல்வோமாக” என்கிற திருமுக வரிகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் உம்மை அணுகி வருகிறோம். இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறைகள் யாவும் நீங்கப்பெற்ற நிறை வாழ்வைப் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்ற உம்மொழிக்கேற்ப, தூய ஆவியாரின் துணையோடு செம்மையான வாழ்வை நாங்கள் மேற்கொள்ளவும், புதிய கல்வி ஆண்டைத் தொடங்குகிற இவ்வேளையில், மாணவ மாணவியர் அனைவரும், ஆசிரிய பெருமைக்களும், ஆவியின் வரங்களாலும் கொடைகளாலும் நிரப்பப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, May 18, 2025

பாஸ்கா காலத்தின் 6ஆம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் 6ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 15: 1-2,22-29
திருவெளிப்பாடு 21: 10-14,22,23
யோவான் 14 :23-29

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் அருளும் அமைதியைப் பெற்றுக் கொள்ள, பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராகிய துணையாளர் பற்றியும், அவர் நம்மோடு இருந்தால் நம்மை அவர் எவ்வாறெல்லாம் வழிநடத்துவார் என்பது பற்றியும் இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, என் பெயரால் வரும் தூய ஆவியார் உங்களுக்குத் துணையாளராக இருந்து அனைத்தையும் கற்றுத்தருவார், நினைவூட்டுவார், நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம் என்று தூய ஆவியார் துணை கொண்டு துணிவுடன் நடக்க நம்மை அழைக்கிறார்.
இதே தூய ஆவியானவர் கிடைக்கப் பெற்ற துணிவுடன், எருசலேம் சங்கத்தில் விருத்தசேதனம் பற்றிய கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, தைரியமாகவும், துணிவுடனும், நாங்களும் தூய ஆவியாரும் சேர்ந்து தீர்மானித்தோம் என்று பவுலும் பர்னபாவும் கூறுகின்றனர்.
புனித யோவானும் தூய ஆவி என்னை ஆட்கொண்டதால்தான் திருக்காட்சிகள் தமக்குக் கிடைத்ததாகக் கூறுகின்றார்.
ஆவியானவர் நம்மோடு இருக்கும்போது ஆண்டவர் அருளும் அமைதி நம்மிடையே என்றென்றும் நிலைத்து நிற்கும். இறைப் பிரசன்னம் நம்மை, அன்பால், அமைதியாய், மகிழ்ச்சியால் நிரப்ப வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் திரு அவையின் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்பற்றிய திருத்தூதர்களின் போதனைகளை எடுத்துரைக்கின்றது. விருத்தசேதனம் தேவையா என்ற சந்தேகம் எழுந்தபோது, அது தேவையில்லை என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம் என்று புனித பவுலும் பர்னபாவும் கூறும் வார்த்தைகளுக்கு
செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை : 

இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக எருசலேம் குறித்த புனித யோவானின் காட்சியை எமக்கு எடுத்துரைக்கின்றது. கடவுளின் மாட்சியால் நிறைந்து ஒளிவீசிய அந்த நகருக்கு பன்னிரு வாயில்கள் மற்றும் அவற்றில் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களின் பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தன என்பதை விவரிக்கும் வாசகத்தைக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : யோவா 14:23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு இதனை நான் ஒரு நல்ல அறிவுடன்  அறிந்து கொள்ளவும், எனக்குத் தெரியும்.  அதற்கு  என்னால் முடியும்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1. “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்” என உறுதியளிக்கும் ஆண்டவரே, எங்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், தூய ஆவியாரின் துணையோடு எமை வழிநடத்தவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், ஒன்றுபட்ட திருச்சமூகமாய்ப் பின்தொடர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்றுரைத்த இறைவா, உலகெங்கிலும், குறிப்பாக, எங்கள் இந்திய பாக்கிஸ்தான் எல்லையிலும், நிலையான அமைதி நிலவவும், “மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!” என்கிற திருப்பாடல் வரிகளுக்கு ஏற்ப, நாடாளும் தலைவர்களும், குடிமக்களும், உமக்குப் புகழ் சேர்க்கும் வழிதனில் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.” எனப் புதிய எருசலேமைச் சித்தரிக்கும் திருவெளிப்பாடு நூல் கூறுவதுபோல, பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள எம்மாணவச் செல்வங்களும், அவர்களது பெற்றோர்களும், இறைவன் அருளுகிற ஒளியிலும், கடவுள் தருகிற வழியிலும் பயணித்து, சிறந்ததோர் எதிர்காலத்தைப் பெற்று மகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்” எனக்கூறி சீடர்களைத் திடப்படுத்திய இறைவா, தோல்வி, உடல்நலக்குறைவு, பணப்பற்றாக்குறை, ஏமாற்றம் போன்ற பல்வேறு இன்னல்களால் சோர்ந்துபோயிருக்கும் அனைவரும், மீண்டும் திடம் பெற்று, எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்” என்ற உம்மொழிக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம் சொற்படி நடக்கவும், தந்தையாகிய கடவுளும், திருமகனாகிய நீரும், தூய ஆவியாராகிய துணையாளரும் என்றென்றும் எம்மோடு குடிகொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


                                                                      Print Friendly and PDF

Tuesday, May 13, 2025

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

  பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

Gospel of John 13:31-33A, 34-35 - Fifth Sunday of Easter Year C - Articles,  Commentaries, Homilies

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

அன்பு இறைமக்களே, பாஸ்கா காலத்தின் 5ஆம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். முழு விவிலியமும் நமக்குக் கூறும் ஒரே கருத்து அன்பு ஒன்று தான். கடவுள் அன்பாயிருக்கிறார். நாமும் அன்பாய் இருப்போம் இக்கருத்தினையே இன்றைய வாசகங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. ஆண்டவராகிய இயேசு, "ஒருவர் மற்றவரிடம் அன்புச் செலுத்துக்கள்” என்ற புதிய கட்டளையைக் கொடுக்கிறார். ஏனெனில், இன்னும் சிறிது காலம்தான் அவர் சீடர்களோடு இருப்பார். தான் இல்லாமல் சீடர்கள் இவ்வுலகத்தினை எதிர்கொள்ள அவர்களுக்குத் தேவையானது அன்பு. ஏனெனில் ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொண்டு வாழ்வதற்குத் தேவை அன்பே என்பதை உணர்ந்திருந்தார். இதனையே இன்னும் ஆழமாக1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் எடுத்துக்கூறுகிறார் புனித பவுல்.
இந்த அன்பினால் உந்தப்பட்டவர்களாய் புனித பவுலும் பர்னபாவும், ஊர் ஊராக, நகர் நகராகச் சென்று மக்களை இறையாட்சியின்பால் நிலைத்திருக்க ஊக்குவிக்க முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகமும், அன்பு நிறை இறைச் சமூகமாக நாம் வாழ்ந்தால் மட்டுமே. புதிய மண்ணகத்தையும, புதிய விண்ணகத்தையும் நம்மால் காண முடியும் என்பதை இரண்டாம் வாசகமும் எடுத்துக் கூறுகின்றன. இயேசுவின் அன்புதான் நம்மை ஒன்று சேர்க்கிறது. அவரின் அன்பு நம்மிடையே இருக்குமானால் நாமும் அவரின் சீடர்களாக இருப்போம். அவரின் அன்புச் சீடர்களாய் அவரின் அன்பை விதைப்போம், அன்பு நிறை இறைச் சமூகத்தினைக் காண்போம் என்ற எதிர்நோக்கோடு இத்திருப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை :

பவுலும் பர்னபாவும்  மனம் தளர்ந்தவர்களுக்கு  'துன்பங்கள் வழியே தாம் இறையரசுக்குள் நுழைய முடியும்' எனக் கற்பிக்கின்றனர். மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்திய நிகழ்வை எடுத்துக்கூறுகிறது. பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு நாம் உட்பட முடியும் என்று அறிவுரை வழங்கும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-13.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் பற்றிக் கூறுகிறார். நம் கண்ணீர் அனைத்தையும் துடைக்கும் கடவுளின் மக்களாக வாழ நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம். சாவு, துயரம், அழுகை இல்லாத புது வாழ்வை வழங்கக் கடவுள் வல்லவராய் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கைக் கொண்டு வாழ அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா! “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் புதிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், தாங்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்துவதிலும், நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவிப்பவதிலும் சிறந்தோங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், பிற இனத்தவர்க்கு நம்பிக்கைக் கொள்ளும் வாய்ப்பினைக் கொடுத்ததையும், பவுலடியாரும் பர்னபாவும் அறிவித்தது போல, "கிறிஸ்து என்னும் ஒருவரில் நாம் அனைவரும் ஒன்றே" என்கிற விருதுவாக்கோடு, தம் திருப்பணியைத் தொடங்கியுள்ள எம்புதிய திருத்தந்தையுடன், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றித்துப் பயணிக்கவும், ஒளியாம் கிறிஸ்துவை உலகிற்கு அறிவிக்கவும் அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறி அரியணையில் வீற்றிருக்கும் ஆண்டவரே, தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் போர் சூழல்களால் அவைதியுறும் எம்தேசத்தையும் பிற நாடுகளையும், நீர் தாமே அமைதியின் பாதைக்கு மீண்டும் அழைத்துவர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார்; அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார்” என்கிற இரண்டாம் வாசக இறைவாக்கு, இன்னலுறும் இவ்வுலகிற்கும், எங்கள் அனைவருக்கும், ஆறுதலாக இருப்பதோடு, எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்கவும் உதவிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையின் பொருளை உணர்ந்தவர்களாய், முதன்முதலில் எங்கள் குடும்பத்திலும், அதன் பின்னர் நாங்கள் வாழ்கிற பங்கிலும், சமூகத்திலும், ஒருவர் ஒருவருக்கு அன்புச் செலுத்தவும், அதன் மூலம், நாங்கள் உம் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Print Friendly and PDF

Thursday, May 8, 2025

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 13: 14,43-52
திருவெளிப்பாடு 7: 9,14b-17
யோவான் 10: 27-30

திருப்பலி முன்னுரை:

ஆண்டவரின்‌ குரலுக்குச்‌ செவிசாய்க்க அழைக்கும்‌ பாஸ்கா காலத்தின்‌ 4ஆம்‌ ஞாயிறு திருப்பலிக்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்‌.  
இன்றைய நற்செய்தி வாசகத்தில்‌, நல்ல ஆயனாக இருந்து தன்‌ ஆடுகளை வழிநடத்தும்‌ இயேசுவை நாம்‌ பார்க்கிறோம்‌. ஆயனின்‌ வார்த்தைகளை ஏற்று அவர்பின் தொடர்ந்தால்‌ நிலைவாழ்வை அளிப்பதாக வாக்கு கொடுக்கிறார்‌ நம்‌ ஆண்டவர்‌.  
இதையே யூத மக்களைப்‌ பார்த்து எடுத்துக்‌ கூறுகிறார்கள்‌. புனித பவுலும்‌ பர்னபாவும்‌. கடவுளின்‌ வார்த்தைகளை உதறித்‌ தள்ளினால்‌, நீங்கள்‌ நிலைவாழ்வைப்‌ பெற்றுக்‌ கொள்ளமாட்டீர்கள்‌. அவ்வார்த்தைகளை யார்‌ ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள்‌ நிலைவாழ்வுக்குத்‌ தகுதியுடையவர்கள்‌ என்று. முதல்‌ வாசகத்தில்‌ கூறுகிறார்‌. இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித யோவானோ, ஆயனாம்‌ இருப்பவரே ஆட்டுக்குட்டியாய்‌ மாறி நமக்கு நிலைவாழ்வுப்‌ பெற்றுக்கொடுப்பவர்‌ என்றும்‌ கூறுகிறார்‌.  
நூறு ஆடுகளில்‌ ஓர்‌ ஆடு செவிகொடுக்காமல்‌ தப்பிப்‌ போனாலும்‌ அந்த ஆட்டையும்‌ கண்டுபிடித்துத் தன் மந்தையில்‌ சேர்க்கும்‌ நல்ல ஆயனாம்‌ இயேசு இன்று நம்மையும்‌ அவர்‌ வார்த்தைகளுக்குச்‌ செவிகொடுக்க அழைக்கிறார்‌. நிலைவாழ்வைப்‌ பெற்றுக்கொள்ள நாமும்‌ நல்ல ஆடுகளாய்‌ அவரைப்‌ பின்‌ தொடரும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ இணைந்து வேண்டுவோம்‌.    

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தாங்கள் அறிவித்த நற்செய்திக்கு யூதர்கள் 'செவிமடுக்காததால்', தங்கள் நற்செய்தியை புறவினத்தாரிடம் கொண்டு செல்கின்றனர் பவுலும் பர்னபாவும். புறவினத்தார் இந்தப் புதிய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். புறவினத்தாரின் மகிழ்ச்சி, யூதர்களின் பொறாமையாக உருவெடுக்கிறது. ஆண்டவரை அறிதல் மனிதர்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துகிறது  இதைக் கூறும் இன்றைய முதல் வாசகமான திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் மீட்பிற்காகத்‌ தன்னையே கையளித்த அந்த ஆட்டுக்குட்டியின்‌ இரத்தத்தில்‌ துவைத்தெடுத்த வெண்ணிற ஆடையை அணிந்தவர்கள்‌ மட்டுமே இறைவனின்‌ அரியணைக்கு முன்பாக நிற்கத்‌ தகுதி பெற்றவர்கள்‌ என்று நமக்குத் தெளிவுப்படுத்தும் இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன” என்றுரைத்த நல்லாயனே இறைவா, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் திருத்தந்தை  14 -ஆம் லியோ அவர்களை நீர் தாமே தாங்கி வழிநடத்த வேண்டுமென்றும், திருஅவையானது, அவரது தலைமையின் கீழ் உமது வழியில் நடக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்” என்கிற இரண்டாம் வாசக கூற்றின்படி, எங்கள் இந்திய எல்லையில் நடைபெறுகிற தீவிரவாதத் தாக்குதல்கள் முற்றிலும் ஒழித்தழிக்கப்படவும், இந்திய-பாக்கிஸ்தான் எல்லையில் நிலவுகிற போர் பதட்டங்கள் நீங்கி, அமைதி திரும்பவும்  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள மாணவச்செல்வங்கள், விரும்புகிற கல்லூரிகளில், விரும்புகிற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கிற வாய்ப்பினை நீர் உருவாக்கித்தர வேண்டுமென்றும், அவர்களும் அவர்களது பெற்றோர்களும் சரியான பாதையைத் தெரிவு செய்ய நீர் தாமே உதவ வேண்டுமென்றும், தோல்வியுற்ற மாணவர்கள் துவண்டு போகாமல் மீண்டும் மும்மரமாய் உழைத்து வெற்றிபெற  வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர்” என்கிற முதல்வாசக உண்மைக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நம்பிக்கையில் நிலைத்திருந்து, எதிர்நோக்கில் பயணித்து, பிறரன்பில் வளர்ந்து, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.     தேவையான உம் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Print Friendly and PDF

Tuesday, April 29, 2025

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 5:27a-32,40b-41
திருவெளிப்பாடு 5:11-14
யோவான் 21:1-19

திருப்பலிமுன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறை இறை மன்னிப்பை உணர்த்தும் ஞாயிறாகக் கொண்டாட வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். உயிர்த்த இயேசு தன்பாடுகளின்போது தனியே தன்னை விட்டுவிட்டு ஓடிய சீடர்களைத் தேடிச் சென்று மன்னிப்பின் மாண்பை தன் செயல்களின் மூலம் காட்டி அவர்களிடமே தன் இறையாட்சியை உலகமக்களுக்கு பறைசாற்றும் பணியைத் தருகிறார்.

அத்துடன் நிற்காமல், தன் உடனிருப்பு உலகம் முடியும் வரை தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதை சீடர்களிள் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறார். மூன்று முறை மறுதலித்த பேதுருவிடம் அவரின் ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்து அவரிடமே தன் ஆடுகளாகிய நம்மை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கின்றார். என்னே! அவரது மாபெரும் இரக்கம்! நாமும் மன்னிப்பின் மாண்பை உணர்ந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் இயேசுவை நோக்கி மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தூய ஆவியானவரின் வருகையால் துணிவுபெற திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தினருக்கு அடிபணிய மறுத்து, அவர்களுக்கே இயேசுவின் மகிமையை எடுத்துரைத்து, கடவுள் எவ்வாறு அவரை உணர்த்தியுள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்தினர். அதனால் தண்டிக்கப்பட அவர்கள் இயேசுவில் மகிழ்ச்சியுடன் சென்றதை இன்றைய முதல் வாசகம் திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்:

திருப்பாடல்: 30: 1,3-5. 10-12

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும்;: ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் இயேசுவைச் செம்மறியாகக் காட்சிப்படுத்துகின்றார். தன் கண்டக் காட்சியாகிய இயேசுவின் மாட்சிமையை நமக்கு எடுத்துரைக்கிறார். இயேசுவிற்கு விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் விழுந்து வணங்கியதைப் பதிவுச் செய்யும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. அனைத்திற்கும் மேலாக உம்மீது கொண்ட அன்பை உறுதிச் செய்தபின், “என் ஆடுகளை மேய்” எனச்சொல்லி, பேதுருவிடம் தலைமைப்பணியை ஒப்புவித்த இறைவா, புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்யக் கூடியிருக்கும் கர்தினால்களை, தூய ஆவியாரால் வழிநடத்தி, காலத்திற்கு ஏற்ற நல்ல திருஅவைத் தலைவரை எங்களுக்குத் தந்தருளும்படியாக, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என அனைத்துலகப் படைப்புகளாலும் ஆராதிக்கப்படுகிற, அரியணையில் வீற்றிருப்பவரான ஆட்டுக்குட்டியே, எம் இறைவா! உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், போருக்கு முனைப்புக் காட்டுவதைத் தவிர்த்து, உயிர்த்த ஆண்டவரின் கொடையான அமைதியை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்றும், அதே நேரம், தீவிரவாதமும் பயங்கரவாதமும் முற்றிலும் ஒழிந்துபோக வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” என்கிற தெளிவான உறுதியோடிருந்த திருத்தூதர்களைப் போல, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, இறைத் திருவுளப்படி வழிநடத்தவும், இளையோர் யாவரும், தங்கள் மேல்படிப்பு, பணியமர்வு, திருமணம் போன்றவற்றைத் தெரிவுச் செய்வதில், உமக்குக் கீழ்ப்படிவதன் மூலம், வாழ்வில் உயர்வு காணவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால்” மகிழ்ச்சியுற்ற திருத்தூதர்கள் அடிச்சுவட்டில், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவருமே, எங்கள் துன்ப துயரங்கள், வேதனை, சோதனைகள் நடுவிலும், “ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு” என மெய்ப்பிக்கும் விதமாக, பிரமாணிக்கம் நிறைந்த வாழ்வினை மேற்கொள்ள அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கருணைக் கடலாகிய இறைவா, வெய்யில் கால வெக்கையைச் சற்றே தணிக்கவும், நோயற்ற நல்வாழ்வை எமக்குத் தரவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Print Friendly and PDF